திருப்பதி:
திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாகக் கூறி திருவண்ணாமலையைச் சேர்ந்த 6 பேரை, ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி கரக்கம்பாடியில் இருந்து ரிக்ஷா காலனி வழியாக 30 பேர் கொண்ட கும்பல் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு படையினர், அவர்களை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் தப்பி சென்றனர்.
பிடிபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஊர்கவுண்டர் கிராமத்தை சேர்ந்த ராஜா, வெங்கடேஷ், முருகன், சேகர், கோபால், ஆனந்த் என தெரியவந்துள்ளது.
பிடிபட்டவர்களிடம் இருந்து 25 கிலோ எடையுள்ள 6 அரிசி மூட்டைகள், 3 கொடாளி, 2 ரம்பம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை, ஜவ்வாது மலையை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக 40 பேர் கொண்ட கும்பல் சென்று கொண்டிருந்ததாகவும், அவர்களைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது அவர்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்தி அந்தக் கும்பல் தப்பிச் சென்றதாகவும் ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர்.



