ஆளுநர் குறித்த அவதூறு தொடர்பில், ராஜ்பவன் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நக்கீரன் இதழில் பணி செய்யும் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட நக்கீரன் இதழாசிரியர் கோபால், அருப்புக் கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் முறைகேட்டு விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்பு படுத்தி அவதூறான கருத்துகளை பதிவுசெய்து வந்தார். கருத்துசுதந்திரம் என்ற பெயரில் நக்கீரனில் வெளியான பாலியல் கதைகளால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் மாளிகை, நக்கீரன் இதழ் மீது போலீஸில் புகார் அளித்தது.
ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ஆளுநர் மாளிகை அதிகாரி அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், வழக்குப் பதிவு செய்யப்பட்ட நக்கீரன் வார இதழ் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில் ஆளுநர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என கருதுவதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


