Home Blog Page 70

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

railway news - 2026
#image_title

மதுரை -தென்காசி-செங்கோட்டை மதுரை இடையே இரவு நேரத்தில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த வழியில் இரவு நேர ரயில் இயக்கினால்
மூன்று ரயில்களுக்கு இணைப்பாக இருக்கும்.

மதுரையிலிருந்து இரவு 9:30 மணிக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு தென்காசி செல்லும் வகையில் இருந்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து மதுரை வரும் பயணிகளுக்கு இணைப்பு ரயிலாக இருக்கும்.

விருதுநகருக்கு 10 மணிபோல் இந்த ரயில் வந்தால் திருச்சி காரைக்குடி வழியாக விருதுநகர் வரும் மெமு ரயிலுக்கு ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் – தூத்துக்குடியில் இருந்து தென்காசி வழியாக பாலக்காடு செல்லும் ரயிலுக்கும் இது ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

தென்காசியில் இந்த ரயிலை பிடித்து கொல்லம் கோட்டயம் திருச்சூர் பாலக்காடு செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மறு மார்க்கமாக அதிகாலை 3.30 மணிக்கு செங்கோட்டை தென்காசியில் இருந்து கிளம்பி மதுரைக்கு காலை 6:15 மணிக்கு சென்றால்

பாலக்காட்டில் இருந்து தென்காசி வழியாக தூத்துக்குடி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் தென்காசியில் மாறி பயணிப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்த பயணிகள் மதுரை சென்று, சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஐ பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.

விருதுநகரில் இருந்து – காரைக்குடி, திருச்சி பயணிகள் மெமு ரயிலை பிடிக்க வசதியாக இருக்கும்.

இந்த மாதிரியாக 3 ரயில்களுக்கு (வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி- காரைக்குடி- விருதுநகர் பயணிகள் ரயிலுக்கும், பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

மேலும் விருதுநகர்- காரைக்குடி- திருச்சி-காரைக்குடி-திருச்சி- விருதுநகர் ரயிலில் மானாமதுரையில் இறங்கினால் ராமேஸ்வரம் செல்வதற்கும் இந்த ரயில் இணைப்பு ரயிலாக இருக்கும்.

அதே போல தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டம் மக்களும் பாலருவி ரயிலில் பயணித்து தென்காசியில் இறங்கி அங்கிருந்து சென்னை வைகை ரயில் பிடிப்பதற்கும்,

காரைக்குடி, திருச்சி ரயிலில் விருதுநகரில் இருந்து பயணிக்கவும், மானாமதுரையில் இறங்கி ராமேஸ்வரம் செல்லவும் வசதியாக இருக்கும்.

மேலும் இது மதுரையில் இருந்து இரவில் கிளம்பி அதிகாலையில் மதுரைக்கு திரும்பிவிடும் என்பதால் இந்த குற்றால சீசன் டைமில் சென்று வருவதற்கு ஏதுவாக இருக்கும்.

இரவிலே சென்று இரவிலேயே திரும்பி விடலாம்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்ற விருதுநகர் மாவட்டம் மக்களுக்கு இந்த ரயிலானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குற்றால சீசனில் ஒரே இரவில் சென்று திரும்புவதற்கும் வசதியாக இருக்கும்.

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

sabarimala panguni uthiram - 2026

கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்படும்.

மேலும் மாத துவக்கத்தில் ஐந்து நாட்கள் பூஜை நடைபெறும். அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின் கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. இன்று தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தில் காலை முதல் 19ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

202203051105313944 Tamil News Tamil news Russian President Putin says No attack on MEDVPF 1 - 2026

ஈரானை பங்கம் செய்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் 200 போர் விமானங்கள் ஈரானின் 300க்கும் மேற்பட்ட இடங்களை தகர்த்தெறிந்திருக்கிறது. அதோடு, இராணுவ தலைவர்களை போட்டுத் தள்ளியிருக்கிறது. இப்போது தளபதிகள் இல்லாத படைப் பிரிவுகளோடு திணறிவருகிறது ஈரான்.

ஈரானிலிருந்து அணுப்பப் பட்ட டுரோன்கள் அத்தனையும் இஸ்ரேலைச் சென்றடையும் முன்னே சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கின்றன – ஈராக் உள்ளிட்ட பல நாடுகளால்.

இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் ஃபிரான்ஸின் மாக்ரோன் உட்பட பல நாடுகள், “இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு. ஈரான் அணு ஆயுதத்தை கைவிட வேண்டும்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாக இஸ்ரேலை புறக்கணித்தும் ஈரானுக்கு நெருக்கம் காட்டியும் வந்த டிரம்ப் இன்று சொல்லியிருக்கிறார், “இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதை எங்களிடம் சொல்லிவிட்டுத் தான் செய்தது. ஈரான் அடங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கின் சவுதி, ஐக்கிய எமிரேட் உள்ளிட்ட நாடுகள் வழக்கம் போல ‘இஸ்ரேலை கண்டித்’திருக்கின்றன. ஹமாஸை இஸ்ரேல் துவம்சம் செய்த போதும் இதே போலத் தான் இந்த நாடுகள் ‘இஸ்ரேலை கண்டித்’தன… எல்லாம் புருடா!!

இரு நாடுகளும் நட்பு என்பதால் பாரதம் வழக்கம் போல, ‘ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கப்பா. அமைதியா இருங்க’ என்று அறிக்கை விட்டிருக்கிறது. சீனா திணறி வருகிறது. அதன் சீன ஊழியர்கள் பலரும் ஈரானில் சிக்கியிருப்பதால் அவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்று திணறுகிறது சீனா….

இப்படி சீனா தவிர அத்தனை நாடுகளும் ஈரானைக் கை கழுவி விட்டிருக்கின்றன. என்றாலும்… இதில் ஹைலைட் ரஷ்யா தான்!!

சென்ற வாரம் ரஷ்யா அறிக்கை விட்டிருந்தது, “ஈரான் மீது கை வைத்தால் விபரீத விளைவுகளை சந்திப்பீர்கள்” என்று. என்றாலும், இன்று ஈரானை புரட்டி எடுக்கும் போது, ஒன்றுமே தெரியாதது போல இருக்கிறது ரஷ்யா.

இதே போலத் தான் சிரியாவில் ஆளும் ரஷ்ய ஆதரவு அஸ்ஸாத் ஆட்சியை பயங்கரவாதிகள் வீழ்த்திய போதும் ரஷ்யா ஒன்றும் சொல்லவில்லை. சத்தம் போடாமல் சிரியாவில் இருந்த ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற்றது ரஷ்யா. பயங்கரவாதிகள் ரஷ்ய துருப்புகளை தாக்காததையும் கவனிக்கவும்.

“எதனால் ரஷ்யா அமைதி காக்கிறது?” என்ற கேள்விக்கு சிலர், “யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். அதற்கு ஈடாக ஈரான், சிரியா போன்ற நாடுகளுக்கு ஆதரவு தருவதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று டீல் பேசப்பட்டு, அதை ரஷ்யா ஒப்புக் கொண்டதால் தான் இன்று ரஷ்யா மௌனம் காக்கிறது” என்கிறார்கள்.

சிரியா, ஈரான், ஹமாஸ், ஹெஸ்புல்லா எல்லாம் வழிக்குக் கொண்டு வரப்பட்டால், பயங்கரவாதம் பெருமளவில் ஒழியும். (பாக் மட்டும் பயங்கரவாதத்தை தொடரும்).

ஈரானில் அணு ஆயுதம் இருக்கிறது என்று 80களிலிருந்தே குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா. நேற்று சர்வதேச அணு (International Atomic Energy Agency – IAEA) அமைப்பு, “ஈரானில் அணு ஆயுதம் இருக்க வாய்ப்பு” என்று சொன்னது. இன்று அதே IAEA, “இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் கதிரியக்க கசிவு ஏதும் ஏற்படவில்லை” என்று சொல்லியிருக்கிறது.

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும் போட்டுத் தள்ளினார்கள்.

  • செல்வநாயகம்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

FB IMG 1749875359864 - 2026

Dr. B.R.J. கண்ணன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றத்தில் ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்ள நானும் என் துணைவியாரும் சென்றோம். அதற்கு முன்பு முருகனின் முதல் படைவீட்டை தரிசித்துவிடலாம் என்று திட்டமிட்டோம். பசுமலையைத் தாண்டி இரயில்த்தடத்திற்கு மேல் செல்லும் பாலத்தில் ஏறி இறங்கியவுடன் கோவிலின் தோரண வளைவைச் சென்றடைந்த பொழுது காலை 8:00 மணி. அப்பொழுதே நல்ல கூட்டம். வண்டிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. போலீசார் மைக்கில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.

“இங்கே திரும்பாதீங்க. நேராப் போயி தெப்பக்குளம் பார்க்கிங்குப் போங்க.”

நாங்கள் அப்படியே கிரிவலப் பாதையைச் சுற்றி வந்து சரவணப் பொய்கை அருகில் இருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வண்டியை அமர்த்தினோம். அங்கிருந்து நடந்து கோவிலுக்கு சென்றடைந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டமோ கூட்டம்.‌

“ஏங்க. உள்ள போனா பிழிஞ்சிருவாங்க போலயே.”

பொதுவாகவே கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் விசேஷம் ஏதும் இல்லாத சாதாரண நாளைத் தேர்ந்தெடுத்து அமைதியாகக் கடவுளைக் கண்டு தியானித்து வரவேண்டும் எனும் கொள்கை உடையவன் நான். இத்தனை மக்களின் இரைச்சலில், உடன் கோவில் பணியாளர்களின் அதட்டல்கள் சேர நாடி வந்த மன அமைதி கிடைக்குமா என்ன?

“ஆமாமாம். கல்யாணம் பத்தரை மணிக்குத்தான். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. என்ன செய்யலாம்?”

“இங்கே பக்கத்தில சோமப்பர் ஜீவசமாதி ஒன்னு இருக்கு. ரொம்ப அழகான இடம். நாம அங்கே போய் அமைதியா தியானம் செஞ்சுட்டு வரலாம்.”

சித்தர்கள் தங்கள் உயிர் பிரிவதை முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள், அறிவித்தும் விடுவார்கள். அவர்களுக்கு சமாதி கட்டப்படும். அதில் அமர்ந்தபடியே உயிர் துறப்பார்கள். அதன் மேல் கோவில் கட்டி ஏதேனும் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். அங்கு வரும் பக்தர்களுக்கு சித்தர்கள் சூட்சுமமாய் அருள் பாலிப்பதாக நம்பப்படுகிறது. இது போன்ற இடத்திற்குச் செல்லும்பொழுது
நேர்மறையான சிந்தனைகள் ஏற்படுவதாகவும், பிரச்சனைகளுக்குத் தீர்வும் கிடைப்பதாகவும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அலைபேசியை உயிர்ப்பித்தேன். Mapplsல் தேடினேன். உடனே அது காண்பித்து விட்டது. வண்டியில் சென்றால் 8 நிமிடங்கள் ஆகும் என்றும் நடந்து சென்றால் 22 நிமிடங்கள் ஆகும் என்றும் சொல்லியது.

“நமக்குத்தான் நேரம் இருக்குல்ல. நடந்தே போவோம்.”

“கொஞ்சம் மலையில ஏறணும். அக்சுவலா கோவில் வாசல் வரை வண்டி போறதுக்கு தார் ரோடே இருக்கு.”

“பரவால்ல நடந்து போவோம். வா. “

“இன்னைக்கு பண்ண வேண்டிய நடைப் பயிற்சியை முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க. இனி நான் உங்களை மாத்த முடியாது. வாங்க நடப்போம்” என்றாள் மனைவி சிரித்துக் கொண்டே.

தோரண வளைவில் நுழையாமல், பாலத்தை ஒட்டி இடது புறத்தில் பயணித்தால் அருள்மிகு சோமப்ப சுவாமிகள் ஜீவசமாதியை அடைந்து விடலாம்.

இந்த இடம் திருக்கூடல் மலை எனப்படுகிறது. அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அங்கிருந்து மேலே செல்ல வண்டிகளுக்கான தார் சாலையும் நடந்து செல்ல மற்றொரு பாதையும் இருந்தன. இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் திரும்பி வந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தினார்.

“வணக்கம் சார்.”

தான் ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிநிதி என்றும் என்னை முன்பு சந்தித்துள்ளதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். (மன்னிக்கவும், பெயரை மறந்து விட்டேன்)

“நான் அடிக்கடி வருவேன் சார். உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும். மேலே முருகன் கோவிலும் பெருமாள் கோயிலும்கூட இருக்கு. “

இந்த விஷயத்தை என் மனைவி அறிந்திருக்கவில்லை.

நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு பிரமாண்ட அனுமாரைக் கண்டோம். வெகு விரைவில் கோவிலையும் அடைந்து விட்டோம். எங்களைத் தவிர்த்து இரண்டே பேர் இருந்தனர்.

சோமப்ப சித்தரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது அவர் எல்லோரையும் ‘சோமப்பா சோமப்பா’ என்று அழைத்ததால் அவரை சோமப்பசுவாமி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனராம். இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் பக்தர்களின் நோய் நொடிகளுக்கு சோமப்பர் நல்ல தீர்வுகளைத் தருவதாக நம்பிக்கை.

அங்கிருந்த லிங்கத்தை வழிபட்டு, கோவிலைச் சுற்றி விட்டு, சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டோம்.

பின்னர் கோவிலின் பின்புறமாக அமைந்துள்ள படிகளில் ஏற ஆரம்பித்தோம். சரிவுப் பாதை மற்றும் படிகளான பாதை என்று இரு பிரிவுகளாகவும் இடையில் பிடித்து நடந்து செல்ல இரும்புக் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூரம் சிறிது என்றாலும் பாதை செங்குத்தாக மேல் ஏறியதால் சற்று மூச்சு வாங்கியது. மூட்டு வலி உள்ளவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சற்று சிரமம்தான். ஏற ஏற சுற்றிலும் நம் மதுரை நகரை நாம் பார்க்கும் விட்டம் விரிய விரிய, காட்சிகளை ரசித்துக்கொண்டே நடந்தோம். அப்பாடா கோவில்கள் தெரிந்துவிட்டன. அந்த குன்றின் உச்சியில் ஒருபுறம் முருகன் கோவிலும் மறுபுறம் பெருமாள் மற்றும் சிவன் கோவிலும் உள்ளன. சமீபத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால் கோபுரங்கள் பளபளவென பிரகாசமாக இருந்தன.

படிகளில் சில நிமிடங்கள் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.

ஆஹா என்ன ஒரு அமைதியான அழகான இடம். நான்கு பக்கங்களிலும் திறந்த வெளியான செவ்வக வடிவிலான ஒரு மண்டபம் அது. ஒரு பக்கத்தில் முருகனின் கருவறை. சிலு சிலுவென காற்றடிக்க கீழே வீடுகள், வயல்வெளிகள், பாலங்கள், ஏரி, தூரத்தில் யானைமலை என்று எல்லாமும் கண்முன் விரியப் பரவசமாக இருந்தது.

அழகான நீண்ட மயிலைக் கண்டுவிட்டு எதிரே இருந்த முருகனை தரிசிக்கலானோம். பழனியில் நாம் காணும் அதே உருவம். நெஞ்சுப் பகுதியும் முகமும் திருநீறால் நிறைந்திருந்தது. அதை மீறி எங்களைக் கண்டு புன்னகைத்தான் முருகன். பதிகம் பாடி பூசாரி தீபத்தைக் காட்ட சிலிர்த்துடன் வணங்கினோம். பின்னர் அவர் சொன்னார்,

“இந்த இடம் போகர் தவம் செய்த இடம். இந்த மூர்த்தி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது. இதனை ஏற்பாடு செய்தவர் மாயாண்டிச் சித்தர். இந்த இடத்தைத் தென்பழனி என்று சொல்வார்கள்.”

மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து அமைதியாகத் திருப்புகழ் அல்லது கந்தர் சஷ்டி கவசம் பாடிவிட்டு இந்த அழகனை தரிசித்துவிட்டுச் சென்றால் மனம் அமைதியடையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இரண்டு கோயில்களுக்கும் அவரே பொறுப்பாளர். ஆகையால் எங்களை அழைத்துக் கொண்டு அடுத்த கோவிலுக்குச் சென்றார். அங்கு வடக்குநோக்கியிருந்த சயனப்பெருமாளைத் தரிசித்தோம். பெரும்பாலான இடங்களில் பெருமாள் நின்று கொண்டோ அமர்ந்துகொண்டோதான் இருப்பார். பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளைப் பார்த்தவுடன் மறுபடியும் சிலிர்ப்பு ஏற்பட்டது.

“இங்கே பெருமாள் படுத்திருக்கார். கண் மூடலை. மேல ஆகாசத்தப் பார்த்தபடி இருக்கார். திருவனந்தபுரத்தில இருக்கிற பத்மநாபசுவாமியின் சிறிய வடிவம் தான் இது”

அங்கேயே மற்றொரு கருவறையில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள்.

“மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது” என்றார் பூசாரி.

இந்தக் கருவறையின் பின்புறம் சென்றால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு இடையில் திருப்பரங்குன்ற கோவிலின் பிரதான கோபுரம் தெரிகிறது. செப்பனிடும் பணி நடைபெறுவதால் அது பச்சை ஆடை போர்த்தப்பட்டு இருந்தது.

திரும்பி இறக்கத்தில் நடப்பது எளிதாக இருந்தது. ஆனால் பாதை வளைந்து வளைந்து செல்வதால் கவனம் தேவை. குழந்தைகளுடன் சென்றால் அவர்களைத் தனியாக விடாமல் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்குவது பாதுகாப்பானது.

“ஏங்க. நம்மள மதுரைக்காரங்கன்னு சொல்லிக்கிறோம். இப்படி ஒன்னு இருக்குன்னு இது வர தெரியாமலேயே இருந்துட்டோமே. “

“இப்பத் தெரிஞ்சுகிட்டோம்ல. சந்தோஷப்படுவோம்.”

ஆக ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற நாங்கள் மனம் நிறைந்துத் திரும்பினோம்.

பி.கு. இந்த இடத்தைப் பற்றி நான் வலைதளத்தில் தேடிய பொழுது, ஹலோ எஃப்எம் டைரி செல்வா அவர்கள் ஏற்கனவே பதிவிட்டிருந்த ஒரு காணொளியைக் காண நேரிட்டது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

madurai anusham foundation prayer - 2026

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய மதுரை எஸ்.எஸ்.
காலனியில் உள்ள ஶ்ரீ மஹாபெரியவர் கோவிலில் அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறுவர் சிறுமியர் பெண்கள் முதியோர் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்
இந்த நிகழ்வில், திரளானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

kamaraj university workers - 2026

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பேராசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வூதியர்கள் பதிவாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்தும்,பதவி உயர்வு வழங்கப்படாததை கண்டித்தும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் ஒய்வூதியர்கள் சங்கத்தினர் இணைந்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு பதவி உயர்வு, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் மற்றும் பென்சனர் சங்கம் மதுரை பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி அலுவலர் நலச் சங்கம் மற்றும் அலுவலர் சங்கம் இணைந்து பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது

அதனைத் தொடர்ந்து , பல கட்டபோராட்டம் நடத்திய பல்கலைக்கழக போசிரியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம் போராட்டம் நடத்தினர்.
பல்கலை நிர்வாகம் ஊதியத்தை வழங்க தொடர்ந்து கால தாமதப்படுத்தி வருவதாகவும் அதனால் இன்று பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து போராட்டக் குழுவின் இடம் பேச்சுவார்த்தை நடத்திய பதிவாளர் ராமகிருஷ்ணன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

ஆனால் ,அதற்கான உத்திரவாதம் வழக்க வேண்டும் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர் சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், பதவி நிலை உயர்வு விவகாரத்தில் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த பதிவாளர், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் இதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

மேலும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை பரிசீலிக்க வேண்டிய முக்கிய அதிகாரியை சந்திக்க வில்லை என்பதும் அதன் விளைவாக, எந்த ஒரு நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

ஊதியம் பெற அரசால் விதிக்கப்பட்டுள்ள பல நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தாலும், அந்த நிபந்தனைகள் என்னவென்பதற்கான தெளிவும் வழங்கப்படவில்லை.

இதனால், பேரரசிரியர்கள், ஒய்வூதியர்கள ஊதியம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் பதவி உயர்வும் ஊதியமும் கிடைக்கும் வரை நாங்கள் இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

air india flight collapsed in ahmedabad - 2026

கனவுக்கோடு கலைந்தது, போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது.!

நேற்றைய விமான விபத்து நம் இந்திய தேசத்தை உலுக்கி இருக்கிறது. ஏர் இந்தியா டாட்டா குழுமத்திடம் வந்த பிறகு நடந்த முதல் பெரும் விபத்து இது. பாதுகாப்பான விமான ரகம் என பெயர் வாங்கிய அமெரிக்க போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ட்ரீம் லைனர் 787-8 ரகத்திலான இந்த விமானம் இந்தியாவில் விபத்தில் சிக்கிய முதல் விமான ரகம். 11 ஆண்டு பழையது என்கிறார்கள். ஆனால் விஷயம் அதில் இல்லை.

நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது எனப் பெருமை கொண்ட இந்த ரகம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் போதிய பராமரிப்பு நேரம் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுவில் நீண்ட தூர பயணத்திற்கு பயன் படுத்தப்படும் விமானங்களை … அதிலும் குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமானங்களை உள்நாட்டு பயணித்தில் அவ்வளவாக பயன்படுத்திட மாட்டார்கள். ஆனால் இந்த விமானம் தில்லியில் இருந்து அகமதாபாத்திற்கு உள்நாட்டு பயணிகள் விமானம் ஆக பயன் படுத்தி வந்திருக்கிறார்கள். பிறகு இங்கிருந்து….. அதாவது அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்று அங்கிருந்து கோவாவிற்கு வர வேண்டும் . பின்னர் மீண்டும் இது புதுதில்லி நோக்கி உள்நாட்டு பயணிகள் விமானமாக பயணிக்கும். சமயத்தில் கோவாவில் இருந்து மங்களூர் அல்லது ஹைதராபாத் சென்று விட்டு மீண்டும் தலைநகர் புதுதில்லி நோக்கி புறப்படும்.

இதனால் இதற்கு போதிய பராமரிப்பு நேரம் ஒதுக்கப்படவில்லை என்கிறார்கள்.

விமானத் துறை வட்டாரங்களில்… ஓர் விமானத்தின் பயண நேரம் மற்றும் பயண இடைவேளைகளை முறையாக கண்காணிக்க அமைப்புக்கள் உண்டு என்கிறார்கள்.

ஒவ்வொரு விமான ரகத்திற்கும் வெவ்வேறான பராமரிப்பு கால அட்டவணை பயண நேரத்திற்கு ஏற்ப மாறுபடும் என்கிறார்கள்.

உலக அளவில் இதே ரகத்திலான போயிங் நிறுவனத்தின் ட்ரீம் லைனர் விமானங்கள் வெவ்வேறான காலப் பகுதியில் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் உண்டு. ஆனால் நேற்றைய தினம் நடந்தது போன்ற விபத்து அதன் வரலாற்றில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.

ஏனெனில்… இந்த ரகத்திலான விமானங்கள் ஒற்றை இஞ்சினால் அதன் முழு கொள்ளவுடன் தாங்கி பிடித்து பறக்கும் திறன் கொண்ட அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான நேக்ஸட் ஜெனரேஷன் என்கிற அடையாளக் குறியீடு கொண்ட GEnx இஞ்சின் ரகம் கொண்டது.

இது 2011 ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரையில் அதாவது மே மாத நிலவரப்படி சுமார் 1189 விமானங்கள் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து இருக்கிறார்கள். இவை போக புகழ் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இஞ்சின் ரகமும் இந்த ட்ரீம் லைனரில் பயன் படுத்தப்படும்.

ஆனால் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இஞ்சின்களை கொண்ட விமானங்கள் இதுவரையில் விபத்தில் சிக்கிய தே இல்லை….. நேற்றைய சம்பவம் தான் முதல் தடவை என்பது தான் நெருடலாக மாறி நிற்கிறது.

விமானத்தை இயக்கிய விமான பைலட்டுகள் அனுபவ முதிர்ச்சி கொண்டவர்கள். இருவரில் ஒருவருக்கு 8000 மணி நேரத்திற்கு மேலாக பறத்தல் அனுபவமும் மற்றொருவருக்கு 1800 மணிநேர பறத்தல் அனுபவமும் உள்ளது.

வெளிநாடுகளில் இந்த ரக விமானங்களை இயக்க குறைந்த பட்சம் 300 மணி நேர பறத்தல் அனுபவமே போதுமானது என இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறார்கள் காரணம் அத்தனை தூரம் விமானம் நவீனமயமானது. இதன் கணினி அமைப்புகள் சுமார் பன்னிரண்டு நிமிஷத்தில் கிட்டத்தட்ட 20,000 அலாக்கிரதங்களுடன் சோதனை செய்ய வல்லது.சின்ன தவறுகளையும் காட்டிக் கொடுக்க வல்லது.

இரட்டை இஞ்சின் சக்தி கொண்டு இதில் பறவை மோதினாலும் தொடர்ந்து பறக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில் இது அளவில் பெரிய விமான இஞ்சின் கொண்டது.

நேற்றைய தினம் பறந்த விமானத்தில் பறவை மோதல் நடக்கவில்லை.

விபத்து டேக் ஆஃப் நடந்த மூன்று நிமிடத்திற்குள் நடந்திருக்கிறது, தவிர…. இது அருகில் உள்ள நான்கு மாடி கட்டிடங்கள் மேல் பொதிந்துள்ளது. இதனால் மட்டுமே எமெர்ஜென்சி கதவுக்கு அருகில் இருந்த 11A இருக்கை பயணி வெளியே குதித்து தப்பித்து இருக்கிறார். இவர் அந்த மாடியில் குதித்து தப்பித்து படி வழியே இறங்கி நடந்து வந்து ஆம்புலன்ஸ் ஏறியது தான் ஹை லைட்.

என்ன நடந்தது இந்நிகழ்வில்…….?!?!

எதேச்சையாக மாடியில் இருந்து.. அதாவது அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு அருகில் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஒருவரது செல்போனில் விமான பறத்தலை படமாக்கப்பட்டது வைரல் ஆனது. இது அந்த விமான விபத்து வரை நீள்கிறது. அதில் தெளிவாக தெரிகிறது விமான இஞ்சின் முறையாக இயங்கி இருப்பது தொழில்நுட்பவியலாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆக இஞ்சினில் கோளாறு இல்லை.பறவை மோதல் நடக்கவில்லை 800 அடிக்கு மேல் பறக்கவில்லை.டேக் ஆஃப் ஆன மூன்று நிமிடங்களுக்குள் விபத்து நடந்திருக்கிறது. மே டே அறிவிப்பு வெளியிட்ட 28 விநாடிகளில் விபத்து நடந்திருக்கிறது.கட்டிடதத்தின் மேல் விமான பொதிந்த பத்து விநாடிகளுக்கு பிறகு தீப்பற்றி எரிந்திருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் அந்த பயணி வெளியே தப்பிக்க முடிந்திருக்கிறது.

இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது….. விமானம் ஸ்டால் ஆனதற்கு… அதாவது பறக்காமல்… மேல் எழும்பாமல் விழ்ந்தற்கு அதன் ப்ளாப் அமைப்பே முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…

அதாவது இந்த அமைப்பு விமான இரக்கை பகுதியில் மேல் கீழாக அசையும் பண்புகளை கொண்ட ஒன்று. ஓடுபாதையில் ஓடும் வரை இந்த ப்ளாப் கீழ் நோக்கி இருக்கும்…இது விமானம் மேலெழும் உந்து விசையை கூடிக் கொடுக்கும். ஓடுபாதை விட்டு மேலேறியவுடன் மேல் நோக்கி திரும்பி விமானம் மேலும் மேல் நோக்கி பறக்க உதவும் அமைப்பு இது விமான கியரோடு பொருந்தி இருக்கும் தொழில்நுட்ப பண்புகளை ஒருங்கே அமையப்பெற்றதாகும்.

நேற்றைய தினம் இந்த அமைப்பு மேல் நோக்கி பறந்த சமயத்தில் போதிய உந்து விசை கிடைக்காமலும் மேல் நோக்கி திரும்பி நிலையில் லாக் ஆகி இருக்கிறது.

இது தான்…. இந்த நிலை தான்…. விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

ஒரு வேளை இந்த மேலேயே லாக் ஆகாது இருந்திருந்தால்….. விமானியால் இதை கையாண்டு சரிசெய்து இருக்க முடியும்….. அந்த ப்ளாப் ஐ மீண்டும் கீழ் நோக்கி வைத்து உரிய உந்து விசை கொடுத்து மேலேற்றி இருக்க முடியும்…. பைலட்டுகளுக்கு இதில் உரிய பயிற்சி கட்டாயம் இருக்கும்.

அப்படி இருக்க இந்த ட்ரீம் லைனர் விமானத்தின் தானியங்கி முறைமைகள் இதற்கு அனுமதிப்பதில்லை.

நேற்றைய சம்பவத்திற்கு இதுவே முழுமுதற் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

இதற்கு ஆதாரமாக…… விமானம் கட்டிடத்தின் மேல் பொதிந்துள்ளதால் இந்த ப்ளாப் மேல் நோக்கிய வண்ணமே இருப்பது மிக நன்றாகவே காணக் கூடியதாக இருக்கிறது. உடனடியாகவே இதன் கருப்பு பெட்டி கைப்பற்றி ஆய்வுகளுக்காக கொண்டு சென்று இருக்கிறார்கள். போயிங் நிறுவனத்தின் பொறியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார்கள்.அவர்களும் இந்த தகவல்களை இன்று அதிகாலை ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள்.

விபத்தாக இருப்பதற்கே வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதேசமயம் இது தொழில்நுட்ப பண்புகளால் தான் நடந்திருக்க முடியும்.அதே சமயம் இது நுட்பமான நுணுக்கமான தவறாக அவதானிக்கப்படுகிறது.

ஆனால் இங்கு மற்றோர் விஷயமும் அவதானிக்க வேண்டி இருக்கிறது.

இதற்கு அடுத்த அதாவது இந்த ட்ரீம் லைனர் விமான ரகத்தை தொடர்ந்து இதே போயிங் நிறுவனத்தின் புத்தம் புதிய 737 மாக்ஸ் ரகத்திலான விமானங்கள் வரிசையாக விபத்தில் சிக்கிய சம்பவத்தில் …….. இந்த விபத்துக்கள் அனைத்தும் பைலட்டுகளின் கட்டுப்பாட்டிற்கு அடங்காத தானியங்கி முறையில் டேக் ஆஃப் செய்யும் போது நடந்த விபத்துக்களாகவே அமைந்தது. தானியங்கி தன்மையே காரணமாக கண்டறியப்பட்டது. இதே நோஸ் டெயில் கியர் லாண்டிங் பிரச்சினை தான்.

இந்த ஒரு பிரச்சினை போயிங் நிறுவனத்தையே திருப்பி போட்டது. ஒட்டுமொத்த போயிங் நிறுவனத்தையே இழுத்து மூட வேண்டிய நிலைமைக்கு போனது. ஒட்டுமொத்தமாக போயிங் 737மாக்ஸ் விமானங்களை தரை இறக்க அமெரிக்கா FAA தயவு தாட்சண்யம் பார்க்காமல் தடை விதித்தது. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்டரேஷன் என்பதின் விரிவாக்க சுருக்கம் தான் FAA.

அப்போது டொனால்ட் ட்ரம்ப் தான் அமெரிக்க அதிபர். இப்போதும் அவரே அமெரிக்க அதிபர். நிறுவனமும் அதே போயிங். பிரச்சினை கிட்டத்தட்ட அதே போன்றதொரு சமாச்சாரம். விவகாரம் முற்றி ட்ரீம் லைனர் மாட்டியது என்றால் சர்வ நிச்சயமாக போயிங் மூடு விழா கண்டுவிடும். தற்சமயம் அமெரிக்க இந்திய அரசியல் உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. இங்கு மற்றோர் விஷயமும் கவனிக்க வேண்டும். இதே போயிங், டாட்டா குழுமமும் இணைந்து பல்வேறு விமான கட்டமைப்புகளில் பெரும் முதலீடுகள் செய்து வர்த்தக பங்களிப்பை அது கொண்டு இருக்கிறது.

தற்போதைய நிலையில் இது டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அட்டகாசமான துருப்பு சீட்டு.

அதன் பொருட்டே போயிங் நிறுவனம் முந்தி வந்து நிவாரண தொகையை அறிவித்திருக்கிறார்கள்.அது கை கொடுக்குமா என்பது போகப் போக தான் தெரியும்.

நேற்றைய விமான விபத்து மிகப் பெரிய வர்த்தக லாபியை உண்டு பண்ணி விட்டது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொண்ட குஜராத் மாநில அரசு அதன் முன்னாள் முதல்வரை இந்த விபத்தில் பலி கொடுத்து இருப்பதால் துக்கம் அனுஷ்டித்து வருகிறது. காலவரை இன்றி விமான நிலையத்தை மூடி வைத்து இருக்கிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை ….. பயணிகள் மட்டுமன்றி விமானம் விழுந்த கட்டிடத்தில் மருத்துவம் கல்லூரி மாணவர்களும் இந்த விபத்தில் சிக்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் மீட்க பசுமை சாலையை விபத்து நடந்த நாற்பது நிமிடத்தில் ஏற்படுத்தி தந்திருக்கிறது அரசு நிர்வாகம்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூன்று தொகுப்பு ஆட்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.

RSS சம்பவம் நடந்த ஒன்றரை மணி நேரத்தில் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.உயிர் பலி 300 ஐ தாண்டிடக்கூடாது என்பதே அனைவரது பிராத்தனை. அதிகாலை நேரத்தில் அனைத்தும் முடிந்ததாக சொல்கிறார்கள்.

இரங்கலுடன்…… காலம் பாராது களத்தில் உழன்ற தன்னார்வலர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.வருத்தங்களுடன்…..

– ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

air india flight collapsed in ahmedabad - 2026

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI171 விமானம் (போயிங் 787 டிரீம் லைனர்) 2025 ஜூன் 12 இன்று பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்ட மூன்று நிமிடங்களில், அதாவது 1:38 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து மேகானி நகர் என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 12 ஊழியர்கள் உட்பட 242 பயணிகள் இருந்தனர், அதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகல் நாட்டவர்கள் மற்றும் ஒரு கனடியர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் பெரும் கரும்புகை வெளியேறியது, மேலும் 133 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது..

விமானி, விமானம் ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும் வகையில் “மே டே” என்ற அவசர சமிக்ஞையை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியதாகவும், அதன் பின்னர் விமானம் தொடர்பை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டேக்-ஆஃப் சமயத்தில் நிகழ்ந்த முதல் விமான விபத்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது, மேலும் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விமான விபத்து புலனாய்வு பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏர் இந்தியா 1800-5691-444 என்ற எண்ணையும், பிரிட்டன் அரசு 020-7008-5000 என்ற எண்ணையும் அறிவித்தன. மேலும், 011-2461-0843 மற்றும் 96503-91859 ஆகிய எண்களும் அவசர உதவிக்காக வழங்கப்பட்டன

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

annamalai in trichy meeting - 2026

”மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்” என தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 

கட்டணமின்றி பஸ்களில் பயணம் செய்யும் மகளிரை ‘ஓசி’ என்று தி.மு.க.,வைச் சார்ந்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியும்  இதே போன்று பஸ்களில் கட்டணமின்றி பயணிப்போரை ‘ஓசி’ என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் ‘ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க’ என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், தி.மு.க., மூத்த அமைச்சர் துரை முருகன் ‘அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000’ என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை ‘ஓசி’ என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!

ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பஸ்களை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ தி.மு.க., தலைவர்கள் காட்டாதது ஏன்?

அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும். – என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது…

பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.

மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் சொல்வது என்ன?

upi 1 - 2026

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று, மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. செய்தி ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு எதிராக அமைச்சகம் விளக்கத்தினை வெளியிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்” என சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தவறானது என்றும், அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் வணிக கணக்குகளுக்கும் பரிவர்த்தனை கட்டணம் (MDR) எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்திகளில், ₹2,000 அல்லது ₹3,000க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணக்கள் வசூலிக்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு இந்தத் தகவல் உண்மையல்ல என்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

இது குறித்து நிதி அமைச்சகம் கூறியது:

“UPI பரிவர்த்தனை முறையில் எந்தவிதமான கட்டணமும் இன்றைய நிலவரப்படி விதிக்கப்படவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசின் திட்டம் தொடர்ந்து செயல்படும்.”

NPCI (நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) தரவுகளின்படி, மாதத்திற்கு 100 கோடிக்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கட்டணமில்லாத முறையே இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.