தமிழக மலையோரங்களில் வசித்து வரும் கிராம மக்களிடையே பெருகிவரும் வறுமை, மற்றும் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் கொடுமைகளிலிருந்து விடுபடவே, சமீப காலமாக முன் காலங்களில் நடந்த குழந்தைகள் திருமணங்கள் போல இன்று அதிகரித்து வருகிறது என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசுக்கொலை என்பது பெரும் கொடுமையாக இருந்து வந்தது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது தொட்டில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் இந்த திட்டத்தின் மூலம் பெண் சிசுகொலைகள் ஓரளவு தடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து நவீன மருத்துவ முறையில் கருவிலேயே பெண் சிசுக்களை கண்டறிந்து கொல்லும் அவலநிலை அரங்கேறத் தொடங்கியது. இந்த நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசால் வரப்பட்ட சட்டங்கள், பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள், கா்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, முதல் பட்டதாரி பெண்களுக்கு உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்றவற்றால் சற்று நிலைமை மாறியது.
அதே நேரத்தில் தொடரும் குழந்தை திருமண அவலங்கள் மட்டும் கட்டுக்குள் வராதது பெண்ணிய ஆர்வலர்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில“ சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மலைகிராமங்களில் தொடரும் வறுமை, பாலியல் கொடுமைகளால் இந்த கொடூரம் நேர்வது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை மலைப்பகுதியில் அடுத்தடுத்து அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் பேரீச்சம்பள்ளியை அடுத்த மத்தூரில் என்ற கிராமத்தில் 16வயது சிறுமி ஒருவர், கலெக்டரிடம் போனில் பேசி, தன்னை தற்காத்துக் கொண்ட சம்பவம் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
இது குறித்து மலைகிராமங்களில் ஆய்வு நடத்திய விழிப்புணர்வு குழுவினர் கூறியதாவது: கல்வியறிவில்லாத மலைகிராமங்களில் குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குழந்தை திருமணத்துக்கு இவர்கள் முக்கிய காரணமாக கூறுவது வறுமை, போதிய கல்வி அறிவில்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாக கருதுவது போன்றவை தான்.
அதே போல் பெற்றோர்கள் பிழைப்புக்காக வெளியூருக்கு போகும் போது உள்ளூரில் உள்ள உறவினா்கள் மற்றும் யாரிடமாவது பெண் குழந்தைகளை ஒப்படைத்து சென்றால் அவா்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுகிறது. எனவே இந்த பாலியியல் செயல்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காகவும் குழந்தை திருமணங்கள் நடத்தி வைக்கபடுவதாக கூறுகின்றனா்.
இதற்கெல்லாம் பூப்பெய்தியவுடன் பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை முடிக்க வேண்டும் என்பதே இது போன்ற கிராமங்களில் வாழும் ஒட்டு மொத்த தாய்,தந்தையின் எண்ண ஓட்டமாக உள்ளது. அதேநேரத்தில் இதுபோன்ற குழந்தை திருமணங்களால், பெண் குழந்தைகளின் கல்வி தடைபடுவதோடு தன்னம்பிக்கை குறையும். அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து பற்றாக்குறை ஏற்படும்.
இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாமல் போகும். பிரசவத்தின்போது தாய், சேய் மரணம் நிகழும். எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறக்கும். ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும். நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். குடும்பத்தை வழிநடத்த முடியாமல், குழந்தைகள் பணிக்கு செல்லும் நிலை ஏற்படும்.
குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலைக்கு ஆளாவர். அவர்களது குழந்தைகள் அனாதைகளாக சாலையில் திரியும் நிலை உருவாகும் என்ற விழிப்புணர்வு கொஞ்சமும் இருப்பதில்லை. தற்போதைய நிலையில், பெண்குழந்தைகள் பிறப்பு தடுக்கப்படுவதால் ஆண், பெண் எண்ணிக்கையில் வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருமண வயதுடைய ஆண்களுக்கு, பெண்கள் கிடைக்காத சூழலும் உள்ளது. இளம் வயது திருமணத்தை தவிர்க்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் மேலும் குழந்தை திருமணங்களை தடுக்க, பெண் குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இளம் வயது திருமண பாதிப்புகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் சமபங்கு அளித்தல், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு, மரியாதை வழங்குதல் போன்றவற்றால் மட்டுமே தொடரும் குழந்தை திருமண அவலத்திற்கு தீர்வு காணமுடியும். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



