Home Blog Page 6005

விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிகள் நெருக்கடி: யுவராஜ் வெளியிட்ட ஆடியோ

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில், அவரது உயரதிகாரிகளால் தற்கொலைக்கு நிர்பந்தப் படுத்தப்பட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று குற்றம் சாட்டி யுவராஜ் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

இன்று காலை 9 மணி அளவில் வாட்ஸ்-அப் மூலம் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரபரப்பாக சுற்றி வரும் இந்த ஆடியோவில், ஐ.ஜி., எஸ்பி., என அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி இவர் தனது ஆடியோவில் குரல் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த தற்கொலை விசாரணையில் காதல் வழக்கு என்று திசை திருப்பப் படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.

மேலும், டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவுடன் யுவராஜ் பேசும் செல்போன் வழி ஆடியோ பதிவும் இந்த ஆடியோ தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

அவர் வெளியிட்ட முழு ஆடியோ:

 

( போலீஸாரால் தேடப்பட்டு வரும் ஒரு நபரின் ஆடியோ பதிவு இது. இந்த ஆடியோ பதிவில் குற்றம் சாட்டப்படும் நபர்கள் காவல் துறை உயரதிகாரிகள். இதன் நம்பகத்தன்மை எத்தகையது என்பது அனுமானிக்க இயலாதது என்றாலும், ஊடக அறத்தை ஒட்டி குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் குரலும் சமூகத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்று கருதி வெளியிடுகிறோம். இந்த ஆடியோ பதிவு போலீஸாரின் விசாரணைக்கு உதவுமா அல்லது திசை திருப்புமா என்பது காவல் துறைக்கே வெளிச்சம்.)

வாழ்க்கையை வளமாக்கும் நல் வார்த்தைகள்

Who will cry when you die?” – ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…

அதாவது,
“நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…

“நீ பிறந்த போது, நீ அழுதாய்… உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்கள்…

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!

20. “ஆணவம் ஆயுளை குறைக்கும்…”

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி, ஆனந்தமாக வாழுங்கள்..

தூய ஆட்சி கேளுங்கோ

வெள்ளை வேட்டி

வெள்ளச் சட்டை பாருங்கோ – இன்று

கொள்ளக் காரன்

கொண்ட வேடம் தானுங்கோ !

 

கோடி கோடி

கொண்டு போறான் பாருங்கோ – அவன்

ஓடி வந்து

ஓட்டுக் கேப்பான் போடுங்கோ !

 

குடும்ப மாகக்

கூறு போட வாராங்கோ – அந்தக்

கொடுங் கோலன்

குணத்தைக் கொஞ்சம் பாருங்கோ !

 

தானே தமிழின்

தானைத் தலைவன் என்பாங்கோ – நீங்க

தானே எனக்கு

தாயும் தகப்பன் என்பாங்கோ !

  

கள்ளப் பணத்தை

கணக்குப் பார்த்து வைப்பாங்கோ – தங்கள்

பிள்ளை பேரில்

பித்த லாட்டம் செய்வாங்கோ !

 

துட்டு வாங்கி

ஓட்டுப் போட வேணாங்கோ – மனம்

தொட்டு நல்ல

தூய ஆட்சி கேளுங்கோ !

 

உள்ள தெல்லாம்

உரைச்சுப் புட்டேன் கேளுங்கோ – இந்தக்

கள்ள ஒட்டுக்

காரன் கூட்டம் ஓட்டுங்கோ  !

 

– கவிஞர் : மீ.விசுவநாதன்

“சங்கரன்” என்று சொல்லுங்கள் ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

“சங்கரன்” என்று சொல்லுங்கள்

( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

(பக்தர்களின் மனக்குறையை பூர்த்தி செய்த மகான்)

பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .
 
இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி நடக்க மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் ஆராதனை என்பதால் யாரிடமும் எள்ளளவும் சுணக்கம் தென்படவில்லை.

அன்னதானம் செய்யும் போது பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் பச்சடி போன்றவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து , நெல்லிக்கனியை தேடி சேலம் முழுதும் அலைந்தார்கள்

ஆனால் முதல் நாளும் ஜெயந்தி அன்றும் எவ்வளவு தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. மிகவும் மனகிலேசம் அடைந்த ராஜகோபாலன் எல்லாம் பரிபூரணமாக இருக்க இந்த நெல்லிக்கனி விஷயத்தில் குறை ஏற்பட்டுவிட்டதே என்ற எண்னம் மேலோங்கியது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்று அநேகர் சாந்தமடைந்து விட்டனர்

பூஜைகள் ஆரம்பமாகி வேதியர்கள் அமர்ந்து முறைப்படி எல்லாமே நடைபெற்றுக் கொண்டிருந்தது

ஹால் நிறையக் கூட்டம்
 
அந்த நேரத்தில் பெரியவா கிரகத்தின் வாயிலில் ஒரு நபர் வந்து நின்றார் அவரது கையில் ஒரு பை
 
நான் “ராஜகோபால் மாமாவை பார்க்கவேண்டும்” என்றார் வந்தவர்
 
“அவர் பூஜை செய்யும் வேதியர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் இப்போது அவர் இங்கு வர முடியாது” இந்த பதிலைக் கேட்டு வந்தவர் சற்று தயங்கினார்
 
“சரி இந்த பையை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தார்
 
“யார் தந்ததாகச் சொல்வது?”
 
“சங்கரன்” என்று சொல்லுங்கள், பையைக் கொடுத்தவர் விறு விறு என்று வந்தவழியே சென்றுவிட்டார்
 
அவர் கொடுத்த பையில் நிறைய நெல்லிக்கனிகள் இருந்தன
 
அங்கே இருந்தவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

இதில் முக்கியமான விஷயம் அந்த சங்கரன் யார் என்றே இன்றுவரை ராஜகோபாலுக்குத் தெரியாது
 
பக்தர்களின் மனக்குறையை மகான் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று தேவையா?

ஐம்பதில் வந்த கல்யாண ஆசை

ல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்தப் பின்னே துறவறம் என்கின்றன வேதங்கள். ஆனால், சங்கர குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்த சிவவாக்கியர்,   பிறக்கும் போதே”’  சிவ சிவ’ என்ற நாமத்தை சொல்லிக் கொண்டே பிறந்தவர்.   அவருக்கும் இது பொருந்துமா ? 

ஆண், பெண் என்ற இரண்டு உடல்கள் ஒருமனதோடு ஒன்றிணைந்து போகமாகிய இன்பம் பெறுவது உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இது இல்லாமல் யாரும் பிறப்பதில்லை. சிவ வாக்கியரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
 
வாலிப வயதிலே காலத்தின் தத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் உணர்ந்தவர் அவர். என்னதான் உணர்ந்திருந்தாலும் அவரது அடி மனதில் ஒரு மனக்குறை இருந்து வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. இந்த மன குழப்பத்துடனே அவர் காசிக்குச்  சென்றார்.
 
காசி நகரின் தெருவோரத்தில் ஒருவர் செருப்பு தைத்து தொழில் செய்து வந்தார். அவர் காற்றை கட்டுக்குள் கொண்டுவரும் பிரணாயாமம் தெரிந்தவர். அவர் ஒரு சித்தர். தனக்கு ஒரு நல்ல சீடன் வேண்டு மென்று நித்தம், நித்தம் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார். 
 
அவரிடம் சிவ வாக்கியர் வந்து சேர்ந்தார். “ அய்யனே ! என் மனக்குறையை சொல்லவே இங்கு வந்தேன் ” என்றார். வந்திருப்பவர்தான் தனக்கு ஏற்ற சீடர் என்பதை உணர்ந்த அந்த சித்தர், “ அப்பனே ! செருப்பு தைத்த காசு என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துப்போய் என் தங்கை கங்கா தேவியிடம் கொடு. இதோ இந்த பேய் சுரைக்காய் ஒரே கசப்பாக இருக்கிறது. இதன் கசப்பை கழுவி வா ! ”  என்றார்.
 
சிவ வாக்கியருக்கு ஒன்றும் புரியவில்லை. மனக்குறையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்தால், இவரோ காசையும், சுரைக்காயையும் கொடுக்கிறாரே என்று யோசித்தப்படி நதிக்கரைக்கு வந்தார்.
 
சித்தரின் காசை நதியின் மீது வைக்க போனார், அப்போது வளையல் அணிந்த ஒரு பெண்ணின் கை அந்த காசை பெற்றுக் கொண்டு உடனே மறைந்தது. இதெல்லாம் சிவ வாக்கியரை ஆச்சர்யப்பட வைக்க வில்லை. அவர் தன்னிடமிருந்த பேய் சுரைக்காயை கழுவிக் கொண்டு போய் சித்தரிடம் கொடுத்தார்.
 
“ வந்து விட்டாயா  அப்பனே ! நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். கங்கா தேவியிடம் கொடுத்த காசு எனக்கு மறுபடியும் வேண்டும்… இதோ இந்த தோல் பைக்குள்  நீர் இருக்கிறது. இதையே காங்கா தேவியாக நினைத்து காசைக்கேள்..”  என்றார்.
 
சிவ வாக்கியரும் சித்தர் சொன்னபடியே கேட்டார். மறு வினாடியே தோல் பைக்குள் இருந்து வளையல் அணிந்த பெண்ணின் கை வெளியில் வந்தது. அதன் கையில் அதே காசு இருந்தது. சிவ வாக்கியர் அந்த காசை எடுத்து  சித்தரிடம் நீட்டினார்.
 
ஏனோ, அந்த வளைக்கரம் சிவ வாக்கியரின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதை கவனித்த சித்தர், “எனக்கேற்ற மாணவனாக நீபக்குவம் பெற்றுள்ளாய். முக்தி நிலை வரும் வரை நீ இல்லறத்தில் இருக்க வேண்டும். உன்னிடம் இந்த பேய் சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் தருகிறேன். இந்த இரண்டையும் கலந்து உனக்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணே உனக்கு ஏற்றவள். அவளை மணந்து இல்லறம் நடத்து ”என்று கட்டளையிட்டார்.
 
சிவ வாக்கியரின் மனக்குறையே இதுதான். இத்தனைக் காலமும் இல்லாமல் காலம் போன காலத்தில் இப்படியொரு ஆசை ஏற்பட்டதே என்று யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே மருகினார். அப்போது சிவ வாக்கியருக்கு வயது 51. இந்த வயதில் தான் அவருக்கு இல்லற நாட்டம் ஏற்பட்டது.
 
இதை சித்தர் புரிந்து கொண்டு இல்லறத்தில் ஈடுபட அனுமதி அளித்தார். பின்பு பல உபதேசம் செய்தார். சித்தர் பாதம் தொட்டு வணங்கி அங்கிருந்து புறப்பட்டார் சிவ வாக்கியர். வழியில் தவ ஞானமும் பெற்றார். உடலால் பெறுகின்ற இன்பம் சரீர சந்துஷ்டி என்கிற சிற்றின்பம். ஆன்மாவின் நிம்மதியே ஆத்ம சந்துஷ்டி என்கிற பேரின்பம். இதற்கான கல்வி நெறிதான் யோக சாஸ்த்திரம். இவற்றை எல்லாம் பாடல் மூலம் சொல்லிக் கொண்டே சென்றார் சிவ வாக்கியர். சிலர் அவரை சித்தர் என்றனர், சிலரோ அவரை பித்தர் என்றனர்.
 
சிவ வாக்கியர் எதிர்பட்ட பெண்களிடம் எல்லாம்அழாத குறையாக  “இந்த பேய் சுரைக்காயையும், மணலையும் பிசைந்து உணவு படைக்கும் பெண் உங்களில் யாரும் உள்ளனரோ ? ” என்று கேட்டுக் கொண்டே சென்றார்.
 
சிவ வாக்கியர் இளமையான தோற்றமும், அழகும் கொண்டவர். அதனால், பெண்கள் அவர் மீது காதல் வயப்பட்டனர். ஆனாலும், இந்த கேள்வியை கேட்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டனர். இவரை பைத்தியம் என்றனர்.
 
இப்படி பெண்ணை தேடி, தேடி சலித்து போன சிவ வாக்கியர் கடைசியாக குறவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு குடிசையின் வாசலில் ஒரு கன்னிப் பெண் அமர்ந்திருந்தாள். வாசலில் பிளக்கப்பட்ட மூங்கில்கள் கட்டுக் கட்டாக கிடந்தன.
 
“வீட்டில் யாரும் இல்லையாம்மா? ” என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.
 
“தாங்கள் யார் ? எனது பெற்றோர்கள் கூடை முடைய மூங்கிலை வெட்டி வர காட்டுக்கு சென்றிருக்கிறார்கள்”  என்றாள்.
 
“ஒரே தாகமாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா? பெண்ணே ! ”  கேட்ட மாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் அந்த பெண்.
 
 
“பெண்ணே ! நான் பசியில் இருக்கிறேன் !  சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு பசி தாங்கமுடியவில்லை என்னிடம் ஒரு பேய் சுரைக்காயும், கொஞ்சம் மணலும் இருக்கிறது. இதை வைத்து சமைத்து எனக்கு உணவளிக்க முடியுமா? ”
 
மற்ற பெண்களை போல் இந்த பெண் ஓடி ஒளியவில்லை, ஏளனமாக சிரிக்க வில்லை, இடக்கு மடக்காக கேள்விகள் கேட்கவில்லை. செருப்பு தைக்கும் சித்தரிடம் சீடனாக சிவ வாக்கியர் சென்ற போது எப்படி சித்தர் சொன்ன எந்த ஒரு வேலைக்கும் எதிர் கேள்வி கேட்காமல் சிவ வாக்கியர் செய்து முடித்தாரோ… அதே போல் இவரின் கட்டளைக்கு அந்த பெண்ணும் எந்த கேள்வியும் கேட்க வில்லை. பக்குவப்பட்ட அந்த கன்னிப்பெண் பேய் சுரைக்காயையும், மணலையும் பிசைந்து, குறையேதும் மில்லாத உணவு சமைத்து சாப்பிட அழைத்தாள்.

https%3A 1.bp.blogspot.com cPVqEkyQBNE VGn8CaViEKI AAAAAAAACdA 3yxn w1h0B0 s1600 sp%2B %2B02%2B %2Blow - 2026

சிவ வாக்கியருக்கு ஆச்சர்யம் !   உணவின் சுவை பிரமாதமாக இருந்தது. குருநாதர் அடையாளம் காட்டியப் பெண் இவள்தான் என்ற முடிவுக்கு வந்தார்.

 
சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வந்தனர். வீட்டில் சிவ வாக்கியர் இருப்பதைக் கண்டு திகைத்தனர். அந்தப் பெண் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறினாள். பேய் சுரைக்காயையும், மணலையும் உணவாக சமைக்கப்பட்டதை கேள்விப்பட்டு அவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவரின் பெற்றோர்கள் வந்தனர்.
 
“ அய்யா, நீங்கள் இல்லாதபோது உங்கள் வீட்டுக்கு வந்தேன். உங்கள் பெண் எனக்கு அற்புதமான உணவு சமைத்து பரிமாறினாள். எதிர்த்துப் பேசாத  ஒரு பொருமையான பெண்ணை தவம் செய்வதற்கு துணையாக இதுநாள் வரை தேடி வந்தேன் . கிடைக்க வில்லை. மிக நல்ல குணநலன்களும் பண்புகளும் கொண்ட உங்கள் பெண்ணை நானே மணந்து கொள்ள விரும்புகிறேன்.” சிவ வாக்கியர் கூறியதும், பெற்றோர்கள் திகைத்துப் போயினர்.
 
அவர்களின் திகைப்பைப் பார்த்து “ஏன் ? உங்கள் பெண்ணை மணந்து கொள்ள எனக்கு தகுதி இல்லையா? ” என்று கேட்டார்.
 
“சுவாமி, தாங்கள் எங்கள் இடத்திற்கு வந்ததே நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். எங்கள் குலவழக்கப் படி திருமணத்திற்கு பிறகு தாங்கள் எங்கள் இல்லத்தில் தான் தங்க வேண்டும். அனைத்தும் அறிந்த தாங்களை எங்களுடன் வைத்துக் கொள்ள சிறிது தயக்கம்! அதுதான்…!”  என்றனர்.
 
சிவ வாக்கியர் மறுப்பெதுவும் கூறவில்லை.  குறவர்களின் வழக்கத்தை ஏற்றுக் கொண்டார். அவர்கள் முறைப்படி ஒரு வெண்கலத்தை தட்டி ஓசை எழுப்பி திருமணத்தை அங்கேயே நடத்தினார்கள்.
 
காசி சித்தரின் கட்டளைப் படி சிவ வாக்கியர் பெண்ணின் வீட்டிலேயே தங்கினார். அந்தக் குறப்பெண்ணுடன் இல்லறம் மேற்கொண்டார். என்னதான் மனக்குறை இருந்தது என்று இல்லறத்தை அவர் மேற் கொண்டாலும் ஆசைகளற்ற நிலையிலேயே இருந்தார்.
 
அவர்களின் இல்லறக் கடமைகளில் ஒன்றான மூங்கில் வெட்டி முறம் செய்வததற்காக தினமும் காட்டுக்கு போய்  மூங்கில்களை வெட்டி வந்தார்.
 
சித்தர்கள் ஞான நிரை எய்தும் போது இந்த பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் திரை அகன்று விலகி விடுகிறது. மனதின் அகக்கண் திறக்கும் போது புறக்கண்ணுக்கு புலணாகாதெதல்லாம் புலப்படுகிறது. பிற்காலத்தில் பொய்யான ஆச்சாரங்களை எதிர்த்து தன் கருத்துக்களை பார பட்­சம்மின்றி கூறினார். உனக்குள் கடவுள் இருக்கிறார். வெளியே தேடி அலையாதே என்று பட்டவர்த்தனமாக பாடினார் சிவ வாக்கியர்.

இப்படியாக ஒரு பக்கம் இல்லறம், மறு பக்கம் ஞானம் என்று இரட்டை குதிரையில் பயணித்தார் சிவ வாக்கியார்.

 
மறுநாள் காலை காட்டிற்குள் சென்ற சிவவாக்கியர் அங்கு பருத்து உயரமாக வளர்ந்திருந்த மூங்கிலை வெட்டினார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. 

மூங்கில் வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிப் பொடியாக சின்ன சின்னதாக தங்கத்துகள் கொட்டிக் கொண்டே இருந்தது. அதனைக் கண்டு சிவ வாக்கியர் திகைத்து போனார்.

இறைவா இது என்ன சோதனை? பற்றற்ற எனக்கு தங்கத்தை காட்டி சோதிக்கிறாயா ? இறைவனே ? நான் உன்னிடம்முக்தி மட்டும் தானே கேட்டேன். புத்தியை பேதலிக்க வைக்கும் இந்த யுக்தி எனக்கு தேவைதானா? சித்தி தரும் சிவனே உன்னால் முடியா விட்டால் பேசாமல் இருக்க வேண்டியதானே என்னை ஏன் பயம் கொள்ள வைக்கிறாய்? என்றபடி அங்கிருந்து வேகமாக ஓடினார்.
 
அப்போது அந்த வழியாக மூங்கில் காட்டுக்குள் வந்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் தலை தெறிக்க ஓடி வந்த சிவ வாக்கியரை நிறுத்தி “சுவாமி எதற்காகஇப்படி பயந்து ஓடுகிறீர்கள்?” என்று கேட்டனர்.
 
“நான் ஒரு மூங்கிலை வெட்டினேன். அதற்குள் இருந்து ஆட்கொல்லி பூதம் வெளிவந்தது. அதைப் பார்த்து தான் பயந்து ஓடி வந்தேன்” என்று சிவவாக்கியர் தங்கமாக குவிந்த கிடந்த மூங்கிலை காட்டினார்.
 
தங்கத்தை பார்த்து பரவசப்பட்டுப் போன அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். தங்கத்தின் அருமை தெரியாத பைத்தியக்காரன். இந்த தங்கத்தை வைத்து ராஜ வாழ்க்கை வாழலாமே என்று கூறிய அந்த இளைஞர்கள் கொட்டிக் கிடந்த தங்கத்தை மூட்டையாகக் கட்டினார்கள்.
 
பொழுதும் போனது… 

இரவும் வந்தது… 

பசி அனைவரின் காதை அடைத்தது. இனி சாப்பிடாமல் தங்க மூட்டைகளை சுமந்து போக முடியாது என்ற நிலை. இளைஞர்கள் பக்கத்து ஊரில் உணவு வாங்கி வருவதென நினைத்தனர். இருவர் உணவு வாங்கச் சென்றனர். இருவர் தங்கத்துக்கு பாதுகாப்பாக காவல் இருந்தனர்.

 
உணவு வாங்கி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த இருவருக்கும் ஒரு கொடூர எண்ணம் தோன்றியது. அதன்படி அவர்கள் இருவருமே மற்ற இருவர்களை உணவில் விஷம் வைத்து கொன்று விட்டு, முழு தங்கத்தையும் தாங்களே பங்கிட்டு கொள்வதாகத் தீர்மானித்தனர். அதற்காக வாங்கிச் செல்லும் உணவில் விஷத்தைக் கலந்தனர்.
 
அவர்கள் கொண்டு வந்த உணவை காத்துக் கொண்டிருந்த இருவரிடமும் கொடுத்தனர். சாப்பிடுவதற்கு முன் “எங்களுக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. நீங்கள் அந்த கிணற்றில் நீர் இருக்கிறதா?”  என்று பாருங்கள் என்றனர்.
 
உணவு கொண்டு வந்தவர்கள் கிணற்றின் மேல் நின்று பார்த்தனர். தங்கத்துக்கு காவல் இருந்த இரண்டு பேரும் அவர்களை பின்னால் இருந்து கிணற்றுக்குள் தள்ளி விட்டனர். சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்த இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.
 
அதன் பிறகு தள்ளிவிட்ட இருவரும் விஷம் கலந்த உணவை உண்டனர். சிறிது நேரத்தில் அவர்களும் இறந்தனர்.
 
காலையில் மூங்கில் வெட்ட வந்தார் சிவவாக்கியர். நான்கு இளைஞர்களும் இறந்து கிடப்பதை பார்த்த அவர் ‘அட!அந்த ஆட்கொல்லி அதற்குள் நான்கு பேரையும் அநியாயமாகக் கொன்று போட்டு விட்டதே!’ என்று மனம் வருந்தி, அங்கிருந்து சென்றுவிட்டார். சிவவாக்கியர் முற்றிலும் ஆசையை துறந்து ஞானியாகவே இறுதிவரை இறந்தார்.
 
சித்தர்களுக்கு மற்றொரு சித்தரின் தவ வலிமை நன்றாக தெரியும். இப்படித்தான் கொங்கணவச் சித்தர் ஒருமுறை வான் வழியே போய்க் கொண்டிருந்தார். கீழே நந்தவனத்தில் சிவவாக்கியர் உணவுக்காக கீரையைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிவவாக்கியரின் தவ ஒளி வான்வெளி எங்கும் நிறைந்திருந்தது. அந்த நந்தவனத்துக்குள் இறங்கினார். இரண்டு சித்தர்களும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
 
சிவவாக்கியரின் தவவலிமையை நன்கறிந்தவர் கொங்கணவச் சித்தர். அதன்பின் அடிக்கடி வந்து சிவவாக்கியரை பார்த்துசென்றார். இப்படி அவர் வரும் போதெல்லாம் சிவவாக்கியர் சாதாரண குறவர் இனத்தை சேர்ந்தவரைப் போல் எப்போது பார்த்தாலும் மூங்கிலைப் பிளப்பதும், முறம், கூடைகள் செய்வதமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். சதா சர்வ காலமும் வேலை செய்து கொண்டிருப்பவருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

https%3A 4.bp.blogspot.com DpJIfRYVzDU VGnrwv9DojI AAAAAAAACcE uQ0pRB5p 5s s1600 sp%2B %2B01%2B %2Blow - 2026

ஒரு முறை சிவவாக்கியரைத் தேடி கொங்கணவச் சித்தர் அவரது வீட்டுக்கே வந்து விட்டார். அந்த நேரம் பார்த்து வீட்டில் சிவ வாக்கியர் இல்லை. அவரது இளம் மனைவி மட்டுமே இருந்தார். வீட்டினுள் வந்த கொங்கணவர், சிவவாக்கியர் மனைவியிடம் வீட்டில் உபயோகப்படுத்தப் படாமல் வீணாய் கிடக்கும் இரும்புத் துண்டுகளைக் கொண்டு வா என்றார்.

வீடு முழுவதும் தேடி, மூலை முடுக்கில் இருந்த இரும்புத் துண்டுகளையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தாள். அவற்றை எல்லாம் கொங்கணவர் தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்து  போனார்.
 
மாலையில் காட்டுக்குள் மூங்கில் வெட்டப்போன சிவவாக்கியர் வீடு திரும்பினார். கணவரிடம்  மனைவி கொங்கணவச் சித்தர் வந்து போனதையும், இரும்புத் துண்டுகளை எல்லாம் தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டுப் போனதையும் சொல்லி விட்டு தங்கமாக மாறிய இரும்புத் துண்டுகளை கணவர் முன் வந்து கொட்டினார்.
 
சிவவாக்கியர் தங்கத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார். ‘இது என்ன சோதனை? எல்லாம் அறிந்த கொங்கணவர் தன்னைச் சோதிக்கிறாரா? அல்லது அதீத பாசத்தால் இப்படிச் செய்தாரா?’ என்று குழம்பிப் போனார்.
 
உடனே மனைவியை அழைத்தார் சிவவாக்கியார். “இந்த ஆட்கொல்லி அசுரனை ஒரு விநாடி கூட வீட்டுக்குள் வைத்திருக்கக் சுடாது. உடனே கொண்டு போய் பாழும் கிணற்றில் போட்டு விட்டு வா!” என்றார்.
 
அவர் மனைவியும் எந்தப் பேச்சும் மறுத்துப் பேசாமல் தங்கத்தைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டார். பின்னொரு நாளில் நன்பகல் சூரியன் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பாறையின் மீது சிவவாக்கியர் சிறுநீர் கழித்து விட்டு தன் மனைவியை அழைத்தார். இந்த பாறையின் மீது தண்ணீரை ஊற்று என்றார்.
 
சொன்ன படியே அவர் மனைவியும் பாறையின் மீது தண்ணீரை ஊற்றினார். ஊற்றிய உடனே குபீர் என்று புகை வந்தது. புகை மறைந்த பின் பாறை முழுவதும் தங்கமாக மாறி தகதக வென ஜொலித்தது. சிவவாக்கியரின் சிறுநீரில் ரசவாத தன்மை இருப்பதால் இந்த அற்புதம் நிகழ்ந்தது.
 
சிவவாக்கியர் தனது மனைவியை அழைத்தார். தங்கமாக மாறியிருந்த பாறையை காண்பித்து “கொங்கணவச் சித்தர் சில துண்டுகளை தானே தங்கமாக் கொடுத்தார். இப்போது பார் இந்த பாறை முழுவதும் தங்கமாக இருக்கிறது. உனக்கு வேண்டியதை வெட்டி எடுத்துக் கொள்!” என்றார்.
 
“சுவாமி! தங்களுக்கு மனைவியான பாக்கியத்தை பெற்ற பின் உங்களை விட எனக்கு தங்கம் ஒன்றும் உயர்ந்தது இல்லை. எனக்கும் இந்த தங்கம் ஆட்கொல்லி பூதம் தான்!” என்று கூறி அவரும் பற்றற்ற நிலைக்கு வந்து விட்டார்.
 
ஆனால், சிவவாக்கியரின் சீடர்களுக்கு மட்டும் எப்பொழுதும் ரசவாத வித்தை மீதே கவனம் இருந்தது.  அந்த வித்தையைக் எப்போது குரு கற்றுத் தருவார் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருந்தனர். சிறந்த தவ வலிமையும், யோக நெறியும் உடைய சித்தர்களுக்குத்தான் ரசவாதம் சாத்தியமாகிறது.
 
தங்கத்தின் மீது பற்று இல்லாதவருக்கே தங்கத்தை உருவாக்கும் வித்தை கைக்கூடும். சித்தர்கள் பலரும் ரசவாத வித்தையில் கை தேர்ந்தவர்கள். அவற்றைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு காணிக்கையாக்குகிறார்கள்.
 

“சித்தர்கள்  சாதாரணமாக தென்பட மாட்டார்கள். பற்றற்ற பார்வையிலே சித்தர்கள் தெரிவார்கள். குறத்தி மகளாக இருந்தாலும் தங்கத்தை ஆட்கொல்லி என்று வெறுத்த ஞானி என்பதால்தான்  எனது மனைவியின் கண்களுக்கு கொங்கணவர் தெரிவது சாத்தியமானது!” என்று சீடர்களுக்கு விளக்கம் கொடுத்தார் சிவவாக்கியர்.

 
பற்றற்று போவதுதான் ஆன்மிகத்திற்கான முதற்படி என்பதை சீடர்களும் உணர்ந்தனர்.
 
 

 

பெண் டி.எஸ்.பி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் தலைமறைவு

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவன் தலைமறைவாக உள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவிடம் அலைபேசியில் பேசிய திருக்கோஷ்டியூர் கோயில் ஊழியர் விஜயராகவன், சி.பி.சி.ஐ.டி., விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளார் .

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு தரிசனத்திற்காக அடிக்கடி டி.எஸ்.பி. சென்றுள்ளார். அப்போது கோயிலில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவனிடம், 29, நட்பு ஏற்பட்டுள்ளது. அவர் திருப்புத்துாரில் ‘பிராக்டிக்கல் டிரெய்னிங்’ பணியில் அப்போது இருந்துள்ளார். திருச்செங்கோடு சென்ற பின்னும் அலைபேசியில் அடிக்கடி விஷ்ணுபிரியாவிடம் பேசியதாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களாக விஜயராகவன் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. நான்கு நாட்களாக கோயில் பணிக்கும் செல்லவில்லை.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கூறியதாவது:
டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவுடன் அடிக்கடி விஜயராகவன் பேசியது தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் பற்றி விசாரித்தோம். கடந்த 4 நாளுக்கு முன் அவர் காணாமல் போயிருப்பது தெரிந்தது. விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி., போலீசார் அழைத்து சென்றிருக்கலாம். தற்போது அவரின் அலைபேசியும் ‘சுவிட்ச் ஆப்’ -ல் உள்ளது. போலீசார் தேடி வருவது தெரிந்து தலைமறைவு ஆனாரா.? என தெரியவில்லை. அவரது குடும்பத்தாரிடம் கேட்ட போது, ‘நான்கு நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் காணவில்லை. எங்களிடமும் தகவல் சொல்லவில்லை’ என தெரிவித்து விட்டனர் என்றனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

புழல் சிறையில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான நண்பன்: மதக்கண்ணோட்டத்தில் அணுகுவதா?

அன்புடையீர்,
 
நேற்று (25.09.2015) அன்று புழல் சிறையில் நடந்த கலவரம் பற்றி அனைவருக்கும் வழக்கமானது போல ஒரு சாதரணமான செய்தியாக தொலைகாட்சியிலும் செய்திதாள்களிலும் கண்டிருப்பீர்கள். அங்கு சிறையில் கைதிகளின் போராட்டம் கலவரமாக மாறி அங்கிருந்த காவலர் திரு.முத்துமணி(27) அவர்கள் தாக்கபட்டார். இதுதான் மேலோட்டமான செய்தி. எல்லோரும் வழக்கமான செய்தியாக பார்த்து அவர்களது வேலையை பார்க்க சென்றாகிவிட்டது.. சிறையில் என்ன நடந்த்து, யார் இந்த முத்துமணி என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..
 
நேற்று வழக்கம் போல ஜெயிலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள போலிஸ் பக்ருத்தீன் மற்றும் பன்னா இஸ்மாயில் தலைமையிலான வெறிபிடித்த மிருகங்கள் அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்தள்ளது. இதில்தான் அவரை காப்பாற்ற முயன்ற காவலர் முத்துமணி யை கொடூரமான முறையில் தாக்கியள்ளது அந்த மிருக கும்பல். தற்போது அவரை சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இன்னும் அபாய கட்டத்தில்தான் உள்ளார்..
 
யார் இந்த முத்துமணி ..?
 
முத்துமணி எனது கல்லூரி நண்பன் .. நானும் அவனும் மதுரை தியாகராஜஆர் கல்லூரியில் பயின்றோம். கல்லூரியில் படிக்கும் போது NCC யில் தீவிரமாயிருந்தான். Army அல்லது police ஆகவேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் இருந்தான்.. பின்னர் police ஆக தேர்வு செய்யபட்டு புழல் ஜெயிலில் வார்டராக பணியாற்றி வந்தான்.
25.09.2015 :
 
அன்றைய நாள், அந்த காட்டுமிராண்டி கும்பல் ஜெயிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது . அந்நேரத்தில் வழக்கமான கண்காணிப்பு பணிக்கு வந்த அவரை திட்டமிட்டபடி கொலைசெய்ய சுற்றி வளைத்து தாக்கியுள்ளது. அப்பொழுது அவரைக் காப்பாற்ற வந்த எனது நண்பன் முத்துமணியை பிடித்து சிறையில் உள்ள அறையில் பூட்டி கொடூரமாக தாக்கியுள்ளது அந்த 20 க்கும் மேற்பட்ட மிருகங்களை உள்ளடக்கிய கும்பல். கதவை பூட்டியதால் மற்ற காவலர்களால் உள்ளே நுழையமுடியவில்லை . எனவே அவன் ஒருவனை 20 மேற்பட்ட ஆண்மையில்லாத அந்த கும்பல் தனி ஒருவனிடம் தங்களுடைய வீரத்தை காட்டியுள்ளது. பாவம் அவன், தனது உயரதிகாரியை காக்க முற்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளான்.
 
எனக்கு கோபம் என்னவென்றால், அந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சிறைச்சாலைக்கு வெளியே அறிவில்லாத ஒரு கும்பல் அந்த தீவிரவாத பேடிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. மேலும், தேசியலீக் கட்சி-யானது சிறையில் அந்த கைதிகளை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அந்த இஸ்லாமியர்களை காக்க வேண்டும் என்று பிரச்சினையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கொண்டு சென்றுள்ளது.
 
இந்த மனித உரிமைகள் அமைப்புகள் என்று திரியும் சிலருக்கு கண் பார்வை பறிபோய்விட்டதாக எண்ணுகிறேன்..
மீடியாக்கள் நடிகைகளின் தொப்புள் அளவுகளை அளப்பது மட்டுமே வேலையாக கொண்டிருக்கிறது – விபச்சார மீடியாக்கள் .
சமூக ஆர்வலர்கள் என்று அலையும் சிலர் அந்த தீவிரவாத முரட்டு கும்பல்களுக்கு ஆதரவாகதான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை .
 
நண்பர்களே, தாக்கப்ப் பட்டது யாரோ இல்லை.. நமது மதுரை தியாராஜர் கல்லாரியில் 2007 – 2010 வரைக்கும் BBA பயின்ற நமது தோழன்.
 
மதங்களை மறந்து மனிதநேயத்துடன் இதனை அணுகுங்கள்….
 
– செல்வகணேசன் சந்திரன்

பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமியின் ஹிந்து தர்ம சேவைகளும் சாதனைகளும்!

ஆர்ஷ வித்யா பீடத்தின் ஸ்தாபகரும் வேதாந்த ஆச்சாரியருமான பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் கடந்த புதன் கிழமை செப்டம்பர் 23ம் தேதி (2015) இரவு தன்னுடைய 85வது வயதில் முக்தி அடைந்தார். 
 
Pujya Swami Dayananda Saraswati
 
 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குடி கிராமத்தில் கோபால ஐயருக்கும் வாலாம்பாள் அம்மாளுக்கும் மூத்த மகனாக 1930ம் வருடம் ஆகஸ்டு 15ம் தேதியன்று பிறந்தார். நடராஜன் என்று பெற்றோர்களால் நாமகரணம் சூட்டப்பட்டு, குடவாசல் மாவட்ட மன்றப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தன்னுடைய 8வது வயதில் தன் தந்தையாரை இழந்தபோதும், தன்னுடைய கல்வியை  முடித்த நடராஜன், டி.கே.ஜகன்னாதாச்சார்யா அவர்கள் நடத்தி வந்த ”தார்மீக ஹிந்து” என்கிற பத்திரிகையில் நிருபராகவும் கட்டுரையாளராகவும் சேர்ந்தார். பின்னர் வோல்கார்ட் பிரதர்ஸ்நிறுவனத்திலும், அதைத் தொடர்ந்து இந்திய விமானப் படையிலும் சில மாதங்கள் பணிபுரிந்தார். &nbsp
 
வேதாந்தத்தின் பால் ஈடுபாடு கொண்டிருந்த நடராஜன், ஸ்வாமி சின்மயானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்டு மேலும் ஈடுபாடு கொண்டார்.1950களில் ஸ்வாமி சின்மயானந்தரின் பால் மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டு, ஸ்வாமிஜியின் சின்மயா மிஷன் நிறுவனத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். முதல் ஆண்டிலேயே அந்நிறுவனத்தின் செயலாளராகப் பதவி பெற்றார். ஆங்கிலப் பேராசிரியர் பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் அவர்களிடம் சம்ஸ்க்ருதம் கற்றுத் தேர்ந்தார். 1955ல் ஸ்வாமி சின்மயனந்தருடன் உத்தர காசி சென்று அங்கே பகவத் கீதை நூல் தயாரிப்பில் அவருக்குப் பெரிதும் உதவினார். அவ்வமயம் ஸ்வாமி சின்மயானந்தரின் குரு ஸ்வாமி தபோவனம் மஹராஜ் அவர்களின் ஆசிகளையும் அனுக்கிரகத்தையும் பெற்றார். 1956ல் ஸ்வாமி சின்மயானந்தரின் ஆலோசனைப்படி, சின்மயா மிஷனின் “தியாகி” பத்திரிகையின் ஆசிரியராகச் சென்னையிலும், பின்னர் பெங்களூருவிலும் பணிபுரிந்தார். பெங்களூருவில் இருந்த சமயம் சாம்ராஜ்பேட்டை சம்ஸ்க்ருத கல்லூரியில் பட்டம் பெற்றார். 
 
Swami Chinmayananda
 
 
1961ல் ஸ்வாமி சின்மயானந்தரின் அனுமதியுடன் விஜயவாடா அருகில் உள்ள குடிவடா என்கிற ஊரில் ஸ்வாமி பிரணவானந்தா அவர்களிடம் வேதாந்தமும் சங்கரபாஷ்யமும் கற்றுத் தேர்ந்தார். 1962ல் ஸ்வாமி சின்மயானந்தா நடராஜனுக்கு சன்யாச தீக்ஷை அளித்து தயானந்த சரஸ்வதி என்கிற பெயரையும் அளித்தார். 
 
>1963ல் மும்பையில் சின்மயா மிஷனுக்குச் சொந்தமான சாந்தீபனி சாதனாலயா சென்று ’தபோவன் பிரசாத்’ என்கிற பத்திரிகையை நடத்தி வந்தார். அப்போது, சாதனாலயாவில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு பகவத் கீதையும் உபநிடதங்களும் கற்றுத்தந்தார். பிறகு கல்விப்பயணமாக ரிஷிகேஷ் சென்று கைலாஷ் ஆஸ்ரமத்தில் ஸ்வாமி தாரானந்த கிரி அவர்களிடம் பிரம்ம சூத்ரங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1967ல் ஸ்வாமி சின்மயானந்தாவின் உடல் நலம் குன்றத் தொடங்கியதால், அவருக்குப் பதிலாக ஸ்வாமி தயானந்த சரஸ்வதி சொற்பொழிவுப் பயணங்கள் மேற்கொண்டார். சாந்தீபனி சாதனாலயாவில் வேதாந்தக் கல்விக்கான குருகுல திட்டத்தைத் தயாரித்தார். அதே போல 1979ல் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள சாந்தீபனி சாதனாலயா மாணவர்களுக்காக மூன்று ஆண்டு குருகுல கல்வித்திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார். 1982ல் இந்தியா திரும்பிய பின்னர் தன்னுடைய சொற்பொழிவுப் பயணங்களைத் தொடர்ந்தார். பிறகு 1986ல் பென்சில்வேனியா சேய்லர்ஸ்பர்கில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை ஸ்தாபித்தார். அங்கே மூன்று ஆண்டுகள் வேதாந்தக் கல்வித்திட்டத்தையும் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 1990ல் கோயமுத்தூர் மாவட்டம் ஆனைகட்டியிலும் ஆர்ஷ வித்யா குருகுலத்தை ஸ்தாபித்தார். இதனிடையே அவர் 1960களில் ரிஷிகேஷில் ஸ்தாபித்த ஸ்வாமி தயானந்தா ஆஸ்ரமம் வேகமாக வளர்ந்து இன்று ஆர்ஷ வித்யா குருகுலங்களின் தலைமைப் பீடமாக விளங்குகின்றது. 
 
Arsha Vidya Gurukulam
 
 2001ம் வருடம் ஜூலை மாதம் ஸ்வாமிஜியின் வழிகாட்டுதலிலும் ஆலோசனையின் பேரிலும்,நாக்பூரில்  டாக்டர் ஸ்ரீகாந்த் ஜிச்கார் நாக்பூரில் ஆர்ஷ விஞ்ஞான குருகுலத்தை ஆரம்பித்தார். ஸ்வாமிஜியின் சிஷ்யர்களில் ஒருவரான ஸ்வாமினி பிரம்மபிரகாசானந்தா இந்த குருகுலத்தின் தலைமை ஆச்சாரியராக இருந்து வருகிறார். வேதாந்த உபநிடதங்களையும், பகவத் கீதையையும், பிரம்ம சூத்திரங்களையும் ஏராளமான மாணாக்கர்களுக்கும் சீடர்களுக்கும் உலகெங்கும் கற்றுக்கொடுத்து, இன்று அவருடைய பிரதான சீடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆச்சாரியர்களாக உலகெங்கும் சென்று வேதாந்தக் கல்வி பயின்று வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆர்ஷ வித்யா குருகுலங்களில் யோகா, ஆயுர்வேதம், இந்திய பாரம்பரிய இசை (ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை) ஜோதிடம் ஆகியவற்றைக் கற்றுத் தருவதற்கான முகாம்களும் நடத்தப்படுகின்றன. 
 
இவ்வாறு ஹிந்து ஆன்மீகக் கலாச்சாரப் பெருமையை உலகெங்கும் பரப்பி பல்வேறு நாடுகளிலிருந்து மக்களை ஹிந்து தர்மத்தின்பால் ஈர்த்தவரான பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சாதனையானது ஒவ்வொரு ஹிந்துவும் பெருமையுடனும் நன்றியுடனும் போற்ற வேண்டியதாகும். போலி மதச்சார்பின்மை கொடிகட்டிப் பறக்கும் காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஹிந்துவும் தான் ஹிந்துவாகப் பிறந்தததைப் பெருமையாக நினைக்குமாறு ஹிந்து தர்மத்தை மக்களிடையே கொண்டு சென்ற பூஜ்ய ஸ்வாமிஜியின் இழப்பு ஹிந்து தர்மத்துக்கும், ஹிந்து சமூகத்துக்கும் பேரிழப்பாகும். இறைவனடி எய்திய பூஜ்ய ஸ்வாமிஜிக்கு நமஸ்கரித்து அஞ்சலி செலுத்துகின்ற இந்நேரத்தில், அவருடைய சாதனைகளையும் சேவைகளையும் நினைவு கூர்ந்து, அவர் காட்டிய வழியில் பயணித்து ஹிந்து தர்மத்தை நிலைநாட்டுவோம் என்று பிரதிக்ஞை செய்துகொள்வது நம் அனைவருடைய கடமையாகும். 
 
பூஜ்ய ஸ்வாமிஜியின் குறிப்பிடத்தக்க பணிகள்
 
ஹிந்து தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் பூஜ்ய ஸ்வாமிஜி செய்த பணிகள் ஏராளம். அவற்றில் குறிப்பிடத்தக்க பணிகளை நினைவுகூர்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 
 
 ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா
 
 
Hindu Dharma Acharya Saba
 
 இந்தியாவில் உள்ள அனைத்துப் பாரம்பரிய மடங்களையும், பீடங்களையும், அனைத்து விதமான சம்பிரதாயங்களையும் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் விதமாக ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார் பூஜ்ய ஸ்வாமிஜி. அதைத் தோற்றுவிப்பதற்கு முன்பாக இந்தியா முழுவதும் பயணம் செய்து ஒவ்வொரு மடாதிபதியையும், பீடாதிபதியையும், அதீனகர்த்தர்களையும், மஹாமண்டலேஷ்வர்களையும், பலதரப்பட்ட சம்பிரதாயத் தலைவர்களையும் நேரில் சந்தித்து, ஹிந்து தர்மத்தின் பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, இந்திய ஆன்மீக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்துச் சம்பிரதாயங்களையும் இணைக்கும் விதமாக 2004ம் ஆண்டு “ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா” என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தி, ஹிந்து தர்மப் பாதுகாப்புக்குத் தேவையான விஷயங்களை விவாதித்து ஆலோசனைகள் செய்து, தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியும், பொது மக்களிடையே அவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் வந்தார் பூஜ்ய ஸ்வாமிஜி. இது ஒரு மகத்தான சாதனையாகும். 
 
மதநல்லிணக்கப் பேச்சுவார்த்தைகள்
 
 இந்தியா பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இங்கே வாக்கு வங்கி மற்றும் போலி மதச்சார்பின்மை அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளினாலும், தங்கள் மதங்களைப் பரப்பியும் மதமாற்றத்திலும் ஈடுபடும் அன்னிய சக்திகளினாலும் பொதுமக்களிடையே நிலவி வரும் அமைதி பெரிதும் பாதிக்கப்பட்டு, ஆங்காங்கே வன்முறைகளும் பயங்கரவாதச் சம்பவங்களும் நடைபெறுவது பெருகி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில், மாற்று மதத் தலைமை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அம்மதத் தலைவர்களைச் சந்தித்து, மத நல்லிணக்கப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு, ஹிந்து தர்மத்தின் நலன் காக்கும் விதமாகச் செயல்பட்டவர் பூஜ்ய ஸ்வாமிஜி.
 
ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும்; ஒரு மதம் மற்ற மதங்களைத் தரக்குறைவாகவோ அவமானப்படுத்தும் விதமாகவோ பேசக்கூடாது; மற்ற மதங்களை விடத் தம் மதம் தான் சிறந்தது என்று தற்பெருமை பேசக்கூடாது; மற்ற மதத்தவரைத் தம் மதத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது; என்பன போன்ற மத நல்லிணக்கக் கருத்துக்களை ஒவ்வொரு மத நல்லிணக்கக் கூட்டங்களிலும் வலியுறுத்தினார். இதன் உச்சக்கட்டமாக 10 டிசம்பர் 2008ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தீர்மான மாநாட்டின் 60வது ஆண்டு விழாவில், “ஒவ்வொரு மதமும் மற்ற மதத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும்; மற்ற மதங்களைக் அவமானப் படுத்தக்கூடாது; மற்ற மதங்களின் சின்னங்களை அவமதிக்கக் கூடாது; தான் பிறந்த மதத்திலேயே தொடர்வதற்கு ஒரு மனிதனுக்கு உள்ள உரிமையை மதித்து அங்கீகரிக்க வேண்டும்; மற்ற மதத்தவரைக் கட்டாயப்படுத்தியோ தூண்டுதலாலோ தம் மதத்திற்கு மாற்றக்கூடாது” என்கிற தீர்மானத்தை முன்னிறுத்தி அனைத்து மதத் தலைவர்களும் அதை ஏற்றுக் கையெழுத்திடுமாறு செய்தார்.  
 
 தர்ம ரக்ஷண சமிதி
 
நமது தர்மத்திற்கும் அதன் ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரச் சிறப்புக்கும் ஆபத்து வருகிற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்த பூஜ்ய ஸ்வாமிஜி, 1999ல் தர்ம ரக்ஷண சமிதி என்கிற அமைப்பைத் தொடங்கினார். ஹிந்து பண்பாட்டைப் போற்றிப் பாதுகாத்தல், ஹிந்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், மதமாற்றங்களிலிருந்து ஹிந்து சமூகத்தைப் பாதுகாத்தல், ஹிந்துக்களை ஹிந்து கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் சாஸ்த்திர சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்க வைத்தல் ஆகிய உன்னத நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டதே தர்ம ரக்ஷண சமிதியாகும். 
 
 
Dharma Rakshana Samithi
 
 இளைஞர்கள், குழந்தைகள், மகளிர், குடும்பங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் தர்ம ரக்ஷண சமிதியின் பணிகளின் திட்டத்தை வகுத்தார் பூஜ்ய ஸ்வாமிஜி. ”ஸ்ரீ அம்மன் யாத்திரை” என்கிற திட்டத்தைத் தொடங்கி, அம்மன் விக்கிரகங்களை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்று மக்கள் தங்கள் கரங்களாலேயே பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யுமாறு செய்தார். அந்த ஸ்ரீ அம்மன் யாத்திரை தற்போது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளது. லக்ஷக்கணக்கான மகளிர் இந்தத் திட்டத்தினால் அம்மன் அருளைப் பெற்று வருகின்றனர். 
 
அடுத்ததாகப் “பூர்ண வித்யா குருகுலம்” என்கிற திட்டத்தைத் தொடங்கினார். நம்முடைய புனிதமான வாழ்க்கை முறை மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய அறிவை சிறுவர் சிறுமியருக்கு ஊட்டும் விதமாக இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் லக்ஷக்கணக்கான சிறார்கள் பயனடைந்து வருகிறார்கள்.  
 
நவராத்திரி விழா சமயத்தில், மாணாக்கர்களின் மனதில் கல்வியைப் பற்றிய தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் விதமாக “சரஸ்வதி நாமஜப யக்ஞம்” நடத்த ஏற்பாடு செய்தவர் ஸ்வாமிஜி. இது மடுமல்லாமல், மாணாக்கர்களின் மனதிலிருந்து பொதுத் தேர்வுகள் பற்றிய பயத்தைப் போக்குமாறு “வல்லமை தாராயோ” என்கிற பயிற்சியைக் கொடுத்து அதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுமாறு செய்தவர் ஸ்வாமிஜி.
 
 வருடா வருடம் லக்ஷக்கணக்கில் அதிகரித்து வரும் ஐயப்ப பக்தர்களிடம் ஐயப்ப விரதத்தின் முக்கியத்துவத்தையும் பெருமைகளையும் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும், அவர்களிடையே ஒற்றுமை உணர்வை உண்டாக்கும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் “ஐயப்ப சங்கமம்” என்கிற நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வரும்படி செய்தவர் பூஜ்ய ஸ்வாமிஜி. 
 
ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று மக்கள் இல்லங்களுக்குச் சென்று கடவுள் படங்களையும், கடவுள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்ட டாலர்களையும், பிரசாதங்களையும் கொடுத்து, கிராம தெய்வம், குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் ஆகியவற்றை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும், அதனால் விளையும் பயன்களையும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது தர்ம ரக்ஷண சமிதி. 
 
மாநிலம் முழுவதும் “ராமாயண ஞான யக்ஞம்” ஒன்றையும் தொடர்ந்து நடத்தி வருகிறது சமிதி. ராமாயண சொற்பொழிவுகள், ஸ்ரீ ராம பூஜைகள், ஸ்ரீ ராமநாம ஜபம் ஆகியவை மூலம் பொதுமக்கள் பயனடையுமாறு செய்து வருகிறது சமிதி. கோவில்கள் இல்லாத கிராம தெய்வங்களுக்குக் கோவில் கட்டும் பணியும் செய்கிறது. 
 
( தர்ம ரக்ஷண சமிதியின் பணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள….{* YouTube}v=ye-8ZrHKmas{* /YouTube}
 
 
 

மதமாற்றம் ஒழிப்பு

மதங்களுக்கிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்து, அதற்காக உழைக்கவும் செய்த பூஜ்ய ஸ்வாமிஜி, அன்னிய மதத்தவரின் மதமாற்ற நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்கவும் விமரிசனம் செய்யவும் தயங்கியதில்லை. ”மதமாற்றம் ஒரு வன்முறை” என்று தேசமெங்கும் பயணம் செய்து முழங்கினார். மதமாற்றம் எவ்வாறு சமூகத்தில் அமைதியைக் கெடுக்கின்றது என்றும், எவ்வாறு அதன் மூலம் இந்தியா சின்னாபின்னமாக உடையும் என்றும், அது எவ்வாறு தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் மக்களிடையே பெரிதும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். பூஜ்ய ஸ்வாமிஜியின் மதமாற்றம் ஒரு வன்முறை என்கிற புத்தகமும், அவருடைய சொற்பொழிவு அடங்கிய காணொளியும் உலகெங்கும் மிகவும் பிரபலாமானதாகும். 
 
Conversion is Vioelnce
 
ஓதுவார்கள் நலன்
 
 
தமிழகத்தின் ஆலயங்களில் தெய்வத் திருமுறைகளைப் பாடி வரும் ஓதுவார் சமூகத்தினர் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார் பூஜ்ய ஸ்வாமிஜி.
 
பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைந்த நிலையில் இருக்கும் அவர்கள் நலன் காக்க, மாநாடுகள் நடத்தி, நிரந்தர நிதியுதவியும் மற்றும் பல நலன்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். 
 
 
 
 
திருவிடைமருதூர் தேர் திருப்பணி 
 Thiruvidaimarudur Chariot Festival
 
1200 ஆண்டுகள் பழமையான பெருமைமிகு திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பஞ்சகுரோசதலம் எனப் போற்றப்படும் அருள்மிகு பிருகத்சுந்தர குஜாம்பிகை உடனாய அருள்மிகு மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. தைப்பூசத் திருவிழாவில் இந்தக் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். அவ்விழாவில் ஸ்வாமி, அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியாகத் தேரோட்டம் நடைபெறும்.
 
இந்தத் தேரோட்டமானது தேர்கள் பழுதடைந்ததாலும், தேர் மண்டபங்கள் சிதிலம் அடைந்ததாலும், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாகத் தேரோட்டம் நடக்காமல் இருந்தது. அந்நிலையில் பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி திருவாவடுதுறை ஆதீனத்துடன் தொடர்பு கொண்டு, தேர் மண்டபங்களைக் கட்டுவதற்கும், தேர்களை உருவாக்குவதற்குமான பணிகளைத் தொடங்கலாம் என ஆலோசனைகள் கூறி, தேர் திருப்பணி குழு ஒன்றையும் அமைத்தார். 
 
 பின்னர் பூஜ்ய ஸ்வாமிஜியின் பங்காக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டு மஹாலிங்க ஸ்வாமியின் தேர் தயாரானது. ஆர்ஷ வித்யா குருகுலமும் திருவாவடுதுறை ஆதீனமும் சேர்ந்து ஐந்து தேர் மண்டபங்களையும் புதுப்பித்துக் கட்டினர். மஹாலிங்க ஸ்வாமியின் தேரோட்டம் 2011ம் ஆண்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் ஏற்பாட்டில் ரூ.1 கோடியில் அம்பாள் தேர் வடிவமைக்கப்பட்டு 2012ம் ஆண்டு தேரோட்டம் நடந்தது. பின்னர் மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்தினர் அளித்த  நிதியுதவியின் பேரில் ரூ.1 கோடியில் முருகன் தேர் திருப்பணி முடிந்து வெள்ளோட்டமும் நடந்துள்ளது. மேலும் இரண்டு தேர் திருப்பணிகளும் இன்னும் சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று திருவாவடுதுறை ஆதீனத்தில் அறிவித்துள்ளனர். இவ்வாறாக ஒரு மகத்தான தெய்வீகப் பணி மூலம் ஒரு பழம்பெருமையான ஆன்மீகப் பாரம்பரியம் தொடர்வதற்கு முனைந்து செயல்பட்டவர் பூஜ்ய ஸ்வாமிஜி. 
 
 பசு மற்றும் கால்நடைப் பாதுகாப்பு
 
 பூஜ்ய ஸ்வாமிஜி பசு மற்றும் கால்நடைப் பாதுகாப்பிலும் சிறந்த பணிகள் ஆற்றியுள்ளார். ஆர்ஷ வித்யா குருகுலங்களில் கோசாலைகள் உள்ளன. அவற்றில் பசுக்களும் கால்நடைகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. பூஜ்ய ஸ்வாமிஜி எங்கே எப்போது தன்னுடைய தர்மப் பாதுகாப்புச் சொற்பொழிவுகளை ஆற்றினாலும் அப்போது பசு மற்றும் கால்நடைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவார். 
 
 ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் வெளியிட்ட ”கால்நடைச் செல்வங்களின் இறுதிப்பயணம்” என்கிற ஆவணப்படத்தில் தோன்றியுள்ள ஸ்வாமிஜி, “வேளாண்மை என்று வரும்போது, உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல நாம் “கால்நடைப் பண்ணை” என்று சொல்வதில்லை. ”கோ ரக்ஷணம்” அல்லது “பசுப் பாதுகாப்பு” என்று தான் சொல்கிறோம். கோ அல்லது பசு என்பது உபலக்ஷணம். உபலக்ஷணம் என்பது அனைத்து மிருகங்களுக்கும் பொருந்தும். ஆகவே கால்நடைப் பாதுகாப்பும் தர்ம ரக்ஷணத்தில் சேர்ந்தது தான். நமது நாட்டின் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டும் கோட்பாடுகளில் ஒன்றாக பசுவதைத் தடை சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசும் சரி, ஒவ்வொரு மாநில அரசும் சரி, பசுவதைத் தடைச் சட்டத்தை அரசியல் சாஸனத்தின் படி இயற்றலாம்”என்று பேசியிருக்கிறார். 
 
 இதர சேவைகள்
 
தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் அங்கமான சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் தமிழக கிராமங்களில்ஓராசிரியர் பள்ளிகள் தொடங்குவதற்கும், ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டினார். 
 
 
Single Teacher Schools
 
 
கடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு சமய இலக்கியங்களைச் சேர்க்க மறுத்தபோது, திராவிட சான்றோர் பேரவை நடத்திய மாநாட்டில் அருளாசி வழங்கிய பூஜ்ய ஸ்வாமிஜி, தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் சமய இலக்கியங்கள் ஆற்றிய மகத்தான பங்கைப் பற்றி விளக்கிக் கூறினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியம் சம்பந்தமாக நடத்தப்படும் எந்தவிதமான மாநாட்டிலும், சமய இலகியங்களைச் சேர்க்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். 
 
 ஆலய வழிபடுவோர் சங்கம் அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து ஆலயங்களை விடுவிக்கப் போராடி வருகின்றது. இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்படுவதற்கும் பூஜ்ய ஸ்வாமிஜி ஆலோசனைகளும், ஆசிகளும் வழங்கியுள்ளார். இந்தச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் விதமாக உச்ச நீதிமன்றத்தில், தமிழக, ஆந்திர மற்றும் புதுவை மாநில அரசுகளின் இந்து அறநிலையத்துறைகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி வழக்கு பதிவு செய்துள்ளார். 
 
 
Hindu Temples and Government Control
 
 சென்னையில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி பூஜ்ய ஸ்வாமிஜி அவர்களின் ஆசிகளுடனும் ஆலோசனைகளுடனும் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் வெற்றிக்கு ஸ்வாமிஜி அளித்த பங்கு அபரிமிதமானது. 
 
  
அஞ்சலி
 
ஹிந்து தர்மத்தின் ஆன்மீகப் பாரம்பரியம், கலாச்சாரப் பெருமை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், சாஸ்த்திர சம்பிரதாயங்கள், ஆகியவை அனைத்தையும் பாதுகாக்கும் பணியிலும், அவற்றைப் பரப்பும் சேவையிலும், மற்றும் ஆலயப்பாதுகாப்பு, ஆவினங்களின் பாதுகாப்பு, ஆகிய பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் பூஜ்ய ஸ்வாமிஜி. அதோடு மட்டுமல்லாமல், அன்னிய மத நிறுவனங்களால் நமது நாட்டில் நடத்தப்படும் மதமாற்றங்களைக் கடுமையாக எதிர்த்தவர். இந்தியாவின் அமைதி, ஒருமைப்பாடு, வளர்ச்சி ஆகியவை பற்றி மிகுந்த அக்கறை கொண்ட தேசபக்தர் ஸ்வாமிஜி. உலக அளவில் சிறந்த வேதாந்த ஆச்சாரியராக அறியப்பட்ட பூஜ்ய ஸ்வாமிஜி உலகமே மெச்சும் அறிவு ஜீவியாகத் திகழ்ந்தார். 
 
சிறந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர். மிகவும் எளிமையாக அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் வாஞ்சையுடனும், அன்புடனும் பழகியவர். 
 
  
Pujya Swamiji
 
  
பூஜ்ய ஸ்வாமிஜி முக்தி அடைந்தது நமது தேசத்திற்கும் தர்மத்திற்கும் பேரிழப்பாகும். அவர் காட்டிய வழியில் நடந்து நம் தர்மத்தைக் காப்பதே நாம் அவருக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.       
 
 
கட்டுரை: பி.ஆர்.ஹரன்
 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் தளவாய்புரம், அருகேயுள்ள மத்திமான்விளையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.

அந்த பள்ளியில் 19 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஒரு ஆசிரியர், ஆசிரியை பணியாற்றுகின்றனர். கடந்த 20 தினங்களுக்கு முன் தேரிகுடியிருப்பு பகுதியில் இருந்து பணி மாறுதல் பெற்று மத்திமான்விளை பள்ளிக்கு ஆசிரியர் சிங்காரவேல் வந்திருந்தார்.

அவர் பள்ளியில் படிக்கும் 4,5ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்து பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டனர். ஆசிரியர் சிங்காரவேலை பார்க்க பெற்றோர்கள் மாணவிகளுடன் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர் சிங்காரவேல் நேற்று பணிக்கு வரவில்லை. பெற்றோர்கள் தளவாய்புரம், காயாமொழி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்,

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும், என தெரிவித்தனர். துாத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெருமாள்சாமி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சிங்கார வேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சவுதி இளவரசர் அமெரிக்காவில் கைது

பணிப்பெண்ணை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வற்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சவுதி அரேபிய இளவரசரை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கைது செய்து உள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில், சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.

இந்த மாளிகையின் சுமார் 8 அடி உயர மதில் சுவரை தாண்டி குதித்து ரத்தக் காயங்களுடன் தப்பிவந்த ஒரு இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அப்போது தன்னுடன் உடல் உறவு வைத்துகொள்ளுமாறு இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தன்னை கட்டாயப்படுத்தி வற்புறுத்தியதாக புகாரில் தெரிவித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சவுதி இளவரசரின் மாளிகைக்கு சென்று கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர் இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத்தை கைது செய்தனர். இளவரசர் மீது புகார் அளித்த பெண், இளவரசர் வீட்டில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்த போலீசார், கைது செய்யப்பட்ட இளவரசர் மீது, மேலும் நான்கு பெண்கள் இதே குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இதையடுத்து, இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் மீது பெண்ணை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தி வற்புறுத்திய குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் அவர் 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஜாமினில் விடுவிக்கபட்டார். இந்த வழக்கில் இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் அக்டோபர் 19ம் தேதி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.