Home Blog Page 6327

பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 50 வது பொன்விழா கொண்டாட்டம்

DSC07953 திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி 50 வது ஆண்டு பொன்விழாவையொட்டி விழாகோலம் பூண்டுள்ளது. இன்று 23 தேதி துவங்கி 3 நாட்கள் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. பொன்விழாவையொட்டி சித்தம் 50 என்ற மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வர்மம் மற்றும் யோகம், சித்த மருத்துவ உணவு முறைகள், மனித உறுப்பு கண்காட்சி, 500 மூலிகைகளின் கண்காட்சி உள்ளிட்ட 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் போட்டி: பயஸ், போபண்ணா, சானியா மிர்சா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பயஸ், போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். இன்று 2-வது சுற்று மகளிர் ஆட்டத்தில் சானியா மிர்சா, சீன தைபே வீராங்கனை சூ-வெய்-சிய ஆகியோருக்கு கனடா-போலந்து ஜோடியான காப்ரியலா டாப்ரோவ்ஸ்கி, அலிசியா ரொசோல்ஸ்கா ஆகியோர் அதிர்ச்சி அளித்தனர். சானியா ஜோடி 6-7, 4-6 என்று நேர் செட்களில் தோல்வி அடைந்து வெளியேறியது. இருப்பினும் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-புரூனோ சோரேஸ் இணை வென்றது. ஆடவர் இரட்டையர் போட்டியில் முதல் சுற்றில் நம்பிக்கை அளித்த போபண்ணா-டேனியல் நெஸ்டர் இணை இன்று 2-வது சுற்றில் பெலிசியானோ லோபஸ்-மாக்ஸ் மிரிண்யி இணையிடம் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் படு தோல்வியடைந்து வெளியேறியது. மற்றொரு ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் இவரது தென் ஆப்பிரிக்க சக வீரர் ராவென் கிளாசன் 6-2, 4-6, 1-6 என்ற செட்களில் சைமன் போலெலி ஃபேபியோ ஃபாக்னீனி என்ற ஜோடியிடம் தோல்வியடைந்தது.

2500 நகரங்களில் இலவச அதிவேக வைஃபை சேவை: பி.எஸ்.என்.எல் திட்டம்

புது தில்லி சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏர்போர்ட், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் தனியார் நிறுவனங்குகள் இலவச வைஃபை சேவையை வழங்கி வருவது போன்று, 2500 நகரங்களில் இந்தச் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதை குறிப்பிட்ட நேரம் வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்ஸவா, இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “அடுத்த நிதி ஆண்டிலிருந்து (2015-2016) நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தத் திட்டத்தை பி.எஸ்.என்.எல். மட்டுமின்றி அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பில் முன்னாள் பிரதமர்கள் கோட்டை விட்டனர்: பாரிக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுதில்லி தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற இந்தி வார இதழ் ஒன்றின் சிறப்பு பிரதி வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். கடல் எல்லை உருவாக்கப்படுவதில் 20 ஆண்டுகளாக போடப்பட்ட திட்டத்தில் முன்னாள் பிரதமர்கள் சிலர் விட்டுக் கொடுத்தனர். இருப்பினும் தங்கள் பெயர் எங்கும் வெளி வராமல் இருக்கும்படி அவர்கள் பார்த்துக் கொண்டனர். இது வருத்தமளிக்கிறது. அவர்கள் யார் என்பதை நான் வெளியில் கூற விரும்பவில்லை என்றார். Manohar_Parrikar மனோகர் பாரிக்கரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இதுகுறித்துக் கூறுகையில், அந்த முன்னாள் பிரதமர்கள் யார் என்பதனை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் பேச்சுக்கு பாரிக்கர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

​”இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்”

p27

​”இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்”
ரா.கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது!
ஒரு பழைய சக்தி விகடன் கட்டுரை.
”இன்று அக்டோபர் 25, 1992. காஞ்சி மகா சுவாமிகளின் நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். மே மாதம் 1994-ல்தான் அவர் நூறாண்டு முடிப்பார் என்ற போதும், நமக்கு இந்தத் தருணத்தில் இரட்டிப்பு பாக்கியம் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், நூறு ஆண்டுகளைக் கடந்த இன்னொரு பெரிய ஞானியை இன்று நினைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதில் அபூர்வமான விஷயம் என்ன என்றால், இரண்டு ஞானிகளின் பெயர்களும் ‘சந்திரசேகர’ என்பதுதான்.
அவர் வேறு யாருமல்ல, சிருங்கேரி சங்கர மடத்தின் சந்திரசேகர பாரதி சுவாமிகள்தான். காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக்கொண்டிருந்த தருணத்தில், பாரதி
சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்விகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று நடத்துவது பராசக்தியின் விளையாட்டு அல்லவா? இருவருமே ஒரே விஷயத்தில் பார்வையைச் செலுத்தும் இரண்டு கண்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும், அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள்; அதே நேரம் ஒப்பிடக்கூடியவர்களும்கூட!
மனித குலத்தை வாழ்த்தும் தகுதி உடையவர்கள் அவர்கள். நிபுணர்களைத் திகைக்க வைக்கும் அறிவொளி படைத்தவர்கள். வேதாந்தக் கருத்துகளை எளியவருக் கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். பெரிய ஞானிகள் மட்டுமே நடந்துகொள்வது போன்று, அடக்கமாக நடந்துகொள்பவர்கள். மாற்றங்களும், சீர்திருத்தங்களும் நிகழும் இந்தக் காலத்தில், பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறாமல், எதிர் நீச்சல் போடுபவர்கள். ‘ஜகத்குரு’ என்ற பட்டத்தை அவர்களாகத் தேடிப் போகவில்லை. குருவாக அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்க முனையவில்லை.
இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள காஞ்சி மடத்தின் தலைவரின் தாய்மொழி கன்னடம். கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் தலைவரின் தாய்மொழி தெலுங்கு. இருவருக்குமே சந்நியாசத்தை ஏற்கும் தருணத்தில் குரு என்று யாருமே இருக்கவில்லை. ஆனால் இருவருமே, ‘குரு என்று ஒருவர் தேவை’ என்பதை உலகுக்கு வலியுறுத்தியவர்கள். உள்ளத்தளவில் இருவருமே
ஒரே மாதிரிதான். ஆனால், அவர்கள் வெளியே நடந்துகொள்ளும் முறையையும், செயல்களையும் கண்ட உலகத்தினர், வேறு மாதிரி நினைக்கத் தொடங்கினர்.
முக்கியமான வேறுபாட்டை இங்கே விளக்கியாக வேண்டும். காஞ்சி முனிவர் பிரம்மஞானியாக இருந்தாலும், வெளியுலக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். அவை எல்லாமே சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று செயல் பட்டார். அதை அடைய செயல் திட்டங்கள் தீட்டினார்.
சாஸ்திர முறைகளுக்கு மக்களைத் திருப்பும் ஆர்வம் கொண்டிருந்த சிருங்கேரி ஆசார்யர், பொதுவாகத் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு, தியானத்தில் ஈடுபட்டார். அவர் நினைத்திருந்தால், அறிவுக்கடலில் நீந்தித் திளைத்திருக்க முடியும். ஆனால்
தெய்விகம், ஆன்மிகம் தவிர, வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை. சீடர்களையும் அகடமிக் எனப்படும் அறிவு சார்ந்த விஷயங்களில் அக்கறை காண்பிக்கத் தூண்டவில்லை.
மதம், சரித்திரம் அல்லது இலக்கிய ரீதியான அடிப்படையில், மதத் தலைவர்கள் அல்லது மதம் சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் ஆர்வம் காட்டமாட்டார். ஆதிசங்கரர் காலம் அல்லது அவரது சில நூல்கள் சார்ந்த பிரச்னைகளிலும், அல்லது வித்யாரண் யருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்தார்களா என்பது போன்ற தர்க்கங் களிலும்… ‘இதில் உண்மையைக் கண்டு பிடித்து அறிந்துகொள்வதற்கும், உனது சொந்த ஆன்மிக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ?’ என்பதுதான் பாரதி சுவாமிகளின் பதிலாக இருக்கும்.
மாறாக, காஞ்சி முனிவரோ, எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்பார். அத்துடன், தாமே நவீன அறிவியல் கடலில் தேடித் தேடி முத்து, பவளம், சங்கு என்று கண்டெடுத்து, அறிவு குறித்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். இந்த இருவரையுமே சனாதன தர்மத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள் பல நிபுணர்கள்.
ஆசார்யர்கள் இருவரும் ஒருவரையருவர் சந்திக்கா விட்டாலும், ஒரே இதயம் படைத்தவர்களாகவே இருந்தனர்.
‘தங்கள் திட்டங்களைக் குறித்து பரஸ்பரம் கருத்துப் பரி¢மாற்றங்கள் செய்துகொண்டனர்’ என்று கே.பாலசுப்ர மணிய ஐயர், எல்.எஸ்.பார்த்தசாரதி ஐயர் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசார்யர் போன்றவர்கள் என்னிடம் இந்த விஷயங்கள் குறித்துச் சொன்னது உண்டு.
காஞ்சி மடத்திலிருந்து எவர் வந்தாலும், அவர்களை மிக மரியாதையாக நடத்துவதுடன், மற்ற மடங்களுக்கும் அழைத்துச் செல்லத் தம் தொண்டர்களை அனுப்பிவைப்பார் சிருங்கேரி ஆசார்யர். ‘இப்படிப்பட்ட தேஜஸ்வியை வேறு எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அது அவருடைய தபஸின் மகிமை!’ என்று அவரைப் பற்றி மகா பெரியவாள் சொல்வதுண்டு. அவருடைய தந்தை மற்றும் பாட்டனார் குறித்தும் பெரியவாள் உயர்வாகச் சொல்வதுண்டு. சிருங்கேரி ஆசார்யரோ காஞ்சிப் பெரியவர் பற்றி, ‘அந்த ஞானியின் ஆன்மிக ஒளி அல்லவா உலகின் நன்மைக்குக் காரணமாக இருக்கிறது!’ என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்.
நீதித்துறையில் புகழ் பெற்றவர் டி.எம்.கிருஷ்ணசுவாமி ஐயர். இவர், பெரியவா பாலக்காட்டில் உள்ள பல்லாவூரில் 1927-ல் தங்கியிருந்தபோது, அங்கே சென்று திருப்புகழ் பஜனைகள் செய்தார். பெரியவா இவருக்குத் ‘திருப்புகழ் மணி’ என்று பட்டம் கொடுத்தார்.
அதன் பிறகு திருப்புகழ் மணி, கோவைக்குச் சென்று சிருங்கேரி ஆசார்யர் முன்பும் திருப்புகழ் பஜனைகளைச் செய்தார். இவருக்குக் காஞ்சி பெரியவா விருது தந்து கௌரவித்தது பற்றிக் கேள்விப்பட்டதும், ‘அவர் அப்படி கௌரவம் செய்திருந்தால், அதை நாங்கள் இருவருமே அளித்ததாக வைத்துக்கொள்ளுங்கள்!’ என்றாராம் சிருங்கேரி ஆச்சார்யர்.
இன்னொரு விசேஷம் என்னவென்றால், 1927-ல் பெரியவா கோயமுத்தூருக்கு விஜயம் செய்தபோது, அவர் முகாமிட்டிருந்ததே சிருங்கேரி மடத்தில்தான்!
1935-ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு நவராத்திரி பூஜை செய்யப் போனார் காஞ்சி பெரியவா. அங்கே மந்திரேந்திர சர்மா என்ற சிருங்கேரி மட அபிமானியும் இருந்தார். பூஜையின் 4-வது நாள் வரை அவரால் பொறுக்கமுடியவில்லை. நேராக சிருங்கேரி போய் சுவாமிகள் முன் நின்றார்.
சுவாமிகளுக்கு வந்ததே கோபம். ‘உன் மனதில் வேறுபாடு என்கிற கல்மிஷம் புகுந்துவிட்டது. ஏன் பாதி பூஜையில் இங்கே வந்தாய்? மகா பாபம் செய்திருக்கிறாய். ஒரு கணம்கூட என் கண் முன் நில்லாதே. திரும்பிப் போய்விடு!’ என்று அவரைக் கடிந்துகொண்டாராம்!
ஆம், இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்

“பெரியவாளின் சினமும்-வைத்யமும்”

1969132_763012707087106_4352134091554339462_nபெரியவாளின் சினமும்-வைத்யமும்”

தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது.
எத்தனையோ மருத்துவம் பார்த்தாயிற்று. எந்தப் பலனும் இல்லை.இந்நிலையில்தான்
பெரியவாளை தரிசிக்க வந்தார் அந்த பக்தர்.
 
பெரியவாளைக் கண்டவுடனே ஒரே கதறல்.
இம்மாதிரி சமயங்களில்,வாத்சல்யத்துடன்
அன்புடனும் பேசுவார்கள் பெரியவா.
 
ஆனால் இப்போது மிகக் கோபமாக கடிந்து
கொண்டார்கள்.“செய்வதெல்லாம் பாவ காரியம். பாவம் செய்கிறோம்
என்பதை உணர்வதும் இல்லை” என்றார்கள்.
 
ஏன் பெரியவா இப்படியெல்லாம் பேசுகிறார்கள்
என்று சிஷ்யருக்கு புரியவில்லை.
 
“இவரின் குடும்பத்தாரால் ட்ரஸ்ட் ஒன்று
ஆரம்பிக்கப்பட்டது.அது தர்ம காரியங்களுக்கானது.
விளை நிலங்களுக்கும் குறைவில்லை. தண்ணீர்
பந்தல் அமைத்து தாராளமாகத் தர்மம் பண்ணலாம்.
ஆனால் இவர் அந்த சொத்தையே விலை பேசி விட்டார்”
என்றார்கள் ஸ்வாமிகள்.
 
வந்தவருக்கு தன் தவறு புரிந்தது.“இனி இத்தவறு நடக்காது.தண்ணீர் பந்தல்
அமைத்து தர்ம காரியம் செய்வேன்” என்றார் உறுதியாக.
 
சற்று சினம் தணிந்த பெரியவா,“வசம்பை அரைத்து வயிற்றில் தடவிக்கோ சரியாயிடும்”
 சில நாட்கள் சென்றபின், மீண்டும் வந்த அவர்
பெரியவா விசாரிப்பதற்கு முன்பாக, “இப்போ எந்த தொந்தரவும் இல்லை” என்று கூறினார்.
 
வசம்பைத் தடவச் சொன்னவர் ஸ்வாமிகளாயிற்றே!

அவர்கள் சொன்ன பதில்

அவர்கள் சொன்ன பதில்:!!!!! என் நண்பர் சாய் ராமசாமியின் அனுபவம் (மலேசியாவில்) எங்கள் ஊரில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி ஒரு சின்ன ஊர் இருக்கிறது. ஆனால் மலேசியாவின் முக்கியமான தொழிற்சாலைகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன. அங்கே ஒரு தமிழ் கடை உள்ளது. 2000 வாக்கில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. மிகப்பெரிய ஹோட்டல் எல்லாம் கிடையாது. ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம். வெளியேதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். மிகச்சிறிய கடை. ஆனால் சாப்பாடு மிகப்பிரமாதமாக இருக்கும். கணவன் மனைவி மட்டுமே அந்த கடையை நிர்வகிக்கிறாகள். பிள்ளைகள் எல்லோரும் படித்து முடித்து வேலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். நான் பல முறை கேட்டிருக்கிறேன், “ஏன் நீங்கள் கடையை பெரிது படுத்தக்கூடாது?” என்று. அவர் சொல்லும் ஒரே பதில், “வர வருமானம் போதும் சார்” அவர் மனைவி வைக்கும் சிக்கன் குழம்புக்கும், சிக்கன் வறுவலுக்கும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு. அதில் 50 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சென்று விடுவேன். அப்படித்தான் நேற்றும் சென்றிருந்தேன். சாப்பிட்டு முடிக்கையில் அவர்களை பார்த்து நீண்ட நாட்களாக கேட்க நினைத்த கேள்வியை கேட்டேன், “நானும் 13 வருடங்களாக உங்கள் கடையில் சாப்பிட்டு வருகிறேன். அது எப்படி ஒரே டேஸ்டை மெயிண்டைன் செய்கிறீர்கள்? எப்படி உங்களால் முடிகிறது? சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?” அவர்கள் சொன்ன பதில்: “நாங்கள் இருவருமே நான் வெஜ் சாப்பிடுவதில்லை. தீவிரமான வெஜிடேரியன்”!!!??

ஜன.25ல் 5வது தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் ஆணையம்

புது தில்லி வரும் ஜனவரி 25ம் தேதி 5வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது தேர்தல் ஆணையம். இதன் முக்கியக் கருத்தாக, ”எளிமையான பதிவு; எளிமையான திருத்தம்” என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பளுதூக்கும் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் தலைமை தாங்குகிறார். 25ம் தேதி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட தினமும்கூட! 1950ம் ஆண்டில் ஜன.25ல் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த தினத்தில், தேர்தல் ஆணையம் வாக்களிக்கத் தகுதியுள்ள இளைய வாக்காளர்களைச் சேர்த்து வாக்காளர்களை அதிகரிக்கச் செய்வது முக்கியக் கொள்கையாக செயல்படுத்தப் படவுள்ளது. மேலும், இந்த தினத்தை தேர்தல் நடவடிக்கைகளில் வாக்காளர்களை ஈடுபடுத்தச் செய்யும் விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவும் திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

பத்ம விருதுகள் குறித்த சர்ச்சை: உள்துறை அமைச்சகம் மறுப்பு

நாட்டில் பல்துறையில் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப் படும் பத்ம விருதுகள் குறித்து இன்று காலை வெளியான தகவல் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: 2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த விருதுகள் குறித்த அறிவிப்பு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும். இந்த விருதுகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக சிலரது பெயர்கள் ஊடகங்களில் வெளியானது ஊகங்களில் அடிப்படையில் வெளியான தவறான தகவல். அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப் படாதவை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

வடகிழக்கில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதி, பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில், சென்ற வருடம் எடுத்த கணக்கெடுப்புப்படி, புலிகள் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் 148 புலிகள் இருந்ததாகவும், 2014ல் அது 201 ஆக அதிகரித்துள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில்தான் அதிகபட்சமாக 167 புலிகளும், அருணாசலப் பிரதேசத்தில் 28 புலிகளும் உள்ளன. அஸ்ஸாமில் உள்ள காஸிரங்கா தேசிய புலிகள் காப்பகத்தில் 125 புலிகளும் அருணாச்சலில் உள்ள நம்தாபா தேசிய காப்பகத்தில் 4 புலிகளும் உள்ளன என்று வனத்துறை தெரிவித்துள்ளது.