அண்ணாமலை மூலம் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இன்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை என கச்சத்தீவு பற்றிக் குறிப்பிட்டு, மீண்டும் அதை ஒரு விவாதப் பொருள் ஆக்கி விட்டனர். கச்சத்தீவு தேர்தல் நேர சர்ச்சைக்கானது அல்ல என்றாலும், அது எந்நேரமும் பேசப்படக் கூடிய தேசப் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைக்கு உரியது என்பதால், இந்நேரம் அது தேசிய அளவில் விவாதப்பொருளாகியிருக்கிறது.
இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்த்தது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதில்:
கச்சத்தீவு தொடர்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு 1961 மே 10ல் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த தீவு தொடர்பாக அவர், இந்த சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதற்கான நமது உரிமையை விட்டுக் கொடுக்க தயங்க மாட்டேன். இந்த விவகாரம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருப்பதையும் மீண்டும் பார்லிமென்டில் எழுப்பப்படுவதை விரும்பவில்லை என்றார்.
இந்த பதிலானது அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960 ல் கச்சத்தீவை இந்தியா உரிமை கோர வலுவான ஆதாரங்கள் இருந்தன எனக் கூறியதற்கு எதிராக இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனி, ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்த உரிமை பற்றியும் செடல்வாட் குறிப்பிட்டு இருந்தார். நாட்டில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் ராமநாதபுரம் ராஜா கொழும்புவுக்கு எந்த வரியும் கட்டாமல் கச்சத்தீவை நிர்வகித்து வந்தார்.
1968 ல் கச்சத்தீவு தொடர்பாக இந்தியா – இலங்கை பிரதமர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பார்லிமென்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, அரசை விமர்சித்தனர்.
அதற்கு அரசு அளித்த பதிலில், கச்சத்தீவை ஒப்படைப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்றதுடன் அந்த பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்தது எனக்கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 1969 ல் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கையின் உரிமையை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தம் போடுவதை நோக்கி இரு நாடுகளும் நகர்ந்தன.
கொழும்புவில் 1973ல் இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அடுத்த ஆண்டு (1974) ல் கச்சத்தீவை தாரை வார்ப்பது குறித்த முடிவு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கேவல் சிங் தெரிவித்தார்.
இது குறித்து கேவல் சிங் கூறுகையில், கச்சத்தீவு மீது ராமநாதபுரம் ராஜாவிற்கு அசல் உரிமை இருந்தது என்ற ஆவணங்களை காட்ட தமிழக அரசு, தவறிவிட்டது. 1925 முதல் இந்தியாவின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இலங்கை கச்சத்தீவை நிர்வகித்து வந்தது எனக்கூறினார். இவ்வாறு அந்த தகவலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இதனை மேற்கோள் காட்டி ‛எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரை வார்த்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியதுடன், காங்கிரசை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பதை மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதை எண்ணியே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் உழைத்துக் கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி அந்த பதிவில் கூறியுள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:
காங்கிரஸ் கட்சியினர் மனமுவந்து கச்சத்தீவை விட்டுக் கொடுத்தார்கள். அதைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை. சில சமயங்களில் காங்கிரஸின் எம்.பி., நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும், இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளை இழிவுபடுத்துவதாகவும் பேசுகிறார். அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் நம் தேசத்தை பிளவுபடுத்த வேண்டும் என விரும்புகிறார்கள்
கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.
முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.
1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.
ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.
கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.