Home Blog Page 192

மதுரை காமராஜர் பல்கலை.,மகளிர் விடுதியில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு – மர்ம நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் – சர்ச்சைக்குரிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது மாணவிகள் பாதுகாப்பு விஷயத்திலும் அலட்சியமாக உள்ளது  என மாணவிகள் வேதனை!

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில், விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை அருகே மாணவிகள்  தங்குவதற்கான தங்கும் விடுதி உள்ளது.

மாணவிகள் தங்கும் விடுகியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு, பல்கலைகழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்துள்ளார்.

இதனைப் பார்த்த, மாணவிகள் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் மாணவிகள் அவரை துரத்தி பிடித்துள்ளனர். மாணவிகளிடம் சிக்கிய நபர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மது போதையில் இருந்த அந்த நபர் தான் தெரியாமல் வந்து விட்டதாகவும் , ஏற்கெனவே இதுபோல வந்துள்ளேன் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதே பெண்கள் விடுதியில், சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் வந்து செல்வதாக மாணவிகள் கூறிய பொழுது வெறும் பிரம்மை எனகா கூறி, பல்கலை கழக நிர்வாகம் அலட்சியப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது மர்ம நபரை மாணவிகளே பிடித்து அவர எண் 100 மூலம் அழைத்து காவல்
துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் மர்ம நபரை அழைத்து சென்ற நிலையில் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல்  நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்காததால், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் காவல் நிலையத்திலிருந்து
அந்த நபரை விடுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்கலை கழக இரவு காவலர்கள் பாதுகாப்பை மீறி மாணவிகள் விடுதிக்குள் மர்ம நபர் புகுந்த சம்பவத்தில் முறையாக நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக, மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவாக…கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

IMG 20240630 WA0000 - 2026

பரபரப்பான வகையில் நடந்து முடிந்திருக்கிறது இந்த 2024ம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடர். இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 176-7 ரன்களை எடுத்தது. இதையடுத்து இறங்கிய தென்னாபிரிக்கா திரில் ஆட்டத்தில் 169-8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் இறுதிப் போட்டியில் இந்தியா வென்று உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றியின் பின்னே தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட சாதனைகள் என்று இல்லாமல், ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி இருக்கிறது என்பது உண்மையில் பெருமிதம் கொள்ளத்தக்க விஷயம்! இது போன்று குழுவாக கூட்டு முயற்சியில் கடினமாக உழைத்தால் எந்த வெற்றியும் சாத்தியமே என்பதை நிரூபித்த ஒரு போட்டியாக இந்தத் தொடரின் இறுதிப்போட்டி அமைந்தது! அதிலும் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வெற்றி பெறுவது என்பதெல்லாம் வரலாற்றில் அரிதாக நடக்கக்கூடிய சங்கதி!  அதை இந்திய அணி செய்து காட்டி இருக்கிறது! இதுவே உலகத்துக்கு இந்திய அணி அளித்த உன்னதமான செய்தி! 

இந்த இறுதிப் போட்டியில், தங்கள் பொறுப்புணர்ந்து கூட்டாக எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடியது அணிக்கு பெரிய அளவில் உதவியது. கடைசி 5 ஓவர்களில், உயிரைக் கொடுத்து, வெற்றியை எதிரணியின் பக்கம் சிறிதும் விட்டுக்கொடுக்காமல், ஆடியது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

கோலி பேட்டிங், ரோஹித் கேப்டன்சி, பும்ரா, அர்ஷிதீப், அக்சர், பாண்ட்யா பவுலிங், சூர்யகுமார் யாதவ் பீல்டிங் என்று, அனைத்து துறையிலும் ஒவ்வொரு வீரர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக இந்திய அணி வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 9 ரன், பண்ட் டக் அவுட், அதிரடி காட்டும் சூரிய குமார் 3 ரன்னில் அவுட் என அதிர்ச்சி கொடுக்க, பெரிதும் எதிர்பார்க்கப்படாத கோலியும் அக்சர் படேலும் நம்பிக்கை கொடுத்தார்கள்.

ரோஹித் சர்மா இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான அவரது பேயாட்டத்தைக் கண்டவர்கள், அவர் இறுதிப் போட்டியில் 9 ரன்னில் மூட்டை கட்டியபோது, நம்பிக்கை இழந்துதான் போனார்கள். ஆனால் தொடர் முழுக்க இரட்டை இலக்க எண்ணைத் தாண்டாத விராட் கோலி, இறுதிப் போட்டியில் அணிக்கு நம்பிக்கை அளித்தார். எனினும், 3 விக்கெட் விரைவாக விழுந்துவிட்டதால் விரைவாக ரன் சேர்ப்பதில் ஈடுபடாமல் பொறுமையாக, மெதுவாக ஆடி 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே நேரம், அக்சர் படேல் 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 47 ரன் எடுத்து அசத்தினார்.

50 ரன்களைக் கடந்த பின், திடீரென வேகம் காட்டிய கோலி, 59 பந்தில் 76 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். என்றாலும்,  ஒரு பேட்டிங் பிட்சில் அவரின் வேகம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இன்னும் கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்து, 200க்குப் பக்கத்தில் ஸ்கோரை நிறுத்தியிருக்க வேண்டிய நிலையில், ஷிவம் துபே கடைசி நேரத்தில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து, 176க்கு 7 விக்கெட்கள் என்ற ஸ்கோரில் நிறுத்தினார்கள். இந்திய அணி கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருந்தால், அடுத்து பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கும்.  காரணம், அது பேட்டிங் பிட்ச். ஆனால் இந்திய அணி ஸ்லோ பிட்ச் போல் ஆடியது என்றே சொல்லலாம்! அதனால் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு, இந்த பிட்சில் எடுபடாமல் போய், அதிக ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று!

இந்த நிலையை உணர்ந்துதான் தென்னாப்பிரிக்க வீரர்களும் விளையாடினார்கள். தொடக்கத்தில் அந்த அணியின் ஹென்றிக்ஸ், மார்க்கரம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டி காக், ஸ்டப்ஸ் இணைந்து சிறப்பாக ஆடினர். ஸ்டப்ஸ் 31 ரன், டி காக் 39 ரன் என எடுத்து வலுவான நிலைக்குக் கொண்டு செல்ல, தென்னாப்பிரிக்க அணி வெற்றிப் பாதையில் சென்றது. குறிப்பாக, நேரத்தின் தேவை அறிந்து 27 பந்தில் 5 சிக்ஸ் உடன் 52 ரன் சேர்த்து கெல்சன் அதிரடி ஆட்டம் ஆட, தென்னாப்பிரிக்க அணி நிச்சயம் வென்று விடும், அதுவும், போட்டி முடிவதற்கு 2 ஓவர் முன்பாகவே வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டு வந்தது.  

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையுடன் தொலைக்காட்சிகளில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த வெறித்தனமான ரசிகர்கள் பலர்  டிவியை அணைத்துவிட்டு  உறக்கத்துக்கு சென்று விட்டதை  பலரின் சமூக வலைதள பதிவுகள் மூலம் உணர முடிந்தது.  ஆனால் முதலை வாயில் அகப்பட்ட இரையை தட்டிப்பறித்துக் கொண்டு வந்தது போல் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது என்பதுதான் இந்த ஆட்டத்தின் சிறப்பு!

15 ஓவர்களின் முடிவில், அதாவது 90 பந்துகளில் 146 என்று இருந்து, 30 பந்துகளில் வெறும் 30 ரன் எடுத்தால் போதும் என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்க அணி. அந்த நேரத்தில்தான் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா எடுத்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. வேறு கேப்டன்களாக இருந்தால் நன்றாக பவுலிங் செய்து எதிரணிக்கு பயத்தை காட்டக்கூடிய பூம்ராவை 18, 20 ஓவர்களில் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் 16-வது ஓவரிலேயே பூம்ராவைக் கொண்டு வந்து தனது கேப்டன்சியை நிரூபித்தார் ரோஹித். அவ்வளவு நேரம் அதிரடி காட்டிய கிளாஸனை கட்டுப்படுத்தும் விதமாக அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே கொடுத்து பூம்ரா சிறப்பாக செய்தார்! அதனால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்துக்கு  கிளாஸன் தள்ளப்பட்டார். எனவே தான் சந்தித்த பதினேழாவது ஓவரின் முதல் பந்தில் தூக்கி அடிக்க ஆசைப்பட்டு,  சாதாரண அவுட் சைடு பந்தாக இருந்தாலும் அதை தொட்டு ஆட்டம் இழந்தார் க்லாஸன். இது ஆட்டத்தின் ஒரு திருப்புமுனை ஆனது. 

அதன்பின் ஜான்சனை பும்ரா பதம் பார்க்க, கடைசி ஓவர்கள் ரன்கள் எடுக்க இயலாத படி, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள் இந்திய அணியின் ஃபீல்டர்கள். மிகச் சிறப்பான பீல்டிங் வியூகமும் அணியின் ஒருங்கிணைப்பும் கைகொடுக்க, கடைசி ஓவரில் 16 ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தென்னாப்பிரிக்க அணியைக் கொண்டு வந்தார்கள்! அதாவது மூன்று ஓவர்களில் வெறும் 10 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு பந்துகளில் 16 ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினார்கள்  அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள்.

எனவேதான் ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரன் சேர்க்க வேண்டிய சூழலில்  சூரியகுமார் யாதவ் பவுண்டரி லைனில் பிடித்த  கேட்ச் மூலம் மில்லர் ஆட்டமிழந்தார்.  அது மட்டும் ஆறு ரன்கள் என்று ஆகி இருந்தால் அடுத்த ஐந்து பந்துகளில் எளிதாக 10 ரன்கள் சேர்த்திருக்க கூடும்.  காரணம் பாண்டியாவின் பந்தினை அதுவரை நன்றாகவே அனைவரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மில்லர் ஆட்டமிழந்தது அடுத்த திருப்புமுனை. அதன் பின் மேலும் ரன்கள் போகாமல் கூடுதலாக ஒரு விக்கெட் எடுத்து தென்னாப்பிரிக்க அணியின் கடைசி வரிசை ஆட்டக்காரர்களை கட்டுப்படுத்தினார்கள் இந்திய அணியினர்.  இத்தகைய கூட்டு முயற்சியும்  வெற்றியின் மீது நம்பிக்கை இழக்காத போராட்ட குணமும் தன்னம்பிக்கையும் தான் அணிக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளித்துள்ளது. இதன் மூலம் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்த தோல்வியை உடைத்து இந்திய அணி சாதனை படைத்தது.

இதில், தென்னாப்பிரிக்க அணியின் திறமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த அணி, முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம், கடினமாகப் போராடிய தங்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவிக்கும் அவர் வருங்காலத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறிய வார்த்தைகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

 “இது வெற்றியை நெருங்கிய ஒரு படி. இதுபோன்ற பெரிய கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வது எளிதல்ல. அதில் கோப்பையை வென்ற இந்தியா போன்ற அணிக்கு நீங்கள் தலை வணங்க வேண்டும். ஏனெனில் அதில் கடினமான உழைப்பு இருக்கும். 

“நாங்களும் வெற்றியை ஒரு படி நெருங்கியுள்ளோம். கண்டிப்பாக வருங்காலங்களில் நாங்கள் முன்னோக்கிச் சென்று அந்த முதல் வெற்றியைப் பெறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் இம்முறை தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்துள்ளேன். ஒரு அணியாக நன்றாக விளையாடி வந்த நாங்கள் தோல்வியை சந்தித்ததால் அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் நேரம் தேவைப்படும். இருப்பினும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஏற்கனவே சொன்னது போல் இது கொஞ்சம் வலிக்கிறது.

“எங்கள் வீரர்கள் மற்றும் அணிக்காக பெருமைப்படுகிறேன். எங்களுடைய பௌலர்கள் நன்றாகப் பந்து வீசினர். அதே போல பிட்ச்சில் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் நினைக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவை ஓரளவு நன்றாகக் கட்டுப்படுத்தி சேசிங் செய்யக்கூடிய இலக்கைப் பெற்றோம். அதைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் நாங்கள் நன்றாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன். இருப்பினும் கடைசியில் அது தவறிச் சென்றது” என்றார். 

இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு புறம் இருந்து ரசிக்கும் நாம், வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய, சொல்லப் போனால் முதல் முறை கோப்பை கனவுடன் இறுதிப் போட்டி வரை வந்த தென் ஆப்பிரிக்க அணி, தாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அணி, திடீரென ஏற்பட்ட தோல்வியின் சோகத்தால், மனமுடைந்ததைப் பற்றியும் யோசித்துப் பார்க்கலாம்! 

அதனை உணர்ந்து தான், இந்திய அணியின் தீவிர ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி, உற்சாகப் படுத்தி, அவர்களின் சோகத்தை விரட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். இணையத்தில் வைரலான வீடியோ ஒன்று, இந்திய ரசிகர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் வீடியோவை சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து, விளையாட்டு என்பதன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவை எல்லாம் இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் உலகத்துக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடங்கள்!

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (41): அவிவேக புரோஹித நியாயம்!

samskrita nyaya - 2026

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

அவிவேக புரோஹித நியாயம்
அவிவேகம் – அறிவற்ற (இங்கிதமற்ற),
புரோஹிதர் – புரத்திற்கு ஹிதம் செய்பவர் (மதிப்பிற்குரிய மனிதர்)

பிறர் மனம் புண்படும்படி பேசுவது விவேகமற்றவர்களின் இயல்பு. சின்னக் குழந்தையானாலும் வளர்ப்பு மிருகமானாலும் சிரித்துக் கொண்டே பேசினால் அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம். விளையாட்டாகக் கூட பிறரை கேலி செய்து மனம் புண்படும்படி பேசக் கூடாது என்ற நீதியைக் கூறும் நியாயம் இது.

ப்ரியவாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்துன: |
தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||

(சாணக்ய நீதிசாஸ்திரம்)

பொருள் – இனிமையான சொல்லைக் கேட்டால் எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். அதனால் அன்பாகவே பேச வேண்டும். சொற்களுக்குக் குறைவா என்ன? பேசுவதில் ஏனிந்த தரித்திரம்?

உடலில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும். ஆனால் பிறருடைய உள்ளத்தில் சூலம் போற்ற கூரான சொற்களால் ஏற்படுத்திய காயம் ஆறுவது கடினம் என்கிறார் விதுரர். பிறர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையாகப் பேசுவது ஒரு கலை.

சிலருக்கு நல்லவிதமாகப் பேசத் தெரியாததால் கௌரவம் மிக்க ஸ்தானத்தில் இருந்தாலும் மதிப்பை இழக்கிறார்கள். பேசும்போது நாவடக்கம் இல்லாவிடில் மதிப்பை இழக்க வேண்டி வரும் என்று தெரிவிக்கும் நியாயம் இது.

இந்த நியாயத்தில் புரோஹிதர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதில் உள்ள காரணத்தைப் பார்க்கையில், அறிஞர்களால் மதிக்கப்படும் மனிதர் என்றும், அப்படிப்பட்டவர் கூட நாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவமதிப்புக்கு உள்ளாவார் என்றும் நகைப்புக்கு இடமாவார் என்றும் இந்த நியாயம் தெரிவிப்பதை அறிய முடிகிறது.

இந்த நியாயத்தோடு தொடர்புடைய சில கதைகள் புகழ் பெற்றவையாக உள்ளன. இவை சிறுவர் கதைகளில் படித்தவையே. ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் கட்டிய புது மாளிகையில் வாஸ்து பூஜை செய்வதற்காக ஒரு புரோஹிதரும் அவருடைய சீடரும் வந்தார்கள். வீட்டு உரிமையாளரின் மனைவி மிகவும் குண்டாக இருந்ததைப் பார்த்து புரோஹிதரும் அவருடைய சீடரும் அனைவரின் முன்பாக நகைத்தனர்.

“சுவாமி, இந்த வீட்டின் கதவுகள் இத்தனை சின்னதாகவும் குறுகியதாகவும் உள்ளதே. இந்த வீட்டின் யஜமானியம்மாவைப் பார்த்தால் இத்தனை குண்டாக இருக்கிறாரே. அவர் மரணமடைந்தால் எப்படி வெளியில் எடுத்துச் செல்வார்கள்?” என்று கேட்டான் சீடன்.

புரோஹிதர் இன்னும் அறிவிலி. சீடனைக் கண்டிக்காமல், “சீடனே, இதென்ன கேள்வி? உடலைத் துண்டு துண்டாக்கி எடுத்துச் செல்வார்களே தவிர, சுவரை உடைப்பார்களா, என்ன?” என்று கேட்டார். இந்த அரட்டையால் புரோஹிதர் அவமதிப்புக்கு உள்ளாகி விரட்டப்பட்டார். சொல்லுக்கு பாதிப்பு அதிகம் என்பது இந்தக் கதை கூறும் நீதி.

ஒரு அறிவுப்பூர்வமான சொல் எதிரியையும் நண்பனாக்கும். ஒரு அறிவற்ற சொல் நண்பனையும் எதிரியாக்கும். விவேகம் நிறைந்தவரான சுவாமி விவேகானந்தர் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் உரைத்த சொற்கள் இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சைனாவோடு 1962 ல் நடந்த போரில் பாரத தேசம் 64,000 சதுர கி.மீ நிலப்பகுதியை இழந்தது. தேச பக்தரான ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அன்றைய பிரதமரை பார்லிமெண்டில் அது குறித்து வினவியபோது, அந்த நிலப்பகுதியை குறைத்து மதிப்பிட்டு, “போனால் போகட்டும். ஒரு புல் கூட முளைக்காத இடம் அது. இருந்தால் என்ன? போனால் என்ன? என்று பொருள்படும்படி, “Even a blade of grass won’t grow there” என்றாராம்.

பிரதமர் பதவியில் இருக்கும் மனிதர் கூறக் கூடிய சொற்களா அவை? அத்தகைய விவேகமற்ற நடத்தை அவருடைய கௌரவத்தைக் குறைத்தது. “அவிவேக புரோஹித” நியாயத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தன் விவேகமற்ற பேச்சின் காரணமாக இகழப்பட்டது வரலாற்றில் நிலைத்து விட்டது. இந்தியர்கள் மூன்று வேளையும் சாப்பிடுவதால்தான் உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றாராம் அவர். அந்த உளறல் அவருடைய கௌரவத்தைக் குறைத்தது.
இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு சீக்கியர்களின் மீது வன்முறையும் கலவரங்களும் கொலைகளும் நேர்ந்தன. அது குறித்துப் பேசிய இந்திராஜியின் மைந்தர், அதனை நியாயப்படுத்துவதுபோல, “பெரிய மரம் பெயர்ந்து விழுந்தால், அதன் தாக்ககம் நில அதிர்வாக வெளிப்படுவது இயல்புதான்” என்று விளக்கவுரை அளித்து, கௌரவத்தை இழந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் நடந்த ஒரு கொடூரமான கொலையைப் பற்றி மதிப்புள்ள உறுப்பினரான கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. தன் வருத்தத்தை வெளிப்படுத்தி கொலையைக் கண்டித்து உரையாற்றுகையில், அப்போதைய முதல்வர், “இறந்தவர் நம் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. எதற்காக தொண்டையைக் கிழித்துக் கொண்டு பேசுகிறாய்? உட்கார்” என்று ஆத்திரத்தோடு பேசியது அப்போது விமரிசனத்துக்கு உள்ளானது.

காங்கிரஸ் கட்சிக்கும், அதிலும் முக்கியமாக ராகுல் காந்திக்கும் குரு போன்றவரான சத்தியநாராயண கங்காராம் பிட்ரோடா (சாம் பிட்ரோடா), அண்மையில் இந்தியர்களின் உடல் நிறத்தைப் பற்றிப் பேசிய சொற்கள் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, வகித்த பதவியையும் இழக்கச் செய்தது. அவருடைய சீடர் வெளிநாட்டு மேடைகளில் வாய்க்கு வந்தபடி சந்தர்ப்ப சூழ்நிலையை கவனிக்காமல் பேசுவதும், பாரத தேசம் ஒரு தேசமே இல்லை என்று உளறுவதும் இந்த அவிவேக புரோஹித நியாயத்திற்கு உதாரணங்கள்.

ஆனால் இவ்வாறு ஏன் சிலர் நடந்து கொள்கிறார்கள்? இது குறித்து மன தத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து விளக்கியுள்ளார்கள். அவர்கள் கூறிய கருத்துகளில் முதலாவது விவேகமின்மை. இந்த நியாயத்தில் புரோஹிதர் என்ற சொல்லை பயன்படுத்துவது, புகழ்பெற்றவர்கள் கூட விவேகமில்லாமல் நடந்து கொள்வார்கள் என்று கூறுவதற்காகவே. அடுத்தது, மனதில் ஆழத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிப்படுவது. இன்னொன்று, நாவடக்கமின்றிப் பேசும் சுபாவம் உள்ளவர்களிடம் கட்டுப்பாடற்ற பேச்சு இவ்விதமான விவேகமற்ற சொற்களை உதிர்க்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

“வாக்பூஷணம் சுபூஷணம்” – நல்லவிதமாகப் பேசுவது மனிதனுக்கு நகையலங்காரம் போன்றது என்று கூறும் நியாயம் இது.

சங்கரன்கோயில் ஆலயத்தில் வரும் ஆக.23ல் கும்பாபிஷேகம்!

sankarankoil kumbabishekam thirupani - 2026

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்து சைவ-வைணவ ஒருமைப்பாட்டை விளக்கும் ஆலயங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பிரபலமான தனித்துவமான சிவாலயங்கள் பல உள்ளன அதில் முக்கியமானது சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆகும் இங்கு இந்து மதத்தில் சைவமும் வைணவமும் ஒன்றே என்று உலகுக்கு காட்ட சிவனும் மகாவிஷ்ணுவும் சரி பாதி இணைந்த சங்கரநாராயணர் ஸ்தலம் உள்ளது.

மூலஸ்தானத்தில் சங்கரலிங்கசுவாமி அருள்பாலிக்கிறார் அருகில் பிரசித்தி பெற்ற அம்மன் கோமதி அம்மன் அருள் பாலிக்கின்றார்.

கோவில் சங்கரன்கோவில் நகரின் மையப் பகுதியில் உள்ளது. மிகப் பெரிய கோபுரம், மிகப்பெரிய கட்டிடக்கலை என பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாகராஜர் சன்னிதி மிகவும் பிரபலமான தனித்துவமான சன்னிதியாகும்.

இக்கோவிலில் தினமும் பல்வேறு பூஜை வழிபாடுகள் நடந்தாலும், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் நடைபெறும் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை வழிபாடு மிகப் பிரபலமானது.

ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட உத்ஸவம் நடைபெறும் இக்கோவில் ஆடி தபசு திருவிழா பிரபலமானது.
இது பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலம் ஸ்தலமாகும். இங்கு புற்று மண் பிரசாதம் பிரபலம்.

இக் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கோவிலில் திருப்பணிகள் முடியும் நிலையில், கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரங்கள், கல் தூண்கள் மற்றும் மூலவர் சன்னதிகள் அனைத்தும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டி20 வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்!

madurai cricket fans celebrates t20 wc - 2026

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் – கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்!

டி. 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ஒட்டி, மதுரை ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 9வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியுடன் மோதிய இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2007க்கு பிறகு, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த முறை ஒருநாள் உலககோப்பை போட்டியில் பைனல்
வரை வந்து தோற்றதால், ஏக்கத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியை இந்தியா முழுதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட்
கிளப் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நட்புறவு கிரிக்கெட் போட்டியும் நடத்தினர். பின்பு, கிரிக்கெட் மைதானம், பேட் ஸ்டம்ப், பந்து மற்றும் நீல நிற ஜெர்சி உடன் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட கேக் வெட்டி
சக வீரர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: குப்பையான கோரிக்கை, சப்பையான வாதம்!

write thoughts - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவுக்கு அவசியமா? அது தேவை என்று பாஜக-வை எதிர்க்கும் 26 கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வருடம் முன்பு கோரிக்கை வைத்தன. அந்தக் கோரிக்கை குப்பையானது. அதற்கான வாதங்கள் சப்பையானவை.

அண்மையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்மொழிய, தமிழக சட்டசபையும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியம் என்று குறிப்பிட்டு, அந்தப் பணியை மத்திய அரசு செய்துதர வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்தத் தீர்மானம். அது அர்த்தமற்றது. தீர்மானத்தின் முக்கியப் பகுதி இங்கே:

இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில், திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய, ஜாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.

ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இப்போது திமுக ஆட்சி. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இட்ட அடித்தளத்தின் தொடர் பயனையும், காலம் தானாகத் தரும் வளர்ச்சியை மட்டும் தமிழகம் கண்டிருக்கிறது. சாதாரண மக்கள் வேறு பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கவில்லை. என்ன காரணம்?

மாநிலத்தில் என்ன ஜாதியில் எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை என்பதால்தான், ஸ்டாலின் ஆசைப்படுகிற முன்னேற்றத்தைத் தமிழக மக்கள் இதுவரை அடையவில்லையா? அவர் முன்மொழிந்த சட்டசபைத் தீர்மானம், அதைத்தானே சொல்ல வருகிறது?

சட்டசபைத் தீர்மானம் குறிப்பிடும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஆகிய மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

“ஆறிலிருந்து பதினான்கு வயதுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ராஜ்ஜியம் கட்டாய இலவசக் கல்வியை அளிக்கவேண்டும், அதற்கு வழிமுறையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று நமது அரசியல் சட்டம் விதிக்கிறது. இதற்கான சட்ட திருத்தம் 2010-ஆம் வருடம் அமலுக்கு வந்தது.

குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி என்பது எல்லா ஜாதி மத மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும், அது ராஜ்ஜியத்தின் பொறுப்பு, என்று அரசியல் சட்டம் சொல்கிறது. காலம் காலமாகப் பள்ளிக் கல்வியை மாநில அரசு நிர்வகிக்கிறது, மேற்பார்வை பார்க்கிறது. ஆகையால் தமிழகக் குழந்தைகளின் பதினான்கு வயது வரையிலான பள்ளிக் கல்வி, தமிழக அரசின் கடமை.

பதினான்கு வயது என்பதோடு நிறுத்தாமல், மாநிலத்திலுள்ள சிறுவர்களின் பத்தாம் வகுப்பு முடியும்வரை – ஏன் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை கூட – தமிழக அரசு எல்லா ஜாதி மதத்தவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வியை அளிக்கலாம். அரசியல் சட்டம் நிர்பந்திக்காமல் கூட ஒரு அரசு இப்படியான கட்டாய இலவசக் கல்வியை அளிக்க முடியும்.

தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் பதினான்கு வயது வரையிலாவது தரமான கட்டாய இலவசக் கல்வி கிடைத்தால் என்னாகும்? சட்டசபைத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற மூன்று நோக்கங்களும் அடுத்தடுத்து மக்கள் வாழ்வில் தாமாகப் பெரிதளவு நிறைவேறுமே? இதைச் செய்து முடிக்க ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டாம். முதலமைச்சரிடம் முனைப்பு இருந்தால் போதும்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால், அரசு “திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்றும்” என்கிறது சட்டசபைத் தீர்மானம். தனக்கு ஏற்கனவே அரசியல் சட்டம் அதிகாரங்கள் தரும் விஷயங்களில், தமிழக அரசு – அதுவும் திமுக அரசு – திட்டங்கள் தீட்டி மக்களுக்கான சேவைகளைக் குறை இல்லாமல் அளித்திருக்கிறதா?

அரசியல் சட்டத்தின் கீழ், ஆதியிலிருந்து ஒரு மாநில அரசின் தனியான கட்டுப்பாட்டிலும் பொறுப்பிலும் இருக்கும் சில துறைகள் இவை: சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், ஆஸ்பத்திரிகள், சாலைகள், நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பாதாள சாக்கடைகள், நிலம், நில அளவை, பட்டா போன்ற நில ரிகார்டுகள். இவை மாநிலத்தின் அனைத்து மக்களின் வாழ்வோடு, பெரிதும் அன்றாட வாழ்வோடு, தொடர்புடையவை.

மேலே சொன்ன துறைகள் ஏதாவது ஒன்றின் செயல்பாட்டில், தமிழக அரசுக்கு – ஒரு திராவிடக் கட்சியின் ஆட்சிக்கு – நாம் பாஸ் மார்க்காவது தர முடியுமா? சட்டம் ஒழுங்கு பல இடங்களில் பல்லைக் காட்டுகிறது. சாலைகள் வாய் பிளக்கின்றன. அரசு ஆஸ்பத்திரிகள் அழுகின்றன. குடிநீர் நமக்குத் தண்ணி காட்டுகிறது. பாதாள சாக்கடை நீர் சந்திக்கு வருகிறது. பட்டா கேட்டால் பர்ஸைப் பிடுங்குகிறார்கள்.

அரசு நடத்தும் திமுக-வுக்கு, அரசியல் சட்டம் ஏற்கனவே கொடுத்திருக்கும் அதிகாரங்களை மக்கள் நலனில் பிரயோகித்து அவர்களுக்கு நல்லது செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில், மத்திய அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்துக் கொடுத்தால், அதன் பிறகு ஸ்டாலின் அரசு திட்டங்கள் தீட்டுமா? சட்டங்கள் இயற்றுமா? அதன் வழியே “மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை” உறுதி செய்யுமா? வெற்று வார்த்தைகள்.

இன்னொன்று. மாநிலத்தில் யார் என்ன ஜாதி என்று அரசு தெரிந்துக்கொண்ட பின், சட்டசபைத் தீர்மானத்தின் படி மக்களுக்கு “சம உரிமை, சம வாய்ப்பை” அரசு உறுதி செய்யுமா – வேலைவாய்ப்பு உட்பட? அதாவது, தமிழகத்தில் தனியார் துறையில் தொழில்வளமும் வேலைவாய்ப்பும் விரைவாகப் பெருகாமல் பார்த்துக் கொண்டு, சொற்ப அரசுப் பணி இடங்களுக்காகப் பல லட்சம் மக்களை ஜாதி அடிப்படையில் ஏங்க வைத்துக் கொண்டே இருக்குமா மாநில அரசு? எல்லா ஜாதி மக்களுக்கும் இது எப்போதும் துரோகம் அல்லவா?

அரசியலை ஜாதி ரீதியாக, ஒரு ஜம்பத்துக்காக, வருமானம் பார்க்கும் ஒரு தொழிலாக, செய்யும் சில ஜாதித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சங்கதியை அந்தந்த ஜாதிகளில் சிலர் உணர்வார்கள், பலர் உணரமாட்டார்கள். அந்த மாதிரித் தலைவர்களைத் தங்கள் கையில் போட்டுக் கொண்டு, அவர்களோடு பேரம் செய்துகொண்டு, தங்களின் வளத்தை, தங்கள் குடும்பத்தின் செழிப்பை, தங்கள் கட்சியின் நலனை, பாதுகாக்கும் பெரிய கட்சித் தலைவர்கள் உண்டு.

அரசியல் விளையாட்டுக்கள் மூலம் கொழிக்கும் சில பெரிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அவர்களுடன் அணி சேர்ந்து பயன் பெறும் சில சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு லாபம் தரும். மற்றபடி, அரசுமுறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடந்து அதன் விவரங்கள் வெளியானால், அதன் மூலம் தமிழக மக்கள் – அல்லது தேச அளவில் எல்லா மக்களும் – ஒன்றுபட மாட்டார்கள். மாறாக, அரசியல்வாதிகளின் குயுக்தியால் மக்கள் மேலும் பிளவுபடலாம்.

ஸ்டாலினிடம், அவருடன் உடன்படும் பிற அரசியல்வாதிகளிடம், நாம் கேட்டுக் கொள்ளலாம்: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து, நீங்கள் “திட்டங்கள் தீட்ட” வேண்டாம். பாவம் மக்கள். முடிந்தவரை அவர்கள் நலமாக இருக்கட்டுமே!

Author: R Veera Raghavan, Advocate, Chennai (veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com

நாடாளுமன்றத்தை கலக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  விவகாரம்! 

new parliament buliding - 2026
#image_title

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பற்றி எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக., எம்.பி., அனுராக் தாக்கூர் மக்களவையில் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பாஜக., எம்பி.,க்கள் ‘வெட்கக்கேடு வெட்கக்கேடு..’ என முழக்கமிட்டார்கள்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை இன்று நடைபெற்றது. அப்போது பாஜக., எம்.பி., அனுராக் தாக்கூர், ஆளும்கட்சியின் பல்வேறு சாதனைகளைப் பற்றியும், எதிர்க்கட்சிகளின் மீதான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துப் பேசினார். 

அப்போது அவர், “தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4ல் இருந்து 99 இடங்களை பெற்ற கட்சி, 240 இடங்களை விட அதிகம் வெற்றி பெற்றது போல் சித்திரிக்க முயல்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது; ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த உதயநிதி சநாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறார்!” என்றார்.  

அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்பி., தயாநிதி, ”சனாதன விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நாடாளுமன்ற விதி எண் 352ன் படி, அனுராக் தாக்கூரின் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார். 

அதற்கு பதிலளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ”அப்படியென்றால் நீங்கள் அனைவரும் விதி எண் 352ன்கீழ் பேசத் தயாராக இருக்க வேண்டும். நீட் விவகாரம் கூட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுபற்றி ஏன் மக்களவையில் பேசுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர் பேசிய அனுராக் தாக்கூர், ”தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார். அப்போது, ‘வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..’ என ஆளும் பாஜக., எம்பி.,க்கள் முழக்கமிட்டனர். இவ்வகையில், நாடாளுமன்றத்தில் இன்று தொடக்கத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஒரு புயலைக் கிளப்பி விட்டது.

சமூக, தேச நலன்களை மனதில் கொண்டு செய்தி வெளியிட வேண்டும்: சுனில் அம்பேகர்

narad jayati award function - 2026

முதல் பத்திரிக்கையாளர் தேவரிஷி நாரதரின் பிறந்த நாளான நாரதர் ஜயந்தியை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பஞ்சகுலாவில் ஜூன் 30 ஞாயிறு அன்று ஹரியானா மாநில விஸ்வ சம்வத் கேந்திரா அறக்கட்டளை ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தது.

9வது மாநில அளவிலான பத்திரிகையாளர் விருது வழங்கும் இந்த விழாவில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்டார். இதில், 12 பிரிவுகளில் 12 பத்திரிகையாளர்களுக்கு சிறந்த பங்களிப்பிற்காக தேவரிஷி நாரதர் விருது வழங்கி, அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு விஸ்வ சம்வத் கேந்திரா தலைவர் மார்கண்டேய அஹுஜா தலைமை வகித்தார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேகர் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, “இதழியல் துறை எண்ணிக்கையில் மிகச் சிறியதாக இருக்கலாம், ஆனால் அது மிக முக்கியமான துறை. ஒரு பத்திரிக்கையாளர் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா போன்ற தொற்றுநோய்களின் போது அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதும், பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினர்.

சமுதாயம் மற்றும் தேசத்தின் நலன் கருதி ஊடகவியலாளர்கள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும். ஊடகவியலாளர்கள் ஜனநாயகத்தின் விழிப்புடன் இருக்கும் காவலர்கள், இதன் காரணமாக ஜனநாயகம் வலுவடைகிறது.

பத்திரிக்கையாளர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, சுயநலம் இல்லாமல் செய்தி தருகிறார்கள், அதன் மூலம்தான் நமது சமூகம் ஒன்றுபடுகிறது.

இந்த மாதம் 25ஆம் தேதி நாடு முழுதும் அவசரநிலையின் இருண்ட அத்தியாயத்தை நினைவு கூர்ந்துள்ளது. இது போன்ற ஒரு அடி தேசத்திற்கு மீண்டும் ஏற்படாத வகையில் மோசமான சம்பவங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

செய்திகளை சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் உண்மையை மறைக்கக் கூடாது. செய்திகளை வெளியிடும் போது, சமூகம் மற்றும் தேச நலன்களை மனதில் கொள்ள வேண்டும்” என்று பேசினார் சுனில் அம்பேகர்.

விஸ்வ சம்வாத் கேந்திரம் வழங்கிய பத்திரிகையாளர் எழுத்தாளருக்கான ‘நாரதர் விருது’

vsk dt award function - 2026

மதுரையில் விஸ்வ சம்வாத் கேந்திரா தக்ஷிண தமிழ்நாடு சார்பில், நாரதர் ஜயந்தி மற்றும் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரையில் தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்களுக்கு கொண்டு சென்ற இருவருக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.

தென்தமிழக விஸ்வ சம்வாத் கேந்திரம் அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான நாரதர் விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. ஊடகத்துறை மூலம் தேசிய, தெய்வீக சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவிற்கு மதுரை மாணிக்கம் ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஊடகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பாபு சஜன் கெவின் தலைமை வகித்தார். கேசவன் இறைவணக்கம் பாடினார். ஆர்.எஸ்.எஸ்., செய்தித் தொடர்பாளர் வக்கீல் முத்துராமலிங்கம் வரவேற்றார். 

மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, நெல்லை தினமலர் நிருபர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோருக்கு சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருக்கான நாரதர் விருது வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மோகன் விருதை வழங்கினார்.

தியாகபூமி மாத இதழ் ஆசிரியர் கிருஷ்ண முத்துசாமி பேசினார். விருது பெற்ற வரலொட்டி ரங்கசாமி, வெங்கட சுப்பிரமணியன் இருவரும் ஏற்புரை ஆற்றினர். மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், ஆர்.எஸ்.எஸ்., மாநிலப் பொறுப்பாளர் ராஜமுருகானந்தம், ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், வக்கீல் அமைப்பு மாநில அலுவலக செயலாளர் செல்வகுமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்டச் செயலாளர் சேகர் மற்றும் ஊடகவியலாளர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், சமூக வலைதள செயற்பாட்டாளர்கள், குறும்பட இயக்குனர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்டனர். பாலகுருசாமி நன்றி கூறினார்.

குருவருளும் திருக்குறளும் – இலக்கிய நிகழ்ச்சி!

tejas function at mylapore - 2026

— மந்திரமூர்த்தி அழகு —

தேஜஸ் பவுண்டேஷன் அமைப்பு சென்னையில் சிறப்பான இலக்கிய நிகழ்வுகளைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

நேற்று ஜூன் மாதம் 30 – ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலையில் தேஜஸ் பவுண்டேஷன் சார்பாக மயிலையில் இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் திரு.கே.ஜி ரகுநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

விருந்தினர்களைத் தேஜஸ் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் திரு. பி.டி.டி ராஜன் அவர்கள் கௌரவித்தார்.

தலைமையேற்ற டாக்டர் பாஸ்கரன் அவர்களை எழுத்தாளர், சமூக சேவகர் என்பதுடன் தன்னடக்கத்தின் வடிவம் என்றும் சொல்லலாம். ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற குறளுக்குப் பொருத்தமானவர் அவர். டாக்டர் பாஸ்கரன் குருவின் பெருமைகளைக் குறித்துச் சிறப்பாகச் சுமார் 30 நிமிடங்கள் வைணவத்தின் வழியில் நின்று உரையாற்றினார்.

கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘குரு அருளும், திருக்குறளும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். கீழாம்பூரார் திருக்குறளில் ஆழங்கால் பட்டவர். இரண்டு தடவைகள் திருக்குறளைக் குறித்து ஏழு மணி நேரம் (ஒவ்வொரு முறையும்) சொற்பொழிவு ஆற்றிய பெருமையும் அவருக்கு உண்டு. அவரது உரையில் இருந்து சில முக்கியக் குறிப்புகள்.

1. திருக்குறளைக் காப்பாற்றிக் கொடுத்த பெருமை மூன்று சைவ ஆதினங்களுக்கு உண்டு.

1.திருப்பனந்தாள் காசி மடம்.

2.மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமை ஆதீனம்.

3. திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்.

2. குரு ஸ்தானத்தில் இருப்பவர் வணங்கத் தக்கவராக மட்டுமல்ல. நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும். உதாரணமாகக் கிருஷ்ணனைச் சொல்லலாம். குந்தியின் சகோதரனின் மகனான கிருஷ்ணன் பஞ்சபாண்டவர்களுக்குக் குரு ஸ்தானத்தில் இருந்ததுடன் நல்ல நண்பனாகவும் இருந்தான்.

3.நான் யார்? என்பது அனைவரும் அறிந்த மெய்ஞ்ஞானக் கேள்வி. நீ யார்? என்ற ஞானக் கேள்வியானது யாரால் யாரை நோக்கி கேட்கப்பட்டது? என்பதற்கான விடைகளையும் கீழாம்பூரார் சிறப்பாக விளக்கினார்.

4. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் என்ற திருக்குறளையும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற திருக்குறளையும் அவர் விளக்கினார். அத்துடன் அவற்றின் ஆழத்தையும் தொட்டுச் சென்றார்.

5. சமய நல்லிணக்கம் அவசியம் தான். அதே சமயத்தில் திருக்குறளானது சைவம், வைணவத்தின் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த நூல் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

6. திருவள்ளுவருக்குத் தெய்வப்புலவர் என்ற பட்டப் பெயருடன் ஞானவெட்டியான் என்ற பெயரும் உண்டு என்பதையும் கீழாம்பூரார் சுட்டினார்.

7. திருவள்ளுவரின் தனிச்சிறப்பாக அவருக்குத் தனியாகக் கோவில் இருப்பதைக் கூறலாம். சென்னை மயிலாப்பூரில் இது இருக்கிறது.

8. தமிழ்நாட்டில் முதன் முதலாகத் திருக்குறள் நூலை வகுப்பின் மூலமாகக் கற்பித்தவர்கள் இருவர். முதலாமவர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். இரண்டாமவர் சென்னை சிந்தாதிரிப் பேட்டைத் தமிழறிஞர் திரு.வடிவேலு செட்டியார்.

9. அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதல் திருக்குறளில் ஆதி, பகவன் ஆகிய இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். பிற மொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதில் அவருக்கு ஒவ்வாமை இல்லை என்பதும் இதனால் தெரிகிறது.

10. தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மானூரில் கண்டு எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் தான் மிகவும் பழமையானது. உத்திரமேரூர் கல்வெட்டுகளுக்கு எல்லாம் முந்தையது . அமைச்சு, அதன் நலம் குறித்தெல்லாம் அந்தக் கல்வெட்டுகள் பேசுகின்றன.

***

ஆகக் குருவைக் குறித்தும், திருக்குறளைக் குறித்தும் பல்வேறு தகவல்களை ஆராய்ச்சி நோக்குடனும், கருத்தாழத்துடனும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அருமையான முறையில் உரை ஆற்றினார்.

நிகழ்வைச் சிறப்பான முறையில் திரு.ஜெயராமன் மணியன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வைச் சிறப்பான முறையில் தேஜஸ் பவுண்டேஷன் அறங்காவலர் திரு பி.டி.டி ராஜன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இனிய நண்பர் என்று சொல்லவா! இல்லை, எனக்குக் குரு கவிஞர் இசைக்கவி ரமணன், ஜே.பி ஃபவுண்டேஷன் ஜே.பாலசுப்ரமணியன், எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர், நண்பர்கள் உரத்த சிந்தனை உதயம்ராம், சங்கர நேத்ராலயா இருங்கோவேள், உமா பாரதி, கலாவதி பாஸ்கரன் உள்ளிட்டோர் பலரையும் நிகழ்வில் சந்திக்க முடிந்தது.

தமிழ் அமிழ்தம் பருகிய இனிய மாலைப் பொழுது!