கடையநல்லூரில் மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு தோட்ட உரிமையார் கைது செய்யப் பட்டார். கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்தது! இந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேலகடையநல்லூர் அருகே உள்ள முந்தல்காடு அங்கே உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த மாதோப்புக்குள் நேற்று இரவு ஒரு வயதுடைய குட்டி யானை ஒன்று புகுந்தது! அப்போது சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்தது!
கடந்த ஒரு மாதமாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, கடைய நல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நெல், தென்னை, வாழை, பலா,மா உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து வந்தது!
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடும் வறட்சி ஏற்பட்டு அடவி நயினார், கருப்பா நதி உள்ளிட்ட அணைகள் முற்றிலும் வறண்டன. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் நீர் தேடி வன விலங்கான யானை விளை நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது
இந்நிலையில் முந்தல் காட்டில் நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்கு புகுந்த காட்டு யானைக் கூட்டம் மா மரங்களில் உள்ள மாங்காய்களை பிடுங்கி தின்று விட்டு வாய்காலில் சென்ற தண்ணீரை குடிக்கச் சென்றபோது அந்த வழியாக சென்ற சோலார் கம்பியின் மின்சாரம் குட்டி யானையின் மீது பாய்ந்தது! இதில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டியானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து தலைமை வனக்காப்பாளர் சிங்கர்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர் திருமால் ஆலோசனையின் பேரில் கடையநல்லூர் வனச்சரகர் செந்தில் குமார் , தலைமையில் வனவர் சரவணன், மேக்கரை வனவர் அருமைக்கொடி மற்றும் வன காவலர்கள் சசிக்குமார், ஆறுமுகம், ராமச்சந்திரன், பால்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் யானை இறந்து கிடந்த தோட்ட உரிமையாளர் குத்துக்கல் வலசை நேருஜி தெருவை சேர்ந்த சுப்பையா (55) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் சூரிய மின் வேலியில் மின் கம்பத்திலிருந்து சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்துள்ளது தெரியவந்தது!
இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.