நவ.6ல் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த இயலாதது ஏன்?: ஆர்.எஸ்.எஸ்., விளக்கம்!

Published:

rss route march - 2026

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நவம்பர் 6 நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் திடீரென இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த இயலாது என்று அந்த அமைப்பு அறிவித்தது. அதற்கான காரணத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் மண்டல தலைவர் இரா.வன்னியராஜன் வெளியிட்ட அறிக்கையில்,

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். பாரத நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம். அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6, 2022 நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று (04.11 .2022) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6ம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img