வரகு பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
வரகு – 250 கிராம்,
துவரம்பருப்பு – 100 கிராம்,
பெரிய வெங்காயம்,
தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று (நறுக்கவும்),
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு,
சீரகம் – 2 டீஸ்பூன்,
பூண்டு – 7 பல்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வரகு, துவரம்பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஒன்றாக ஊறவைத்துக் களைந்து வைக்கவும். சீரகம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாகப் போட்டு, தண்ணீர்விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சிறு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, ஒன்றிரண்டாக அரைத்த சீரகக் கலவை, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி தேவையான உப்பு சேர்க்கவும். பிறகு ஒரு பங்கு வரகுக்கு மூன்று பங்கு என்கிற கணக்கில் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த வரகு பருப்புக் கலவையைப் போட்டு, குக்கரை மூடி, மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். வரகு பருப்பு சாதம் ரெடி.
குறிப்பு: மற்ற சிறுதானியங்களிலும், அரிசியிலும் இதேபோல் சாதம் செய்யலாம். சூடான வரகு பருப்பு சாதத்துடன் ஒரு ஸ்பூன் நெய்விட்டுச் சாப்பிட்டால் சுவை அள்ளும்