Home Blog Page 80

‘விஸ்வகுரு பாரதம்’ என்ற உயர் லட்சியம்!

hindu
ohm

சாந்தி சாந்தி சாந்தி:

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சில காலமாக நம் தேசத்திலும், உலகத்திலும் நேர்ந்து வரும் விபத்துகள் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அகமதாபாத்தில் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் திடீரென்று விபத்துக்குள்ளாகி நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு கணத்தில் எரிந்து சாம்பலான செய்தி இடி போல விழுந்து இதயத்தைத் துயரத்திற்குள்ளாக்கியது. அவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்க வேண்டும் என்று பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்வோம்.

அது விபத்து அல்ல என்றும் நம் தேசத்தை கலவரத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பகை நாடுகளும், அவர்களுக்கு உதவும் நம் நாட்டு தேச துரோகிகளும் செய்த சதியின் ஒரு பகுதி என்றும் அறிஞர்கள் தெளிவாக்கி வருகிறார்கள். இதற்குச் சிறுது காலம் முன்பு பஹல்காம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நம் தேசம் திருப்பியடித்த ‘சிந்தூர பதில்’ உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பாரததேசம் விரைவாக முன்னேற்றப் பாதையில் பயணித்து, முன்னேறிய நாடுகளின் சார்போ, தேவையோ இல்லாமல் தன்னாட்சி அதிகாரத்தோடு உயர்ந்த நிலையைப் பெறும் என்பது உறுதியாகி உள்ளது. இதனைச் சகிக்க இயலாமல், ஒவ்வொரு நிலையிலும் தென்படும் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நிகழும் புதுப் புது தாக்குதல்களைப் பார்க்கிறோம்.

மறுபுறம், சில தேசங்களின் இடையே கடுமையான முறையில் போர் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ஜோதிட வல்லுனர்களும் இறையியலாளர்களும் தேசத்திலும் உலகத்திலும் இதுபோல் இன்னும் பல விபத்துகள் நடக்கலாம் என்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்துகிறார்கள். மக்களிடம் பரபரப்பை தூண்டும் செய்திகளைப் பரப்பி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இவ்வாறு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுபவர்களில் உண்மையான, நிர்மலமான உள்ளம் கொண்ட சில அறிஞர்களும் மகாத்மாக்களும் இருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் எச்சரிக்கை அளிக்கையில், ‘கவனமாக இருக்க வேண்டும் என்றும், தர்மத்தைக் கடைப்பிடித்து உலக நலனுக்காக தெய்வ பிரார்த்தனையில் ஈடுபடுமாறும்’ சிறந்த செய்தியை அளிக்கிறார்கள்.

அனைத்தையும் கவனித்த பின், இந்தச் சூழ்நிலையில் நம்முடைய கடமை என்ன என்று சிந்தித்துப் பார்க்கும் போது, நம் சாஸ்திரங்கள் இப்படிப்பட்ட விபரீதங்களுக்குப் பரிகாரமாக நாம் செய்ய வேண்டிய உபாயங்களைக் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.

தேவி மகாத்மியத்தில் (சண்டி/சப்தசதி) இத்தகு சூழலுக்கான சுலோகங்கள் உள்ளன.

தேவி, பிரபன்னார்த்தி ஹரே, ப்ரஸீத |
ப்ரஸீத விஸ்வேஸ்வரி பாஹி விஸ்வம் ||
சர்வ பாதா ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி |
ஏமவேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்
||

இப்படிப்பட்ட அற்புதமான கருத்துகள், மகிமை பொருந்திய நூல்களில் உள்ளன. மூவுலகங்களிலும் இப்படிப்பட்ட பேரிடர்களோ, பேரழிவுகளோ நடவாமல் காக்கும்படியும், நெருப்பு, காற்று, நீர் இவற்றால் விபத்துகள் ஏற்படாமல் பாதுக்காக்கும்படியும் உலக நலனை விரும்பி, லோக க்ஷேமத்தை நிலைகுலையச் செய்யும் அசுரர்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும் ரிஷி, முனிவர்களும், தேவதைகளும் பராசக்தியை பிரார்த்தனை செய்யும் சுலோகங்கள் இவற்றில் உள்ளன. இந்த நூலை முழுவதுமாகவோ அல்லது சப்தஸ்லோகி போன்ற முக்கியமான சுலோகங்களையோ நித்தியம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ துர்காதேவியின் நாமங்களை நிரந்தரம் படிக்க வேண்டும். தேச நலனை விரும்பிச் செய்ய முடிந்தவர்கள் சாஸ்த்ர விதிப்படி தேவி ஹோமங்களை நடத்த வேண்டும்.

விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் ஆகியவற்றின் பாராயணம், மகாசுதர்சன ஹோமங்கள் போன்றவை நடைபெற வேண்டும். அத்தனை பெரிய விதிகளைச் செய்ய இயலாதவர்கள் இறை நாமங்களை நிரந்தரம் நினைக்க வேண்டும். ஸ்ரீ ராம நாமம், ஒரு மகா ரக்ஷா கவசமாக வேலை செய்யும். முடிந்தவரை ஒவ்வொருவரும் இந்த ‘லிகித’ ஜபத்தைத் தொடர்ச்சியாக எழுதி வர வேண்டும்.

ருத்ராபிஷேகம், ருத்ர ஹோமங்கள் சாஸ்திர சம்பிரதாய முறையில் நடக்க வேண்டும். அதேபோல், சிவ நாமங்களை ஜபம் செய்து, பக்தியோடு இயற்கையின் நலனுக்கும் தேசத்தின் சௌபாக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஆலயத்திலும் தேச நலனுக்காகவும், சகல மானுட ரட்சணைக்காகவும் பிரத்தியேக பூஜைகள் நடத்த வேண்டும்.

‘தெய்வ பலம்’ இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது. சமுதாய பாவங்களின் பலனாக நெருக்கடிகளும், ஆபத்துக்களும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆஸ்திகர்கள் அனைவரும் தரம்த்தைக் கடைப்படித்து, தூய்மையாக இருந்து, பரமாத்மாவை பிரார்த்தனை செய்தால் இவற்றின் கடுமையைக் குறைப்பது சாத்தியமாகும்.

எது எப்படியானாலும், இறுதி வெற்றி பாரத தேசத்துடையதே. நம் தேசம் மிக உயாரந்த நிலையில் ‘விஸ்வகுரு’ என்ற ஸ்தானத்தை திடமாக அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குள் நிலமை மோசமாகாமல் நாமனைவரும் நம் பங்குப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஜூலை, 2025)

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (53): குண்டதாரோபாஸ்தி ந்யாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 53

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

  1. குண்டதாரோபாஸ்தி ந்யாய:

குண்டதாரா- ஒரு யக்ஷனின் பெயர் (குட்டிச் சாத்தான்)
உபாஸ்தி – உபாசனை

பூவுலகில் மனிதர்கள் இருப்பது போல, பிரமமண்டமான விஸ்வத்தில் பல உலகங்களில் யட்சர், கின்னரர், கிம்புருஷர், வித்தியாதரர் போன்ற திவ்ய மனிதர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் மனித இனத்தை விட மேம்பட்ட சக்திகளை பெற்றிருப்பார்கள்.

இவர்களுள் குண்டதாரன், இந்தீவராக்ஷன், கண்டாகர்ணன், மணி பத்ரகன், ஜ்ரும்பகன் போன்ற யட்சர்கள் பிரசித்தமானவர்கள். இவர்கள் எளிதில் மகிழ்ச்சியடைவார்கள். ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிஞ்ஜாசி ஆகியோர் குருமார்களின் மூலம் யக்ஷ மந்திரத்தை பெறுவார்கள். தவத்தின் பலனாலும், தாந்திரிக விதானங்கள் மூலமும் இந்த யக்ஷ தேவதைகளை சந்தோஷப்படுத்தி, வசம் செய்து கொண்டு, தம் கோரிக்கைகளை தீர்த்துக் கொள்வதோடு பரோபகாரமும் செய்துவரும் சமூகநல விரும்பிகள் நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள்.

இந்த நியாயத்தில் குண்டதாரன் என்ற யட்சனின் சிறப்பு கூறப்படுகிறது. ஒரு மனிதன் குரு உபதேசத்தின் மூலம் பெற்ற யக்ஷ மந்திரத்தை சாஸ்த்திரத்தின்படி ஜபம் செய்து குண்டதாரன் என்ற யட்சனை மகிழ்வுரச் செய்து கொண்டான் என்றால், அந்த யக்ஷன் தன் எல்லைக்குட்பட்டு சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தருவான். தன் பக்தன் கேட்ட பெரிய கோரிக்கைகளைத் தன்னை விட பெரிய தேவதைகளின் உதவியோடு நிறைவேற்றுவான். மொத்ததத்தில் குண்டதாரன் என்ற யக்ஷன் நம் வேலைகைளை முழுவதுமாக வெற்றி பெறச் செய்வான். இந்த நியாயம் கூறும் செய்தி இதுவே.

நம் நண்பர்களுள் குண்டதாரன் போன்ற பலர் இருப்பதை நாம் காண முடியும். இது பலருக்கும் அனுபவமே. பிறருக்கு உபகாரம் செய்வதற்கும், தன் உயிர் நண்பர்களுக்கு உதவுவதற்கும், திறமையான நண்பரைக் கொண்டோ, பெரிய அதிகாரிகளின் உதவி பெற்றோ, வேலையை முடித்துக் கொடுப்பார்கள். இதுவே ‘குண்டதாரோபாஸ்தி’ நியாயத்திற்கு எடுத்துக்காட்டு.

பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனம் கொண்டிருக்க வேண்டுமென்றும், தன்னிடம் உதவி வேண்டியவர்களையும், தன் மீது கௌரவ மரியாதை கொண்டவர்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், தன்னால் இயலாவிட்டால் தன் நண்பர்களின் மூலமோ, சமர்த்தர்களின் மூலமோ அந்த வேலைகளைச் செய்து தரும்படியும் ‘குண்டதார நியாயம்’ நமக்கு உபதேசிக்கிறது.

‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ “Where there is a will, there is a way” போன்ற கூற்றுகள் இதையே தெரிவிக்கின்றன. உதவி செய்வதாக வாக்களித்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற உபதேசத்தையும் இந்த நியாயம் தெரிவிக்கிறது. நல்ல மனிதர்களின் இயல்பை பற்றிக் கூறுகையில் பர்த்ருஹரி, பிறருக்கு உதவும் குணத்தை வர்ணிக்கிறார். கேட்டாலும் கேட்காவிட்டாலும் பரோபகாரத்தில் ஈடுபடவேண்டும் என்பது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், இயற்கை போன்றவை கற்பிக்கும் பாடம்.

மேகம், கோடிக்கணக்கான மக்கள் அனைவருக்கும் வேறுபாடின்றி தண்ணீரைப் பொழிகிறது. சமுத்திரம் சூரியனின் உதவியோடு உலகிற்கு நீரை அளித்தாலும், மேகம் நீரளிக்கும் கொடையாளியாகப் பெயர் 8பெறுகிறான் என்று சமத்காரமாக சுபாஷிகம் பாடினார் கவி. ‘குண்டதார’ நியாயத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ரகுவம்சத்தில் ஒரு காட்சி. ‘விஸ்வஜித்’ என்ற யாகம் செய்த ரகுமஹாராஜா தன்னிடமிருந்த செல்வமனைத்தையும் தானம் செய்துவிட்டார். செல்வமற்று இருந்த ரகு மகாராஜாவிடம் வந்த ‘பரதந்து’ ரிஷியின் சீடரான ‘கௌத்ச’ ரிஷி செல்வத்தை யாசித்தார். தன்னை வரவேற்று, மண் பாத்திரத்தால் அர்க்கியம், பாத்தியம் அளித்த ரகுமஹாராஜாவின் பொருளதார நிலையைக் கவனித்த கௌத்ச ரிஷி, ரகு மஹாரஜாவால் தன்னுடைய கோரிக்கையைத் தீர்க்க முடியாதென்று எண்ணி, வேறு கொடையாளியிடம் செல்ல நினைத்தார். ஆனால், ரகுமஹாராஜா, கௌத்சரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக குபேரன் மீது போர் தொடுக்க முடிவு செய்தார். ரதத்தில் அஸ்திரங்களையும் சஸ்திரங்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது ஆச்சர்யமாக அரசாங்கக் கருவூலத்தில் பொன் மழை பொழிந்தது.

‘பரதந்த’ருக்குக் கொடுக்க வேண்டிய குரு தட்சணை ‘கௌத்ச’ருக்குக் கிடைத்தது. “பூமியானது விருப்பமான திரவியங்களை அளிப்பது அதன் இயல்பு. ஆனால் ரகு மகாராஜா, உனக்கு ஆகாயம் கூட விரும்பியவற்றைப் பொழிந்தது” என்று கௌத்சர் ரகுமஹாராஜாவைப் புகழ்ந்து ஆசீர்வதித்தார். தன்னைச் சரணடைந்தவருக்கு எவ்விதத்திலாவது உதவ எண்ணிய ரகுமஹாராஜா இந்த ‘குண்டதாரோபாஸ்தி’ நியாயத்திற்கு உதாரணம்.

புராண காலத்தில் அற்புதமான மருத்துவ முறைகள் இருந்தன. தொடுதல் மூலமும், எண்ண அலைகள் மூலமும் நோயைக் குணப்படுத்தும் செயல்முறை, மந்திரங்களின் மூலம் தேள், பாம்பு கடித்த விஷத்தை நீங்கும் செயல்முறை போன்றவை பரோபகார சிகிச்சை முறைகள். சித்தர்களும் முனிவர்களும் தம்முடைய தவ சக்தியால் சிகிச்சை செய்த பரோபகார செயல்முறைகள் பல இருந்தன. உலக அளவில் புகழ்பெற்ற ‘ரேக்கி’ சிகிச்சை முறையும் இதற்கு எடுத்துக்காட்டு.

தன்னிடம் பிரார்த்தனை செய்த பக்தனுக்கு வரமளிக்கும் சக்தி தனக்குப் போதாததால் ‘குண்டதாரன்’ என்ற யக்ஷன் தன்னை விட சக்தி அதிகம் கொண்ட தேவதைகளைக் கொண்டு வரமளிக்கச் செய்வது இந்த நியாயத்தின் சிறுப்பு. நல்ல மனிதர்கள் தமக்கு சக்தி இல்லாவிட்டாலும் பிறரைக் கேட்டாவது தேவையானவருக்கு உதவி புரிவர்.

தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர், விபத்துகள் போன்றவை நேரும் போது பாதிக்கப்பட்டவருக்கு உதவும் சேவாபாரதி, ராமகிருஷ்ண மிஷின் போன்ற அமைப்புகள் பல உள்ளன. அவர்கள் செய்யும் சுயநலமற்ற சேவைகளை உற்சாகப்படுத்தி வள்ளல்கள் பொருளாதார உதவி புரிகிறார்கள். அந்த செல்வத்தைப் பெற்று அந்த அமைப்புகள் சமூக சேவை செய்து வருகின்றன. இயல்பாகவே உலக நன்மைக்காக உதவும் அமைப்புகளும், வள்ளல்களும் குபேரனைப் போன்றவர்கள்.

“நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கொடுப்பவர்களைக் காட்டு” என்றொரு முதுமொழி உள்ளது. “பரோபகரமே உயர்ந்த நிலை. சுயநலம் அல்ல. பிறருக்காகவே வாழ வேண்டும்” போன்ற சிறந்த வாக்கியங்களுக்கு ஊக்கம் இந்த குண்டதாரனின் கதை.

ஜனநாயக ஆட்சியா, குடும்ப ஆட்சியா?

emergency period - 2026

ஜனநாயக ஆட்சியா குடும்ப ஆட்சியா?

  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

நெருக்கடி நிலை அறிவிப்பு வெறும் நிர்வாக தவறு அல்ல. மாறாக ஜனநாயக ஆட்சியை விட குடும்ப ஆட்சி உயர்வானதென்று நிறுவுவது ஆகும். காங்கிரஸ் இன்றும் அதை தொடர்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் பக்கசாய்வுடன் செயல்படுவதாக எந்த அடிப்படை ஆதாரமுமின்றி இன்று குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி தான் ஆளும் தெலுங்கானா , கர்நாடகாவில் செய்தியாளர்களையும் சமூக ஊடகவியலாளர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. சில முக்கிய செய்தியாளர்களை பகிஷ்கரிக்கிறது . சிலரை கைது செய்துள்ளது. இவையெல்லாம் வரலாற்றில் அவர்கள் இழைத்த குற்றங்களால் எந்த விதமான குற்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்று தெரிவிப்பதும் மறுப்பதும் மட்டுமன்றி அரசமைப்பு சட்டத்தை மதிக்காமையையும் காட்டுகிறது. அவர்கள் மதிப்பு காட்டுவது உயர்ந்த மாண்புகளின் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை காட்டுவதில்லை. மாறாக அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மதிப்பார்கள் என்பதை காட்டுகிறது.

வென்றால் சரி, தோற்றால் ‘மேட்ச் பிக்சிங்’

தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்போது தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது. மகாராஷ்டிராத்திலும் அரியானாவிலும் தோற்கும் போது தேர்தல் ஆணையம் மேட்ச் பிக்சிங் செய்கிறது என்று குற்றம் சாட்டுவது.

குறுக்கு வழியில்

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் இருண்ட கால வாரிசு என்பதிலிருந்து தப்ப முடியாது. 356 சட்டப்பிரிவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது அவர்களுக்கு சட்ட அரசமைப்பு சட்டத்தின் மீதுள்ள வெறுப்பையே காட்டுகிறது. குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றும் வெறியை காட்டுகிறது.

காங்கிரஸூம் 370 வது சட்டப்பிரிவும்

அம்பேத்கர் இயற்றிய அரசமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரில் பல பத்தாண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் தடுத்த , மற்றும் எஸ் சி , எஸ் டி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்த 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவை நீக்கியதை காங்கிரஸ்காரர்கள் ஏன் எதிர்த்தார்கள் ?

இட ஒதுக்கீடு மத அடிப்படையிலா

அரசமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரான மதரீதியான இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் துடிப்பது ஏன் ? பாஜக அரசமைப்பு சட்டத்தை மாற்ற முனைவதாக ராகுல் குற்றம் சாட்டுகிறார். ஆனால், உண்மையில், அவரது குடும்பமும் கட்சியும் தான் அதை மிதிக்கின்றனர்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்கிய நெருக்கடி கால அறிவிப்புதான் உண்மையில் மேட்ச் பிக்சிங். அது விதிவிலக்காக இல்லாமல் , காங்கிரஸ் ஆட்சி முறையை வரையறை செய்வதாக பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது.

வருத்தமல்ல நியாயப்படுத்துவது

காங்கிரஸ் அந்த இருண்ட காலம் பற்றி உண்மையில் வருத்தம் படுவதாக தெரியவில்லை. மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொடுமைக்குள்ளானவர்களுக்கு மாத ஓய்வுதியும் வழங்க பாஜக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த அரசு ஆணையை பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றுக் கொண்டு, தியாகிகளை ஓய்வூதியத்தை நிறுத்தியது. அதன் மூலம் இருண்ட நெருக்கடி காலகட்டத்தை நியாயப்படுத்தியது.

கண்ணாடியில் காங்கிரஸ் முகம்

அரசமைப்பு சட்ட பாதுகாப்பு தினத்தின் பொன் விழா ஆண்டு அரசமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமல்லாமல் , அதை கொலை செய்துவிட்டு இன்று அதை காப்பதாக நாடகமாடுபவர்களுக்கு உண்மையை எடுத்து அவர்கள் முகத்தெதிரே காட்டுவதாகவும் அமையட்டும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 1-7-25ல் வெளியானதன் தமிழாக்கம்)

ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸ் பேசலாமா?

emergency period - 2026

சாத்தான் வேதம் ஓதலாமா?

ஷெசாத் பூனாவல்லா

தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

ஜூன் 25 தேதியை அரசமைப்பு பாதுகாப்பு தினமாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25 ஆம் தேதியன்று அப்போதைய பிரதமர் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அது நம் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் கருப்பு தினமாகும்.

நாடகம்

இந்திரா காந்தி அரசமைப்பு சாசனத்தை அவமதித்தார். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தார். சர்வாதிகார இருளில் இந்தியாவை மூழ்கடித்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு அமைப்பை அடித்து நொறுக்கிய கட்சி இன்று அரசமைப்பை பாதுகாப்ப போவதாக வேடமிடுகிறது.

தலைச்சுற்றல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இந்த நாளிதழில் (மேட்ச் பிக்சிங் – மகாராஷ்டிரா . இந்திய எக்ஸ்பிரஸ் , ஜூன் 7 தேதி) எழுதிய கட்டுரையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநில தேர்தலின் போது மேட்ச் பிக்சிங்கில் (தேர்தல் முடிவை முன்கூட்டியே தீர்மானித்தல்) ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது பிற்போக்குதனம் தலை சுற்ற வைப்பதாக இருக்கிறது.

ஆன்மாவை நசுக்கியவர்கள்

தற்போதுள்ள ஜனநாயக வழிமுறைகளின் மீது எந்தவிதமான ஆதார மும் இன்றி குற்றம் சாட்டும் ராகுல் காந்தி , தன் சொந்த குடும்பம் மற்றும் குடும்பப் கட்சி நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்து கொன்றதை கருத்தில் கொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.அரசமைப்பின் அடிப்படை பண்புகளின் மீது நடந்த கொடூர தாக்குதல் நெருக்கடி நிலை அறிவிப்பு. அரசமைப்பு உறுதி கூறும் ஜனநாயக குடியரசு என்பதை இந்திரா காந்தி ஒழித்த கட்டினார். அவரது வார்த்தைகள் சட்டமாகின. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

நீதியின் வாய் பூட்டப் பட்டது

கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் நீதித்துறை நிலைநாட்டிய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பு நாடாளுமன்றத் தீர்மானங்கள் மூலம் பொருளற்றுப் போகும்படி செய்யப்பட்டன. இந்திராவின் சொல் சட்டமானது.

42 ஆவது சட்ட திருத்தம் மூலமாக அரசு நிர்வாகம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றானது. நீதிமன்றத்தின் அதிகாரம் அலட்சியப் படுத்தப்பட்டன. அரசு நிர்வாகம் நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றானது.

ஊடக அடக்குமுறை

356 சட்ட பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில் என்றில்லாமல் தன் துதிபாடுகளை உயர்மட்ட நீதிபதிகளாக நியமித்து நீதித்துறையின் சுதந்திர முடக்கப்பட்டது. ஊடகங்களின் வாய் கட்டப்பட்டது. செய்தித்தாள்கள் அரசின் புகழை பாடும்படி கட்டாயப் படுத்தப்பட்டன. மறுக்கும் செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். செய்தி ஊடகங்களின் தணிக்கைக்கு எதிராக ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தலையங்கம் பகுதியை காலியாக விட்டு (வெற்றிடமாக விட்டு) வெற்று தலையங்கத்தின் மூலம் தன் எதிர்ப்பை தெரிவித்தது.

காங்கிரஸ் செய்தது மேட்ச் பிக்சிங் அல்ல கொலை

மேற் சொன்னவை எல்லாம் மேட்ச் பிக்சிங் இல்லை மாறாக ஜனநாயக அமைப்புகளை கொலை செய்வதுதான் என்று ராகுல் காந்தி சொல்வாரா ? இந்திரா ஆட்சியின் வரம்பு மீறல் யாரையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர்களும் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ஒடுக்கப்பட்டார்கள்.பிரபல பாடகர் கிஷோர் குமார் நெருக்கடி நிலையை ஆதரிக்க மறுப்பதற்காக அவரது பாடல்கள் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் தடை செய்யப்பட்டன.

வேட்டையாடப்பட்டவர்கள்

சாதாரண மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், சஞ்சய் காந்தியின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு இயக்கம் என்ற பெயரின் கட்டாய கருத்தடை செய்யப்பட்டனர் . அரசியல் எதிர்ப்பாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அரசியல் ஆர்வலர்கள், செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நெருக்கடி காலகட்டத்தில் சிறையில் இருந்த போது தனது தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட அனுமதி மறுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

ஜெ பி இயக்கம்

காங்கிரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை நடத்திய காந்திய சோஷலிஸ்டான ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற உயர்ந்த தலைவர்கள் குறிவைக்கப் பட்டனர் . ஜே பி இயக்கத்தில் முன்னணி தலைவர்களாக இருந்து காங்கிரஸ் ஆட்சிக்கு , கட்சிக்கு எதிராக செயல்பட்ட முலாயம் சிங் , லாலு பிரசாத் போன்ற சோசியலிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். *

U டர்ன்

இந்த தலைவர்கள் காங்கிரஸின் சர்வாதிகாரத்துக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆனால் இன்று அந்த தலைவர்களும் அவர்களது கட்சிகளும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சொகுசாக இருப்பது ஒரு வரலாற்று சோகம் தான்.

துரோகம்

ஆயிரக்கணக்கானோர் எந்த விசாரணையும் இன்றி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நினைவாக லாலு பிரசாத் தன் மகளுக்கு மிசா என்று பெயரிட்டார். இன்று அப்படியே திரும்பி காங்கிரசுடன் கைகோத்திருப்பது தங்களது கொள்கைகளுக்கு மட்டுமல்ல இவர்கள் பேச்சைக் கேட்டு காங்கிரசின் அடக்கு முறையை எதிர்த்து தியாகம் செய்த எண்ணற்ற இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

ஜூலையிலும் தடம் மாறும் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில்..

மதுரை: மதுரைக் கோட்டத்தில் வாடிப்பட்டி – சோழவந்தான் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்றும் (ஜூலை 1), நாளையும் கோவை – நாகர்கோவில் ரயில் (16322) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

ஜூலை 4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 30ல் செங்கோட்டை – மயிலாடுதுறை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரை வரை சிறப்பாக இயங்கி வந்த ரயில், மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு இட நெருக்கடியால் பயணிகள் தவிக்கின்றனர். எனவே மயிலாடுதுறை வரை வேண்டாம், மதுரை வரையே போதும் என பயணிகள் கூறுகின்றனர்.

செங்கோட்டை- – விருதுநகர் அகல ரயில் பாதையாக்கப்பட்ட பின் 2004 முதல் இந்த வழித்தடத்தில் தினமும் 3 தடவை பயணிகள் ரயில் மதுரைக்கு இயக்கப்பட்டது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் பயனடைந்து வந்தனர்.

2022 முதல் மயிலாடுதுறை – -திண்டுக்கல் ரயிலையும், செங்கோட்டை- – மதுரை ரயிலையும் இணைத்து செங்கோட்டை- – மயிலாடுதுறை ரயிலாக இயக்கினர். தென் மாவட்ட மக்கள் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஒரே ரயிலில் செல்வதற்கு வசதியாக இருந்தது.

ஆனால் நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படாமல் 10 பெட்டிகளாக குறைத்து இயக்கினர். கடும் இட நெருக்கடியில் மக்கள் உயிரை பணயம் வைத்து படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர்

சில மாதங்களாக இந்த ரயில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக அடிக்கடி வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. தென் மாவட்ட பணிகள் மதுரை வந்து, செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால் முன்பு போல் தங்களுக்கு மதுரை வரையே பயணிகள் ரயில் போதும், மயிலாடுதுறைக்கு வேண்டாம்.

தற்போது செங்கோட்டையில் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை வரும் ரயிலை மீண்டும் 5:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை சென்று திரும்பும் வகையில் இயக்க வேண்டும்.

மயிலாடுதுறையில் மதியம் 12:10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயிலை, மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு 7:30 மணிக்கு மதுரை வந்து பின் செங்கோட்டை வரை செல்லும் கூடுதல் ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரதட்சிணைப் பேய்! மனதை உலுக்கும் ரிதன்யாவின் மரணம்!

write thoughts - 2026
#image_title

💔 மனதை உலுக்கியெடுக்கும் ரிதன்யாவின் வாழ்வும் மரணமும்…

ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! இன்று நவீனமாக இருக்கும் பெயரை 27 வருடங்களுக்கு முன்பு 90 களில் ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வைத்துள்ளார்கள் என்பதே அவர்களது பேரன்பிற்கு சான்று.

நல்ல வசதியுடன் வளர்த்த தனது செல்ல மகளை, பெரிய இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று தான் எந்த தகப்பனும் நினைப்பான். அரசியல் பின்புலமிக்க பாரம்பரிய குடும்பம் ! மாப்பிள்ளைக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை, 20 நிமிடப் பயணத்தில் சென்று பார்த்து விடக் கூடிய தூரம். இதை விட என்ன வேண்டும் என்று தான் அவர் நினைத்திருப்பார். ஆகவே தான் சுமார் ஐந்து கோடி செலவில் ஊரே பார்த்து வியக்கும்படி திருமணத்தை நடத்தியுள்ளார் தந்தை ! வால்வோ காரா, தர்றேன் ! மாப்பிள்ளைக்கு பிசினஸ் வைத்து தர வேண்டுமா ! பண்ணிக்கலாம் சாமி ! என அனைத்திற்கும் ஆமோதித்துள்ளார்,

ரிதன்யாவின் திருமண வீடியோவை யூடியூபில் பார்த்தேன் ! இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மணமகள் கிளம்புவது முதல் பல இடங்களில் ரிதன்யாவின் கண்கள் தந்தையைத் தான் தேடுகிறது. ஆனால் அப்படியான பாசக்கார மகள் இன்று இல்லை. காரணம் ஒரு பொன் குஞ்சன்.

கொங்குப் பகுதியை பொறுத்த வரை ஆண் குழந்தை அதிகாரம், வாரிசு, உரிமை. — பெண் குழந்தை என்றால் பாசம், கௌரவம். ஆண் வாடையே படாமல் நல்லபடியாக மகளிர் பள்ளியில் படிக்க வைத்து, மகளிர் கல்லூரிக்கு அனுப்பி ஒரு நல்ல குடும்பத்தில் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது. “மேற்படிப்பு, வெளிநாடெல்லாம் மாப்பிளையோட சேர்ந்து போ கண்ணு” என்பது தான் எழுதப்படாத விதி.

கொங்கு பகுதியில் பல காதல்கள் “எங்க அய்யங்கிட்ட சொல்லிப் போடுவேன் பாத்துக்க ” என்ற ஒற்றை வரியில் முடித்து போகும். அப்படியே தொடர்ந்தாலும், சாதி, குலம், கூட்டம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்த பிறகே காதல் மலரும். காரணம், எந்த சூழ்நிலையிலும் தன்னால் தன் தந்தை தலை குனிந்து விடக்கூடாது என யோசிக்கும் அப்பா செல்லங்கள் கொங்கு மகள்கள். சொத்தில் பத்துப் பைசா தரவில்லை எனினும் உரிமை வேண்டாம் என கையெளித்திடுவார்கள். கணவனே என்றாலும் அப்பாவிற்கு பிறகு தான் எவனும் !

ஆனால் ஆண் குழந்தையை ஓரளவிற்கு வசதி உள்ள குடும்பங்கள் கூட பொன் குஞ்சனாய் தான் வளர்ப்பார்கள். தாத்தா, அப்பா சொத்தில் வளர்ந்து, கல்யாணமண்டபம், வட்டிக்கு விடுதல், வாடகை வாங்குதல், விதம் விதமான ஸ்கேம்களில் சிக்கி ஏமாறுதல் தான் இந்த பொன் குஞ்சன்களின் வேலை. ஏழு தலைமுறைக்கு சொத்து இருப்பதால் மறந்தும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.

தோல்வி, காதல், சண்டை, சமஉரிமை, ஏமாற்றம், புத்தகம், காத்திருத்தல், விட்டுக்கொடுத்தல் என எந்த அடிப்படை அனுபவமும் இருக்காது. அம்மா திட்டினாலே கோபித்துக் கொள்ளும் அமுல் பேபிகள். அம்மச்சிகளின் சின்ன ஜமீன்கள். வீட்டிலேயே பிரசவம், மூலிகைப் பண்ணை, லில்லிபுட் தேடுதல், பாரம்பரிய உணவு, இயற்கை வைத்தியம், திருமணமான மூன்று மாதத்தில் கருத்தரிக்க வைத்து விட வேண்டும் என இவர்களது எண்ண ஓட்டமே தூர்தர்சன் லெவலில் இருக்கும். 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் இவர்களுக்கு சமைத்துப் போடுதல், இல்லறத்தை இன்பமயமாக்குதல் தான் இவர்களுக்கு வாக்கப்படும் பெண்களின் நிலை.

கவினுக்கு மாத வாடகை மட்டும் 20 லட்சம் வருகிறது. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல் வருகிறது, ரிதன்யா அப்பா வீட்டிற்கு வந்து, கவினின் அம்மாவை அழைத்துப் பேசியிருக்கிறார். எம்புள்ளையா இப்படி என பொய்யாய் அதிர்ந்து ரிதன்யாவை அழைத்து சென்றிருக்கிருக்கிறார். உன் பாதுகாப்புக்கு தான் என சொல்லி வீட்டின் கேட்டை பூட்டி ரிதன்யாவை உள்ளே அடைத்திருக்கிறார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டியவை.

1) எவ்வளவு வசதி இருந்தாலும் , உங்கள் மகன் மற்றும் மகளை கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சில வருடங்களாவது வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்புங்கள். புதிய ஊர், வேலை, நண்பர்கள் என கிடைக்கும் அனுபவம் அவர்கள் மனதை திடமாக்கும், அறிவை விசாலமாக்கும்.

2) வாழ்வின் எந்த சூழ்நிலையிலும், என்ன தவறு செய்திருந்தாலும் நீ எங்களிடம் வரலாம், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை தொடர்ந்து தாருங்கள்.

3) லட்சத்தில் பீஸ் கட்டினாலும், நீ பெயில் ஆகும் வாய்ப்பு இருக்கிறது, கோடியில் திருமணம் செய்தாலும் அது முறியும் வாய்ப்பும் இருக்கிறது, ஆனால் இது முடிவல்ல ! எதற்கும் ஒரு மாற்று உண்டு என்பதை சொல்லுங்கள்.

4) ஒரு காதல், ஒருவனுக்கு ஒருத்தி, நூறு மார்க், தங்கமான பிள்ளை, ஒழுக்கமான வளர்ப்பு என சம்பிரதாயங்கள் அனைத்தும் போலி, நீயும் உலகத்தில் உனது இருப்பு மட்டுமே நிஜம் ! எதுவும் கடந்து போகும், எல்லாவற்றையும் கடந்தும் நீ வாழலாம் என்ற திடம் தாருங்கள்.

5)மகன் என்றால் உழைப்பின் அருமை நிச்சயம் போதிக்கப்பட வேண்டும் ! பிறரிடம் கை கட்டி நின்று வேலை நுணுக்கம் பழகிட வேண்டும் ! வரிசையில் நின்று வாங்கத் தெரிய வேண்டும். வசதியும் திறமையும் வேறு வேறு ! இந்த உலகில் இருக்கும் ஏதோ ஒரு சிறிய தேவையாவது உனது திறமை சரி செய்ய வேண்டும், அதுவே மனித இருப்பின் அடிப்படைகளில் ஒன்று என்பதை சொல்லுங்கள்.

6) மனைவியே என்றாலும் பெண்ணின் விருப்பம் இன்றி தொடக்கூடாது என்பதை மண்டையில் உரைக்கும் படி சொல்லி வளருங்கள்.

7) திருமணத்திற்கு பிறகு படிப்பு, வேலை, சுயதொழில் என பெண்ணின் விருப்பம் எது என்றாலும் அதை நிறைவேற்றி தருவது தான் ஆணின் கம்பீரம் என சொல்லுங்கள்.

8 ) மகளோ, மனைவியோ பெண்ணை நம்புங்கள், தனியான பயணங்களை அனுமதியுங்கள், பெண்ணிற்கும் சிறகுகள் உண்டு, சார்ந்திருக்கும் வரை அது விரியாது. சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பொழுது தான் அதன் பயணம் துவங்கும், எங்கு பறந்தாலும் அது கூடு வந்தே சேரும் எனப் போதியுங்கள்.

பிறகு ஒரு முக்கிய விஷயம்,

ஒருவேளை திருமண வயதில், உங்கள் வீட்டில் ஒரு பொன் குஞ்சனை மகனாக வளர்ந்திருந்தால், அவனுக்கு தேவை திருமணம் அல்ல, ஒரு வாழ்நாள் ஆயா ! மீறி திருமணம் செய்து வைத்தால் உங்களையும் சிறைக்கும் அழைத்து செல்லும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் இந்த பொன் குஞ்சன்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  • ஹரிஹரசுதன் தங்கவேலு, எழுத்தாளர்

முதல்வர் சொல்வதற்கும் முதல் தகவல் அறிக்கைக்கும் எத்தனை வேறுபாடு?!

IMG 20250701 WA0035 - 2026

அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது., என ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பழையூரில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு,
100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு பழையூர் கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதனிடையே, திருப்புவனத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற அஜித்குமார் என்பவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி காவல் நிலையமா? கொலை நிலையமா? என்ற பதாதைகளை ஏந்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:
முதல்வர் விளக்கம் அளித்த போது விசாரணையின் போது மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சொல்கிறார்.
ஆனால் , முதல் தகவல் அறிக்கையில் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதில், கொடுமை என்னவென்றால் முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது.
18 இடங்களில் காயம் இருப்பதாக நீதியரசர் காயம் இருப்பதாக சொல்லுகிறார் .

முதல் தகவல் அறிக்கையில் தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து கீழே விழுந்து இறந்துவிட்டார் என சொல்கிறார்கள்.

அஜித்குமார் என்ற இளைஞரை அடித்து துன்புறுத்தும் போது அவர் எழுப்பிய அபாய குரலை அங்கு இருக்கும் பொதுமக்களே சொல்கிறார்கள்.
இன்று ஒரு சார்பு ஆய்வாளர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்
பட்டுள்ளது.


வேலியே பயிரை மேய்ந்தது போல அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.


இது போன்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி நான்கு பக்கத்தில் இருந்தும் வருகிறது, முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறாரே தவிர எதும் செய்யவில்லை.


இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் ஜூலை 7 ஆம் தேதி முதல் எழுச்சி பயணம் மேற்கோள்ள உள்ளார் .


எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நாட்டின் துயரங்களை எடுத்து சொன்னால் நேரலையை துண்டிக்கிறார்கள், மக்கள் மத்தியில் எடுத்து சொன்னால் பேரலையாக வரவேற்பதை முதல்வரால் தடுத்து நிறுத்த முடியாது., நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கண்துடைப்பாகி விட கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் என கூறினார்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.

1000803005 1 - 2026

“விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி. அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் த/பெ. சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி க/பெ. கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38) த/பெ. ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 27) த/பெ. கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த வைரமணி (வயது 32) த/பெ. காந்தி உட்பட 8பேர் உயிரிழந்தனர் .

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்குசாமி (வயது 45), மணிகண்டன் (வயது 40), கருப்பசாமி (வயது 27), முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அழகுராஜா (வயது 28) ஆகிய 5 நபர்களுக்கு ிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் – கும்பாபிஷேக யாகசாலையில் பூஜைகள் துவக்கம்..

1000803081 - 2026


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும்.வரும்ஜூலை 7ஆம் தேதி வேத நாராயண முறைப்படி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் கோலாலகமாக கொண்டாடப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் உள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த அறுபடை வீட்டிற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகனை தரிசிப்பது வழக்கம். 

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 7் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அன்றைய நாள்  6மணி கங்கு துவங்கி காலை 9மணி முதல் காலை 10.30 மணிக்குள் இந்த கும்பாபிஷேக விழா நடக்கிறது. 

குடமுழுக்கு விழா அறிவிப்பு வெளியானது முதலே திருச்செந்தூர் வழக்கத்தை விட கூடுதலாக களைகட்டி காணப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும். யாகசாலை நடக்கும் இடம் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யாகசாலை நடக்கும் இடத்தில் 5 தலை நாகம், முனிவர்கள், நந்தி சிலைகள் போன்ற பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது. 

இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக பல  லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலில் நேற்று மூலவரான சுப்ரமணிய சுவாமிக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக நடத்தப்படும் யாகசாலை பூஜை 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாக சாலையில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முருகனை தரிசிப்பதற்கும், அவர்கள் வந்து செல்வதற்கு தோதாகவும் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் கடற்கரைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ராஜகோபுரத்தைச் சுற்றி அர்ச்சகர்கள் கலசத்தை மேலே எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக நாளில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படும் கும்பம் அதாவது கலசம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அனைத்து கலசங்களிலும் புனித நீராக ஊற்றப்படும். குறிப்பாக, திருச்செந்தூர் முருகன் கோயிலின் ராஜகோபுரத்தில் இந்த கலசநீர் ஊற்றப்படும் அந்த நிகழ்வை முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காத்துள்ளனர். 

கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக அவர்கள் அமரும் வகையில் 2 ஆயிரம் சதுர அடி கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 12 கால யாக பூஜையும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஏதுவான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது கலசத்திற்கு ஊற்றப்படும் புனிதநீர் ல்ட்சக்கணக்கான பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட உள்ளது. 

இந்த கும்பாபிஷேகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், அரசு சார்பில் வரும் 4ம் தேதி முதல் 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் கோலாகலம்..

1000802513 - 2026

உலக பிரசித்தி பெற்ற பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்: ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூலை.23-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. ஜூலை 1 -ம் தேதி
9-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்ரசபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கீழவீதி தேர்நிலையை அடைந்தன.

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் செல்கின்றனர். அங்கு இருவருக்கும் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

ஆனித்திருமஞ்சன தரிசனம்:

ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். ஜூலை .3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெறுகிறது. ஜூலை.4-ம் தேதி வெள்ளிக்கிழமை தெப்போற்சவத்து உற்சவம் முடிவடைகிறது

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச்செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.