சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி, திடீரென ஒரு கட்டத்தில் நீ என்ன சாதி என்று செய்தியாளரைப் பார்த்துக் கேட்டு அதிர்ச்சி அடைய வைத்தார். அவரது செயலுக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில், இணைச்செயலர் பாரதி தமிழன் விடுத்த அறிக்கையில்…
இன்று (28-05-2019) செவ்வாய்க்கிழமை காலை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தோல்வி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , ” நீ எந்த ஊர்? என்ன ஜாதி? ” என்று வன்மத்தை காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் மீதான
டாக்டர் கிருஷ்ணசாமியின் வன்மமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
ஜாதி மொழி மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களை திணிக்க முயற்சி செய்யும் போக்கு ஆபத்தானது மட்டுமல்ல அறுவறுக்கத்தக்கதும் கூட.
சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.
பத்திரிகையாளர் என்ற அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும், ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. – என்று தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில்…
பத்திரிகையாளர்கள் ஜாதியை கேட்ட டாக்டர்.கிருஷ்ணசாமி…. தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம்!
செய்தியாளர்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி கிடையாது. புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து 6 வது முறையாக தென்காசியில் தோல்வியை தழுவுகிறார். கிருஷ்ணசாமியின் அரசியல் பாதை எங்களுக்கு தேவையில்லாத ஒன்று.
தமிழக மக்கள் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டையும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி எனக்கூறிக்கொண்டு நிலப்பிரபுத்துவ மனப்பான்மையுடனும் வளம்வரும் டாக்டர் கிருஷ்ணசாமி அதே மனப்பான்மையுடன் அவரது கட்சியாளர்களை அணுகலாம், பத்திரிகையாளர்களை அணுகுவது கண்டிக்கத்தக்கது.
கையுறை அணிந்து சொந்தக்கட்சிக்காரர்களுக்கு கைகுலுக்கும் கிருஷ்ணசாமி, காலம் மாறிக்கொண்டு வருகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். தோல்வியிலிருந்து பாடம் கற்பவர்கள் அரசியலில் மீண்டெழுகிறார்கள். அடம்பிடிப்பவர்கள், சுயநலத்துடன் இருப்பவர்கள் காணாமல் போனதுதான் வரலாறு.
செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகள் வரும் உண்மையான அரசியல் தலைவர்கள் அதை எதிர்கொள்வார்கள், அல்லது வேறு கேள்வி என தவிர்ப்பார்கள். ஆனால் செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, ஜாதி என்ன, எந்த ஊர், இந்தச்சானல் இப்படித்தான் கேட்பாய் என்று பழைய பாணியில் செயல்பட்டால் இன்னும் கடைகோடிக்கு அவர் செல்வது நிச்சயம்.
கேள்விக்கேட்டால் பதில் சொல்லவேண்டியது பிரஸ்மீட் நடத்துபவர் கடமை, சாதாரண கேள்வியைக்கூட எதிர்கொள்ள முடியாமல் ஜாதி, மொழி, மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களை திணிக்க முயற்சி செய்யும் போக்கு டாக்டர். கிருஷ்ணசாமியின் அரசியல் பாதையில் சறுக்கல். இது ஆபத்தானது மட்டுமல்ல அறுவறுக்கத்தக்கதும் கூட.
சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.
பத்திரிகையாளர் என்ற அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். – என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.