Home Blog Page 5827

தில்லி செல்கிறார் விஜயகாந்த்: பாஜக., கூட்டணி குறித்து பேச்சு

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5-ந் தேதி தில்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இடம்பெறும் என செய்திகள் வெளியாகி இருந்தன. தேமுதிகவுக்கு 113, பாமகவுக்கு 70, பாஜகவுக்கு 51 என தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை பாமக திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5ஆம் தேதி தில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தில்லி செல்லும் விஜயகாந்த் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து விவாதிக்க உள்ளாராம்.

பாஜக அணியிலேயே தேமுதிக நீடிப்பதை உறுதி செய்து அறிவிக்கும் வகையில் விஜயகாந்தின் தில்லி பயணம் அமைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த சென்னை மாணவன் ரயில் மோதி பலி

சென்னை:
சென்னை வண்டலூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தின் அருகே நின்று செல்போனில் செல்ஃபி எடுத்த பள்ளி மாணவர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார்.

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த தினேஷ். தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த அவர், ஞாயிற்றுக் கிழமை நேற்று, தனது நண்பருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து பூங்காவைச் சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் வீடு திரும்ப வண்டலூர் ரயில் நிலையம் வந்தார் தினேஷ். நண்பர்கள் இருவரும் தண்டவாளம் அருகே நடந்து வந்தனர்.

அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டை நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளம் அருகே சென்ற மாணவர் தினேஷ்க்கு தனக்குப் பின்புறம் ரயில் தன்னைக் கடந்து செல்லும் காட்சியை செல்போனில் ‘செல்ஃபி’யாகப் படம் பிடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது

இதனால், தினேஷ் அவசர அவசரமாக தண்டவாளம் அருகே நின்று ‘செல்ஃபி’ எடுக்க முயன்றார். ஆனால், அந்நேரம் ரயில் அதிவேகமாக வந்தது. அது மாணவர் தலையில் பயங்கரமாக மோதியதில் உடல் சிதறி மாணவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பன் அதிர்ச்சியில் உறைந்து போனான். இதுகுறித்து மின்சார ரயிலில் வந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சிதறிய மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த மாணவரின் தாய், தன் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அது அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

ஏற்கெனவே இதுபோல் மும்பையில் கடற்பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் அலையில் சிக்கி இழுத்துச் சென்றார். அவரைக் காப்பாற்றச் சென்ற இளைஞரும் அலையில் சிக்கி பலியானார். இதனால், செல்ஃபி எடுப்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது குறித்த விழிப்பு உணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மந்திர புஷ்பத்தின் பொருள் தமிழில்!

மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்வீகமாக நிறைக்கும் மந்திர புஷ்பங்களைப் பற்றித்​ மேலும் தெரிந்து கொள்வோம்

யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22) இந்த ​​மந்திர புஷ்பத்தைக் கொண்டிருக்கிறது.

மந்திரமெனும் தேனில் தோய்ந்த இம்மலர்களின் பொருளை அறியும் போது, நம் ப்ரார்த்தனைகளின் தொன்மை கவித்வமான அழகும், பொருளும் கொண்டதாகவும், இயற்கையை வணங்கி, அதனுடன் இணைந்து அதன் மடியில் தவழ்வதாகவும் இருக்கிறது.

“ நிலவே நீரின் மலர்” என்று முதலாம் ச்லோகத்தில் துவங்கும் வசீகரம் கிளர்த்துகிறது; கவிதையின் வேர் கிளை பரப்பி, ப்ரார்த்தனையாக வடிவெடுத்து மயக்கும் மாயம்;

மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம்; ஆனால் நீரே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று உறுதியாய்ச் சொல்லி முடிக்கிறது.

ஒன்பதாவது ச்லோகத்தில், ஓடத்தால் கடக்க அறிவுறுத்தும் கட்டத்தின் மூலம் அந்த இயற்கையை வணங்கி அதன் அடுத்த தளமான இவை அத்தனையையும் உருவாக்கிக் காக்கும் இறையை அடையும் முயற்சிக்கு ஆதி மனிதனைக் கொண்டு செல்கிறது.

செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்கும் பத்தாவது ச்லோகத்துடன் மந்திர புஷ்பம் எனும் நறுமணம் வீசும் மலர்கள் இறைவனின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றன.
இனி மந்திர புஷ்பத்தின் அந்த 10 ச்லோகங்கள்.

மந்திர புஷ்பம்

”ஓம் பத்ரம் கர்ணேபி” எனும் சாந்தி பாடத்துடன் துவங்குகிறது மந்திர புஷ்பம். (சாந்தி பாடம் குறித்த பதிவு அடுத்த சில நாட்களில் எழுதுகிறேன்)

ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)

யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத (2)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (3)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)

யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (5)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (6)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (7)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)

யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (8)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)

யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம: (10)

தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள்.

ஓம் பத்ரம் கர்ணேபி…..(எனும் சாந்தி பாடத்துடன் நிறையும்)

ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி

உதவி​:​ அண்ணா​வின் சூர்ய நமஸ்கார பாஷ்யம் ​

தொகுப்பு: ஏ.பி.ராமன், சிங்கப்பூர்

யு19 உலக கோப்பை: கிரிக்கெட் இந்தியா அணி அபார வெற்றி

நேபாளம் – இந்தியா 19 வயதுக்குட்பட்டவரகளுக்கான உலககோப்பை  நேபாளிற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து  முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணி 18.1 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

பெரியவாளின் சமயோஜிதம்!

பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர் ஏற்று கொள்வார் என்று எண்ணினார்.

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!

**

ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். 

பூஜைமுடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக் கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன் கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால் சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு நிதர்சனமாக தெரிந்திருந்தது.
ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம் தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்துகொண்டிருந்தார்.
இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையைநீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டார்!
சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! ரா.கணபதிக்கோ நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம் குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால் மட்டுமே முடியும்!

கடவுள் எவரையும் ஏமாற்றுவதில்லை!

செங்கல்பட்டு அவுட்டர்லதான் எங்க வீடு. கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. தொடர்ந்து சபரிமலைக்குப் போய்ட்டு வந்தோம் நானும் அப்பாவும். ஐயப்பன் பேர்ல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தோம். ஆனா… போன வருசம் அப்பா திடீர்னு தவறிட்டார். என்ன செய்யறதுன்னே தெரியல. நெறய செலவு செஞ்சு கஷ்டப் பட்டு படிக்க வெச்சார். வீட்ல அம்மா, தம்பி, தங்கச்சின்னு இருக்காங்க. நான் மூத்த பையன். குடும்பத்தைக் காப்பத்தணும்னு பொறுப்பு வந்திடுச்சி. பி.இ. இசிஇ படிச்சேன். ஆனா குடும்பத்துக்கு ஓரளவுக்கு தேவையான சம்பளம் கூட எனக்குக் கிடக்கல! காலேஜ்லேர்ந்து வெளில வந்து இதோ.. ரெண்டு வருசமாச்சி. நிஸான் கம்பெனில மெக்கானிக்கல்லதான் வேலை செய்தேன். ஓரளவுக்கு சம்பளம் வர்ற மாதிரி ஒரு வேலையை கொடுப்பான்னு அந்தக் கடவுள்கிட்டதான் மன்றாடினேன். ஆனா அலைச்சலும் விரக்தியும்தான் மிச்சம். நெட்வொர்க்கிங் ஃபீல்ட்ல வாய்ப்பு இருந்துது. ஆனா, எனக்கு அந்தத் துறை பழக்கமில்லை. மத்த ஃபீல்ட் எதுக்கு போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னுட்டாங்க. மேன்பவர் ஏஜென்ஸின்னு போனேன்… ஆனா காசு பிடுங்கறதுலதான் குறியா இருக்காங்க… ஒரு கட்டத்தில் கடவுளுக்கு கண்ணே இல்லைன்னு விரக்தி அடைஞ்சேன்… கடவுளே இல்லைன்னுகூட மனசு வெறுத்துப்போச்சு… ஆனா அதே கடவுள் அன்னிக்கு உங்க கண்ல என்னைப் பட வெச்சார் சார்..! இப்ப கடவுள் அருளை நான் உணர்றேன் சார்… ரொம்ப தேங்க்ஸ்!

– காலையில் வந்த தொலைபேசி அழைப்பில் இந்தச் சகோதரன் என்னிடம் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது… நானும் அந்த இறைவனின் விளையாட்டை பரிபூர்ணமாக உணர்ந்தேன்.

யார் இந்தச் சகோதரன்?

சில நாட்களுக்கு முன்னர் இதே பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டேன்… ஓர் அனுபவத்தை! நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்!

காலை நேரத்தில் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் வந்துகொண்டிருந்தபோது, பக்கத்து இருக்கையில் பயணித்த ஓர் இளைஞர், விடாமல் போன் செய்து வேலைவாய்ப்பு கேட்டு நட்பு வட்டம், மேன் பவர் ஏஜென்ஸி என்று பேசிக் கொண்டே இருந்தார். அவரது உள்ளத் தவிப்பை, ஏக்கத்திலும் சோகத்திலும் நனைந்த அவரின் முகம் எனக்கு உணர்த்திற்று. சுமார் 30 நிமிடங்கள் அந்த இளைஞரை அருகே அமர்ந்திருந்ததில் உள்ளத்தால் அளந்தேன். கிண்டி ரயில் நிலையம் இறங்கும் போது என் செல்போன் எண்ணை அவருக்குக் கொடுத்துவிட்டு, பிறகு பேசுங்கள் என்று சொல்லி விட்டு அலுவலகம் வந்தேன். ஊடகத் துறை என்றால், நமக்குத் தெரிந்த நண்பர்களுக்குச் சொல்லி வாய்ப்புக்காக சிபாரிசு செய்யலாம். எத்தனையோ பேருக்கு அவ்வாறு வழிகாட்டியுள்ளேன். ஆனால், இந்தத் தம்பியோ பி.இ. படித்துவிட்டு ஏதோ துறையில் இருக்கும்போது… நான் எவ்வாறு, யாரிடம் பரிந்துரைப்பது…? மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. வேலை இழப்பு, வேலை வாய்ப்பின்மை, வெறுமனே வீட்டில் அமர்ந்திருந்தால்… ஓர் இளைஞனுக்கு ஏற்படும் அனைத்து வலிகளும் உணர்ந்தவன்தான் நானும்! அந்த வலி வேதனையை சக ஜீவன் படக்கூடாது என்று எண்ணினேன்.

உடனே… பி.இ. படித்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்குள் பணியில் இருக்கும் இளைஞர்கள் குறித்து இந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். யாரேனும் வாய்ப்புகள் இருந்தால் தகவல் தருமாறும் சொல்லியிருந்தேன்.

நான்கு அழைப்புகள் எனக்கு வந்தன. அவற்றில் என் நம்பிக்கைக்குரிய இரண்டை அந்த நபருக்குப் பகிர்ந்தேன். ஒன்று, நண்பர் ஹரி அண்ணா Hari Ramakrishnan Krishnaகொடுத்தது, அடுத்தது என் உறவினரான ஸ்ரீதரன் Sridharan Sundararajan கொடுத்தது. ஸ்ரீதரன் அத்திம்பேர், தனது அலுவலக ஹெச்.ஆர். பிரிவில் உள்ள வாய்ப்பினைச் சொன்னார். அதற்கு ஏற்ற தகுதி அவருக்கு இருந்தால், நிச்சயம் அங்கே வாய்ப்பு உண்டு என்று சொல்லி, அவரை வந்து பார்க்கச் சொன்னார்.

நேர்முகத் தேர்வு முடிந்து… சில நாட்கள் கடந்து… இதோ இன்று அந்தச் சகோதரன் பாலசந்தர்… பணியில் சேர்ந்துவிட்டான்.

இடம் திருப்தியா இருக்கா? – கேட்டேன்.

நல்லாருக்கு சார். பிடிச்சிருக்கு! என்றான்.

மனம் இன்று மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது!

யோசித்துப் பார்க்கிறேன். காரணம் நானோ அல்லது என் குரலுக்கு செவிமடுத்த என் அத்திம்பேர் ஸ்ரீதரனோ இல்லை..! எல்லாம் பகவத் க்ருபைதான்! அந்த நேரத்தில், அத்தனை பேர் பயணிக்கும் ரயிலில், அவன் அருகில் என்னை அமரவைத்தவன் இறைவன். அவன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்க வைத்தவனும் அவனே! தந்தையார் இல்லாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் விதியின் விளையாட்டில், மனம் நொந்த நிலையில் இருந்த அந்த ஜீவனுக்கு… எனைக் கருவியாக வைத்து நம்பிக்கை கொடுத்தவனும் அந்த இறைவனே. ஆறுதலாக நான்கு வார்த்தைகள்! அவ்வளவே!

இப்போது சொன்னேன்… “தம்பி நீ திறமை உள்ளவன்தான். உனக்கான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தித் தருகிறான். சரியாக அதை பயன்படுத்திக் கொள். உன் பிரார்த்தனையின் வலிமை, உனக்கு என்றும் ஊக்கத்தையும் நல்ல நிலையையும் கொடுக்கும். கவலைப் படாதே!”

சென்னை பெருநகரத்தில் இணைந்த ஊர்கள் எவை?

இன்று சென்னை மாநகராட்சியில் புதிதாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர மாநாகராட்சி ( GREATER CHENNAI ) உருவாக்கப்பட்டது ..

சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சிகள் :

1- கத்திவாக்கம்
2- திருவொற்றியூர்
3- மணலி
4- மாதவரம்
5- அம்பத்தூர்
6- மதுரவாயல்
7- வளசரவாக்கம்
8- ஆலந்தூர்
9- உள்ளகரம்
10- புழுதிவாக்கம்

சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட பேரூராட்சிகள் :

1- சின்ன சேக்காடு
2- புழல்
3- போரூர்
4- நந்தம்பாக்கம்
5- மீனம்பாக்கம்
6- பெருங்குடி
7- பள்ளிக்கரணை
8- சோழிங்கநல்லூர்

சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சி அமைப்புகள் :

1- இடையஞ்சாவடி
2- சடையங்குப்பம்
3- கடப்பாக்கம்
4- தீயம்பாக்கம்
5- மாத்தூர்
6- வடபெரும்பாக்கம்
7- சூரப்பட்டு
8- கதிர்வேடு
9- புத்தாகரம்
10- நொளம்பூர்
11- காரப்பாக்கம்
12- நெற்குன்றம்
13- ராமாபுரம்
14- முகலிவாக்கம்
15- மணப்பாக்கம்
16- கொட்டிவாக்கம்
17- பாலவாக்கம்
18- நீலாங்கரை
19- ஈஞ்சம்பாக்கம்
20- காரம்பாக்கம்
21- ஒக்கியம்
22- துரைப்பாக்கம்
23- மடிப்பாக்கம்
24- ஜல்லடம்பேட்டை
25- செம்மஞ்சேரி
26- உத்தண்டி

இதனால் சென்னையில் புதிதாக ஐந்து மண்டலங்கள் உருவாகும் ..வட்டங்களின் எண்ணிக்கையும் உயரும்

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ1,520 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், 2015-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் ஏற்கனவே சிறையிலுள்ள 4 மீனவர்களையும், 69 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என குறிபிட்டுள்ளார். 

T-20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரர் இந்தர்பீர் சிங் சோதி தேர்வு

இந்தியாவில் வரும் மார்ச் 8-ம் தேதி T-20 உலக கோப்பை போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் நாதன் மெக்குல்லம், மிச்சேல், சான்ட்னெர், இந்திய வம்சாவளி வீரர் இந்தர்பீர் சிங் சோதி ஆகிய 3 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேப்டனாக வில்லியம்சன், மார்ட்டின் குப்தில், ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல், எல்லியாட், ஆண்டர்சன், கோலின் முன்ரோ, லுகே ரோஞ்சி, மிச்சேல் சான்ட்னெர், நாதன் மெக்குல்லம், போல்ட், மெக்லகன், ஆடம் மிலின், சோதி, சவுத்தி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் உறுதி மொழியால் முடிவுக்கு வந்த இடஒதுக்கீடு போராட்டம் !

 
இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக கோரி ‘காபூ’ ஜாதியினர்ஆந்திராவில் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் தீ வைத்ததில், எட்டு பெட்டிகள் எரிந்து, சாம்பலாயின. மேலும் உள்ளூர் காவல் நிலையம் ஒன்றுக்கும், காவல் துறைக்குச் சொந்தமான 8 வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
 
 
இதையடுத்து, கிழக்கு கோதாவரி பகுதியில் சென்று கொண்டிருந்த ரத்னாஞ்சல் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரையாகின. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வன்முறைச் சம்பவங்களால் ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
 
இந்நிலையில், இடஒதுக்கீடு கோரிக்கைக்கான தங்களது போராட்டத்தை காபு சமுதாயத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை என்றும் காபு சமுதாய தலைவர் பத்மனாபம் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட எந்த திட்டமும் போடவில்லை என கூறிய அவர்,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்