Home Blog Page 5961

சிற்றுயிர்களால் ஆனது இந்த உலகு

சுற்றுச்சூழல் என்றதுமே பெரும் பெரும் பிரச்சனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நம்மிடையே அற்பத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்களை யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஆனால் இந்த சிற்றுயிர்கள்தான் உலகை கட்டமைத்திருக்கும் சிற்பிகள். இவைகள் இல்லையென்றால் எந்த உயிரினமும் பூமியில் இருந்திருக்க முடியாது; நிலைக்க முடியாது. சுற்றுச்சூழல் மாசு பூமிக்கு நன்மை செய்யும் அந்த சிற்றுயிர்களையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் உண்மை.

 
3.bp.blogspot.com VvJ4SvJ6CP8 VgACZj15bEI AAAAAAAAGA8 hwAtNNLJuq8 s640 0e746b5fba2567a98f16dc1d932c7c54 - 2026
6 கோடி உயிர்கள்
மண்ணுக்குள் நம் கண்ணுக்குத் தெரியாத ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி மண்ணில் 6 கோடி உயிர்கள் செழிப்பான பூமிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த உழைப்புதான் மண்ணை வளமாக்குகிறது. தாவரங்களை செழிக்க வைக்கிறது. அதன்மூலம் உயிரினங்களை வாழவைக்கிறது.  
 
இந்த 6 கோடி நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்க அதைவிட குட்டியாக ஒரு உயிரினம் அதற்குள்ளேயே இருக்கிறது. அதன் பெயர் ‘மோரெட்’. இதுதான் மண்ணின் உயிர்த்தன்மையைக் காக்கும் நுண்ணுயிர்.  மண்ணில் நடைபெறும் தாதுக்கள் சுழற்சிக்கு இதுதான் காரணம்.
 
விவசாயத்தின் உயிர்நாடி இந்த சின்னஞ்சிறிய உயிரிகள்தான். ஆனால் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவதும் இவைகள்தான். இந்த மருந்துகள் பயிர்களில் இருக்கும் பூச்சிக்களை அழிக்கும் அதே வேளையில் மண்ணில் உள்ள இந்த உயிர்ச்சத்து தரும் நுண்ணுயிரிகளையும் சேர்த்தே கொன்று விடுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள் எல்லாமே ‘சிந்தெடிக் கெமிக்கல்’வகையை சேர்ந்தவை. அதாவது இயற்கையில் இல்லாத ரசாயனங்கள்.
இயற்கையில் கிடைக்கும் வேதிப்பொருட்களை தாதுக்களாக உருமாற்றம் செய்யத்தெரிந்த இந்த நுண்ணுயிரிகளுக்கு மனிதன் செயற்கையாக உருவாக்கியிருக்கும் புதுவகையான வேதிப் பொருட்களை எப்படி தாதுக்களாக மாற்றுவது என்று தெரிவதில்லை. அதனால் குழம்பிப்போன அவைகள் தாது மாற்றத்தை நிறுத்திவிடுகின்றன. மண்ணின் செழுமை இப்படிதான் ரசாயன உரங்களால் பறிபோயின. விளைநிலங்கள் நஞ்சாகிப் போனதும் இதனால்தான்.

2.bp.blogspot.com ugOPisyohUM VgACxOJtbMI AAAAAAAAGBE XY3QyccwjBM s400 worm coiled - 2026
மண்புழு
நமக்குதவும் இன்னொரு சிற்றுயிர் மண்புழு. மண்புழுவை விவசாயிகளின் தோழன் என்பார்கள். கடும் கோடையிலும் கூட மண்ணின் ஈரத்தைக் காக்கும் வள்ளல்கள். மழைக்காலங்களில் இவற்றின் கழிவுகள் மண்ணின் மீது எறும்பு புற்றுப் போல் குவியல் குவியலாக இருக்கும். மண்புழுக்கள் மண்ணை தின்கின்றன. அதிலுள்ள கரியமிலப் பொருட்களை செரிமானம் செய்து கொள்கின்றன. கரியமிலப் பொருட்கள் குறைவதால் மண்ணில் உயிர்ச்சத்து கூடுகிறது.

தனது வாயால் மண்ணைத் தின்று கொண்டே போகும்போது அது தனக்கான வளையை உருவாக்கிக் கொள்கிறது. இப்படி மண்புழுக்கள் வளைகளை உருவாக்கும்போது பூமியில் நிறையத் துளைகள் இயல்பாகவே ஏற்படுகின்றன. அந்த துளைகள் மூலம் மழைநீர் மற்றும் பாசன நீர் பூமியின் ஆழத்திற்கு சென்று நிலத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இப்படி துளையிடப்பட்ட நிலம் மிருதுவாகி விடுவதால் பயிர்களின் வேர்கள் சுலபமாக ஊடுருவி வளரமுடிகிறது. இந்த துளைகள் நிலத்தினுள் காற்றோட்டத்தையும் அதிகப்படுத்திவிடுகிறது. இதனால் மண்ணில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பலனடைகின்றன. பல இயற்கை ரசாயனப் பொருட்கள் இத்துளைகள் மூலம் நிலத்தின் ஆழம் வரை சென்று சேருகின்றன.

மண்புழு ஒரு இரவு ஜீவி. வெளிச்சத்தை கண்டால் வளைக்குள் பதுங்கிக்கொள்ளும். இவைகள் இரவு முழுவதும் உணவு உண்டு தன் கழிவை வளையின் வெளியே தள்ளிவிடும். அது மண்ணின் மேற்பரப்பில் ஒரு குவியலாக காணப்படும். மண்புழுவின் இந்தக் கழிவு மிக மிக வீரியம் மிக்கது.

மனிதன் உற்பத்தி செய்யும் எந்த செயற்கை உரங்களை விடவும், இயற்கை உரமான கால்நடை கழிவுகளை விடவும் வீரியமிக்கது. இந்த மண்புழுக் கழிவில் உயிர்ச்சத்தும், மணிச்சத்தும், சாம்பல் சத்தும் நிறைந்திருக்கிறது.

விளைச்சலையும் விளைபொருட்கள் தரத்தையும் அதிகப்படுத்தி தருவதுதான் இந்த தோழர்களின் வேலை. இவைகளுக்கும் எதிரி நாம் உபயோகிக்கும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தான். இந்த ரசாயனங்கள் நிலத்தையும் நீரையும் விஷமாக்குவதோடு இவற்றையும் கொன்றுவிடுகின்றன. 

நாம் பார்த்த இந்த இரண்டு சிற்றுயிரிகள் கூட விவசாயத்தையும் விளைச்சலை மட்டும்தான் உயர்த்தும். ஆனால், நாம் பார்க்கப் போகும் அடுத்த சிற்றுயிர் இல்லையென்றால் உலகமே அழிந்துவிடும். அந்த சிற்றுயிர் தேனீ.

4.bp.blogspot.com S1K6I2BqybA VgAC881bV3I AAAAAAAAGBM NAnGQU Gv40 s640 bee flower polinating - 2026
தேனீ

தேனீக்கள் உலகை வாழ வைக்கும் உன்னதங்கள். இவைகள் இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நிகழ்கால உதாரணமாக திகழ்கிறது ஆஸ்திரேலியா. அங்குள்ள செய்தித்தாள்களில் வெளிவரும் ஒரு விளம்பரம் இந்த சிற்றுயிரின் அவசியத்தை உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. அந்த விளம்பரம் இதுதான்:

‘நன்றாக வளர்ந்திருக்கும் தக்காளிச் செடிகளை உலுக்க ஆட்கள் தேவை. படிப்பு, முன் அனுபவம் தேவையில்லை. நல்ல சம்பளம்..!’

தக்காளிச் செடியை எதற்கு உலுக்க வேண்டும்? மனிதன் இயற்கையை மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு ஆடிய ஆட்டத்தின் விளைவு இது. மரங்களை வெட்டி, இயற்கையை அழித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு மீறி பயன்படுத்தியதன் பலன்.

மனிதன் படுவேகமாக பூச்சி வர்க்கத்தை அழித்து வருகிறான். அழிந்தது கொசு, கரப்பான்பூச்சி என்றால் பரவாயில்லை. ஆனால் அவன் அழித்தது எல்லாம் நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்துதான்.

இப்போது ஆஸ்திரேலியாவுக்கு வருவோம். இங்கு ‘பம்பிள் பீ’ என்று அழைக்கப்படும் ஒருவகை குண்டுத் தேனீ ஏராளமாக இருந்தன. இப்போது இல்லை. அதற்கு காரணம்..?! மனிதனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..!

ஆஸ்திரேலியாவில் மரங்கள், செடிகள் எல்லாம் வளர்ந்தன. ஆனால், அவைகள் எல்லாம் பூப்பதில்லை, காய்ப்பதில்லை. தக்காளி பயிரிட்டவர்களுக்கும் இதே கதிதான். தக்காளி செடி நன்றாகத்தான் வளர்ந்தது. பெயருக்கு பூ பூத்தது, காய் காய்த்தது. அந்தக் காயும் பெரிதாகவில்லை.

இந்தக் குண்டு தேனீக்களை பூச்சிக்கொல்லி மருந்துகள் கொஞ்சமும் சிறுவர்கள் கொஞ்சமும் அழித்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். உண்மை அதுதான்.

1.bp.blogspot.com 33fEv8bLFcs VgE9zC7irGI AAAAAAAAGBc daty8oTTX k s640 Bumblebee low - 2026
குண்டுத் தேனீ  – உடல் முழுக்க மகரந்த துகள்கள்

நமது ஊரில் தட்டானை பிடித்து சிறுவர்கள் விளையாடுவார்களே. அதேபோல் ஓணானைப் பார்த்தால் கல்லால் அடித்தே கொல்வார்களே. அப்படிதான் கொஞ்சம் கொழுக்.. மொழுக்.. என்று இருக்கும் இந்த தேனீக்களைப் பார்த்தால் சிறுவர்கள் கையில் பிடித்து விளையாடுவார்கள். தீப்பெட்டிக்குள் அடைத்து வளர்ப்பார்கள். அதிலிருந்து தப்பவும் இது முயற்சி செய்யாது. அதனால் சிறுவர்கள் தாங்கள் விளையாடுவதற்காகவே இந்த குண்டு தேனீக்களை பிடித்து பிடித்து கொன்று விடுவார்கள். சிறியவர்கள் விளையாட்டாக விளையாடியது இன்று வினையாகிவிட்டது.

குண்டுத் தேனீக்கள் கொட்டினால் வலி தாங்க முடியாது என்ற தவறான நம்பிக்கையும் இந்த தேனீக்கள் அழிந்து போக மிக முக்கிய காரணம். இதைத் தவிர விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளும் இந்த வகை சிற்றுயிர்களை கொன்று குவித்திட.. இத்தனை வருடங்கள் விவசாயிகளுக்கு நண்பனாக விளைச்சலை அதிகப்படுத்திய, மனிதனுக்கு தேனைக் கொடுத்த ‘பம்பிள் பீ’ அழிந்துவிட்டன..

குண்டு தேனீக்கள் தேன் சேகரிப்பதோடு நின்றுவிடாமல் அயல் மகரந்த சேர்க்கைக்கும் முக்கிய பங்காற்றின. பூக்கள் காய்களாக உருவாவதற்கு அடிப்படையான விஷயமே மகரந்த சேர்க்கைதான். இந்த அரிய பணியை செய்து வந்த ‘பம்பிள் பீ’ இப்போது இல்லை. அதனால் அந்த வேலையை செய்ய ஆட்களை நியமித்தார்கள் பண்ணை முதலாளிகள்.

இவர்களின் வேலை என்ன தெரியுமா..? நாள் முழுக்க தோட்டங்களை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு தக்காளி செடியாக சென்று அவற்றை மென்மையாக குலுக்க வேண்டும். அப்போது பூக்களில் இருந்து கீழே கொட்டும் மகரந்த துகள்கள் காற்றில் பறந்து அயல் மகரந்த சேர்க்கையை நிகழ்த்தும். அப்போதும் கூட, தேனீக்கள் ஒரு பைசாக் கூட வாங்காமல் இலவசமாக செய்த மகரந்த சேர்க்கைக்கு இணையாக சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்து செய்யும் மகரந்த சேர்க்கையின் மகசூல் இல்லை.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது மகரந்த சேர்கைக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. நமது நாட்டில் அறியாமையால் பல விவசாயிகள் தங்கள் பயிர்களில் தேனீக்கள் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். எப்படிப்பட்ட முரண்பாடு.

உலகில் 80 சதவீத மகரந்த சேர்க்கையை தேனீக்கள் மட்டுமே செய்கின்றன. இதன் மூலம்தான் உயிரினங்களுக்குத் தேவையான பழங்கள், காய்கள், தானியங்கள் எல்லா உணவுகளும் கிடைகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் தேனீக்கள் ஒருவேளை முற்றிலுமாக அழிந்துவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளில் உணவில்லாமல் பட்டினியால் உலகம் அழிந்துவிடும். அதன்பின் எந்தவொரு உயிரினமும் உலகத்தில் இருக்காது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

அதனால் சிற்றுயிர்கள்தான் உலகை அழியாமல் பாதுகாக்கின்றன. அந்த சிற்றுயிர்கள் அழிந்தால் அதை தொடர்ந்து பேருயிர்கள் அழிந்து போகும். ஆகவே, சிற்றுயிர்களை சுற்றுச்சூழல் மாசில் இருந்து காத்து, உலகைக் காப்போம்..!

டீசல் வாகனங்கள் தரும் மரணம்

“நீங்கள் புகைபிடிப்பீர்களா?”

“ஐயோ! அந்த கருமாந்தரத்த நான் கையால் கூட தொட்டதில்ல. யாராவது பிடிச்சா கூட உடனே அந்த இடத்த விட்டு நகர்ந்துடுவேன். நமக்கு ஆரோக்கியம் முக்கியம் பாருங்க..!”
 
இப்படி சொல்பவரா நீங்கள்..! நல்லது..!! ஆரோக்கியத்தை அப்படித்தான் கட்டிக் காக்க வேண்டும். ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா?
 
நீங்கள் சிகரெட் பிடிக்காதவராக இருந்தாலும் கூட, நீங்களும் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை புகைத்த பலனைப் பெறுகிறீர்கள் என்று..! அந்த பலன்களை நமக்கு தருவது நமது வாகனங்கள்தான்.

3.bp.blogspot.com 3dXOgWk Cqk VgUPExjl7iI AAAAAAAAGCU 4 hewoMOAEI s640 POLLUTION 2366634f - 2026

வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில் வாகன புகை பெரும் கேடை ஏற்படுத்துகின்றன. அதற்கு காரணம் வளரும் நாடுகள் சுற்றுச்சூழலில் அக்கரை காட்டாததுதான். வாகன புகை மாசில் மோசமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 
 
இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களை விட டீசல் வாகனங்களே அதிகம். சொந்த கார்கள் வைத்திருப்பவர்கள் கூட பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களையே வாங்குகிறார்கள். அதற்கு காரணம் எரிபொருளின் விலை குறைவு என்பதுதான். 
 
சென்னையில் இருக்கும் வாகனங்கள் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் டன்னுக்கும் அதிகமான மாசை காற்றில் கலந்து விடுகின்றன. இந்த மாசில் என்னென்ன இருக்கின்றன என்று பட்டியல் போட்டுத் தந்திருக்கிறது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம். அதன்படி, அதில் 810 டன் கார்பன்மோனாக்சைடும், 310 டன் ஹைட்ரோ கார்பனும், 160 டன் நைட்ரஜன் ஆக்சைடும், 15 டன் காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்களும், 12 டன் கந்தக டை ஆக்சைடும் மேலும் பல நச்சுப் பொருட்களும் இருக்கின்றன.

ஒரு நாளைக்கே இவ்வளவு என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு! ஒரு வருடத்திற்கு எவ்வளவு என்று பாருங்கள்.  சென்னை ஒரு நகருக்கே இத்தனை டன்கள் மாசு என்றால், இந்தியா முழுவதும் எத்தனை நகரங்கள்? எத்தனை லட்சம் வாகனங்கள்? அவைகள் வெளியேற்றும் நச்சுகள் எவ்வளவு? அப்பப்பா..! இப்பவே மூச்சு முட்டுது.!

3.bp.blogspot.com psZ6tGlNpEA VgUPXmtCagI AAAAAAAAGCc tCGCyQN7zXY s640 VBK HLTH 142377f - 2026

இந்த மாசுகள் குழந்தைகள், பெரியவர்கள் என்று யாரையும் விட்டுவைப்பதில்லை. டீசல் புகையிலிருந்து மிதந்து வரும் நுண் துகள்கள் சுவாசிக்கும் போது மூச்சுக்காற்று மூலம் நுரையீரலை அடைகிறது. இந்த துகள்கள் 2.5 முதல் 3.5 மைக்ரான் அளவு கொண்ட மிக நுண்ணியது. இவ்வளவு சிறிய துகள்கள் நுரையீரல் சுவரில் அப்படியே படிந்து தங்கி விடுகின்றன. வெளியேறுவதில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேரும் துகள்கள் நாளடைவில் புற்றுநோயை உருவாக்குகின்றன. சிகரெட் புகையும் இதே வேலையைத்தான் செய்கிறது. அதனால்தான் நீங்கள் சிகரெட் புகைக்காதவராக இருந்தாலும் கூட புகைத்த பலனை இந்த டீசல் வாகனங்கள் உங்களுக்கு தருகின்றன.
 
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் டீசல் வாகனங்கள் வெளியேற்றும் புகையில் 90 சதவீத நுண்துகள்கள் ஒரு மைக்ரானுக்கும் குறைவான அளவில் உள்ளன என்று தெரிவித்துள்ளது. இவைகள் எப்போதும் காற்றில் மிதந்தபடியே இருக்கும். நுரையீரல்தான் இவைகள் ஓய்வெடுக்கும் இடம். இது இருமல், தொண்டைக் கமறல், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை உருவாக்குகின்றன. 
 
இந்த மிதக்கும் நுண்துகள்கள் உலகம் முழுவதும் வருடத்திற்கு 6,20,000 மரணங்களை ஏற்படுத்துகின்றன. இது உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கும் தகவல். இதுமட்டுமல்ல, இந்த நச்சுப் புகை நமக்கு ஏற்படுத்தும் மற்றொரு பெரும் கோளாறு, ஆஸ்துமா! வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைட் சூரிய ஒளி பட்டதும் ஹைட்ரோ கார்பனுடன் வினைபுரிந்து ஓசோனை வெளியேற்றுகிறது. ஓசோன் எப்போதும் பூமியிலிருந்து மிக உயரத்தில் இருந்தால்தான் நமக்கு நல்லது. நம்முடனே, நமக்கருகில் இருந்தால் அது மகா கெடுதல்.

ஓசோனின் குணம் ரத்தத்தில் கலக்கும் ஆக்சிஜனை தடுப்பது. ரத்தத்தில் ஆக்சிஜன் குறையும் போது ஆஸ்துமா உருவாகிறது. அதே நேரத்தில் நுரையீரலின் செயல்பாடும் குறைகிறது. இப்படி உருவாகும் ஓசோன் மழைக்காலத்தில் குறைவாகவும் வெயில் காலத்தில் அதிகமாகவும் இருக்கிறது.

இந்த பாதிப்புகள் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம். குழந்தைகளின் உடல் எடையோடு கணக்கிடும் போது குழந்தைகள் பெரியவர்களை விட அதிக அளவில் உணவையும், நீரையும், காற்றையும் ஈர்த்துக் கொள்பவர்கள். குழந்தைகள் பெரியவர்களை விட 2 மடங்கு காற்றை சுவாசிக்கிறார்கள். அதனால் பாதிப்பும் அவர்களுக்கு அதிகம்.

காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் மட்டும் அந்த நகரில் 32,000 பேர் காற்று மாசுப்பாட்டால் இறந்திருக்கிறார்கள் லண்டன் ஆய்வு மையம் ஒன்று இதை தெரிவித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 2.5 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கும் அதேவேளையில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு 3.48 மடங்கும், வாகன மாசு 7.5 மடங்கும் அதிகமாகியுள்ளது.

வாகன புகை இத்தனை பாதிப்புகளை தரும் என்பதை தாமதமாக உணர்ந்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து யூரோ 1 என்ற தரக்கட்டுப்பாட்டை கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொண்டு வந்தன. அதன்படி கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன், நுண் துகள்கள் காற்றில் அதிக பட்சமாக எவ்வளவு இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இது ‘பாரத் ஸ்டேஜ்’ என்று அழைக்கப்படுகிறது.

இதற்கேற்ப வாகனங்களின் இன்ஜின்களில் மாற்றம் செய்தால் கார்பன் மோனாக்சைடு வெளியேறுவதை குறைக்கலாம். ஆனால், நைட்ரஜன் ஆக்சைடும், மிதக்கும் நுண் துகள்களையும் குறைப்பது தரமான எரிபொருள் மூலம்தான் முடியும். இந்தியா இரண்டிலுமே மெத்தனமாகத்தான் இருக்கிறது. ‘பாரத் ஸ்டேஜ் 1, 2, 3, 4,..’ என்று வரிசையாக தரக்கட்டுப்பாட்டை அரசு அதிகரித்துக் கொண்டே போனாலும் கார் தயாரிப்பாளர்கள் அதை நடைமுறை படுத்துவதற்கு தயாராக இல்லை.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் எல்லாம் வெளியேறும் மாசு எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு குறைவாக இருக்கிறது. ஆனால், உள்நாட்டில் விற்கப்படும் கார்கள் அந்த தரத்தில் தயாரிக்கப்படுவதில்லை. கேட்டால் தரக்கட்டுப்பாடுபடி வாகனத்தை தயாரித்தால் ஒரு காரின் விலை ரூ.25,000 லிருந்து 45,000 வரை கூடுமாம். வர்த்தக போட்டியில் அது சாத்தியம் இல்லையாம்.

இந்தியர்கள் உயிர்தானே போனால் போகட்டும் என்று அரசும், வாகன தயாரிப்பாளர்களும், எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்களும் அலட்சியமாக இருக்கின்றன. அவர்களுக்கு மேலைநாட்டினர் உயிர்தான் சக்கரைக்கட்டி.

மக்களை மதிக்காத அரசும், அரசியல்வாதிகளும், பணம் பண்ணும் முதலாளிகளும் இந்தியாவுக்கு கிடைத்த சாபக்கேடுதான். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். நமக்கும் இந்த  சமூகத்தின் மீது பொறுப்பிருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டும்.?

கூடுமான வரை சொந்த வாகனங்களை உபயோகிக்காமல் பொது வாகனங்களை பயணத்திற்கு உபயோகிப்போம். ஒரு கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் எந்த இடத்திற்கும் நடந்தே செல்வோம். டூ வீலர், கார் வேண்டாம். அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

 
புதிதாக கார் வாங்கும் போது ‘பாரத் ஸ்டேஜ் 4’-க்குப் பின் வந்த கார்களை வாங்குவோம். 50,000 ரூபாய் விலை குறைகிறது என்பதற்காக சுற்றுச்சூழலை மாசு படுத்தும் கார்களை வாங்குவதை தவிர்ப்போம். 15 வருடங்களுக்கு மேலாக வைத்திருக்கும் பழைய வாகனங்களை விற்றுவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கிக்கொள்வோம். பழைய வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றும். ஒருவர் அல்லது இருவர் செல்வதற்கு கார்களை பயன்படுத்தாமல், அதற்கு டூ வீலரோ, பொது வாகனமோ பயன்படுத்திக் கொள்வோம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு ‘என்னிடம் பணம் இருக்கிறது, நான் சொகுசாக போவதற்குத்தான் காரை வாங்கி வைத்திருக்கிறேன்’ என்று கூறி நம்மால் ஆனா ஒரு சிறு மாற்றத்தை கூட இந்த சமூகத்திற்காக.. சுற்றுச்சூழலுக்காக.. செய்ய முடியவில்லை என்றால், நாம் அரசையோ அரசியல்வாதிகளையோ குறை சொல்ல அருகதை அற்றவர்கள்.

இருட்டு நல்லது..!  

 

4.bp.blogspot.com GK - 2026
 
உலகளாவிய  மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015-ல்

முதல் பரிசு பெற்ற கட்டுரை

இருட்டு நல்லது..!

2.bp.blogspot.com KE4WSX mOEs Vgkwa27GNcI AAAAAAAAGCw Ks4eWNBtxk0 s400 DUBAI City of Burj Khalifa. - 2026

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பொருட்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அந்த பட்டியலில் வெகு சமீபமாக சேர்ந்திருப்பது ஒளி; அதாவது வெளிச்சம். 
 
வெளிச்சம் எப்படி சுற்றுச்சூழலை பாதிக்கிறது?

பகலில் தோன்றும் சூரிய ஒளி இயற்கையானது. அதில் அத்தனை பாதிப்பில்லை. மனிதன் இயற்கையை சீண்டியதால் சூரியன் கொஞ்சம் கோபமாக நம்மை தாக்கிக்கொண்டிருக்கிறான். மற்றபடி சூரியன் நல்லவன்தான். 

 
ஆனால் இரவில் அவனுக்கு தெரியாமல் நாம் நம் உலகை பகல் போல் வெளிச்சமாக்கிக் கொள்கிறோமே, அங்குதான் இருக்கிறது ஆபத்து. அந்த ஆபத்தைப் பற்றிய பதிவுதான் இது.

இரவும் அடர்ந்த இருளும்தானே நமக்கு ஆபத்தையும் பயத்தையும் தருகிறது. மாறாக, ஒளி அச்சத்தை போக்குகிறது. துணிவை தருகிறது. இரவில் கூட வேலைப்பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒளி எப்படி ஆபத்தாகும்?

ஆபத்தாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இயற்கை நமக்கு 12 மணி நேரம் பிரகாசமான சூரிய ஒளியையும், 12 மணி நேரம் அடர்ந்த இருளையும் கொடுத்திருக்கிறது. இரண்டுக்குமே இரண்டுவிதமான கடமைகள் இருக்கின்றன. நமது உடலும் ஏனைய உயிரினங்களும் 12 மணி நேர ஒளி மாற்றத்துக்கு ஏற்றபடிதான் உருவாக்கப்படிருக்கின்றன. ஆனால், நாம் செயற்கையாக ஒளிரும் விளக்குகளால் இரவின் பொழுதைக் குறைத்துவிட்டோம். இதன் மூலம் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் என்று எல்லாவற்றையும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டோம்.

மின் விளக்குகள் கண்டுபிடிக்காத காலத்திற்கு முன் இருந்த இரவு நேர வானத்திற்கும், இப்போது உள்ள இரவு வானத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். வானத்திலும் ஒளி மாசு பிரதிபலிக்கிறது. இதனால் நட்சத்திரத்தையும் கிரகங்களையும் ஆய்வு செய்யும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, இரவில் வேட்டையாடும் விலங்குகளும், பறவைகளும் இந்த செயற்கை வெளிச்சத்தால் குழம்பிப்போகின்றன. கடல் ஆமைகள் கடலில் இருந்து சற்று தொலைவில் அடர்ந்த இருளான இடத்தில்தான் கூட்டை உருவாக்கி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இந்த ஆமைகள் கலங்கரை விளக்கு ஒளியாலும், கடலுக்கு அருகில் இருக்கும் கட்டடத்தின் விளக்கு ஒளியாலும் பாதிக்கப்பட்டு, இனப்பெருக்கத்தையே குறைத்து வருகின்றன.

4.bp.blogspot.com cbpx8Wa5P - 2026

பறவைகள் நிலவின் ஒளியை வைத்து அதன் மூலம் தாங்கள் உருவாக்கிக்கொண்ட திசை வழியாக இரவு நேரத்தில்தான் இடம்பெயர்கின்றன. அந்த பறவைகளின் பாதையில் குறுக்கிடும் பெரிய கட்டடங்களின் ஒளியால் கவரப்பட்டு, திசை மாறி அதில் மோதி இறக்கின்றன. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பறவைகள் வருடந்தோறும் இப்படி மடிகின்றன.

வீட்டின் வெளிப்புறம் உள்ள மின்விளக்குகள் அதாவது, தெரு விளக்கு, விளம்பர பலகைகளின் விளக்கு ஒளி போன்றவற்றால் கவரப்படும் பூச்சிகள், விடியும் வரை அந்த விளக்கையே சுற்றிச்சுற்றி வருகின்றன. அதனால் உணவும் எடுத்துக் கொள்ளாமல், இனச்சேர்க்கையும் நடைபெறாமல் பூச்சி இனங்கள் வெகுவேகமாக அழிகின்றன. பூச்சிகள் தானே அழிந்தால் அழியட்டும் என்று விட்டுவிட முடியாது. உயிரினங்களின் உணவுச் சங்கிலி சுழற்சி பாதிக்கப்படும்.

 
சரி, பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தானே பாதிப்பு நமக்கு எதுவும் இல்லையே?! என்று நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. இது மனிதர்களுக்கு என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தி சொல்கிறார்கள்.

உலகிற்கு எப்படி 12 மணி நேரம் ஒளி, 12 மணி நேரம் இருள் என்று இருக்கிறதோ, அதேபோல் உயிரினங்களின் உடலுக்குள்ளும் ஒரு உயிர் கடிகாரம் இருக்கிறது. அதுதான் நமக்கு தூக்கத்தையும் விழிப்பையும் தெரிவிக்கிறது. 

செயற்கை ஒளியால் முதலில் பாதிப்பது இந்த உயிர் கடிகாரம்தான். நமது உடல் 12 மணி நேரம் வெளிச்சத்திலும், 12 மணி நேரம் வெளிச்சம் இல்லாத இருளில் இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. சூரிய ஒளி  உடல் வளர்ச்சி மற்றும் வலிமைக்கான காரணிகளை தூண்டிவிடுகிறது. இதே தூண்டுதல் நாம் உபயோகிக்கும் ஒளியிலும் உண்டு.

1860-ல் பெண்கள் வயதுக்கு வருவது 16 வயதில் இருந்து 19 வயதாக இருந்தது. இப்போது அது 8 வயதில் இருந்து 15 வயதாக குறைந்திருக்கிறது. இதற்கு உணவு உட்பட பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக சொல்லபடுவது ஒளிதான்.

சூரிய ஒளி பெண்ணின் ஹார்மோனை தூண்டிவிடுகிறது. அதனாலே வெப்ப நாடுகளில் பெண்கள் சிறு வயதிலே வயதுக்கு வந்து விடுவார்கள். சூரிய ஒளி குறைவாக உள்ள குளிர் நாடுகளில் அதாவது ரஷ்யா, அமேரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவற்றில் பெண்கள் தாமதமாக வயதுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று வெப்ப நாடுகள் குளிர் நாடுகள் என்ற எல்லா இடங்களிலும் ஒரேவிதமாக பெண்கள் விரைவாகவே வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

அதற்கு காரணம் இரவிலும் பகல் போல் ஒளிரும் விளக்குகள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வகுப்பறைகள், வீடு, கடைகள் என எங்கும் இரவை பகலாக்கும் பிரகாசமான வெளிச்சம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, கணினி போன்றவை வெளியிடும் கதிர்வீச்சுகளும் சூரிய ஒளிக்கு இணையான தாக்கத்தை உண்டாக்குகின்றன.

2.bp.blogspot.com ip m0YHli2s VgkyCN2nl2I AAAAAAAAGDA mVv7NuuGG0E s400 356441 sleep - 2026

தொடர்ந்து ஒளியின் தாக்கம் உடல் மீது பட்டுக்கொண்டே இருப்பதால் ஹார்மோன் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதனால் சின்ன வயதிலே வயதுக்கு மீறிய சதைப் பிடிப்போடு பெண்கள் வளர்கிறார்கள். விரைவிலே பருவத்துக்கும் வந்துவிடுகிறார்கள்.

சின்ன வயதில் பெரிய மனுஷியாவதில் என்ன தப்பு? என்று கேட்கலாம். சிறுமிகள் வயதுக்கு வந்ததும் பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகம் சுரக்கத் தொடங்கி விடுகின்றன. இந்த சுரப்புகள் எலும்புகளின் வளர்ச்சியை தடை செய்து விடுகின்றன. இதனால் இந்த சிறுமிகள் வளர்ந்து பெரிய பெண்கள் ஆனதும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். 14 வயதுக்கு பின் பருவம் அடைந்த பெண்களைவிட அதற்கு முன்பே பருவம் அடைந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 4 மடங்கு அதிகம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

ஒளியின் பாதிப்பு இதோடு முடிந்து விடவில்லை. வெளிச்சம் அற்ற அடர்ந்த இருட்டில் தூங்கும் போது நமது உடலில் மெலடோனின் என்ற  ஹார்மோன் சுரப்பு சுரக்கத் தொடங்குகிறது. இதுதான் நமது ஆரோக்கியத்தின் உயிர்நாடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நன்றாக தூங்கவும், கொழுப்பை நீக்கவும் இது உதவிபுரிகிறது. மேலும் தைராய்டு,  பெண்ணின் கருமுட்டை, ஆணின் விரைகள் நன்றாக செயல்பட இந்த மெலடோனின் மிக முக்கியம்.

ஆனால், தொடர்ந்து இரவிலும் உடல் மீது வெளிச்சம் பட்டுக் கொண்டே இருக்கும்போது இந்த சுரப்பு வெகு வேகமாக குறைந்து போகிறது. மிக குறைவாகவே சுரக்கிறது. இதனால், தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பருமன், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல பாதிப்புகள் உருவாகின்றன.

இப்படி தோன்றும் அத்தனை நோய்களையும் ஒரு பைசா செலவில்லாமல் சரி செய்து விடலாம்; விளக்கை அணைப்பதன் மூலம். கூடவே நமது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். இரவு 11 மணிக்கு, 12 மணிக்கு தூங்கப் போகிறவர்கள் தொலைக்காட்சி, கணினிக்கு விடைக் கொடுத்து 10 மணிக்கு முன்பே தூங்கிவிடுங்கள். படுக்கை அறையில் இரவு விளக்கும் அணைக்கப்பட்டு அடர் இருளில் தூங்கப் பழகுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். போக போக நல்ல தூக்கம் வரும். சர்க்கரை நோய், மன அழுத்தம் எல்லாம் குறையத் தொடங்கும். இரவை முழுமையாக அனுபவித்தாலே போதும் எல்லா வியாதியும் நம்மை விட்டு ஓடிவிடும்.

ஒளியால் ஏற்படும் இத்தனை பாதிப்புகளை பார்த்தப் பின் மேலைநாடுகளில் இப்போதே ‘பாரம்பரிய இரவை மீட்போம்..!’ என்ற பெயரில் பல இயக்கங்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் அதற்கான அடிச்சுவடு கூட இன்னும் ஏற்படவில்லை.

இதனை ‘ஒளி மாசு’ என்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் 30 சதவீதம் விளக்குகள் தேவைக்கு அதிகமாக ஒளிர்கின்றன என்கிறது ‘சர்வதேச இருள்-வான் அமைப்பு’. நியூயார்க் நகரில் மட்டும் வீடுகளுக்கு வெளிப்புறம் எரியும் மின் விளக்குகள்  வருடத்திற்கு 2.1 கோடி டன் கார்பன் டைஆக்சைடை வெளியேற்றுகின்றன. இந்த ஒரு நகரின் மாசை மட்டும் சரி செய்வதற்கே 87.5 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிறது அந்த அமைப்பு.

அதைவிட  சில எளிமையான வழிகள் இருக்கின்றன. தேவையில்லாத இடங்களில் இருக்கும் விளக்குகளை அகற்றுவது, வான் நோக்கிப் பாயும் ஒளியை தடுத்து நிலத்தில் மட்டும் விழும்படி விளக்கைச் சுற்றி கவசமிடுவது, வீடு மற்றும் அலுவலகங்களின் உட்புறத்தில் தேவையில்லாமல் எரியும் விளக்குகளை அணைப்பது போன்றவற்றை செய்தால் 60 முதல் 70 சதவீத ஒளி மாசுபடுதலை தவிர்க்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

எது எப்படியோ இயற்கைதான் மீண்டும் வலியது என்பதையே இது காட்டுகிறது. இதனால் நாமும் தேவையற்ற ஒளிகளை குறைத்து, இருளில் படுத்து பாரம்பரிய இரவை மீட்போம்.

இருட்டு நல்லது..!!

இதுவும் இனப்படுகொலைதான்..!

பதிமூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் அந்த கிராமத்திற்குப் போகிறேன். பழைய நினைவுகள் என்னையறியாமல் என்னுள் ஓடத்துவங்கின. 

 
அப்போதெல்லாம் அந்த கிராமத்துக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். மீறி நுழைந்தால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.  அதற்காக நான் ஒரு தொண்டு நிறுவனத்தை நாடினேன். அவர்களும் வரச் சொன்னார்கள். எனக்கு துணையாக மீனா என்ற பெண்ணை அனுப்பி வைத்தார்கள். 
 
மீனா அந்த கிராமத்தின் களப்பணியாளர். அதனால் எந்த ஆபத்தும் வராது என்றார் தொண்டு நிறுவனத் தலைவர். அந்தக் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லையென்பதால், எனது வாகனத்திலே இருவரும் சென்றோம். 
 
ஒரு இரண்டு கிலோமீட்டர் கூட சென்றிருக்க மாட்டோம் தலைவரிடம் இருந்து போன். “செந்தில் சார், எதுக்கும் ஸ்டேஷன்ல ஒரு வார்த்த சொல்லிட்டுப் போயிடுங்க!”. மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு வழிகாட்ட, இன்ஸ்பெக்டர் அங்கிருந்தார். 
 
விவரங்களை சொன்னேன். “கண்டிப்பா போயாகணுமா சார்!” என்று மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டார். “நான் தகவல் சொல்லிட்டேன். மற்றபடி உங்க பெர்மிஷன கேக்கல..!” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். 
 
“கொஞ்சம் இருங்க சார்..! சுப்ரமணி கூட போயிட்டு வாங்க..!” என்று ஒரு கான்ஸ்டபிளை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான் அதன் தீவிரம் தெரிந்தது. 
 
மூவரும் ஊருக்குள் நுழைந்தோம். எல்லோரும் வெறித்தபடி எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். “சார்! நீங்க இப்படி கூடவே வந்தா யாரும் எதுவும் பேசமாட்டாங்க. நாங்க மட்டும் போய்ட்டு வர்றோம்.” என்று அவரை ஒரு டீக்கடையில் அமரவைத்துவிட்டு சென்றோம். 
 
“ஏன்டீ, உனக்கு வேற வேலையில்ல. எப்ப பாத்தாலும் இங்கனயே சுத்திக்கிட்டு இருக்கே. நாங்க எங்க புள்ளைய கொன்னா என்ன, கொல்லாம விட்டா உனகென்னடீ. எப்ப பாத்தாலும் எங்கள வேவு பாத்துகிட்டு..! ஆமா, இவன் யாரு புதுசா..?” 
 
அந்த பாட்டிக்கு 75 வயதிருக்கும். பிறந்த பெண் குழந்தையை கொல்வதுதான் அவரின் வேலை. மீனா போன்றவர்களால் அந்த வேலை தடைபடுகிறது. அதனால் வெறுப்பை வார்த்தைகளாய் கொட்டுகிறார். ஊருக்குள் முதல் வரவேற்பே எனக்கு பிரமாதமாக இருந்தது. 
 
பெண் சிசுக்கொலை என்பது அந்த கிராமத்தில் பாரம்பரியமாக தொன்று தொட்டு நடக்கும் வழக்கம். எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வு. இவற்றைப் பற்றி ஆராயப் போனவர்களை அடித்தே விரட்டுவார்கள் ஊர்மக்கள். என்னுடன் வந்த மீனாவுக்கும் அந்த அனுபவம் உண்டு. அவர் மீது கல் எரிந்ததில் ஏற்பட்ட காயம் ஒன்று தழும்பாக நெற்றியில் இன்னமும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் அவர்கள் களப்பணி செய்கிறார்கள். ஒருமையில் திட்டுவதும், கெட்ட வார்த்தைகளில் ஏசுவதும், குடும்பத்தினரை இழுத்து வைத்து மானத்தை கப்பல் ஏற்றுவதும் இங்கு சகஜம். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் உழைக்கிறார்கள். சமூக அக்கறை இல்லாத யாரும் வெறும் சம்பளத்திற்காக மட்டும் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது.

மீனா சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் என்னை உறைய வைத்தது. “நாங்க 17 கிராமங்கள்ல பென்சிசுக்கொலைக்கு எதிரா பிரசாரம் பண்றோம்.  ஆரம்பத்துல பல கிராமங்கள்ல எங்கள நுழையவே விடல. எங்க முயற்சி எல்லாம் வீனா போச்சு.  கரடிக்கல்  கிராமத்துல ஒரு பெண் குழந்தைய கொல்ல கள்ளிப்பால் முதகொண்டு எல்லாத்தையும் தயாரா வச்சிருந்தாங்க.

 

2.bp.blogspot.com ctWl4VLDzZs VgwkWmo6TXI AAAAAAAAGDg ag1zXH0Llys s1600 almost new born baby - 2026

அத தெரிஞ்சு, நாங்க அங்க போனதும் எங்ககிட்ட அன்பா பேசினாங்க. எந்த பாவமும் அறியாத பச்சிளங் குழந்தைய கொல்றது  பெரிய பாவம்னு சொன்னாங்க. ‘பெண் பாவம்’ தலைமுறை தலைமுறையா எங்கள பாதிக்கும்னு சொன்னாங்க. அவர்களின் பேச்சில் மயங்கி நாங்களும் நம்பிக்கையோடு வெளி வந்தோம். ஆனா, எங்க நம்பிக்கை பொய்த்துப் போனது.

நாங்க அந்த கிராமத்த விட்டு வெளியேறுவதற்குள்ல அந்தக் குழந்தை இறந்துட்டதா தகவல் வந்தது. ஆரம்பத்தில் இப்படி பல ஏமாற்றங்கள். எங்களால பெண் சிசுக்கொலையை தடுக்கவே முடியல. எங்க கண் முன்னால அது நடந்து கொண்டிருந்தது. அப்புறந்தான் கிராமத்து தலைவர்களை அழைச்சுப் பேசினோம். முதல்ல அவங்களுக்கு பெண் குழந்தைகள கொல்வது தவறுன்னு உணர வைத்தோம். இதற்கே நாங்க நிறைய மெனக்கெட்டோம். அதன்பின் காவல்துறையையும் நாடினோம். அவர்களும் எங்களுக்கு உதவினார்கள்.”

“மீனாக்கா..!”

ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தை கத்திக் கொண்டே ஓடி வந்தது.

“ஏன்க்கா லேட்டு? என்னால பசி தாங்க முடியல..!” என்றது குழந்தை மழலை மாறாமல். மீனா மூன்று பொட்டலங்களை எடுத்து வைத்தார். “இத இப்ப சாப்பிட வச்சுக்கோ, இது நைட்டுக்கு, இது நாளைக்கி காலேல சாப்டுக்கோ! மத்தியானத்துக்கு நா வந்துருவேன்..!” எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக இந்த குழந்தைக்கு சாப்பாடு தர வேண்டும்? மீனாவே விளக்கம் தந்தார்.

“இந்த பொண்ண பெத்தவங்க, கொல்லப் பாத்தாங்க. நாங்க காப்பாத்திட்டோம். இது அவங்களுக்கு வேண்டாத கொழந்த. அவங்க இன்னும் இந்த கொழந்தைய ஏத்துக்குல. பொறந்ததில இருந்து அம்மா பால் கொடுக்கல. அப்பா துணிமணி எடுத்து தரல. எப்போதும் பட்டினியாவே இருக்கும். நாங்கதான் கொழந்தையில இருந்து தினமும் பாலும், இப்ப சாப்பாடும் கொடுத்து காப்பாத்துறோம். எல்லா செலவும் நாங்கதான் செய்றோம். அவங்க நீங்க தானே காப்பாத்தினீங்க, நீங்களே வளருங்கன்னு ஒதுங்கிட்டாங்க. நாங்க வந்தாதான் இந்த பொண்ணுக்கு சாப்பாடு.!”

என் கண்கள் கசிந்தன. பெண் குழந்தை என்றால் இவர்கள் மனம் எத்தனை கல்லாகிறது. நல்ல வேளை அந்த குழந்தையை அவர்கள் வீட்டில் தங்கவாவது அனுமதித்தார்களே. அதுவரை அவர்களை பாராட்டலாம்.

பொதுவாக மீனா போன்ற தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் இத்தகைய கிராமங்களில் என்ன வேலை செய்வார்கள் என்றால், அந்த கிராமத்தில் எந்தப் பெண் கர்ப்பமடைந்தாலும் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதிலும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்தால் கவனிப்பு இரு மடங்காகும்.

மீனா பணியாற்றும் நிறுவனம் மட்டும் 135 பெண் குழந்தைகளை சிசுக் கொலையில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. வேண்டாத குழந்தையை கள்ளிப்பால் அல்லது எருக்கம் பால் ஊற்றிக் கொல்வது, அது கிடைக்காத போது தண்ணீரில் குழந்தையை முக்கி எடுப்பது, கோழிக் குழம்பை சூடாக வாயில் ஊற்றுவது, இரண்டு நெல் மணிகளை தொண்டைக்குழியில் வைத்து அழுத்தி விடுவது. குழந்தையை உயிரோடு மண்ணில் புதைப்பது என்று பெண் குழந்தைகளைக் கொல்ல பல வழிகளைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த முறைகள் எல்லாம் குழந்தையை போஸ்ட் மார்ட்டம் செய்தால் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் இப்போது புதிதாக ஒரு முறையை பின்பற்றுகிறார்கள். அது குழந்தையை ஒரு அறைக்குள் படுக்க வைத்துவிட்டு, மின் விசிறியை வேகமாக சுழலவிடுவது. 15 நிமிடத்திற்குள் மூச்சு திணறி குழந்தை இறந்துவிடும். இந்த மரணம் மருத்துவ பரிசோதனையில் தெரிவதில்லை. அதனால் இதைதான் இப்போது எல்லோரும் செய்கிறார்கள். மீனா சொல்ல சொல்ல எனக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

அதைவிட பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண் படும் அவமானங்கள் சொல்லி முடியாது. அந்த அவமானங்களை துடைக்க அவள் ஒரு ஆண் குழந்தையை பெற்றாக வேண்டும். ஆண் குழந்தைதான் அவளுக்கான மறு ஜென்மத்தை கொடுக்கிறது.

பெண் குழந்தையை ஈன்ற பெண்ணுக்கு அந்த குழந்தையோடு கணவன் வீட்டுக்குள் நுழைய முடியாது. அதனால் குழந்தையை கொல்லும் பொறுப்பு பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் தலையிலே விழுகிறது. இதற்காகவே கிராமங்களில் சில கருத்தம்மாக்களும் உண்டு. அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து, 50 அல்லது 100 ரூபாய் கொடுத்தால் போதும் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். பெற்ற பெண் குழந்தையை கொன்றப் பின்தான் கணவன் வீட்டுக்குள் குழந்தையின் தாய் நுழைய முடியும்.

“அம்மா மீனா!”

பாசமாக அழைத்த அந்த பாட்டியை பார்த்ததுமே பிடித்துவிட்டது. அப்படியொரு வசீகரம்! காது வளர்த்து, தண்டட்டி அணிந்திருந்த அந்த பாட்டியின் பெயர் வெள்ளையம்மா. அந்த பாட்டியைப் பற்றி மீனா சொன்ன பின் இன்னும் பிடித்துவிட்டது.

ஊரெல்லாம் பெண் குழந்தைகளை விதவிதமாக கொன்று கொண்டிருக்கும் போது தன் பேத்திக்காக மதுரை சென்னை என்று அலைந்து திரிந்திருக்கிறார் இவர்.

தனது மகனுக்கு நாலாவதும் பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது என்ற போது வெள்ளையம்மா பதறித்தான் போனார். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை கொன்று விட்ட குடும்பம் அது.  இப்போது நாலாவதாக இன்னொரு குழந்தையை பலி கொடுக்க பாட்டிக்கு திராணியில்லை. இந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். மகனின் முடிவு வேறுவிதமாக இருந்தது.

நான்கு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டால் ஐந்தாவது தப்பாமல் ஆண் பிள்ளைதான் என்று அந்த கிராமத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் படி நான்காவதாக பிறந்த அந்த குழந்தையையும் கொன்று விட்டு, அடுத்த ஆண் குழந்தைக்கு தயாராக வேண்டும் என்பதில் வெள்ளையம்மாவின் மகன் உறுதியாக இருந்தான். பாட்டிக்கோ பேத்தியை இழக்க மனமில்லை. மகனிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாள். பாட்டி சொல் அம்பலமேறவில்லை.

விடியற்காலையில் குழந்தையைக் கொல்ல கருத்தம்மா கிழவி வந்துவிடுவாள். இப்போதே இரவு 8 மணி. குழந்தை பாலுக்காக ஒரு மணி நேரமா வீரிட்டு அழுகிறது. இரக்கமற்ற அதன் தாயும் தந்தையும் பெண் என்பதால் திரும்பி கூட பார்க்கவில்லை. அழுது அழுது அதன் ஜீவன் அடங்கிவிடுமோ என்று பாட்டி பயந்தாள்.

“ஏம்மா, கொழந்தைக்கு பால் கொடுமா. இல்லன்ன மார்ல பால் கட்டிக்கும். வலி தாங்க முடியாது.”

“ஏற்கனவே மூணு கொழந்தைகளுக்கு மார்ல பால் கட்டி நின்னு வேதன பட்டவதான் நான். இதுவொன்னும் புதுசு இல்ல. காலேல சாகப்போற சனியனுக்கு பால் எதுக்கு? பசில செத்தா சாகட்டும். நூறு ரூபா மிச்சம்.”

அழுதழுது குழந்தையின் முகம் சிவந்து வீங்கிப் போயிருந்தது. தொப்புள் கொடியின் ஈரம் கூட காயாத அந்த குழந்தையை கையில் ஏந்தியபடி, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த செல்லாயி வீட்டுக்கு பாட்டி வந்தாள். அந்த கிராமத்தில் கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரே பெண் அவள்தான்.

“செல்லாயி, பொட்டப்புள்ள பொறந்ததாலே இவ ஆத்தா இதுக்கு பால் தரமாட்டேன்னுட்டா. கொஞ்சம் அமத்திக் கொடு தாயீ!”

“ஆத்தா, நானெப்படி உங்க பேத்திக்கு பால் கொடுக்க..? உங்காளுங்க பாத்தா என்ன வெட்டி போட்ருவாங்களே.”

“அப்படி எதுவும் ஆகாது புள்ள. உசுருக்கு பொறவுதான் புள்ள சாதி. இப்ப என்னோட பேத்திக்கு நீதான் உசுரு.”

“பேத்திய கொடு ஆத்தா..!”

வயிறு நிரம்ப பால் உண்டதில் குழந்தை நிம்மதியாக உறங்கியது.

“ஏனாத்தா, இந்த புள்ளைக்கும் கள்ளிப்பால்தானே கொடுக்கப் போற..!”

“இல்ல தாயீ, இத சாக விடமாட்டேன். ‘அழகு சிறை’க்கு கொண்டு போறேன்.”

அழகு சிறை கருமாத்தூரில் இருக்கிறது. பாட்டி இருக்கும் கின்னிமங்கலத்திற்கும் அதற்கும் 6 அல்லது 7 கி.மீ. தூரம் இருக்கும். கைக்குழந்தையை கையில் ஏந்தியபடி வயல், வரப்பு, கரடு வழியாக நிலா வெளிச்சத்தில் தட்டு தடுமாறி ‘அழகு சிறை’க்கு வந்து சேர்ந்தாள் பாட்டி.

அங்கிருந்த தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்தாள்.

“சாமீ..! சாமீ..!”

கத்தினாள். கதவை தட்டினாள்.

சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு பாதிரியார் வந்தார்.

“சாமீ..! இவ என்னோட பேத்தி இவள கொல்லப் போறாங்க. அதான் இங்க வந்து உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். பத்தரம பாத்துக்கோங்க சாமீ..!”

பாதிரியார் பதிவேட்டில் குழந்தையின் பெற்றோர் பெயர், ஊர் போன்றவற்றை எழுதிக்கொண்டு பாட்டியிடம் ஒரு கைநாட்டையும் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்.

தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திற்கு முன்பிருந்தே இங்கு அழகு சிறை என்பது இயங்கி வருகிறது. வேண்டாத பெண் குழந்தைகளை கொல்வதற்கு பதில் இவர்களது தொட்டிலில் சேர்த்துவிட்டால் போதும். அந்தக் குழந்தையை அவர்கள் எடுத்து வளர்த்துக் கொள்வார்கள். அங்குதான் பேத்தியை விட்டு விட்டு வெள்ளையம்மா வந்திருக்கிறாள்.

காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லையே, நான்கு பெண் குழந்தைகளை கொடுத்த இறைவன் அதற்குப் பின் அவர்களுக்கு குழந்தையை கொடுக்கவில்லை. ஆண் குழந்தைக்காக ஏங்கி ஏங்கி அதிகமாக குடித்து 2 வருடத்தில் இறந்தும் போனான் வெள்ளையம்மா மகன்.

மகன் இழந்த சோகத்தை பேத்தி மூலம் மறக்க நினைத்த பாட்டி பேத்தியை தேடி அழகு சிறைக்கு போனாள்.

“என்ன பாட்டி ஒனக்கு விளையாட்ட போச்சா..? நீ நெனச்ச இங்க கொண்டுவந்து விடுவ, அப்புறம் வந்து கேப்ப..! நீ கொளந்தைய வளக்க கேக்கறியா, இல்ல கொல்ல கேக்கறையான்னு யாருக்கு தெரியும். கொழந்தைய மதுரைக்கு அனுப்பியாச்சாச்சு. இனி ஒன்னும் செய்ய முடியாது.”

பாதிரியார் உறுதியாக சொல்லிவிட்டார்.

“அய்யா, என்னோட வம்சம் என் மகனோட போயிட கூடாது. என் பேத்தி மூலம் அது தழைக்கனும்ய்யா. நீங்க தான் சாமி பெரிய மனசு பண்ணனும்.”

ஒரு வாரம் முழுவதும் நாள் விடாமல் தினமும் பாட்டி வந்து கேட்டதில் பாதிரியார் மனம் இறங்கியது. மதுரை முகவரியை தந்தார்.

“ஏம்மா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விட்ட கொழந்தையப் பத்தி இப்ப கேக்கரையேம்மா. அந்த கொழந்த எங்க இருக்கோ..! பெத்தவங்க பேரு ரிஜிஸ்டர்ல இருக்கா..?”

“கொடுத்துருக்கேன்யா..!”

அப்பா, அம்மா பெயரை வைத்து தேடியதில் குழந்தை சென்னையில் இருப்பதாக தெரிந்தது. சென்னை எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாத பாட்டி  பேத்தியை தேடி சென்னைக்கு சென்றது, தேடி அலைந்தது, கூட்டி வந்தது மிகப் பெரிய கதை.

இத்தனை எண்ணவோட்டங்கள் எனக்குள் ஓடி முடிக்கவும். கிராமம் வந்து சேரவும் சரியாக இருந்தது. அந்த பாட்டி, அவரின் பேத்தி, பெயர் தெரியாத அந்த பெண் குழந்தை மூவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கிராமத்துக்குள் நுழைந்தேன். .

கிராமத்தில் நிறைய மாற்றம் இருந்தது. ஓட்டு வீடுகள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாறியிருந்தன. மனிதர்கள் மாறிவிட்டார்களா என்று பார்க்கவேண்டும்.

அவர்களிடமும் மாற்றம் இருந்தது. தப்பி பிழைத்த பெண் குழந்தைகள் நிறைய இருந்தார்கள். வெள்ளையம்மா பற்றிக் கேட்டேன். நல்லவேளையாக பார்த்துவிட்டேன். மிகவும் நொடிந்து போயிருந்தார். வயோதிகம் எல்லா வசீகரத்தையும் பறித்துவிட்டது.

என்னை அவருக்கு நினைவில்லை. நானும் எவ்வளவோ நினைவு படுத்தினேன். அவரின் நினைவுகள் ஒரு எல்லைக்கு மேல் செல்லவில்லை. அவரின் பேத்தியைப் பற்றி கேட்டேன். கல்லூரியில் படிப்பதாக சொன்னார். அவர் பேத்திதான் உலகம் என்றார்.

இப்போது பெண் சிசுக்கொலை குறைந்திருக்கிறதா என்று கேட்டேன். “தம்பி, நீங்க நல்ல நாள்லதான் வந்திருக்கிறீங்க. இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு விடை தெரியும்” என்றார் பாட்டி.

மாலை நேரமும் வந்தது.

கிராமமே ஊர் கோவிலில் ஒன்று கூடியது. சிறிது நேரத்தில் சிறு ஊர்வலமாய் கிளம்பியது. அரிசி, பருப்பு, கருப்பட்டி, மிட்டாய், ஆப்பிள், பட்டுப்பாவாடை, ஆட்டுக்குட்டி, மரக்கன்று, கோழி என்று ஆளாளுக்கு கையில் ஒரு பொருளை வைத்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் சென்று சேர்ந்தது நந்தினி வீட்டிற்கு.
 
நந்தினி என்ற அந்தப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருந்தது. ஊர்வலத்தில் கொண்டு வந்த பொருட்களால் வீடு நிறைந்தது. ஊராரின் அன்பில் திக்குமுக்காடிப் போனார், நந்தினி.

‘இப்படிதான் இரண்டாவதாக ஒரு பெண் பிறந்துவிட்டாலே கிராமத்திற்கே தலைகால் புரிவதில்லை. ஒரே ஆட்டம்தான்’ என்றார் வெள்ளையம்மா.

தொண்டு நிறுவனங்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் தான் இந்த நடைமுறையை கொண்டுவந்துள்ளன. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துவிட்டால் ‘கவலைப் படாதீர்கள் உங்களுக்காக இந்த ஊரே இருக்கிறது’ என்று சொல்வதன் பொருள்தான் இந்த கொண்டாட்டமெல்லாம்.

இது உண்மையாகவே பலன் அளித்திருக்கிறது. இரண்டாவது மூன்றாவது என்று பெண் குழந்தைகள் பிறக்கும்போது கவலைப்பட்டு கொன்றுவிடும் குடும்பத்தாருக்கு அந்த பெண் குழந்தையால் இத்தனை பொருட்கள் வீட்டுக்கு வருவது உளவியல் ரீதியாக மிகப் பெரிய மாரல் சப்போர்டாக இருக்கிறது. இயல்பாகவே அந்த பெண் குழந்தை மீது குடும்பத்தினருக்கு பாசம் வந்துவிடுகிறது.

மீனாவைப்போல் இப்போது செல்வராணி என்ற பெண் அந்த ஊர்வலத்தில் இருந்தார். அவர்தான் தற்போதைய களப்பணியாளர். அவரிடம் பேசினேன். “இப்படி ஒரு கொண்டாட்டத்தை 15 வருடத்திற்கு முன்பு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இன்று தொண்டு நிறுவனங்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் சேர்ந்து இந்த மாற்றத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. எங்களை ஊருக்குள்ளே நுழைய விடாமல் கல்லால் அடித்து விரட்டிய அதே மனிதர்கள்தான் இன்று எங்களால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் சாதனைகளைப் பார்த்து பூரித்துப்போய் கண் கலங்கி நிற்கிறார்கள்.” என்றார் செல்வராணி.

தொடர்ந்து நிகழ்ந்த பல அவமானங்களுக்குப் பிறகு தொண்டு நிறுவனங்கள் இதை சாதித்திருக்கின்றன. கிராமமக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக மறையவில்லை. ஆனால், பெருமளவு குறைந்திருக்கிறது.

கிராம மக்களை மாற்றிவிட்டோம். படித்தவர்களை, நகர மக்களை எப்போது மாற்றப் போகிறோம். ஸ்கேன் பயன்பாட்டுக்கு வந்தபின் பெண் குழந்தைகள் பிறக்கும் விகிதமே குறைந்திருக்கிறது. இந்தியா, சீனா மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் பெண் குழந்தைகளின் பிறப்புவிகிதம் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் கருவிலே பெண் குழந்தையை ஸ்கேன் மூலம் கண்டறிந்து கொன்று விடுவதுதான். இது பணக்காரர்கள் மத்தியில் அதிகமாக பரவியுள்ளது.

கடந்த 60 வருடங்களில் இந்தியா முழுவதும் 5 கோடிப் பெண்கள் இப்படி சிசுக்கொலை மூலமும் பட்டினிப்போட்டும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண் என்ற ஒரு காரணத்துக்காகவே அந்த இனம் இத்தனை வேகமாக அழிக்கப்படுவதும் மிகப் பெரிய இனப்படுகொலைதான். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உடல் தெரிய உடையணியும் உரிமைக்காக பெண்கள் போராடுவதுதான் வேதனையாக இருக்கிறது.

கை துடைக்க நியூஸ் பேப்பர் வேண்டாமே!

கை துடைக்க நியூஸ் பேப்பர் வேண்டாமே!

 
 
செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்’ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள் செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்துகள் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 
 
அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவியப் பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது.
 
3.bp.blogspot.com 8Sqe 8r6dA VhKkcC4WDZI AAAAAAAAGFo ooUarSNnyvw s1600 Vadai 00991 - 2026

எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை. தண்ணீர்ப் பட்டால், பிரச்சனைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜிப் போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணையை வெளியே எடுப்பதற்கு செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். . 
 
காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சிலப் பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். 
 
நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு இவைகள் வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சிசெய்தது ஈயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களும் அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவைகள் கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். 
 
முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் கலக்கப்படுவதில்லை. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்ஸ்க்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தது. தடை செய்யப்பட்டது.

புதுக்கோட்ட அம்புட்டு தூரமாவா இருக்கு..?!

புதுக்கோட்டையில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருப்பது முதியவர்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அங்கு மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் தினசரி வந்து போகிறது. 
 
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16713) இரவு 11.45 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே எக்ஸ்பிரஸ் மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வ.எ.16714) ஆக நள்ளிரவு 12.30 -க்கு புறப்பட்டு காலை 8.20-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 
 
1.bp.blogspot.com oyau lxOV4U Vhbmsw6NsmI AAAAAAAAGHM UGcjDytzFBw s320 Pudukkottai Station - 2026
 
அடுத்து பகல் நேர வண்டியான பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எ.12606) சென்னை எழும்பூரில் மதியம் 3.45 மணிக்கு 4-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 10.11 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே வண்டி (வ.எ.12605) மறு மார்க்கத்தில் காலை 05.05 -க்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.10-க்கு சென்னை சென்று சேருகிறது. 
 
இந்த ரயில்கள் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த ஊர்களில் இருந்து புதுக்கோட்டைக்கு தாரளமாக ரயிலில் வரலாம். 
 
இது போக ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வ.எ.16101) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.40-க்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த வண்டி புதுக்கோட்டைக்கு காலை 06.25-க்கு வருகிறது.  
 
இதே வண்டி மறுமார்க்கத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எ.16102) ஆக இரவு 9.14-க்கு புறப்பட்டு காலை 6.30-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 
 
விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சாலை மார்க்கமாக வந்து விடலாம். 
 
இனி நமது வலைப்பதிவர்களின் வருகைப் பதிவு பட்டியல் வரிசையில் உள்ள ஊர்களுக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே இருக்கும் தூரம், பயண நேரம் ஆகியவற்றைப் பார்ப்போம். 
 
 
2.bp.blogspot.com u FD28rK9 Y VhbnXvD8HBI AAAAAAAAGHU bzBsImImABE s320 utc volvo - 2026
 
அரியலூர் 
தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்
 
ராமநாதபுரம் 
தொலைவு: 132 கி.மீ.  பயண நேரம்: 2 மணி.40 நிமிடம்
 
ஈரோடு
தொலைவு: 202 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 50 நிமிடம்
 
கரூர்
தொலைவு: 138 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்
 
கன்னியாகுமரி 
தொலைவு: 355 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 10 நிமிடம்
 
காஞ்சிபுரம் 
தொலைவு: 341 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்
 
கிருஷ்ணகிரி 
தொலைவு: 304 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 15 நிமிடம்
 
கோயம்புத்தூர் 
தொலைவு: 285 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 00 நிமிடம்
 
சிவகங்கை 
தொலைவு: 92 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 45 நிமிடம்
 
சென்னை 
தொலைவு: 384 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 05 நிமிடம்
 
சேலம் 
தொலைவு: 193 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 45 நிமிடம்
 
தஞ்சாவூர் 
தொலைவு: 61 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 30 நிமிடம்
 
திண்டுக்கல் 
தொலைவு: 114 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 00 நிமிடம்
 
திருநெல்வேலி 
தொலைவு: 272 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்
 
திருச்சிராப்பள்ளி 
தொலைவு: 55 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 10 நிமிடம்
 
திருப்பூர் 
தொலைவு: 225 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்
 
திருவண்ணாமலை 
தொலைவு: 238 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 15 நிமிடம்

திருவள்ளூர்
தொலைவு: 380 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 45 நிமிடம்

திருவாரூர்
தொலைவு: 121 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்
 
தேனி
தொலைவு: 195 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 25 நிமிடம்
 
நாகப்பட்டினம் 
தொலைவு: 147 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 35 நிமிடம்
 
நாமக்கல் 
தொலைவு: 141 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 00 நிமிடம்
 
பாலக்காடு 
தொலைவு: 284 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்
 
புதுச்சேரி 
தொலைவு: 254 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்
 
பெங்களூர் 
தொலைவு: 395 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 10 நிமிடம்
 
பெரம்பலூர் 
தொலைவு: 112 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 10 நிமிடம்
 
மதுரை 
தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்
 
விருதுநகர்
தொலைவு: 163 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 15 நிமிடம்
 
வேலூர் 
தொலைவு: 322 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்
 
 
இங்கே குறிப்பிட்டுள்ள பயண நேரம் கார்களில் வரும் நேரத்தைக் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளது. பொது வாகனங்களில் வரும் போது சாலையின் தன்மை போக்குவரத்து நெரிசலை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எனவே அதற்கேற்றார்ப் போல் திட்டமிட்டு பயணத்தை தொடங்குங்கள்.
 
பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

 

நதிநீர் இணைப்பு பற்றி அப்துல் கலாம் மதுரையில் பேசியது

நதிகளை இணைக்க முடியும் என்று ஒரு சாராரும் இணைக்கவே முடியாதுஎன்று ஒரு சாராரும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நான் இணைக்க முடியும் என்று ஆறு முறை பத்திரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அவற்றை பிறகு பதிவிடுகிறேன். இப்போது டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் நதிநீர் இணைப்பைப் பற்றி மதுரையில் பேசிய பேச்சை காணொளியாக பதிவிடுகிறேன்.

தரங்கம்பாடி: கடற்கரையில் கொண்டாட்டம்

‘பங்களா ஆன் த பீச்’

சரித்திரப் புகழ்பெற்ற தரங்கம்பாடி, ஹனிமூனுக்கும் பெயர் பெற்றது. கி.பி.1680 முதல் 1845 வரை டேனீஷ் கிழக்கிந்தியா கம்பெனியின் தலைமையிடமாக திகழ்ந்த இடம், வரலாற்று சிறப்பு மிக்கது. டேனீஷ் கோட்டை சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். அதன் அருகிலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் இரண்டு தேவாலயங்கள், ஒரு ரெஸ்ட்டாரண்ட், ஒரு கைவினைப் பொருட்கள் விற்கும் இடம் ஆகியவை உள்ளன.

 
1.bp.blogspot.com 0aDfsO0dGIc ViZQDRGh4 I AAAAAAAAGJE sZKARMBbT7o s640 the bungalow on the beach - 2026
 
இங்கு இருந்த டேனிஷ் அரசின் கலெக்டர் பங்களா தற்போது ‘பங்களா ஆன் த பீச்’ என்ற பெயரில் ஹோட்டல்களாக இயங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் கட்டடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த ஹோட்டலில் தங்கி எதிரே மின்னும் கடல் அலைகளைப் பார்ப்பது தனி சுகம். அதிலும் மனதுக்குப் பிடித்த துணையோடு கை கோர்த்தபடி பார்ப்பது பரவசமான அனுபவம்.  
 
2.bp.blogspot.com oCTmZ KcdYc ViZQS4eKRsI AAAAAAAAGJM EpKSe8Hmdl0 s640 beach bungalow view out in the maldives 303073 - 2026
 
மாலை நேரத்தில் இந்தக் கடற்கரையில் உள்ளூர் மக்கள் வந்து செல்வது மனதைக் கவரும் அம்சம். அதிலும் வண்ண வண்ண சேலைகளில் அந்தப் பெண்கள் குழந்தைகளுடன் வருவதும் பார்க்க ஆனந்தம் தரும். இவற்றையெல்லாம் பார்த்தப்படி சமையல் செய்யலாம். இல்லையென்றால் துணையோடு ரசிக்கலாம். ஹனிமூன் ஜோடிக்கு ஏற்ற இடம் இது.
 
எப்படி போவது?
சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் தரங்கம்பாடி உள்ளது.
 
எங்கு தங்குவது?
நீம்ரானா ஹோட்டல் குழுமம் இங்குள்ள ‘பங்களா ஆன் த பீச்’ ஹோட்டலை நடத்தி வருகிறது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.4,450.
 
4.bp.blogspot.com ckPJD9wEBXU ViZQhv1cMBI AAAAAAAAGJU KbiHy06mIRI s640 Tranquebar Michel Figuet 1875 - 2026

 

மருதுபாண்டியர்களின் இறுதிநாள் கோட்டை

சரித்திரத்தின் மிகக் கொடூரமான காலகட்டம் என்று அதை சொல்லலாம். மருதுபாண்டியர்களையும் அவரைச் சார்ந்த 600 பேர்களையும் 214 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு கொன்றது இன்றுதான்.

 
4.bp.blogspot.com 7AC z5uBvXA Vip OjbsU5I AAAAAAAAGKE MocG8Ns8RLE s400 20151023 232848 1 - 2026

மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்ட இடம் இந்தக் கோட்டை. இதைப் பற்றி விரிவான கட்டுரையை ‘ஹாலிடே நியூஸ்’ இதழில் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதினேன். அதை அவர்களின் நினைவு நாளான இன்று வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்காததால் அதை தட்டச்சு செய்து பதிவிட முடியவில்லை. 
 
அப்போதெல்லாம் நான் எழுதும் கட்டுரைகள் சிலவற்றுக்கு புகைப்படம் மட்டுமல்லாமல் வீடியோவும் எடுத்துவிடுவேன். அந்த வீடியோவை கட்டுரையின் இறுதியில் ‘க்யூ.ஆர்.கோடாக’ கொடுத்து, ஸ்மார்ட் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து பார்க்கும் விதமாக செய்துவிடுவோம். இதன் மூலம் மொபைலில் நாங்கள் பார்த்த இடங்களை வாசகர்களும் பார்க்கும் வசதியை செய்து கொடுத்திருந்தோம்.

 

அப்படி இந்த கட்டுரைக்காக நான் எடுத்த வீடியோவை மட்டும் இங்கு கொடுக்கிறேன். மற்றொரு நாளில் கட்டுரையை வெளியிடுகிறேன். இப்போது மருதுபாண்டியர்களை கைது செய்த சங்கரபதிக் கோட்டை பற்றிய வீடியோ.  
 
பின்னணிக் குரல்கள் நானும் எனது மகளும்.  
 
 
 
 
ரெசல்யூசன் மிகக் குறைவாக இருந்தால்தான் மொபைலில் விரைவில் டவுன்லோடாகும் என்று வீடியோ எடிட் செய்பவர் வேறு பார்மேட்டுக்கு மாற்றியதால் வீடியோவின் தரம் சுமாராகத்தான் இருக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். எங்களது குரல்கள் கூட மொபைலில் பதிவு செய்து சேர்த்ததுதான். பாருங்கள் கருத்திடுங்கள். 

100 ரூ. திருடினா திருடன், 1000 கோடி திருடினா தலைவரா? விஜயகாந்த் ஆவேசம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை விட கடலூர் மழை வெள்ள பாதிப்பை முக்கியத்துவம் குறைந்ததாக ஜெயலலிதா கருதியதன் காரணமாகவே அங்கு 28 அமைச்சர்களை பயன்படுத்தி தற்போது கடலூரில் வெறும் 5 அமைச்சர்களை நியமித்துள்ளதாக விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை வெள்ளியங்கிரி பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ஒரு வார கால தியானத்திற்கு பின்னர் சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,  

சென்னை மற்றும் கடலூரில் மழை  வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை விரைவில் பார்வையிட உள்ளோம். சென்னை ஆர்.கே. நகர் இடை தேர்தலில் 28 அமைச்சர்களை பயன்படுத்திய ஜெயலலிதா அதனை விட கடலூர் முக்கியத்துவம் குறைந்ததாக எண்ணிய காரணத்தால் வெறும் 5 அமைச்சர்களை பணியமர்த்தியுள்ளார்.  5 அமைச்சர்களுக்கு பதில் 10 அமைச்சர்களை நியமித்திருக்கலாம். 100 ரூ. 100 ரூ. திருடினா திருடன், 1000 கோடி திருடினா தலைவரா? விஜயகாந்த் ஆவேசம்விஜயகாந்த் ஆவேசமாக கூ றினார்.   

நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது. அரசு அதிகாரிகளுக்கு முதலில் சகிப்பு தன்மை வரவேண்டும்.  மக்கள் நல கூட்டணியில் தேமுதிகவை அழைத்ததற்கு நன்றி. ஈஷா யோக மையத்தில் மேற்கொண்ட ஒரு வார யோக பயிற்சியில் உடல் மற்றும் மன ரீதியாக புத்துனர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுக்கப்பட்ட காணொளி  இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.   

COURTESY & SOURCE :  www.nakkheeran.in