முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் முதலமைச்சரால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என நளினி கூறியுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார். இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரை காவல்துறையினர் சென்னை கோட்டூர்புரத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் தந்தையின் இறுதிச்சடங்கில் நளினி கலந்து கொண்டார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நளினி, பரோலில் தம்மை விடுவித்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுவிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்த நளினி, 7 பேரின் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்


