Home Blog Page 32

கைசிக ஏகாதசி சிறப்பு: நம்பாடுவான், பிரம்மரட்சஸ், கைசிக புராணம்!

kaisika ekadhasi in thirukkurungudi - 2026

கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். கைசிக ஏகாதசி! – கார்த்திகை மாதம் “சுக்லபக்ஷ ஏகாதசி” மற்றும் “துவாதசி” அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான “கைசிக ஏகாதசி”.

மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான “வைகுண்ட ஏகாதசி”. மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான “கைசிக ஏகாதசி”. மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.

கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் “ஸ்ரீ வராக மூர்த்தியே” கூறுவதாக உள்ளது. இதற்கு “ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்” அருளியுள்ளார்.

ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார்.

மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த “கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு” உரைத்தார். பகவான் கூறியது.

தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் “திருக்குறுங்குடி”. இங்கு பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் “திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி” மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான். பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை “திருப்பள்ளியெழுச்சி” செய்து வந்தான். இந்த புண்ணியவானே “நம்பாடுவான்”.

நம்பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.

கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார், அதுவே போதும். அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.

“கைசிகம்” என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான்.
நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான்.

இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் “ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம்பாடுவான்” எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மஹாத்மியம் “கைசிக புராணம்” என்ற நாமம் தாங்கி வராஹ புராணத்தில் உள்ளது.

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான். அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் “சோமசர்மா” என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான். அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம். பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை.

பிரம்மராக்ஷஸனை பார்த்து, “நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது.

நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செய்ய மலையேற வழிவிடுமாறு மன்றாடினான். பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான். இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்து கொண்டான் நம்பாடுவான்.

உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து “திருப்பள்ளியெழுச்சி” பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, “சண்டாளனே! பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.? என்றதோடு மட்டுமல்லாமல், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்”” என்றது.

அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான். (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்). 17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் “மிகக் கொடிய பாவம்” என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது.

அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????

மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் :

சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.

பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.

எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.

எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.

எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிறானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.

எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.

எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு ஏதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.

எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.

10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன்.

எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.

12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.

எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை வயதான காலத்தில் தனியே விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.

தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் “மகா பாவம்” என்னை வந்தடையட்டும்.

எவன் பிரம்மஹத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.

எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.

இந்த “17 சபதங்கள்” நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை.

சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த “ஸ்ரீமன் நாராயணனையும்” மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.

இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன்.

நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது. பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான். நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.

பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா! இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான். உள்ளிருந்த “அழகிய நம்பி பெருமாள்” நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். தான் ஆட்கொள்ள வேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன? என்று யோசித்தார்.

எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது.

“விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்! அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!! விலகு” என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.

எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்.

கொடிமரம் விலகிய அடுத்த நொடியே “பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா” என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான். ஆஹா! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம்.

நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது. அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான். இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது. நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, “யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்?. நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே”” என்று கூறினான்.

நம்பாடுவானும், “சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான்.

அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.

நம்பாடுவான் “சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்” என்று வேண்டினான்.

தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த “சுந்தரபுருஷன்” உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான்.

அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி.

நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாறப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது.

“ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான
அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.

அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்… ஆகவே என்னை புசித்துக்கொள்… நான் பாடிய “கைசிகப் பண்” ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான்.

அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான்.

பிரம்மராட்க்ஷஸனும், “அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன் ஜன்மத்திலிருந்து காப்பாற்று” என்று மன்றாடியது.

“நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான் நம்பாடுவான்.

அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது.

தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான்.

அதன்படியே, “நேற்றிரவு கைசிகம் என்ற பண்” பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான்.

நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான்.

ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த “பராசர பட்டர்” என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

ஒவ்வொரு கார்த்திகை மாதம் “சுக்லபக்ஷ ஏகாதசி” அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது.

அப்பேற்பட்ட இந்த “கைசிக மகாத்மியத்தை” கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு “வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்” இந்த மஹாத்மியம்.

வராஹமூர்த்தி கூறுவது :-

நம்பாடுவானும் கால முடிவில் “திருநாடு பெற்றான்” என்ற வராஹமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-

எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!

என்று பூமிதேவி தாயாரிடம் இந்த “கைசிக ஏகாதசி மஹாத்மியம்” பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.

விசேஷம் :-

பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராஹ புராணத்தின் உள்ளீடான “கைசிக ஏகாதசி மஹாத்மியம்” என்பதன் சாரமாகும்.

இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும்.

ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-

ஸ்ரீரங்கம் கோவிலில் “கைசிக ஏகாதசி” நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும்.

இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் “கைசிக புராணம்” விடிய விடிய வாசிக்கப்படும். மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை “ஸ்ரீரங்கம்” சென்று தரிசித்திடுங்கள்.

திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது. திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் “கைசிகப்பண்” மற்றும் வராஹ மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டும்? நாம் அனைவரும் “பாக்கியசாலிகள்” “புண்ணியவான்கள்” என்று கூட சொல்லலாம்!.

அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும். மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம்.

உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.

இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.

ஓம் வராஹ மூர்த்தியே நமஹ! திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!

  • தொகுப்பு: ஸ்ரீமதி ப்ரஸன்னா

‘சார்’ ரொம்பவே சலித்துக் கொண்டதால்… ஒரு வாரம் கால நீட்டிப்பு!

voter sir form - 2026

SIR – எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதேபோல், நாடு முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பணிகளை முடித்து, திருத்தப் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் தீர்மானித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ஆனால், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுகள் இந்தப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, சாக்குப் போக்குச் சொல்லி, பணிகளை முடக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காரணம் தற்போதைய பட்டியலில் உள்ளபடி தேர்தல் நடந்தால் முறைகேடுகளில் ஈடுபடலாம்; மீண்டும் ஆட்சியமைப்பதில் வாய்ப்பு ஏற்படும் என்று மாநிலங்களில் ஆளும் தரப்பு முனைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு ஏற்ப, தமிழக ஆளும் கட்சியின் அங்கமாகத் திகழும் அரசு ஊழியர் சங்கம், தங்களுக்கு வேலைப்பளு அதிகம் என்று கூறி தேர்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்து வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டன. அதை முன்னிட்டு, தேர்தல் பட்டியல் திருத்தப் பணிகளைச் செய்து முடிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசும் கோரிக்கை விடுத்தது. 

இந்நிலையில், எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  டிசம்பர் 4ம் தேதியுடன் அவகாசம் முடிவடையும் நிலையில் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபங்கள் குறித்து பிப்ரவரி 7ம் தேதிக்குள் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கணக்கீட்டுப் படிவங்களை ‘ஆன்லைனில்’ பூர்த்தி செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அதற்கு, வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலிலும், ஆதார் அட்டையிலும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது… 

தமிழகத்தில், 2002, 2005ம் ஆண்டு நடந்த, தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் தங்கள் விபரங்களை, https://www.voters.eci.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில், ‘Search your name in the last sir’ என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதில் தமிழகம் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில், ‘பெயர் மூலம் தேடுதல்’ அல்லது, வாக்காளர் அடையாள அட்டை எண் வழியே தேடுதல் என்பதன் அடிப்படையில், தங்கள் விபரங்களை மீட்டெடுக்கலாம்.

பெயர் பயன்படுத்தி தேடும்போது, மாவட்டம், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர், தந்தை, தாய், கணவர், சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரி பார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து, வாக்காளர் தங்கள் விபரங்களைப் பெறலாம்.

வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை, ஆன்லைன் வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. வாக்காளர் தங்கள் மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, ஆன்லைன் வழியே உள்நுழைய வேண்டும். அப்போது, மொபைல் எண்ணுக்கு வரும், ஒரு முறை ஓ.டி.பி., எண்ணை உள்ளிட வேண்டும்.

உள்நுழைந்த பின், அந்த பக்கத்தில் காட்டப்படும், ‘ Fill Enumeration Form’ என்ற இணைப்பை தேர்வு செய்யலாம். இந்த வசதியை, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

வெற்றிகரமாக உள் நுழைந்த பின், அதில் கோரப்படும் விபரங்களை நிரப்ப வேண்டும். சரியான விபரங்களை சமர்ப்பித்த பின், இணைய பக்கம் ‘e-sign’ பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்ததும், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.  – என்று குறிப்பிட்டிருந்தார். 

ஏற்கெனவே பி.எல்.ஓ.க்கள் மூலம் அவரவர் தொகுதியில் இந்தத் திருத்தப் படிவங்களைக் கொடுத்திருந்தாலும், அது சமர்ப்பிக்கப்பட்டது என்பதை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

திருநெல்வேலி – மேட்டுப்பாளைய சிறப்பு ரயில் -2026 ஜனவரி வரை நீடிப்பு..

chennai nellai vandebharat express - 2026

பயணிகள் கவனத்திற்கு திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீடித்து இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயிலை தினசரி நிரந்தர ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகள் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.

பராமரிப்பு பணிகளால் மயிலாடுதுறை, ராமேஸ்வரம் ரயில் சேவைகளில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை கோட்டத்தில் சோழவந்தான், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டிசம்பரில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகுதி ரத்து இன்று (நவ., 30), டிச., 1 முதல் 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) ஈரோடு – செங்கோட்டை (16845), டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை – ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் திண்டுக்கல் – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. டிச., 8, 9ல் மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில்கள் (56711/56714) ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. மாற்றுப் பாதை ‌டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை -ப மயிலாடுதுறை (16848), டிச., 4, 7, 11, 14, 18, 21, 28ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), டிச., 6, 13, 20, 27ல் கன்னியாகுமரி – ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இன்று (நவ., 30) டிச., 1 முதல் 28 வரை (டிச., 2, 9, 15, 16, 22, 23, 24 தவிர்த்து) குருவாயூர் – தாம்பரம் (16128), டிச., 5, 12, 19, 26ல் கன்னியாகுமரி – ஐதராபாத் (07229), டிச., 1, 5, 8, 12, 15, 19, 22, 26, 29ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16340) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

டிச., 27ல் நாகர்கோவில் – காச்சிகுடா ரயில் (16354) திருச்சி செல்லாமல் திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. நேர மாற்றம் டிச., 4, 11, 18ல் மதுரை – பிகானீர் ரயில் (22631) 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். இன்று, டிச., 7ல் பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் ரயில் (16368), 20 நிமிடங்கள் செல்லும் வழியில் தாமதமாக இயக்கப்படும். சிறப்பு ரயில் டிச., 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் 10 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (06846), தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர் வழியாக காலை 9:30 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் டிச., 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06845), இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். இந்த பணிகளால், ராஜபாளையம், சிவகாசி பகுதியினர் காலையில் மதுரை வருவதற்கு (மாதத்தில் 4 நாட்கள் தவிர) ரயில் சேவை கிடைக்காமல் அவதிக்குள்ளாவர். செங்கோட்டை – மதுரை இடையே ராஜபாளையம் வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற பல நாள் கோரிக்கை கனவாகவே உள்ளது.

ரயில் சேவை நீட்டிப்பு ..

பயணிகளின் பெரும் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் (06190/91) பகல் நேர ரயில் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலி..

1001095939 - 2026

கடந்த வாரம் தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 7பேர் பலியான நிலையில் இன்றும் தென்காசி அருகே ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அருகே மேலும் ஒரு கோர விபத்தாத அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சை உறையவைத்துள்ளது

சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

1001095920 - 2026


கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 50 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இன்று தென்காசி அருகே மற்றொரு விபத்து ஏற்பட்டு மூவர் பலியான நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற ஒரு அரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்தும் சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அருகில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அங்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்டமாக இந்த சாலை குறுகியது என்பதாலும், இதில் பஸ்கள் அதி வேகமாக இயக்கப்பட்டால் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. தனியார் பஸ்கள் இங்கு அதிகளவு வேகத்தில் செல்வதாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக பஸ்களானது திருப்பத்தூர் செல்லும் சாலையில் அதாவது பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் சாலையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் இந்த சாலை சற்று குறுகலானது என்றும் அதிகளவிலான வளைவுகள் இருப்பதனாலும் அதி வேகத்தில் பஸ்கள் இயக்கப்பட்ட விபத்து நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்காசி அருகே இன்று மீண்டும் விபத்து மூவர் பலி..

1001095964 - 2026

தென்காசி அருகே மீண்டும் விபத்து ஞாயிற்றுக்கிழமை சுரண்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கடந்த வாரம் தென்காசி கடையநல்லூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வ பிரபு (50). இவரது மனைவி உஷா (40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உஷா, சுரண்டை நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.

இன்று காலையில் அருள்செல்வ பிரபு, இருசக்கர வாகனத்தில் தனது மனைவி உஷா மற்றும் மனைவியின் தங்கை பிளஸ்ஸி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு, தங்கள் விவசாய நிலத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சுரண்டை- சங்கரன்கோவில் சாலையில் இரட்டைகுளம் விலக்கு அருகே சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மோதியது. லாரியில் சிக்கிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

கடந்த சில நாட்களுக்கும் முன்புதான் கடையநல்லூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கலாசாரம் காக்கும் காசி தமிழ்ச் சங்கமம்!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் (128ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள்: 30-11-2025
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

முத்தான மூன்று நிகழ்வுகள்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலுக்கு மீண்டும் உங்களை வரவேற்கிறேன்.  நவம்பர் மாதம், பல உத்வேகங்களை நமக்குக் கொண்டு வந்திருக்கிறது, சில நாட்கள் முன்பாகத் தான், நவம்பர் மாதம் 26ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்ட தினத்தன்று நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, நாடு முழுவதிலும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டன.  நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று அயோத்தியின் இராமர் கோயிலில் தர்மக்கொடி ஏற்றப்பட்டது.  இந்த நாளன்று தான் குருக்ஷேத்திரத்தின் ஜோதிசரிலே பாஞ்சஜன்ய நினைவிடம் மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. 

வானத்தை நோக்கிய பார்வை

நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நான் ஹைதராபதிலே, உலகின் மிகப் பெரிய எஞ்ஜின் எம்.ஆர்.ஓ. வசதியைத் தொடக்கி வைத்தேன்.  அதாவது விமானங்களைப் பராமரித்து, பழுதுபார்த்து, செப்பனிடும் துறையில் பாரதம் இந்தப் பெரிய அடியெடுப்பை எடுத்திருக்கிறது.  கடந்த வாரங்களில் மும்பையிலே, ஒரு நிகழ்ச்சியின் போது ஐ.என்.எஸ் மாஹே கப்பல் இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டது.  அதே போல, கடந்த வாரத்தில் பாரதத்தின் விண்வெளிச் சூழலமைப்புக்கு ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகம் ஒரு தளமமைத்துக் கொடுத்தது.  இது பாரதத்தின் புதிய எண்ணம், புதுமைகள் படைத்தல், இளைஞர்களின் சக்தி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

உயரப் பறக்கும் அன்னக்கொடி

நண்பர்களே, வேளாண்துறையிலும் கூட, தேசம் புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது.  பாரதம் 357 மில்லியன் டன் உணவுப் பொருட்களோடு கூடவே ஒரு வரலாற்றுச் சிறப்பான பதிவையும் ஏற்படுத்தியிருக்கிறது.  357 மில்லியன் டன்!!  பத்தாண்டுகள் முன்பான தரவுகளோடு ஒப்பிடும்போது, பாரதத்தின் உணவுப்பொருள் உற்பத்தி 100 மில்லியன் டன் மேலும் அதிகரித்திருக்கிறது.  விளையாட்டுக்கள் உலகிலேயும் கூட பாரதத்தின் கொடி உயரப் பறக்கவிடப்பட்டது.  சில நாட்களுக்கு முன்பு பாரதம் காமன்வெல்த் நாடுகளுக்கான விளையாட்டுக்களை நடத்தும் அறிவிப்பும் வெளியானது.  இந்தச் சாதனைகள் தேசத்திற்குச் சொந்தமானவை, நாட்டுமக்களின் சொத்து.  தேச மக்களின் இப்படிப்பட்ட சாதனைகள், மக்களின் சமூக முன்னெடுப்புகள் ஆகியவற்றை அனைவருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைப்பதற்கு, மனதின் குரல் என்ற மேடை மிகச் சிறப்பான ஒன்றாகும்.

தோல்வியே வெற்றிக்கான அடித்தளம்!

நண்பர்களே, மனதிலே முனைப்பு இருந்தால், சமூக சக்தியின் துணையோடு ஒரு குழுவாகச் செயலாற்றுவதிலே நம்பிக்கை இருந்தால், தோல்வியடைந்தாலும் மீண்டெழுந்து முயலும் துணிவு இருந்தால், மிகக் கடினமான காரியமும் கூட வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.   நீங்கள் அப்படிப்பட்ட காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள்…. அப்போது செயற்கைக்கோள் இருக்கவில்லை, ஜி.பி.எஸ். முறை இருக்கவில்லை, திசையறிதலுக்கான எந்த வசதிகளும் இருக்கவில்லை.  அப்போதும் கூட நமது கடலோடிகள் பெரியபெரிய கலன்களில் கடல் மீது பயணித்தார்கள், செல்லத் தீர்மானித்த இடங்களுக்குச் சென்றார்கள்.  இப்போது கடல்களையெல்லாம் தாண்டி, விண்வெளியின் கணக்கே இல்லாத உயரங்களை உலக நாடுகள் அளந்து கொண்டிருக்கிறார்கள்.  அங்கேயும் கூட அதே பழைய சவால்கள் தாம் – ஜி.பி.எஸ். முறை இல்லை, தகவல்பரிமாற்றச் சாதனங்கள் இல்லை, அப்படியென்றால் நாம் எப்படி முன்னேற முடியும்?

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்த ஒரு காணொளி என் கவனத்தைக் கவர்ந்தது.   இந்தக் காணொளி, இஸ்ரோ அமைப்பின் ஒரு வித்தியாசமான ட்ரோன் போட்டி தொடர்பானது.  நமது தேசத்தின் இளைஞர்கள், குறிப்பாக நமது ஜென் – Zயைச் சேர்ந்த இளைஞர்கள் செவ்வாய்க் கோள் போன்ற இடங்களில் ட்ரோனை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிப்பது அந்தக் காணொளியில் காண முடிந்தது.   ட்ரோன்கள் எழும்பின, சில கணங்கள் நிதானமாகப் பறந்தன, பிறகு திடீரென்று நிலத்தில் வந்து விழுந்தன.  ஏன் என்று தெரியுமா?  ஏனென்றால் எழும்பிய அந்த ட்ரோன்களுக்கு ஜி.பி.எஸ். அமைப்பின் துணை இருக்கவில்லை.  செவ்வாய் கிரகத்திலே ஜி.பி.எஸ். சாத்தியமில்லை என்பதால், ட்ரோன்களுக்கு வெளியிலிருந்து எந்த சுட்டுதலோ, வழிகாட்டுதலோ கிடைக்கவில்லை.  ட்ரோன்கள் அவற்றுக்குள்ளிருந்த கேமிரா மற்றும் மென்பொருள் துணையோடு பறக்க வேண்டியிருந்தது.  அந்தச் சின்னஞ்சிறிய ட்ரோன்கள் நிலத்தின் வடிவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், உயரங்களை அளக்க வேண்டும், தடைகளை அடையாளம் காண வேண்டும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான பாதையைத் தாமே தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஆகையால் தான் அவை ஒன்றன்பின் ஒன்றாக கீழே விழுந்து கொண்டிருந்தன.

நண்பர்களே, இந்தப் போட்டியிலே, புணேயைச் சேர்ந்த இளைஞர்களின் ஒரு குழுவால் ஓரளவுக்கு வெற்றி பெற முடிந்தது, அவர்களுடைய ட்ரோனுமே கூட கீழே விழுந்தது என்றாலும் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.  பல முறை முயற்சிகளுக்குப் பிறகு, இந்தக் குழுவின் ட்ரோன் செவ்வாய் கிரகச் சூழ்நிலைகளில் சில நேரம் பறப்பதில் வெற்றியடைந்தது.

நண்பர்களே, இந்தக் காணொளியைக் காணும் போது, என் மனதிலே மேலும் ஒரு காட்சி மலர்ந்தது.  சந்திரயான் – 2 நமது தொடர்புக்கு அப்பால் சென்ற கணம் தான் அது.  அந்த நாளன்று தேசமெங்கும், குறிப்பாக விஞ்ஞானிகள் சில கண நேரங்களுக்கு ஏமாற்றத்தின் மொத்த உருவமானார்கள்.  ஆனால் நண்பர்களே, தோல்வி அவர்களைத் தடைப்படுத்தவில்லை.  அதே நாளன்று அவர்கள் சந்திரயான் – 3இன் வெற்றிக்கதையை எழுதத் தொடங்கி விட்டார்கள்.  இந்த காரணத்தால் தான் சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையைத் தொட்ட போது, அது வெறும் ஒரு பயணத்தின் வெற்றியாக மட்டும் இல்லை.  அது தோல்வியிலிருந்து வெளிப்பட்டு வந்த நம்பிக்கையின் வெற்றி.   இந்தக் காணொளியில் தெரியும் இளைஞர்களின் கண்களில், எனக்கு அதே நம்பிக்கை தெரிகிறது.  நமது இளைஞர்களின் முனைப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பையும் ஒவ்வொரு முறை நான் பார்க்கும் போதும், எனக்குள்ளே உற்சாகம் ஊறுகிறது.  இளைஞர்களின் இந்த முனைப்புத் தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் மிகப்பெரிய சக்தியாகும்.

கைகொடுக்கும் தேன் உற்பத்தி!

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தேனின் இனிமையை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள் ஆனால், இதன் பின்னணியில் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது, எத்தனை பாரம்பரியங்கள் இருக்கின்றன, இயற்கையோடு எத்தனை அழகான ஒத்திசைவு என்பது பலவேளைகளில் நமக்குத் தெரிவதில்லை.

நண்பர்களே, ஜம்மு-கஷ்மீரத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் சுலாயி எனப்படும் வனத்துளசியின் மலர்களிலிருந்து இங்கேயிருக்கும் தேனீக்கள் மிகச் சிறப்பான தேனை உருவாக்குகின்றன.  இந்தத் தேன் வெண்மை நிறம் கொண்டது, இதை ராம்பன் சுலாயி தேன் என்று அழைக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் இந்த ராம்பன் சுலாயி தேனுக்கு புவிசார் குறியீட்டுக் காப்புரிமை கிடைத்தது.  இதன் பிறகு இந்தத் தேனுக்கு தேசமெங்கும் பிரத்யேகமான அடையாளம் ஏற்பட்டு வருகிறது.  

நண்பர்களே, தெற்கு கன்னரா மாவட்டத்தின் புத்தூரின் தாவரங்கள், தேன் உற்பத்திக்கு மிகச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.  இங்கே கிராமஜன்ய என்ற பெயர் கொண்ட விவசாயிகளின் அமைப்பு, இந்த இயற்கை வளத்திற்குப் புதிய திசையை அளித்து வருகிறது.  கிராமஜன்ய அமைப்பானது, இங்கே ஒரு நவீனமான பதப்படுத்தும் அலகை ஏற்படுத்தி, பரிசோதனைக்கூடம், பாட்டிலில் இடுதல், சேமிப்பு மற்றும் டிஜிட்டல் முறை கண்காணிப்பு போன்ற வசதிகளை அதில் இணைத்துவிட்டது.  இப்போது இதே தேனானது, ப்ராண்ட் அமைக்கப்பட்ட உற்பத்தியாக ஆகி, கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை சென்று சேர்கிறது.  இந்த முயற்சியினால், 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.

நண்பர்களே, கர்நாடகத்தின் தும்குரு மாவட்டத்தில் சிவகங்கா காலஞ்ஜியா என்ற பெயர் கொண்ட அமைப்பின் முயற்சியும் கூட மிகவும் பாராட்டுக்குரியது.  இவர்கள் வாயிலாக இங்கே ஒவ்வொரு உறுப்பினருக்கும் தொடக்கத்தில் இரண்டு தேனீ பெட்டிகள் அளிக்கப்படுகின்றன.  இப்படிச் செய்வதன் மூலம் அமைப்பானது பல விவசாயிகளைத் தனது இயக்கத்தில் இணைத்துவிட்டது.  இப்போது இந்த அமைப்பில் இணைந்த விவசாயிகள் கூட்டாகத் தேன் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள், மிகச் சிறப்பான முறையில் பேக்கேஜிங் செய்கிறார்கள், உள்நாட்டுச் சந்தைகள் வரை கொண்டு செல்கிறார்கள்.  இதனால் அவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது.  இப்படித்தான் நாகாலந்தின் cliff-honey hunting முறையும் கூட.  நாகாலந்தின் சோக்லாங்கன் கிராமத்தில் கியாமனி-யாங்கன் பழங்குடியினர், பலநூறு ஆண்டுகளாக தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இங்கே தேனீக்கள் மரங்களில் அல்ல, உயரமான செங்குத்துப் பாறைகளில் தங்கள் இருப்பிடங்களை அமைக்கின்றன.  ஆகையால் தேனை எடுக்கும் பணி மிகவும் ஆபத்து நிறைந்தது.  அந்த வகையிலே இங்கே இருப்போர் தேனீக்களோடு இனிமையாகப் பேசுகிறார்கள், அவற்றின் அனுமதி பெறுகிறார்கள்.  இன்று தாங்கள் தேனை எடுக்க வந்திருப்பதாக முதலில் தெரிவித்த பிறகே, தேனை எடுக்கிறார்கள். 

நண்பர்களே, இன்று பாரதத்தின் தேன் உற்பத்தியானது புதிய பதிவினை ஏற்படுத்தி வருகிறது.  11 ஆண்டுகள் முன்பாக, தேசத்தில் தேன் உற்பத்தி 76 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது.  இப்போது இது அதிகரித்து, ஒண்ணரை இலட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக ஆகி இருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளிலே, தேனின் ஏற்றுமதியும் கூட மூன்று மடங்குக்கும் அதிகமாக ஆகிவிட்டது.  தேன் மிஷனுக்கு உட்பட்டு, காதி கிராமோத்யோகும் கூட இரண்டேகால் இலட்சத்திற்கும் அதிகமான தேனீ பெட்டிகளை விநியோகம் செய்திருக்கிறது.   இதனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான புதிய சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.  அதாவது தேசத்தின் பல்வேறு பாகங்களில் தேனின் இனிமையும் அதிகரித்து வருகிறது.  மேலும் இந்த இனிமை விவசாயிகளின் வருவாயையும் அதிகரித்துக் கொடுக்கிறது. 

ஆனந்தம் கூட்டும் அனுபவ மையம்

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஹரியாணாவின் குருக்ஷேத்திரத்திலே மகாபாரதப் போர் நடந்தது என்பதை நாமனைவரும் நன்கறிவோம்.  ஆனால் போரின் இந்த அனுபவத்தை இப்போது நீங்கள் எல்லோரும் அங்கே மகாபாரத அனுபவ மையத்திலே, நேரடியாக அனுபவிக்கலாம்.  இந்த அனுபவ மையத்திலே மகாபாரதத்தின் சம்பவங்கள் முப்பரிமாண, ஒலிஒளிக் காட்சியாகவும், டிஜிட்டல் உத்தி வாயிலாகவும் வெளிப்படுத்தப்படுகிறது.  நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று நான் குருக்ஷேத்திரம் சென்ற போது, இந்த அனுபவ மையத்தின் அனுபவம், என்னை ஆனந்தத்தால் நிரப்பிவிட்டது.

நண்பர்களே, குருக்ஷேத்திரத்தின் பிரும்ம சரோவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கீதை மகோத்சவத்தில் பங்கெடுப்பது எனக்கு மிகச் சிறப்பானதாக இருந்தது.  எவ்வாறு உலகெங்கிலும் இருந்தும், புனித நூலான கீதையால் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காணும் போது நான் மிகவும் பரவசமடைந்தேன்.  இந்த மகோத்சவத்திலே ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா உள்ளிட்ட, உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

இந்த மாதத் தொடக்கத்திலே சவுதி அரேபியாவிலே முதன்முறையாக, ஒரு பொது மேடையில் கீதை வாசிக்கப்பட்டது.  ஐரோப்பாவின் லாட்வியாவிலேயும் கூட, ஒரு நினைவில் கொள்ளத்தக்க கீதை மகோத்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த மகோத்சவத்திலே லாட்வியா, எஸ்டோனியா, லித்துவானியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பெரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள்.

யூதக் குழந்தைகளைக் காத்த ஜாம் சாஹேப்

நண்பர்களே, பாரதத்தின் உயர்வான கலாச்சாரத்திலே அமைதி-கருணை ஆகிய உணர்வுகள் மிகவுயர்வானவையாக இருக்கின்றன.  இரண்டாம் உலகப்போரினைக் கற்பனை செய்து பாருங்கள், எங்கும் அழிவின் பயங்கரமான கோரத் தாண்டவம்.  இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் குஜராத்தின் நவாநகரின் ஜாம் சாஹப், மகாராஜா திக்விஜய் சிங் அவர்கள் புரிந்த மிகவுயர்வான காரியம் இன்றும் கூட நமக்கு உள்ளெழுச்சி அளித்துவருகிறது.  அந்தக் காலத்திலே ஜாம் சாஹப், போருக்கான கூட்டு பற்றியோ, போரின் உத்திகள் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை.  மாறாக இந்த உலகப் போருக்கு இடையே போலந்து நாட்டின் யூதக் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது என்ற கவலையில் இருந்தார்.  அவர் குஜராத்திலே ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து, புதுவாழ்வு தந்தார், இது இன்றும் கூட ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.  சில நாட்கள் முன்பாக, தெற்கு இஸ்ரேலின் மோஷாவ் நேவாதிமிலே ஜாம் சாஹேபின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.  இது மிகவும் சிறப்பான கௌரவமாகும்.  கடந்த ஆண்டு, போலந்தின் வார்ஸாவிலே, ஜாம் சாஹெபின் நினைவுச் சின்னத்திலே நினைவு மலர்களைக் காணிக்கையாக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.  அந்தக் கணம் என்னால் மறக்க முடியாத ஒன்று.

நெஞ்சைக் கவர்ந்த வேளாண் மாநாடு

என் கனிவான நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, இயற்கை வேளாண்மை பற்றிய ஒரு பெரிய மாநாட்டிலே பங்கெடுக்க நான் கோயமுத்தூர் சென்றிருந்தேன்.  தென் பாரதத்திலே இயற்கை வேளாண்மை தொடர்பாக நடைபெற்றுவரும் முயற்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நான் கவரப்பட்டேன்.  பல இளைஞர்கள், மெத்தப்படித்த தொழில்வல்லுநர்கள் இப்போது இயற்கை வேளாண்துறையை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.  அங்கே இருக்கும் விவசாயிகளோடு நான் உரையாடினேன், அவர்களின் அனுபவத்தை அறிந்து கொண்டேன்.  இயற்கை வேளாண்மை என்பது பாரதத்தின் பண்டைய பாரம்பரியங்களின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது, இந்தப் பூமித்தாயைக் காத்தளிக்க நாம் இதற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவர வேண்டும் என்பது நம்மனைவரின் கடமையாகும்.

கலாசாரம் காக்கும் காசி தமிழ்ச் சங்கமம்!

நண்பர்களே, உலகின் மிகப் பழமையான மொழி, உலகின் மிகவும் தொன்மையான நகரங்களிலே ஒரு நகரம் என்ற இந்த இரண்டின் சங்கமம் என்பது எப்போதுமே மிகவும் அற்புதமானதாக இருக்கும்.  நான் காசி தமிழ்ச் சங்கமம் பற்றித் தான் பேசுகிறேன்.  டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று காசியின் நமோ காட்டில், காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காம் பதிப்பு தொடங்கப்பட இருக்கிறது.  இந்த முறைக்கான காசி தமிழ்ச் சங்கமத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது – தமிழ் கற்கலாம், என்பதே அது.  யாருக்கெல்லாம் தமிழ் மொழி மீது ஈடுபாடு இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் காசி தமிழ்ச் சங்கமம் மகத்துவம் வாய்ந்த ஒரு மேடையாக ஆகியிருக்கிறது.  காசிவாழ் மக்களிடம் எப்போது பேசினாலும், காசி தமிழ்ச் சங்கமத்தின் அங்கமாக ஆவது அவர்களுக்கு இனிமையாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.  இங்கே அவர்களுக்கு புதிய கற்றல், புதியவர்களோடு பழகுதல் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.  இந்த முறையும் கூட காசிவாசிகள் பெரும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய தங்களுடைய சகோதர சகோதரிகளை வரவேற்க மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.  காசி தமிழ்ச் சங்கமத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன்.  அதோடு கூடவே, இப்படிப்பட்ட மேலும் மேடைகளைப் பற்றிச் சிந்தியுங்கள், இதன் வாயிலாக ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற உணர்வு மேலும் பலப்படும்.  இந்த இடத்திலே நான் மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். 

தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம்.

பரிமளிக்கும் பாரதக் கடற்படை

எனதருமை நாட்டுமக்களே, பாரதத்தின் பாதுகாப்பு அமைப்புக்கு பலம் கிடைத்திருக்கிறது எனும்போது இந்தியர்கள் அனைவருக்கும் இது பெருமிதம் தானே!!  கடந்த வாரம் மும்பையிலே ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பலானது இந்திய கப்பற்படையோடு இணைக்கப்பட்டது.  சிலர் இதன் உள்நாட்டு வடிவமைப்பு குறித்து நிறைய விவாதங்களில் ஈடுபட்டார்கள்.  அதே வேளையில் புதுச்சேரி மற்றும் மலபார் கரையோரப்பகுதிவாழ் மக்கள் இதன் பெயர் குறித்து சந்தோஷப்பட்டார்கள்.  மாஹே என்ற இதன் பெயர், மிகுந்த வளமான வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கும் ஒரு இடத்தின் பெயராகும்.  கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பலர் இந்தப் பெயர் தொடர்பாக ஒன்றைக் கூர்ந்து கவனித்தார்கள்; இந்தப் போர்க்கப்பலின் மேல்முனை அல்லது முகடு, உருமி மற்றும் களரிப்பயட்டுவின் பாரம்பரியமான வளைவான வாளைப் போலக் காணப்படுகிறது என்பதே அது.  நமது கடற்படை மிக விரைவாக தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறி வருகிறது என்பது நாமனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.  டிசம்பர் 4ஆம் தேதியன்று நாம் கடற்படை தினத்தைக் கொண்டாட இருக்கிறோம்.  இந்தச் சந்தர்ப்பத்திலே நமது வீரர்களின் அளவில்லா சாகஸத்திற்கும், பராக்கிரமத்திற்கும் நாம் கௌரவம் அளிக்க வேண்டும்.

நண்பர்களே, யாரெல்லாம் கடற்படையோடு தொடர்புடைய சுற்றுலாவில் நாட்டமுடையவர்களோ, அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் – நமது தேசத்திலே நாம் நிறைய கற்கக்கூடிய பல இடங்கள் இருக்கின்றன.  தேசத்தின் மேற்குக் கரையிலே குஜராத்தின் சோம்நாத்துக்கு அருகே, தீவ் என்றதொரு மாவட்டம் இருக்கிறது.  தீவிலே ஐ.என்.எஸ். குக்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட குக்ரி நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் இருக்கிறது.  அதே போல, கோவாவிலே நேவல் ஏவியேஷன் மியூசியம் இருக்கிறது, இது ஆசியாவிலே மிகவும் தனித்தன்மைவாய்ந்த அருங்காட்சியகமாகும்.  ஃபோர்ட் கொச்சியின் ஐ.என்.எஸ். துரோணாச்சாரியாவின் இண்டியன் நேவல் மேரிடைம் மியூசியம் இருக்கிறது.  இங்கே நமது தேசத்தின் கடல்சார் வரலாறும், இந்திய கடற்படையின் பரிணாம வளர்ச்சி பற்றியும் பார்க்கலாம்.  ஸ்ரீ விஜயபுரம் என்ற அந்நாளைய போர்ட் ப்ளேரிலே, சமுத்ரிகா என்ற நேவல் மரைன் மியூசியம், அந்தப் பகுதியின் வளமான வரலாற்றை, நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.  கார்வாரில் ரவீந்திரநாத் டகோர் கடற்கரையிலே போர்க்கப்பல் அருங்காட்சியகத்திலே ஏவுகணைகள்- ஆயுதங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.  விசாகப்பட்டினத்திலும் கூட ஒரு நீர்மூழ்கிக் கப்பல், ஹெலிகாப்டர் மற்றும் விமான அருங்காட்சியகம் இருக்கிறது, இது இந்திய கடற்படையோடு இணைந்தது.  நீங்கள் இந்த அருங்காட்சியகங்களுக்குச் சென்று கண்டிப்பாகப் பாருங்கள் என்று உங்கள் அனைவரிடமும், குறிப்பாக இராணுவ வரலாற்றிலே பிரியம் உள்ளவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

mann ki baat - 2026

பழகலாம் பனிக்காலச் சுற்றுலா!

என் மனம்நிறை நாட்டுமக்களே, குளிர்காலம் வந்துவிட்டது, கூடவே குளிர்காலத்தோடு தொடர்புடைய சுற்றுலாவுக்கான சமயமும் வந்துவிட்டது.  உலகின் பல நாடுகள், குளிர்காலத்தில் நடக்கும் சுற்றுலாவையும், பனிக்காலச் சுற்றுலாவையும் தங்களுடைய பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஆக்கியிருக்கிறார்கள்.  பல நாடுகளில் உலகின் மிகவும் வெற்றிகரமான பனிக்காலக் கொண்டாட்டம் மற்றும் பனிக்கால விளையாட்டுக்களின் மாதிரியாக ஆக்கி இருக்கிறார்கள்.  இந்த நாடுகள், பனிச்சறுக்கு, பனியில் நெடும் பயணம் மேற்கொள்வது, பனிபடர்ந்த மலைகளில் ஏறுவது மற்றும் குடும்ப பனிப்பூங்காக்கள் போன்ற அனுபவங்களைத் தங்களுடைய அடையாளமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.  இவர்கள் தங்களுடைய பனிக்காலக் கொண்டாட்டங்களையும் கூட உலகளாவிய ஈர்ப்பாக மாற்றி இருக்கிறார்கள். 

நண்பர்களே, நமது தேசத்திலும் கூட, பனிக்காலச் சுற்றுலாவிற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.  நம்மிடத்திலே மலைகளும் இருக்கின்றன, கலாச்சாரமும் இருக்கிறது, அதோடு சாகஸத்திற்கான எல்லையில்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.  இப்போதெல்லாம் உத்தராகண்டிலே பனிக்காலச் சுற்றுலாவானது, மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.  குளிர்க்காலத்திலே ஔலி, முனஸ்யாரி, சோப்டா, டேயாரா போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது.  சில வாரங்கள் முன்பு தான் பித்தோர்கட் மாவட்டத்தின் 14½ ஆயிரம் அடி உயரத்திலே ஆதி கைலாசத்திலே, மாநிலத்தின் முதல் High Altitude Ultra Run Marathon போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நம்முடைய தேசத்தின் 18 மாநிலங்களிலிருந்து 750க்கும் அதிகமான தடகள வீரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.  60 கிலோமீட்டர் நீளமான ஆதி கைலாசச் சுற்று ஓட்டம், உறையவைக்கும் குளிரிலே, காலை 5 மணிக்குத் தொடங்கியது.  இத்தனை குளிரைத் தாண்டி, மக்களின் உற்சாகத்தைச் சொல்லி மாளாது.  ஆதி கைலாச யாத்திரையிலே, மூன்று ஆண்டுகள் முன்பு, வெறும் 2,000த்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தார்கள், இப்போது இந்த எண்ணிக்கை 3,000த்திற்கும் அதிகமாக ஆகி விட்டது.

நண்பர்களே, சில வாரங்களிலே உத்தராகண்டின் பனிக்கால விளையாட்டுக்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து விடும்.  நாடெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், சாகஸப் பிரியர்கள், விளையாட்டுக்களோடு தொடர்புடையவர்கள் மத்தியில் ஏகப்பட்ட உற்சாகம்.  Skiing- Snow-boarding என்ற இருவகை பனிச்சறுக்காகட்டும், பனிமீது நடைபெறும் பலவகையான விளையாட்டுக்களுக்குமான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.  உத்தராக்கண்டின் பனிக்காலச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்க வேண்டி, இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.  தங்குவிடுதிகள் தொடர்பாக புதிய கொள்கைத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நண்பர்களே, குளிர்காலத்தில் இந்தியாவில் திருமணம் செய்வது என்ற இயக்கம் கூட வித்தியாசமான கொண்டாட்டமாக ஆகி வருகிறது.  குளிர்காலத்தின் அருமையான வெயிலாகட்டும், மலையிலிருந்து இறங்கும் மேகக்கூட்டமாகட்டும், Destination Wedding ற்காக மலைகளும் கூட இப்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன.  பல திருமணங்கள், குறிப்பாக கங்கைக்கரையிலே நடக்கின்றன.

நண்பர்களே, குளிர்காலத்தின் இந்த நாட்களில், ஹிமாலயத்தின் பள்ளத்தாக்குகள் தரும் அனுபவம், நம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு இருப்பவையாக இருக்கின்றன.  நீங்கள் இந்தக் குளிர்காலத்தில் எங்காவது செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சொன்னால், ஹிமாலயத்தின் பள்ளத்தாக்குகளை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

பூட்டான் மக்களால் பெருமிதம்!

நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக நான் பூட்டான் சென்றிருந்தேன்.  இப்படிப்பட்ட பயணங்களின் போது பலவகையான உரையாடல்கள்-விவாதங்கள் நடத்தும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.  என்னுடைய இந்தப் பயணத்தின் போது, பூட்டானின் அரசர், இதற்கு முன்பு அரசராக இருந்த தற்போதைய அரசரின் தந்தை, அந்த நாட்டின் பிரதமர், இன்னும் பிறரை நான் சந்தித்தேன்.  இவற்றின் போது அனைவர் கூறுவதையும் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.  அனைவரும் அங்கே பௌத்த நினைவுப்பொருட்கள், அதாவது பகவான் புத்தரின் புனிதமான பொருட்களை அனுப்பியமைக்காக இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.  இதை நான் கேட்ட போது, என் இதயத்தில் ஆனந்தமும் பெருமிதமும் பொங்கின.

நண்பர்களே, பகவான் புத்தரின் பவித்திரமான எச்சங்கள் தொடர்பாக வேறு பல நாடுகளிலும் கூட இதே போன்ற உற்சாகத்தை என்னால் காண முடிந்தது.  கடந்த மாதம் தான் தேசிய அருங்காட்சியகத்திலிருந்து இந்தப் புனிதமான பொருட்கள் ரஷியாவின் கல்மீகியாவிற்குக் கொண்டு போகப்பட்டன.  இங்கே பௌத்த சமயத்திற்கு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.  ரஷியாவின் தொலைவான பகுதிகளிலிருந்து எல்லாம் அதிக எண்ணிக்கையில் இவற்றை தரிசிக்க வந்தார்கள் என்று என்னிடம் கூறினார்கள்.  இந்தப் புனிதமான பொருட்கள் மங்கோலியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்திற்குக் கூட கொண்டு செல்லப்பட்டன.  அனைத்து இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் வரும் மக்களின் பெரும் உற்சாகத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.  இவற்றை தரிசிக்க தாய்லாந்தின் அரசரே கூட வந்திருந்தார்.  உலகெங்கிலும் பகவான் புத்தரின் பவித்திரமான பொருட்களிடம் இந்த வகையான ஆழமான இணைவினைக் காணும் போது மனதில் உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன.  ஒரு விஷயமானது உலகெங்கிலும் இருப்போரை, பரஸ்பரம் இணையச் செய்யும் ஒரு சாதனமாக எப்படி ஆகிறது என்பதை நினைக்கும் போது மிகவும் இதமாக இருக்கிறது.

mann ki baat manadhin kural - 2026
#image_title

உள்ளூர் பொருளுக்குக் குரல் கொடுப்போம்

என் உளம்நிறை நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே எப்போதுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை உங்களிடம் நிரந்தரமாக இருத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன்.  சில நாட்கள் முன்பாகத் தான், ஜி20 உச்சி மாநாட்டின் போது, உலகின் பல தலைவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவது எனும் போது இதே மந்திரம் கடைப்பிடிக்கப்பட்டது.  நாட்டுமக்கள் சார்பாக உலகத் தலைவர்களுக்கு நான் அளித்த நினைவுப்பரிசிலே, இந்த விஷயம் குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட்டது.  ஜி20யின் போது, நான் தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவருக்கு நடராஜர் திருவுருவத்தின் வெண்கலச் சிலையை அளித்தேன்.  இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் கலாச்சாரப் பாரம்பரியத்தோடு இணைந்த, சோழர்களின் சிற்பக்கலையின் அற்புதமான எடுத்துக்காட்டு.  கனடா நாட்டின் பிரதமருக்கு வெள்ளியாலான குதிரையின் மாதிரி அளிக்கப்பட்டது.  இது இராஜஸ்தானத்தின் உதய்பூரின் நேர்த்தியான சிற்பக்கலையைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது.  ஜப்பானிய பிரதமருக்கு வெள்ளியாலான புத்தரின் திருவுருவச்சிலை அளிக்கப்பட்டது.  இதிலே தெலங்கானா மற்றும் கரீம்நகரின் புகழ்மிக்க வெள்ளி கைவினைத்திறன் மிக நுணுக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.  இத்தாலியின் பிரதமருக்கு மலர்கள் வடிவிலான வெள்ளியாலான முகம்பார்க்கும் கண்ணாடி அளிக்கப்பட்டது.  இதுவுமே கூட கரீம்நகரின் பாரம்பரியமான உலோகச் சிற்பக்கலையைக் காட்சிப்படுத்துகிறது.  ஆஸ்ட்ரேலிய பிரதமருக்கு நான் பித்தளை உருளியைப் பரிசாக அளித்தேன், இது கேரளத்தின் மன்னாரின் சிறப்பான கலைப்படைப்பாகும்.  பாரத நாட்டின் கைவினைத்திறன், கலை மற்றும் பாரம்பரியம் பற்றி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் நோக்கம்.  மேலும் நமது கைவினைஞர்களின் திறனுக்கு உலகாளாவிய மேடை கிடைக்க வேண்டும்.

நண்பர்களே, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உணர்வினை தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் இப்போது தங்களுடையதாக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இந்த ஆண்டு பண்டிகைகளுக்காக சந்தைகளில் வாங்கச் சென்ற போது, ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக உணர்ந்திருக்கலாம்.  மக்களின் விருப்பம், மேலும் வீடுகளுக்கு வரும் பொருட்களில், தெளிவான ஒரு அறிகுறி காணப்பட்டது, அதாவது தேசம் சுதேசியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது.  பாரதநாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் மனதாரத் தேர்ந்தெடுத்தார்கள்.  இந்த மாற்றத்தைச் சின்னச்சின்னக் கடைக்காரர்களும் கூட உணர்ந்தார்கள்.  இந்த முறை இளைஞர்கள் தாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்திற்கு வேகம் அளித்தார்கள்.  வரவிருக்கும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர்பான வாங்குதல் என்ற புதிய சுற்று தொடங்கி விடும்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை மறந்துவிடாதீர்கள் என்பதை நான் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன், தேசத்தில் தயாரிக்கப்பட்டதை மட்டுமே வாங்குங்கள், நமது நாட்டுமக்களின் உழைப்பு இருப்பனவற்றை மட்டுமே விற்பனை செய்யுங்கள்.

விளையாட்டில் ஜொலித்த வீரமங்கையர்

எனதருமை நாட்டுமக்களே, பாரதநாட்டு விளையாட்டுக்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த மாதம் சூப்பர்ஹிட் என்றே சொல்ல வேண்டும்.  பாரதநாட்டுப் பெண்கள் அணி ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பையை வென்றதோடு இந்த மாதம் தொடங்கியது.  ஆனால் அதன்பிறகு, களத்திலே மேலும் பல செயல்பாடுகளைப் பார்க்க முடிந்தது.  சில நாட்கள் முன்பு தான் டோக்கியோவிலே கேட்டல் குறைபாடு உடையோருக்கான ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன, அதிலே பாரதம் இதுவரை சாதித்திராத அளவுக்குப் போட்டியிட்டு, 20 பதக்கங்களை ஜெயித்திருக்கிறது.  நமது வீராங்கனைகளும் கூட, கபடிக்கான உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தார்கள்.  ஒட்டுமொத்தப் போட்டியிலுமே அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டது, நாட்டுமக்கள் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது.  உலக குத்துச்சண்டைப் போட்டிகளின் இறுதிப் போட்டியிலும் கூட நமது வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது, அங்கும் அவர்கள் 20 பதக்கங்களை வென்றார்கள்.

நண்பர்களே, எது அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது என்றால், நமது பெண்களின் குழுவானது பார்வைத்திறன் குன்றியவர்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிதான்.  பெரிய விஷயம் என்னவென்றால், நமது இந்தக் குழுவானது எந்த ஒரு ஆட்டத்திலும் தோற்கவில்லை, இந்தப் பந்தயத்தையே வெற்றி கொண்டார்கள்.  நாட்டுமக்கள் அனைவரும் இந்தக் குழுவின் அனைத்து வீராங்கனைகள் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள்.  நானும் இந்தக் குழுவினரை, பிரதமர் இல்லத்திலே சந்தித்தேன்.  உண்மையிலேயே இந்தக் குழுவின் நம்பிக்கை, அவர்களுடைய பேரார்வம் ஆகியவை நமக்கு நிறைய கற்றலை அளிக்கிறது.   இந்த வெற்றி நமது விளையாட்டு சரித்திரத்தின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, இது அனைத்து இந்தியர்களுக்கும் கருத்தூக்கமாக இருந்துவரும்.

உடலினை உறுதி செய்

நண்பர்களே, இப்போதெல்லாம் நமது தேசத்திலே, Endurance Sports – உடலுறுதி விளையாட்டுக்கள் என்ற புதிய விளையாட்டுக் கலாச்சாரம் கூட விரைவாக உருவாகி வருகிறது.  இதன் பொருள் என்னவென்றால், இப்படிப்பட்ட விளையாட்டுச் செயல்பாடுகள் வாயிலாக உங்களுடைய தாங்குதிறன், அதாவது தாக்குப்பிடிக்கும் தன்மை சோதித்துப் பார்க்கப்படுகிறது.  சில ஆண்டுகள் முன்புவரை, மாரத்தான் மற்றும் பைக்தான் போன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் எல்லாம், சில குறிப்பானவர்கள் வரை மட்டுமே என்ற வரையறைக்குள் இருந்தன.  ஆனால் இப்போது பலதும் மாறிவிட்டது.  நாடெங்கிலும் ஒவ்வொரு மாதமும் 1500க்கும் மேற்பட்ட இந்த Endurance Sports – உடலுறுதி விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வேண்டி தடகள வீரர்கள் தொலைவுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள்.

நண்பர்களே, இந்த உடலுறுதி விளையாட்டுக்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு – Ironman Triathlon.  நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்களிடம் ஒரு நாளுக்கும் குறைவான நேரம் மட்டுமே இருக்கிறது, இந்தக் காலத்திற்குள்ளாக நீங்கள் 3 வேலைகளைச் செய்யவேண்டும், கடலிலே 4 கிலோமீட்டர் வரை நீந்த வேண்டும், 180 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும், சுமார் 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட வேண்டும் என்று உங்களிடம் கூறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே!!  ஆ… இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் எண்ணுவீர்கள்.  ஆனால் இரும்பையொத்த மனவுறுதி படைத்தவர்கள், இதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார்கள்.  ஆகையால் தான் இதனை Ironman Triathlon என்று கூறுகிறார்கள்.

கோவாவிலே சில நாட்களுக்கு முன்னால், இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இப்போதெல்லாம் இது போன்ற ஏற்பாடுகளிலும் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள்.  இப்படிப்பட்ட மேலும் பல போட்டிகளும் இருக்கின்றன, இவை நமது இளைய நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஆகி வருகின்றன.  இப்போதெல்லாம் பலர் Fit India Sundays on Cycle போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க ஒருங்கிணைகிறார்கள்.  உடலுறுதிக்கு முதன்மை அளிக்கவல்ல நிகழ்ச்சிகள் இவை.

குளிர்காலத்தில் கவனம் தேவை

நண்பர்களே, உங்களை ஒவ்வொரு மாதமும் சந்திப்பது என்பது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.  உங்களுடைய சம்பவங்கள், உங்களுடைய முயற்சிகள், புதிய புதிய வகைகளில் என்னிடத்தில் உள்ளெழுச்சியை ஏற்படுத்துகின்றன.  உங்கள் செய்திகளில் இருக்கும் ஆலோசனைகள், உங்களுடைய அனுபவங்கள், இவற்றோடு கூட, பாரதத்தின் பன்முகத்தன்மையையும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைக்கும் உத்வேகம் கிடைக்கிறது. 

நாம் அடுத்த பதிப்பிலே சந்திக்கும் தருணத்தில், 2025ஆம் ஆண்டு, நிறைவின் நிறைவான கணங்களில் இருப்போம்.  தேசத்தின் பெரும்பான்மையான பாகங்களில் இப்போது குளிரும் கூட அதிகமாகிக் கொண்டே செல்லும்.  குளிர்காலத்திலே நீங்கள் உங்களையும், உங்களுடைய குடும்பத்தாரையும் குறிப்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.  அடுத்த மாதம் நாம் சில புதிய விஷயங்கள், புதிய நபர்களைப் பற்றிய விவாதங்களைக் கண்டிப்பாக நிகழ்த்துவோம்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம். 

திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை ஆட்டுக்கிடா வாகன வீதியுலா!

thiruparankundram murugan in attukida vahanam - 2026

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

திருவிழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

அந்த வகையில் நான்காவது நாளான இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிச.2 ந் தேதி இரவு 7.05 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும். அதைத்
தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிச.3 ந் தேதி மாலை 6 மணிக்கு கோயிலில் பாலதீபம் ஏற்றி மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்-4 முதல் ரயில் கன்யாகுமரியில் இருந்து புறப்பாடு!

kasi tamil sangam train from kanyakumari - 2026

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.!

இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் “காசி – தமிழ் சங்கமம்” என்ற கலாச்சார நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் காசி ஆகிய இரு பகுதிகளின் கலை, பண்பாடு, மரபு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முக்கிய நோக்கம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று புறப்பட்டது.

மொத்தம் 320 பேர் பயணிக்கும் இந்த ரயிலில் 216 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர்கள். 50 பேர் தமிழ் இலக்கிய வல்லுநர்கள், மேலும் 54 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலாச்சார அறிஞர்கள்.

காசி சென்றடைந்த பிறகு, பயணிகள் வரணாசி, அயோத்தியா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல புனித மற்றும் பாரம்பரிய தலங்களை பார்வையிட உள்ளனர்.

பின்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாபெரும் காசி–தமிழ் சங்கம நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ் மற்றும் வடஇந்திய கலாச்சாரங்களை இணைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயணம், தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை காசி மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது.

காசி ராமேஸ்வரம் தொடர்பைப் புரிந்து கொள்ள… தமிழ்ச் சங்கமம் வருக!

kashi tamil sangamam - 2026

காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள, காசி தமிழ் சங்கமம் 4.0-க்கு வாருங்கள்

  • சுபாஷ் சந்திரா

இந்தியாவின் கலாச்சார ஆன்மா எப்போதாவது ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தால், அது காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான அருவமான, தனித்துவமான மற்றும் பண்டைய உறவில்தான் பிரதிபலிக்கிறது. வடக்கின் ஆன்மீகத் தலைநகரான காசியும், தெற்கின் நித்திய பாரம்பரியத்தின் துருவ நட்சத்திரமான ராமேஸ்வரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஒன்றிணைத்த கலாச்சார ஒற்றுமையாக காண்பிக்கிறது.

காசி தமிழ் சங்கமம் 4.0 இந்த நித்திய ஒற்றுமை, பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் இந்தியத்தன்மையின் தனித்துவமான உணர்வைக் கொண்டாடுகிறது. இந்த சங்கமம் 2 புனித துருவங்களை, காசி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை ஒரு கலாச்சார பாலத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலம் என்பதையும் நிரூபிக்கிறது. இங்கே, ஒருபுறம், காசியின் கங்கா-ஜமுனி பாரம்பரியமும், மறுபுறம், தமிழ்நாட்டின் தெய்வீக திராவிட பாரம்பரியமும் உள்ளது. ஒருபுறம், சைவ ஆன்மீக பயிற்சியின் முடிவற்ற நீரோடையும், மறுபுறம், அறிவு, இலக்கியம் மற்றும் இசையின் வளமான பாரம்பரியமும் உள்ளது.

இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் “ஒரே இந்தியா, சிறந்த இந்தியா” என்ற உறுதிமொழி புதிய பரிமாணங்களைப் பெற்று வரும் நிலையில், காசி தமிழ் சங்கமம்- 4, இந்தியாவின் மைய உணர்வை, கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பகிரப்பட்ட வேர்களை மீண்டும் கண்டறியவும், வடக்கு மற்றும் தெற்கை எப்போதும் ஒன்றாக இணைத்துள்ள கலாச்சார பாரம்பரியத்தை புதுப்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.

காசி தமிழ் சங்கமம் 4.0 இந்த ஆண்டு டிசம்பர் 2 -ந் தேதி வாரணாசியில் தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட இந்த தனித்துவமான சங்கமம், இப்போது நாட்டின் மொழியியல் மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, சங்கமத்தின் கருப்பொருள் – “தமிழ் கற்றுக்கொள்வோம் – கற்போம் தமிழ்” – தமிழ் மொழியின்

முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், இந்திய மொழிகளின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்வு தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான ஆன்மீக, கலாச்சார மற்றும் அறிவுசார் உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை அனுபவிக்கவும் புரிந்துகொள்ளவும் இது ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறியுள்ளது.

இந்த நிகழ்வையொட்டி தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் என 1,400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு அழைத்து வரப்படுவார்கள், அங்கு அவர்கள் இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொண்டு கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டு சங்கமம் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் 15 –ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிறைவு விழா அதன் முக்கிய பகுதியாக இருக்கும். கூடுதலாக, 2 புதிய முயற்சிகள் தொடங்கப்படும். முதலாவது “தமிழ் கற்போம்”, இது வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் தமிழ் கற்க வாய்ப்பளிக்கும். 2-வது முயற்சி தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் ஒரு பயணமாகும், இது தமிழ்நாடு தேசத்துக்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த பதிப்பின் சிறப்பம்சம் டிசம்பர் 15 -ந் தேதி ராமேஸ்வரத்தில் அதன் உச்சக்கட்டமாகும். அங்கு காசி மற்றும் தமிழ் மரபுகளின் ஆன்மீக ஒன்றியம் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.

“அகஸ்திய பயணம்”, இது அகஸ்திய முனிவரின் பாரம்பரியத்தையும், தமிழ்நாட்டின் பங்களிப்புகளையும் தென்காசியில் இருந்து காசி வரையிலான பயணத்தின் மூலம் தேசிய அரங்கில் எடுத்துக்காட்டுகிறது. முதல் காசி தமிழ் சங்கமம் 2022 –ம் ஆண்டு நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து சுமார் 2,500 பேர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு வரலாற்று வெற்றியைப் பெற்றது.

2-வது சங்கமம் 2023-ம் ஆண்டு நமோ காட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் முறையாக, பிரதமரின் உரையின் நிகழ்நேர, செயலி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு தமிழில் வழங்கப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார சங்கமத்தின் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. 3-வது சங்கமம் 2025 -ல் நடைபெறுகிறது. இது அகஸ்திய முனிவரின் மரபை மையமாகக் கொண்டது. சுமார் 1,000 தமிழ் பிரதிநிதிகள் மற்றும் 200 பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவின் மொழிகள் வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, நமது நாகரிகத்தின் ஆன்மாவும் ஆகும். காசி தமிழ் சங்கமம் 4.0 என்பது அந்த உணர்வை உயிர்ப்பிக்கும் ஒரு முயற்சியாகும். இந்தியாவின் வலிமை அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்பதையும், மொழிகள் மீதான மரியாதை, கற்றுக்கொள்ளும் விருப்பம் மற்றும் பரஸ்பர நெருக்கம் ஆகியவை நம்மை ஒரு “கலாச்சார வல்லரசாக” ஆக்குகின்றன என்பதையும் இந்த சங்கமம் நமக்கு சொல்கிறது.

காசி தமிழ் சங்கமம் 4.0 என்பது 2 மொழிகளையும் 2 பிராந்தியங்களையும் இணைக்கும் ஒரு திட்டம் மட்டுமல்ல, இந்தியாவின் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கருத்தாக்கத்தின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு. இந்த நிகழ்வு இந்திய மொழிகள், கருத்துக்கள் மற்றும் மரபுகளின் சங்கமத்தை அடையாளப்படுத்தும். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை உணர்வை புதிய உயரங்களுக்கு உயர்த்தும்.

இந்திர அவதாரமான அர்ஜுனன் நம் பிரதமர் நரேந்திர மோடி: உடுப்பி சுவாமிகள் நெகிழ்ச்சி!

modiji in udupi sri krishna temple - 2026

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் புகழ் பெற்றது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில். இங்கே ஒரு லட்சம் பேர் கீதை பாராயணம் செய்யும் லட்ச கீதை பாராயண நிகழ்ச்சி நவ.28 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானத்தில் மங்களூரு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு வந்து, பின்னர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் ரோடு ஷோ நடத்திக் கொண்டு வந்தார். உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு, பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி அவருக்கு தங்கள் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தங்கக் கதவை திறந்து கோயிலுக்குள் சென்று மத்வ சரோவரில் தீர்த்த அபிஷேகம் செய்து ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். கோவில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்வர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் ஸ்வர்ண தீர்த்த மண்டபம் வழியாக வந்து, ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திர தீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.  பின்னர் பிரதமர் மோடி லட்ச கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.  

மடத்தில் நடந்த லட்ச காண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய போது, பல்வேறு திட்டங்களுக்கும் பகவத் கீதைதான் அடிப்படை என அப்போது பிரதமர் மோடி கூறினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

மூன்று நாட்களுக்கு முன்பு, கீதை பிறந்த குருக்ஷேத்திரத்தின் புனித பூமியில் இருந்தேன். இன்று, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த பூமிக்கு வருவது எனக்கு திருப்தியை தருகிறது. 

இந்த சந்தர்ப்பத்தில் லட்சம் பேர் ஒன்றாக அமர்ந்து பகவத் கீதையின் ஸ்லோகங்களை உச்சரித்தபோது, உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தைக் கண்டனர். பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே, மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்களின் அடிப்படை. அமைதி மற்றும் உண்மைக்காகப் பாடுபடவும், அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் பகவத் கீதை நமக்குக் கற்பிக்கிறது.

கீதையின் வார்த்தைகள், தனி நபர்களை மட்டுமல்ல நாட்டின் கொள்கைகளையும் வடிவமைக்கின்றன. நாங்கள், ‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். 

குஜராத்துக்கும் உடுப்பிக்கும் தொடர்பு உண்டு.  பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாகும். 

ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே, உடுப்பி புதிய மாதிரியை முன்வைத்தது. இது தேசிய கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறது. உடுப்பி தேசியக் கொள்கைகளுக்கும் வழிகாட்டியது.  இந்த நகருக்கு வருவது மற்றொரு காரணத்தினால் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஜன சங்கத்திற்கும், பாஜவின் சிறந்த நிர்வாக மாதிரிக்கும் உடுப்பி நகரமானது கர்மபூமியாகத் திகழ்கிறது. 1968ல் ஜன சங்கத்தின் தலைவர் விஎஸ் ஆச்சார்யாவை, நகராட்சி கவுன்சில் உறுப்பினராக உடுப்பி மக்கள் தேர்வு செய்தனர். அதன் மூலம் நிர்வாகத்துக்கான புதிய மாதிரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு உடுப்பி மக்களின் பங்களிப்பை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அறிவார்கள். அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றும் நிகழ்வை ஸ்ரீவிஸ்வேச தீர்த்த சுவாமிகள் வழிநடத்தினார். தில்லி செங்கோட்டையில் இருந்து சுதர்சன சக்கர இயக்கத்தை நான் அறிவித்தேன். இந்த திட்டம் என்பது, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதாகும். எதிரிகள் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பைக் காட்டத் துணிந்தால் நமது சுதர்சன சக்கரம் அதை அழித்துவிடும். தெய்வீக ஞானம் மற்றும் ஆன்மிக ஆற்றல் பெற்ற சுதர்சன சக்கரம் போல் இருந்த நம் விமானப்படையின் எஸ் – 400 வான் பாதுகாப்பு கவசம், அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்தன. தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு ஆக்கிரமிக்க நினைக்கும் எதிரிகளை, இந்த சுதர்சன சக்கரம் அழிக்கும். 

ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் போது, முந்தைய அரசுகள் மவுனம் காத்தன. ஆனால், இந்த முறை புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்கவில்லை. அதேசமயம் தன் குடிமக்களை பாதுகாக்கவும் தயங்கவில்லை. 

ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது, நமது உறுதிப்பாட்டை தேசம் பார்த்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தன. புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தலைவணங்கவோ தயங்கவோ இல்லை என்றார் பிரதமர் மோடி.  

உடுப்பி ஸ்வாமிகள் பேசியபோது, லட்ச கண்ட கீதா பாராயண மகோத்ஸவத்தை ஒட்டி வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறோம். பிரதமர் மோடி அர்ஜுனர் போல். அர்ஜுனன் இந்திரனின் அவதாரம். அவனே நரன் என மனித அவதாரம் எடுத்து வந்தான். நரேந்திர என்னும் பெயரின் பொருள் மனிதனாக வடிவெடுத்த இந்திரன் என்பது. ஆகவே நரேந்திர மோடி அர்ஜுனன் போலாவார். அர்ஜுனனே பகவத் கீதையை நேரடியாகக் கேட்டவன். இங்கே பகவத் கீதையின் லட்ச கண்ட பாராயணத்துக்கு வந்துள்ள நரேந்திர மோடிக்கு இதை விடப் பொருத்தம் உண்டோ என்று வியந்து பாராட்டினார்.