ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை: குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி தான் என்று ப.சிதம்பரம் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
உண்மை நிரூபிக்கப்படும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உண்மை எது என தெரியாத வரை ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம். தவறான வழியில் பணம சம்பாதிக்க வேண்டிய அவசிய மில்லை. பல நாடுகளில் சொத்துகள் வங்கி கணக்குகள் இருப்பதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய். கணக்கில் காட்டாத பணம் மற்றும் சொத்துகள் இருப்பதாக சொல்லப்படுவதை முடிந்தால் அரசு நிரூபித்து காட்டட்டும் என்று ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாங்கள் பணத்திற்காக அலையவில்லை என சிதம்பரம் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிதம்பரம் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை:
சிதம்பரத்திற்கு எதிராக உறுதி செய்யப்படாத, ஆதாரம் இல்லாத தகவல்கள் வெளிவருகின்றன. சிதம்பரத்தின் பெயரைக் கெடுக்க அரசு விரும்புகிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். சிதம்பரத்திற்கு எதிராக நடக்கும் பொய் பிரசாரம் வருத்தத்தை தருகிறது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதிதான் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. இதனை நாங்கள் நம்புகிறோம்.
சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயன்றாலும் உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் பொது வாழ்க்கையில், சிதம்பரத்திற்கு கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. போதுமான சொத்துகள் கொண்ட, முறையாக வருமான வரி செலுத்தும் சிறிய குடும்பம் நாங்கள். நாங்கள் அனைவரும் வருமான வரி கட்டி வருகிறோம்.
பணத்திற்காக நாங்கள் அலையவில்லை. சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாடுகளில் சொத்துகள், பல வங்கிக் கணக்குகள், போலி நிறுவனங்கள் என எங்களுக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏ்றபடுத்துகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசிடம் ஆதாரம் இருந்தால் அதைக் காட்டும்படி அரசுக்கு சவால் விடுக்கிறோம்.