Home Blog Page 6306

தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேர பாஜக தவறிவிட்டது: ஆர்.எஸ்.எஸ்.

mohanbhagwat_story தில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பாஜக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாஜக, தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேரத் தவறிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை அன்று தில்லியின் ஜண்டேவாலன் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலகமான கேசவ் குன்ச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் தலைவர் மோகன்ஜி பாகவத், பிரசனைகளை தில்லி வாக்காளர்களிடம் சரியான வகையில் கொண்டு சேர்த்து அவர்களிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள பாஜக தவறிவிட்டதாக தகவல் தெரிவிப்பதாகக் கூறினார். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுரேஷ் சோனி, தத்ராத்ரேய ஹோஸ்போலெ, டாக்டர் கிருஷ்ண கோபால், மன்மோகன் வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே “இனப்படுகொலை” தீர்மானம்: விக்னேஸ்வரன்

wigneswaran-maithripala தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழக் கிழமை அன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றிருப்பதாகவும், அத்தகைய உறவு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதேநேரம், அதிபரின் 100 நாள் வேலைத்திட்டத்தில், தமிழ் மக்களால் பார்க்கக் கூடிய வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து, இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்திருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இனப் படுகொலை குற்றச்சாட்டு: இலங்கை நிராகரிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. போரினால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஓர் அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே; அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என்றார் அவர். இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்; கடந்த முறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக் கொள்ளாத முதல்வர் இப்போது எப்படி அதை ஏற்றார் எனவும் கேள்வி எழுப்புகிறார். இறுதிக் கட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதிக் கட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம் என்றார் அவர். போர் முடிந்த பிறகு எந்தத் தமிழ் அரசியல் தலைவரும் இனப் படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை என்று கூறும் அவர், இனப்படுகொலை என்று கூறி இயற்றப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை இலங்கை மத்திய அரசு எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்தது இன அழிப்பே: வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றம்

  இலங்கையின் வடக்கு மாகாண சபையில் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்து வந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை, இனப் படுகொலையில் இருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கு சர்வதேச நடைமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் நாடாளுமன்ற முன்னாள்உறுப்பினரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டு சபையில் சமர்ப்பித்திருந்தார். அப்போது, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரங்கள் கிடையாது, அதனை சபையில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்ற வகையில் காரணங்கள் கூறப்பட்டிருந்தது. அதனையொட்டி கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று அந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படாமலே இருந்து வந்தது. இந்தப் பின்னணியில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என தெரிவித்து, அந்தத் தீர்மானத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஒப்புதலுடன் இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார். இந்தத் தீர்மானத்தை அவையில் சமர்ப்பித்த முதலமைச்சர் அது குறித்து தமிழில் விசேஷ அறிக்கை ஒன்றினை வாசித்ததுடன், நீண்ட விளக்கம் ஒன்றையும் ஆங்கிலத்தில் வழங்கினார். இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 30 உறுப்பினர்களும் எழுந்து நின்று அதனை வழிமொழிந்தனர். அதன் பின்னர் தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது. சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தமது கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை நீக்கினால் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்தார். ஆயினும் அந்த விஷயத்தை நீக்குவதற்கு மறுத்து, ஈபிடிபி என்ற கட்சியின் பெயர் மாத்திரம் நீக்கப்பட்டது. இதையடுத்து, அவரும் தீர்மானத்தை ஆதரித்திருந்தார். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதால் அந்த அறிக்கை பின் போடப்படக் கூடாது என்பதை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. “இந்தத் தீர்மானம் உண்மையை உலகிற்கு உணர்த்தும் தீர்மானம்; உள்நாட்டு மக்களின் உன்மத்தங்களால் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை உலகத்திற்கு எடுத்துரைக்கும் தீர்மானம்” என இது பற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்துள்ளார். “கடந்த 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பினால் தமிழ் மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கினார்கள் சிங்கள அரசியல்வாதிகள். இதனை சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆவணமாகவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளேன். இன்றைய சூழ்நிலையில் இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப் படாவிடில், ஜெனீவா தீர்மானம் உரிய காலத்தில் உண்மையை உரைக்காவிடில் எமது தமிழ் மக்களின் பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் கருத்து மிகுந்த ஆவணமாகவே இந்தத் தீர்மானத்தை இந்த மதிப்புசால் சபை முன்னே கொண்டுவருகின்றேன். இதை இன்று இங்கு உங்கள் முன்னிலையில் கொண்டுவந்து, அது ஏற்கப்படாது விட்டால் நாங்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு எமது வாழ்நாளெல்லாம் முகம் கொடுக்க நேரிடும். நடந்தது பிழையென்ற மனப்பக்குவத்தை எமது சகோதர சிங்கள அரசியல்வாதிகளின் மனதில் விதைக்கவே இதைக் கொண்டுவந்துள்ளேன்”, என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் விளக்கமளித்துள்ளார். CV-Vigneswaran

தோல்வி தொடர்பாக சச்சரவுகள் வேண்டாம்: காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியா கட்டளை

புது தில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி தொடர்பாக, பல்வேறு கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் வீண் சண்டையில் ஈடுபட வேண்டாம் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்டளையிட்டுள்ளார். 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்த நிலையில், காங்கிரஸ் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இது, அக்கட்சித் தலைவர்களிடையே வார்த்தை மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் மூன்று முறை தில்லி முதல்வராகப் பொறுப்பு வகித்தவருமான ஷீலா தீட்சித்துக்குப் (76) பதிலாக அஜய் மக்கான் தில்லியில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இந்தத் தோல்வி இருவருக்கும் இடையே கடும் வார்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளது. அஜய் மக்கான் தலைமையிலான தேர்தல் பிரசாரம் பலவீனமானதாக இருந்ததாக குற்றம்சாட்டிய ஷீலா தீட்சித் அவரது தோல்வி பரிதாபமானது என்றார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சாக்கோ இன்று சோனியா காந்தியை சந்தித்து தில்லி தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பின்போது, தேர்தல் தோல்வி தொடர்பான வீண் சண்டையை நிறுத்துமாறு மூத்த தலைவர்களுக்கு சோனியா கட்டளையிட்டுள்ளார்.

மோடி சிலைக்கு பதிலாக பாரத மாதா படம்!: திறப்பு விழாவுக்கு முன்பே மூடு விழா!

narendra_modi_temple_kaushambi குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக வைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டினார். இந்தக் கோவிலில் மோடியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி இதன் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்தக் கோவில் குறித்தும், முயற்சி குறித்தும் ஊடகங்கள் வாயிலாக அறிந்த மோடி, தனக்கு கோவில் கட்டப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டரில் தெரிவித்தார். இந்தச் செயலால் தான் கவலை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்ததை அடுத்து கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலை துணியால் மூடப்பட்டது. மேலும் கோவில் திறப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டது. மோடியின் சிலையைச் செய்ய ரூ.1.65 லட்சம் செலவானது. அதை 4 ஆண்டுகளாக செய்துள்ளனர். ஒடிஷாவில் இருந்து கலைஞர்களை குஜராத்துக்கு வரவழைத்து மோடியின் சிலையை செய்துள்ளனர். கோவிலைக் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே இந்த உழைப்பு வீண் போகக் கூடாது என்பதால், இந்தக் கோவிலில் பாரத மாதா படம் வைத்து வழிபடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி!

உலகக் கோப்பை தொடரின் துவக்க விழா இன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 14 அணிகள் பங்கேற்கும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 14ம் தேதி சனிக்கிழமை துவங்குகிறது. மார்ச் 29ம் தேதி வரை, இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான துவக்க விழா, இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா துவங்கியது. மெல்போர்னில் திறந்தவெளி மைதானத்தில் நடந்த விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்து துவக்கவிழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகிகள் ஜெசிகா மாவ்பாய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நியூசிலாந்தில் நடந்த விழாவில் உள்ளூர் அணிகள், முன்னாள் ஜாம்பவான்கள் ரிச்சர்ட் ஹாட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ’ குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. முடிவில், கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்திய கலைக் குழுவினரின் சார்பில் நடைபெற்ற வண்ணமய இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.  குறிப்பாக பிரம்மாண்டமான பேட்ஸ்மேன் அரங்கில் தோன்றி வந்தது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14-ம்தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்’ என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர் வரும் 14-ஆம் தேதி உலக கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்திய அணி முதல் போட்டியாக தனது பரம எதிரியான பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-” கேப்டன் தோனிக்கு எனது வாழ்த்துக்கள். உறுதியோடு விளையாடி இந்தியாவுக்கு பெருமையை தேடித்தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்றொரு பதிவில்,” விராட் கோலி மீது ஒட்டு மொத்த நாடும் நம்பிக்கை வைத்துள்ளது. போட்டியில் சாதிக்க அவருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் குறிப்பிட்ட ஒவ்வொரு வீரர்களையும் தனிப்பட்ட வகையில் பாராட்டியும் ஊக்கப் படுத்தியும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.  

ஃபெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவியருக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது

மாணவியரை தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காண்பித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாச படம் காட்டியதாகவும், அதைப் பார்க்காதவர்களை தேர்வில் ஃபெயிலாக்கி விடுவதாகவும் ஆசிரியர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஒருவர், நடந்தவற்றை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை, உடனே உள்ளூர் அரசியல் பிரமுகர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில், 35 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.