தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வடபழநி , திருச்செந்தூர் , சமயபுரம் உள்ளிட்ட 10 கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார்.
அருள்மிகு வட பழநி ஆண்டவர் கோயிலில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நிகழ்ச்சி நடந்தது.
வட பழநி முருகன் கோயில் , மதுரை மீனாட்சி அம்மன் கோயில் , திருச்செந்தூர் முருகன் கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில். மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயில், பழநி, திருவேற்காடு, திருத்தணி , உள்ளிட்ட 10 கோயில்களில் இந்த திட்டம் இன்று முதல் துவக்கப்படுகிறது.
திட்டத்தை துவக்கி வைத்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது,
கடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி 10 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் வழிகாட்டுதலின்படி வடபழநி திருக்கோயிலில் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக இருந்த சுற்றுலா மற்றும் கலை பண்பாடு ,இந்து சமய அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷ்னர் குமரகுருபரன், உட்பட அனைவரையும். பாராட்டுகிறோம்.
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் என்பர் . எங்கள் ஆட்சியில் 254 கோயில்களில் அன்னதான திட்டம் சிறப்பாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பிரசாதம் திட்டம் மூலம் வட பழநி கோயிலில் சாதாரண நாட்களில் 5 ஆயிரம் பக்தர்கள், விசேஷ நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் , கிருத்தியை நாட்களில் 25 ஆயிரம் பக்தர்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்படும்.
அறிவித்தப்படி வட பழநி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் , ஊரடங்கு இருந்த நேரத்திலும் எடுத்துக்கூறிய போது முதல்வர் அறிவுரையின் படி குடமுழக்கு சிறப்பாக நடத்தப்பட்டது.
பழநி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது சீர்படுத்தி, முறைப்படுத்தி மேலும் 3 திருக்கோயில்களில் அமல்படுத்தப்பட்டது.திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூரில் முழு நேர அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. 15 ஆயிரம் பேர் வரை நாள்தோறும் வழங்கப்படுகிறது. வயிற்றுப்பசியே போக்கும் நல்ல நிகழ்வாக இறை அன்பர்கள் மகிழ்வு பெறும்வரையில், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து நடத்தப்படும். திருக்கோயில் சீர்படுத்த 100 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். எங்கள் ஆட்சியில் கோயில் மூலம் வரும் 150 கோடி வாடகை தொகையை வசூலித்து சாதனை படைத்துள்ளோம்.கோயில் அன்னதான திட்டத்திற்கு ஆன்லைனில் நன்கொடையாக ரூ. 2 கோடியை தாண்டியுள்ளது. தர்மத்திற்கு பேர் போன நன்கொடையாளர்கள் நிதி வழங்குகின்றனர்.
முதல்வர் 4 கால் பாய்ச்சலாக தமிழக கோயில்களுக்கு 129.50 லட்சம் கோடியை ஒதுக்கினார். கோயில் அலுவலர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதாமாதம் ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அர்ச்சகர், பக்தர்கள், இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் ஆட்சியின் ஆன்மிக பயணம் இடையூறு மத்தியில் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்
பிரசாதம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வட பழநி கோயிலை தேர்வு செய்தமைக்காக இணை ஆணையர் ரேணுகா நன்றி தெரிவித்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விழாவில் மேற்கூறிய 10 கோயில் இணை ஆணயைர்கள் நன்றி தெரிவித்தனர்.
நாள் முழுவதும் பிரசாதம் இலவசமாக வழங்கும் திட்டத்தில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, லட்டு, எலுமிச்சை சாதம், அதிரசம், புட்டமுது, தேன்குழல் முருக்கு போன்றவை வழங்கப்படும் என்றார் அமைச்சர் சேகர் பாபு.