Home Blog Page 80

மோடியின் நரம்புகளில் ஓடுவது ரத்தமல்ல, சிந்தூர்: பிரதமர் மோடி ஆவேசம்!

pm modi in rajastan pikaneer - 2026

பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன்.  மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால், மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது என்று, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ‘ஆபரேஷன் சிந்தூரை’க் குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே உள்ள புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலில்  வழிபாடு நடத்தினார். அதன் பின்னர், அம்மாநிலத்தின் பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தக் கோயிலுக்கு வந்தது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் ஆவேசமாகப் பேசினார். அதற்கு ஏற்ப, தனது நெற்றியில் குங்குமத் திலகமிட்டு, ஆபரேஷன் சிந்தூர் குறித்த அடையாளத்தையும் வெளிப்படுத்தினார். 

அந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது; பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது. பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். 3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். 

இந்தியாவுக்குச் சொந்தமான  தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று பேசினார். 

குறிப்பாக, இன்று கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்ற பிறகு நான் இங்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார். அவரது நெற்றியில் கோயிலில் வழங்கப்பட்ட குங்குமப் பிரசாதம் சிந்தூரின் அடையாளமாக இருந்தது. 

“இன்று, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் மக்களை வாழ்த்துகிறேன்” என்று பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் தனது பங்கினைக் குறிப்பிட்டு, நாடு வளர்ச்சியை நோக்கியே பயணப் படும் என்பதை தெளிவாக்கி, உடனே பாகிஸ்தான் எப்படி பயங்கரவாதப் பாதையில் சென்று, வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார். 

“பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான நேரடிப் போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்பதால், அது பயங்கரவாதத்தை நம் மீது தொடுக்கிறது. இந்தியாவுக்குச் சொந்தமான தண்ணீரை இனி  பாகிஸ்தானால் பெறமுடியாது.” என்றார். 

ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம். அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. 

“பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஒரே குரலில் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையை உறுதி செய்யவும் தீர்மானித்தனர். இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால்தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசு மூன்று படைகளுக்கும் கையைக் கட்டாமல் சுதந்திரம் கொடுத்தது. முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தது பாகிஸ்தானைச் சரணடையச் செய்தது. 

“மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை” “ நிமிர்த்தி நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படிப் பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும்.” என்று ஆவேசமாகப் பேசினார். 

ராஜஸ்தான் மாநிலம், பாகிஸ்தானுடன் எல்லையைக் கொண்டிருப்பதும், அது கடந்த காலங்களில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இலக்கான இடம் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

தீர்ப்புகள் திருத்தப்படலாம்! 

RN Ravi and MK Stalin - 2026

ஆட்டுக்குத் தாடியும் ஆளுநருக்கு … என்ற திமுக.,வின் மேடைப்பேச்சுகள் அது ஆளுங்கட்சியாக பதவியில் அமர்ந்து அவியல் செய்யும் காலங்களில் அதிகம் ஒலிக்கும். அதே நேரம் எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் செய்யும் காலங்களில், ஆளுநர் மாளிகை நோக்கி மனு கொடுப்பதற்கும் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரணி செல்வதற்கும் மும்முரமாக இருக்கும். 

ஏற்கெனவே முன்னர் இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுத் திட்டங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள அடிக்கடி சென்ற போது அதுபற்றி ஊடகங்கள் மூலம், வயது முதிர்ந்த உயர் பொறுப்பில் இருந்த நபரைப் பற்றி திராவிட இயக்கங்கள் செய்த துர்பிரசாரத்தை தமிழகம் பார்த்தது. துணை வேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை என்ற அவரின் செயல்பாடுகளுக்கு எதிராக, அன்றும் திராவிட ஊடகங்கள் தீயாய் வேலை செய்து வந்தன. 

திமுக., ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்துக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்  ரவீந்திர நாராயணன் ரவி,  ஐபிஎஸ் என்ற பின்புலத்தில் வந்தவர் என்பதால்  அவரது நடவடிக்கைகள் அதிரடியாகவும் அதேசமயம் தேச நலனுக்கு உகந்ததாகவும் அமைந்திருந்தது.  அதை முடக்கும் விதமாக ஊடகங்களை வைத்து பெரும் தாக்குதல்களை திராவிட இயக்கங்கள் செய்து கொண்டே வந்தன.  சொல்லப்போனால் இப்போது திமுக.,வுக்கு அரசியல் செய்யும் நேரம்.

 சட்ட திட்டங்களுக்கு முரண்பாடான வகையில், தங்களது கொள்ளை அடிக்கும் ஆசைகளை சட்டரீதியாக நிறைவேற்றிக் கொள்ள, சட்டமன்றத்தையே பயன்படுத்திக் கொள்வது என்ற விஞ்ஞான ஊழலில் திமுக., இறங்கிவிட்டது என்பதன் வெளிப்பாடுதான் ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையிலான சச்சரவுகள். 

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி வைத்த மசோதாக்கள் பலவற்றை உடனே கையெழுத்திட்டு அனுப்பி வைத்த ஆளுநர் ரவி,  அவற்றின் ஊடே அனுப்பி வைத்த சர்ச்சைக்குரிய, சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் அல்லது சட்ட முரண்பாடுகள் உள்ள சில மசோதாக்கள் மட்டும் கிடப்பில் வைத்தார்.  அது திமுக., அரசு தங்களுக்கு பணபலம் அதிகம் தரும் மசோதாக்கள் எனும் காரணத்தால் தீவிரமாக எதிர்க்க தடைப்பட்டது. 

 அதன் விளைவாக வெடித்ததே ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு இடையிலான மோதல்கள்  என்பதை  பள்ளிப் பாடம் கற்ற எவருமே எளிதாகப்  புரிந்து கொள்வர். இப்போது  அந்த நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களின் நிலையைப் பற்றி சிறிது யோசித்துப் பார்ப்போம்.

1. NEET தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.  சட்டசபை மீண்டும் இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பியதை  குடியரசு தலைவருக்கு அனுப்ப தாமதம் செய்தார்.    குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை நிராகரிக்க தமிழக அரசு நீதிமன்றம் சென்று போராட உள்ளது. இதன் முடிவு – மாணவர்கள் கூட்டமாக இந்த வருடமும்  நீட் தேர்வு எழுதினார்கள்.

2. செந்தில் பாலாஜி கைதுக்குப் பிறகு அவர் அமைச்சராகத் தொடர/ பதவி பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுத்தார். இதன் முடிவு – உச்ச நீதிமன்றமே தான் அளித்த ஜாமீனுக்கு  வருந்தி,  செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொன்னது. அரசுக்கு தலைகுனிவு. ஆனால் அதைப் பற்றி எல்லாம் எவர் கவலைப்படுவது?

3. பொன்முடி வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்ய மறுத்தார்  ஆளுநர் ரவி. இதன்  முடிவு – நீதிமன்றம் அவர் மீது உள்ள வழக்கை துரிதப் படுத்தி உள்ளது மேலும் புதிய வழக்கு  தொடரப்பட்டது.

4. பல்கலைக் கழக துணைவேந்தர்  பல்கலைக்கழக மானியக் குழு யு சி ஜி சட்டப்படிதான் இருக்க வேண்டும் என்று ஆளுநர் சொன்னார். அரசு வழக்கம் போல மீறி நடந்து, பின் மசோதா அனுமதிக்கு நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளித்த  தீர்ப்புக்குப் பிறகு முதல்வரே வேந்தர் என்று வெற்றி விழா கொண்டாடிக் கொண்டது திமுக.,! இதன் முடிவு –  தனது மற்றும் ஆளுநர் அதிகாரங்களில் தலையிடும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இப்போது குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தைக் கருத்து கேட்டுள்ளார். இப்போது, சென்னை உயர் நீதிமன்றம் இந்த ‘முதல்வரே வேந்தர்’ மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது.  மீண்டும் திமுக ., அரசுக்கு தலைகுனிவு.

பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டதற்கு திமுக.,வினர் மற்றும் திராவிட ஊடகங்கள், இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்று கதை விட்டுக் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தமிழக அரசு vs ஆளுநர். ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது பற்றி மட்டுமே வழக்கு. 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்தது. அப்படி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்தானது அந்த வழக்கு. 

சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றது உச்ச நீதிமன்றம். மேலும் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம். ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாதாக்களையும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல் கொடுத்தது. 

இதில் கவனிக்க வேண்டியது “அந்த 10 மசோதாக்களில் என்ன இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் பார்க்கவே இல்லை. அதாவது வழக்கின் தகுதி என்ன என்பதை உச்ச நீதிமன்றம் பார்க்கவில்லை. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதோடு அவர்கள் நின்று விட்டார்கள். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் சட்டபூர்வமாக சரியானதா என்பதை ஆளுநர் ஆராய்கிறார். அதாவது ஆளுநர் வழக்கின் ‘தகுதி’  என்ன என்பதைப் பார்க்கிறார். அதனால்தான் திருப்பி அனுப்புகிறார். ஆனால், சட்ட மசோதாக்களை ஆராய்வது ஆளுநரின் வேலை இல்லை; சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களின் மீது உடனே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போடுவது மட்டும்தான் ஆளுநர் வேலை என்பதுதான் தமிழக அரசின் வாதம். 

இப்போது உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் வழக்கு ‘சட்டத்தின் தகுதி’ பற்றியது. அதாவது சட்ட மசோதாவில் ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்து, துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு அளிப்பது யு ஜி சி சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்பதுதான் வழக்கு. இதைத்தான் ஆளுநரும் சொன்னார்.  அந்த வழக்கில்தான் தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு இடைகாலத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியலாம். ஆனால் அந்த வழக்குக்கும், உச்ச நீதிமன்றம் முன்னர் கொடுத்த தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், இதன் தீர்ப்பும்கூட யுஜிசி நெறிமுறைகளுக்கு உட்பட்டு எனும் பிரிவின் கீழ் வரக்கூடும். 

இப்படி ஆளுநருடனான அரசியல் விவகாரத்தில் அனைத்திலும் திமுக., அரசு ஒரு எதிர் நிலைப்பாடு எடுத்து செயல்பட்டுள்ளதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தண்டனைக்கு உள்ளான / கைதான அமைச்சர்களுக்கு வக்காலத்து,  வழக்குகள், மேல் முறையீடு என்று ஒவ்வொரு விஷயத்திலும் செயல்பட்டுள்ளதும் நன்றாகத் தெர்கிறது. 

இறுதியில், ஆளுநர் கூறிய அறிவுரையே சரி என்ற நிலை தான் அனைத்து விஷயத்திலும் வெளித்தெரிய, இந்த சட்டப் போர்களுக்கு எல்லாம் திமுக,.வின் சொந்தப் பணமா செலவழிக்கப்படுகிறது? பொது மக்களின் வரிப் பணம் தானே! ஒரு பக்கம் நிதிப் பற்றாக்குறை என்று போக்குவரத்துப் பணியாளர்களுக்கும் ஆசிரியர்களும் அரசுப் பணியாளர்க்குமே துரோகம் இழைக்கும் திமுக., அரசு, இன்னொரு பக்கம் அரசுக்கு வர வேண்டிய வருமானத்தை ஊழல்களால் தன் கட்சிக்குத் திருப்பிக் கொண்டிருக்கும் அயோக்கியத் தனங்களைச் செய்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் டாஸ்மாக் ஊழல் இப்போது பூதகாரமாக்கி வெளிசமிட்டுக் காட்டியுள்ளது.

திமுக., அரசு ‘கொண்டாடிய’ தீர்ப்புக்கு இடைக்காலத் தடை! 

chennai highcourt - 2026

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து 10 சட்ட மசோதாக்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்த மசோதாவுக்கு  ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். 

இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் பேரில் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்ச நீதிமன்றம் தமிழக அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கும் தானே ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து, அந்தத் தீர்ப்பின் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டு, துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்குரைஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அவரது மனுவில்,  பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகளுக்கு முரணாக இந்த சட்டப் பிரிவுகள் உள்ளதால் இதை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும். புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும்’  என கோரியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், ”10 பல்கலைக்கழகங்களில் இரண்டுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே தடை கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் அளிக்க வேண்டும்,” என்று கோரினார்.  அடுத்து, உயர் கல்வித் துறை தரப்பில் வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, ”இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் அளிக்க, அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது” என்றார்.

எனினும் மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் அனுமதித்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, ”பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரணாக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

அதற்கு அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், ”தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. பல்கலை மானியக் குழு சட்டத்தில், சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது,” என்றார்.

இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்தனர்.

IPL 2025: வெற்றிப் பாதையில் மும்பை அணி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – மும்பை vs டெல்லி
வான்கடே மைதானம், மும்பை – 21.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (180/5, சூர்யகுமார் யாதவ் 73, திலக் வர்மா 27, ரியன் ரிக்கிள்டன் 25, நமன் தீர் 24, வில் ஜேக்ஸ் 21, முகேஷ் குமார் 2/48, சமீரா, ரஹ்மான், குல்தீப் தலா ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ்  அணியை (18.2 ஓவர்களில் 121, சமீர் ரிஸ்வி 39, விபின் நிகம் 20, அஷுதோஷ் ஷர்மா 18, கே.எல். ராகுல் 11, மிட்சல் சாண்ட்னர் 3/11, பும்ரா 3/12, போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், கர்ண் ஷர்மா தலா ஒரு விக்கட்) 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 5 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான ரியன் ரிக்கிள்டன் (18 பந்துகளில் 25 ரன், 2 சிக்சர்) வில் ஜேக்ஸ் (13 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார். அவருக்குப் பின் ஆட வந்த சூர்யகுமார் யாதவ் (43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) இறுதிவரை ஆடி அனிக்கு வலு சேர்த்தார்.  

அவருக்குப் பின்னர் வந்த திலக் வர்மா (27 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (3 ரன்), நமன் தீர் (8 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) என அடித்து ஆடியதால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

          181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் மட்டையாளர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சமீர் ரிஸ்வீ (35 பந்துகளில் 39 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (11 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய இருவர் மட்டுமே சற்று பொறுப்போடு ஆடினர். மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மிட்சல் சாண்ட்னர் மற்றும் பும்ரா அற்புதமாக பந்துவீசி தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர்.

டெல்லி அணியில் கே.எல். ராகுல், முதலில் விளையாட வரவில்லை. அந்த அணி பேட்டிங் செய்த போது அவர் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் அவர் இன்று சோபிக்கவில்லை. இறுதியில் டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன் எடுத்து, அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. எனவே மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் நாலாவது இடத்திற்கு வந்துள்ளது. மும்பை, டெல்லி அணிகள் பஞ்சாப் அணியோடு தனது கடைசி ஆட்டங்களை ஆடும். அந்த இரண்டு ஆட்டங்களும் பிளேஆஃப் சுற்று எந்த அணி செல்லும் என்பதை முடிவு செய்யுமா எனப் பார்க்கவேண்டும்.

செங்கோட்டையில் பாஜக.,வினர் தேசியக் சிந்தூர் யாத்திரை!

sengottai sindoor yatra - 2026

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையில், இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக செங்கோட்டையில் பாஜகவினர் தேசியக்கொடியை ஏந்தியவாறு சிந்தூர் யாத்திரை மேற்கொண்டனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய இராணுவ நடவடிக்கையில், இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக சிந்தூர் யாத்திரை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பாஜக., சார்பில் செங்கோட்டை பகுதியில் சிந்தூர் யாத்திரையானது நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிந்தூர் யாத்திரையில் ஏராளமான பாஜகவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பங்கேற்று தேசிய கொடியை ஏந்தியவாறு யாத்திரை சென்றனர்.

தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சந்திப்பில் தொடங்கிய இந்த சிந்தூர் யாத்திரையானது காவல் நிலையம் வழியாக சுமார் 2 கி.மீ. வரை பேரணியாகச் சென்று மீண்டும் தாலுகா கார்னர் வரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஏராளமான பாஜக,ம்வினர் பங்கேற்று பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய இராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாரத் மாதாகி ஜெய் என்ற கோஷங்களுடன் யாத்திரையில் பங்கேற்றனர்.

சீனாவுக்கு அல்ல, அமெரிக்கா ரஷ்யாவுக்கு இணையாகப் பேச வைத்த ‘சம்பவம்’!

brahmos missile - 2026

குப்பையாகும் ஆயுதங்களால் கை நழுவும் வல்லரசுகளின் ஆதிக்கம்!

  • முரு தெய்வசிகாமணி

சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபிலிம் கேமிராவும், PCO, Browsing Centre என்பது போன்றவை கோலோச்சும் பிஸினஸாக இருந்தது. இன்று அந்தத் தொழிலை மட்டுமே நம்பி இருந்ததால் அவரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதல்லவா? அதுபோல பாதுகாப்பு விஷயத்தில் மிகப்பெரிய சக்ர வியூகமாக நினைத்துக் கொண்டிருந்த டெக்னிக்குகள் ஒரே ஒரு போரில் காயலாங்கடை மேட்டராகிவிடும்.

இவை அவ்வப்போது பெரிய போர் வரும்போதுதான் தெரியும் என்றாலும், போரில் மோதுகிற நாடுகள் ஓரளவிற்காவது சம பலத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அது போன்ற விஷயங்கள் வெளிவரும்.
ஆர்மீனியா, அஜர்பைஜான் போர் என்பது முதன்முதலில் ட்ரோன்களை வைத்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க காரணமாக இருந்தது. அது உக்ரைன் மற்றும் காஸாவில் இஸ்ரேலுடன் நடந்த போரில் முக்கியமாக கவனிக்கப்பட்டது.

அதன் விளைவாக ட்ரோன்கள் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்தது. துருக்கிக்கு கோடிக்கணக்கான ஆர்டர்கள் குவிந்தது. அதன் விளைவாக துருக்கி தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாக நினைத்து, அதன் மூலம் இஸ்லாமிய நாடுகளின் தலைவராக ஆகலாம் என கனவு கண்டது.

அதன் விளைவாக கடனில் மூழ்கிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது. அதன்படி, பாகிஸ்தானின் தாக்குதல் இந்தியாவிற்கு எதிராக பெரிய வெற்றிபெறும், அதன் மூலம் அதன் ட்ரோன் ராஜ்ஜியத்திற்கு பெற விளம்பரம் கிடைக்கும் என்று நம்பியது. ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அதை அர்த்தம் அற்றதாக்கிவிட்டது.

அதன் விளைவாக துருக்கியின் கோடிக்கணக்கான ட்ரோன் ஆர்டர்கள் கேன்சலாவதாக வரும் செய்திகள், ஏற்கனவே பொருளாதார நசிவில் இருக்கும் துருக்கிக்கு வருக்கி வாங்க காசில்லாத சூழலை நோக்கிச் செல்ல வைத்திருக்கிறது.

அதுபோல அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்று பல நாடுகள் ஸ்டெல்த் வகை விமானங்களுக்கு மில்லியன் கணக்கில் $ கொட்டி செலவு செய்து ஆராய்ச்சியில் ஐந்தாம் தலைமுறை விமானத்தை கண்டுபிடித்தது. ஆனால் இந்தியா அந்த பக்கம் போகவில்லை. அதற்கு காரணம் அதன் தேவையை நாம் ஏவுகணைகளை வைத்து செய்துகொள்ள முடியும் என்று எடுத்த முடிவு.

ஆபரேஷன் சிந்தூரில் ஒரு விமானம் கூட பாகிஸ்தான் எல்லையை கடக்கவில்லை, ஆனால் பாகிஸ்தானின் 11 முக்கிய ஏர்பேஸ்களில் 9 நாசப்படுத்தி சுடுகாடாக்கிவிட்டது. அதை சரி செய்ய வேண்டுமெனில் 100 பில்லியன் டாலர்கள் வேண்டும் என்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மீண்டும் பழைய டெக்னாலஜிக்கு போக முடியாது, புதியதாக வாங்க வேண்டிவரும் என்பதால்.

ஆனால், இந்தியா புத்திசாலித்தனமாக ஐந்தாம் தலைமுறையை விட்டுவிட்டு, ஆறாம் தலைமுறை டெக்னாலஜியான நெட்வவொர்க் சென்ட்ரிக் நுட்பங்களை பயன்படுத்தியது. உதாரணமாக நமது ஆகாஷ்தீர் 64 வான் இலக்குகளை கண்டுபிடித்து அதில் 16 இலக்குகளை ட்ராக் செய்து, நான்கு இலக்குகளை சுட்டு வீழ்த்த முடியும்.

ஆகாஷின் இலக்கில் ட்ரோன் வார்ம்ஸ் அல்லது மஸ்ரூம் என்று நூற்றுக்கண்க்கில் வரும்போது ஒரு ஆகாஷ்தீரால் அதை சுட்டு விழ்த்த முடியாது. அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஆகாஷ்தீர்கள் அதை தடுக்க எங்கேஜ் ஆகியிருக்கும். ஆனால் இரண்டும் தனித்தனியாக வேலை செய்தால் ஒரே ட்ரோன் அல்லது மிஸைலை தடுக்க ஒன்றுக்கு மேற்பட்ட ராக்கெட்டுகளை நாம் ஏவி அதில் ராக்கெட்டுகளை வீணடிக்க வாய்ப்புண்டு.

அப்படி எதிர்பார்த்துதான் பாகிஸ்தான் நூற்றுக்கணக்கில் ட்ரோன்களையும், அதனுடன் மிஸைல்களையும் ஏவியது. ஆனால் நமது ஆகாஷ் சிஸ்டம் அதற்குள் இருக்கும் ஆறாம் தலைமுறை நெட்வொர்க் மூலம் தொடர்பை ஏற்படுத்தி எனக்கு கொருக்குபேட்டை, உனக்கு சைதாப்பேட்டை என்று பிரித்துக்கொண்டு வேலை செயததால் மிகச்சிறப்பாக தாக்குதலை தடுக்க முடிந்தது.

அதிலும் குப்பைகளையும், உண்மையான ஆயுதங்களையும் இனம் பிரிக்கும் அளவிற்கு அதன் தொழில் நுட்பம் சிறப்பாக இருந்ததால், சில வாரங்களாவது போர் நீடிக்கும் என்ற சீனாவின் எதிர்பார்ப்பு சில மணி நேரங்களில் பொய்த்துப்போனது மட்டுமல்ல துருக்கியின் சாம்ராஜ்யம் வழக்கம்போல தவறான முடிவால் மீண்டும் வீழ்ந்தது.

அப்படியென்றால் அமெரிக்கா கோடிக்கணக்கில் கொட்டி தயாரித்த ஐந்தாம் தலைமுறை விமானங்கள் குப்பையா கோப்பால்…?

அப்படித்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை எப்படி வேறு வகைகளில் பயன்படுத்துகிறோம் என்பதில் அதற்கான பதில் அடங்கி இருக்கிறது
இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் மிஸைல்கள். அதன் அக்யூரசி இன்று உலகம் முழுவதில் உள்ள ஆராய்ச்சி கூடங்களில் விவாதிக்கப்படுகிறது.

அப்படியென்றால் நமக்கு விமானப்படையே தேவையில்லையே? எதற்காக நாம் ரஃபேலை அவ்வளவு விலை கொடுத்து வாங்கினோம்?

அப்படியில்லை, அதன் ரோல்கள் மாறுகிறது. அது முன்பு போல எதிரியின் எல்லைக்குள் புகுந்து ரிஸ்க் எடுத்து தாக்க வேண்டியதில்லை, மாறாக வானில் வட்டமிட்டு எதிரியின் விமானம் நம்மை தாக்கும் எல்லைக்குள் வந்துவிடாமல் பார்க்கிறது. அது மட்டுமல்ல, நமது ஏவுகணைகளை நிலத்தில் இருந்து வீசுவதை விட வானில் இருந்து பறந்துபோய் வீசினால் அதன் வேகமும், இலக்கும் துல்லியமாகவும் எளிதாகவும் அமைகிறது.

நாம் FoxBat என்ற ரஷ்யாவின் மிக் ரக விமானத்தை அன்று பெருமளவில் பயன்படுத்தினோம். ஆனால் ரஷ்யா அதை 25 ஆண்டுகளுக்கு முன்பே அதை வீசிவிட்டது. ஏன்னெறால் அதன் சேட்டிலைட்கள் அதன் வேலையை செய்துவிட்டது.

அதுபோன்ற நடைமுறை அனுபவம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பலம், அது இல்லாததால் சீனா டிரில்லியனில் கொட்டி செய்த அதன் ஹைடெக் விமானங்களும், வான் பாதுகாப்பும் காயலான்கடைக்கு கல்லாக்கட்ட உதவும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

இது ஒன்றும் ஏர்ஃபோர்ஸுக்கு மட்டுமல்ல, கடற்படையின் நிலை இன்னும் மோசம். ஆம், அமெரிக்காவின் மிக நவீனமான USS Herald முதல் பல விமானந்தாங்கி கப்பல்கள் நமது பிரம்மோஸின் தாக்குதலுக்கு தப்பிக்க முடியாது என்றாகிவிட்டது.

அப்படியென்றால் 1971-ல் அமெரிக்காவும், இங்கிலாந்தும் நம்மைச் சுற்றி வளைத்ததுபோல இன்று செய்தால், நம்மை காக்க ரஷ்யா வரவேண்டியதில்லை, நமது பிரம்மோஸில் அவர்களுக்கு ஜலசமாதியை நம்மால் கொடுக்க முடியும்! அதுமட்டுமல்ல, அன்றே நம் நண்பன் ரஷ்யா அவர்களை விரட்டியது நீர்மூழ்கி கப்பல்களால்தான். இன்று நம்மிடம் நமது கடல் எல்லையை காக்க போதுமானது உள்ளது.

அப்படியெனில் அமெரிக்காவிடமும், சீனாவிடமும் இருக்கும் அந்த கப்பல்கள் அர்த்தமற்றதாகிப்போக ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் ரஷ்யா பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டவில்லை. அப்படியானால் நாம் எதற்காக கட்டுகிறோம்?

அந்தக் கப்பல்கள் சாதாரண காலங்களில் எல்லையை பாதுகாக்கத் தேவை. அதுமட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பம், நமது கப்பல் கட்டும் திறனை உயர்த்த அவை மிக மிக அவசியம்.

மேலும், அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் நாடுகளைப் பிடித்து, அதன் எல்லையை நேரடியகவோ, மறைமுகமாகவோ விரிவாக்க வேண்டும் என்பது அதன் விருப்பம். ஆனால், நமக்கு அந்த எண்ணமும் இல்லை, தேவையுமில்லை!!

ஆனாலும் அமெரிக்காவும், சீனாவும் அதை சைகாலாஜிகல் வாருக்காக பயன்படுத்தும்போது, நாமும் நமது எல்லையை பாதுகாக்க எங்களிடமும் இருக்கிறது என்று பதில் சொல்லத் தேவை உண்டல்லவா?!

எனவே, ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு மட்டும் வாக்கரிசி போடவில்லை, அமெரிக்கா, சீனா, துருக்கி மட்டுமல்ல அரதப்பழசான பல டெக்னிக்குகளுக்கும் வாக்கரிசி போட்டிருக்கிறது என்பதால்தான் உலகெங்கும் இந்தியாவின் போர் யுக்திகள் விவாதிக்கப்படுகிறது!

காஷ்மீரில் கைவெச்சுப்பார் என்று கத்தினார்கள், சத்தமில்லாமல் அவர்கள் குரல்வளையில் காலே வைத்துவிட்டோம். அப்படியா PoK மீது கைவெச்சுப்பார் என்றார்கள், அங்குமட்டுமல்ல பாகிஸ்தான் முழுவதும் கரகாட்டம் ஆடி முடித்துள்ளோம்!

நாம் என்னதான் நமது ராணுவ, பொருளாதார பலத்தை எடைபோட்டு, ஜோதிடத்தை ஆராய்ந்து, ஆரூடங்களை கணக்கில் காட்டி வருங்காலம் இந்தியாவுடையது என்று சொன்னாலும் அதில் நடக்குமா என்ற ஏக்கம் நம்மை அறியாமல் சந்தேகத்தோடு ஒட்டிக்கொண்டு இருந்தது. அது இன்று விலகியது, புதிய நம்பிக்கை மலர்ந்தது.

நேற்றுவரை நாம் சீனாவுக்கு இணையாக இருப்பதாக நம்மை மதிப்பிட்டு கொண்டிருந்தோம். ஆனால் இன்று நம்மை அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையாக பேசுகிறார்கள் என்பதை நான் அதற்கு மேலாக இருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். அதை உலகம் விரைவில் உணரும்!

IPL 2025: கடைசி இடத்தில் நீடிக்கும் சிஎஸ்கே!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ராஜஸ்தான் – டெல்லி – 20.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (187/8, ஆஅயுஷ் மஹத்ரே 43, டிவால்ட் பிருவிஸ் 42, ஷிவம் துபே 39, தோனி 16, யுத்வீர் சிங் 3/47, ஆகாஷ் மத்வால் 3/29, துஷார் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா தலா ஒரு விக்கட்), ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி (17.1 ஓவர்களில் 188/4, வைபவ் சூர்யவன்ஷி 57, சஞ்சு சாம்சன் 41, ஜெய்ஸ்வால் 36, துருவ் ஜுரல் ஆட்டமிழக்காமல் 31, ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்கமல் 12, அஷ்வின் 2/41, அன்சுல் காம்போஜ் 1/21, நூர் அகமது 1/42) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மஹத்ரே (20 பந்துகளில் 43 ரன், 8 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டேவன் கான்வே (8 பந்துகளில் 10 ரன், 2 ஃபோர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய உர்வில் படேல் (பூஜ்யம் ரன்) இந்த ஆட்டத்திலும் சரியாக ஆடவில்லை.

அவருக்குப் பின் ஆட வந்த அஷ்வின் (8 பந்துகளில் 13 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) சுமாராக ஆடினார். அவர் ஏன் இவ்வளவு முன்னதாகக் களமிறக்கப்பட்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.  அவருக்குப் பின்னர் வந்த ரவீந்தர் ஜதேஜா (1 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை. ஆனால் டிவால்ட் ப்ருயிஸ் (25 பந்துகளில் 42 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

பின்னர் ஆட வந்த ஷிவம் துபே (32 பந்துகளில் 39 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), எம்.எஸ். தோனி (17 பந்துகளில் 16 ரன், 1 சிக்சர்)ஆகியோர் வேகமாக ரன் அடிக்க முடியவில்லை அதனால சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்த்து.

          188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (19 பந்துகளில் 36 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (33 பந்துகளில் 57 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (31 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), அவருக்குப் பின் வந்த  ரியன் பராக் (3 ரன்), துருவ் ஜுரல் (12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் (5 பந்துகளில் 12 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ஆடினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 188 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி புள்ளைப்பட்டியலில் ஏழாவது இடத்தையும் சன்ரைசர்ஸ் அணி எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளன். நாளை மிக முக்கியமான மும்பை டெல்லி ஆட்டம் நடைபெறவுள்ளது.

செங்கோட்டை நித்ய கல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்!

thiruvasagam mutrothal in sengottai - 2026

செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிலவேம்பு கஷாயம் வழங்கல் நடைபெற்றது.

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்மன் கோவில் முன்பு வைத்து செங்கோட்டை சாய் சித்த மருத்துமனை சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழச்சிக்கு பணிநிறைவு பெற்ற சித்த மருத்துவரும் சாய் சித்தமருத்துமனை நிறுவனருமான சித்தமருத்துவா் டாக்டர் கலா தலைமைதாங்கினார். கல்யாணி ஆடிட்டர்சங்கர், தங்கையா நகர்மன்ற உறுப்பினா் சரஸ்வதி ராஜகோபால், கோபாலகிருஷ்ணன்,  ஆகியோர் முன்னிலைவகித்தார் சமுதாய செயலாளா் ராம்நாத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னா் பொதுமக்கள் பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயம் சாய் சித்த மருத்துவமனை பணியாளா்கள் வழங்கினா்.  அதனைத் தொடா்ந்து கோவில் வளாகத்தில் வைத்து திருவாசகி சிவபகவதி குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் மற்றும் அன்னதான பொதுவிருந்து நடந்தது.

முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முதல் குத்துவிளக்கினை முத்துலெட்சுமிராமநாத் ஏற்றி துவக்கி வைத்தார்  திருவிளக்கு பூஜை நடத்துனா்.

தவணைசெல்வி திருவிளக்கு பூஜையினை நடத்தினார். நிகழ்ச்சியில் செல்வி, தேவி, பழனியம்மாள், உஷா, இந்திரா, பேச்சியம்மாள், சிவனம்மாள், சிவபார்வதி, உத்ராதேவி, காளியம்மளா், ராஜேஸ்வரி, கல்யாணிஅம்மாள், காளியம்மாள் ஸ்ரீதேவி, புனிதா உள்பட பலா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  

என்னவொரு வெறி? எவ்வளவு குரூரத் தனம்?

1854358 rahulgandhi1 - 2026

நிச்சயமாக இவர்கள் முட்டாள்களில்லை. ஒரு தரப்பினர் சொல்வது போல் ‘பப்பு’ என்றோ, ’கோமாளி’ அல்லது ‘பைத்தியம்’ அல்லது ‘அறிவுக்குறைவு’ என்றோ சொல்லிவிடமுடியாது. இவர்களின் நடத்தை முழுக்க முழுக்க, தேச விரோதம், வெறி, குரூரத்தனம் ஆகியவை மட்டுமே! அதைத்தான் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. 

ஆபரேஷன் சிந்தூர் – விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று தொடக்கத்தில் தெரிவித்தது காங்கிரஸ்.  காரணம் அப்போது பாகிஸ்தான் கூறி வந்த பொய்களை மட்டுமே நம்பியது காங்கிரஸ். அக்கட்சியின் சார்பில்  கூட்டங்களில் கலந்து கொண்ட ராகுல் காண்டி, அதையேதான் தனது பேச்சுகளில் எதிரொலித்தார்.  ஆனால் ஆபரேஷன் சிந்தூர்  குறித்த செய்திகள், சர்வதேச அளவில்  இந்தியாவின் மரியாதையை மெல்ல மெல்ல உயர்த்திக் கொண்டு வந்த போது,  வழக்கம்போல் பொறாமை அரசியலின் வெளிப்பாடாக  இப்போது இல்லாத பொய்களை எல்லாம் திரித்து கூறி தேசிய அரசியலில் அசிங்கப்பட்டு வருவது மட்டுமல்ல மக்களின் வெறுப்பையும் தொடர்ந்து பெற்று வருகிறார் ராகுல் காண்டி.

ஆப்ரேஷன் சிந்தூர் விஷயமாக  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஊடகங்களில் பேசியபோது,  மிகத் தெளிவாக ஒரு கருத்தை முன் வைக்கிறார்.  ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய போது  நாம் பாகிஸ்தானுக்கு மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொன்னோம். நாம் பயங்கரவாத கட்டமைப்புகளின் மீது மட்டுமே தாக்குதலை நடத்துகிறோம்; அந்த நாட்டின் ராணுவத்தின் மீதோ அல்லது பொதுமக்களின் மீதோ அல்ல என்பதை செய்தியாக சொன்னோம்.  ஆனால் அவர்கள் ராணுவம் தாங்களாகவே உள்ளே இழுத்துக் கொண்டது.  அவர்கள்  நம் செய்தியை மதிக்கவில்லை”  என்று இந்திய ராணுவம் செய்தி தொடர்புகளில் என்ன தகவலை சொல்லி வந்ததோ அதையே தன் குரலாக வெளியிட்டார்.

ஆனால் வழக்கம்போல் பொய்களை மட்டுமே திரித்து வெளியிடும் இந்திரா காங்கிரஸ்,  எதிர்க்கட்சி காண அரசியலைச் செய்யாமல், அவியலையும் ஒழுங்காக செய்யத் தெரியாமல்,  சமையலை எவரும் உண்ண முடியாமல் காறித் துப்ப வைத்திருக்கிறது.

ஜெய்சங்கர் பேசிய ஊடக பேட்டியில் மிகத் தெளிவாக  ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினோம் என்று குறிப்பிடுகிறார்.  ஆனால் காங்கிரஸ் அதை ஆபரேஷன் சிந்தூர் நடப்பதற்கு முன் பாகிஸ்தானை எச்சரிப்பதற்காக வெளியுறவுத்துறை இவ்வாறு ஆபரேஷன் சிந்தூரை நடத்தப் போகிறோம் என்று  முன்கூட்டியே செய்தி அனுப்பியதாக பொய்யான தகவல்களை பரப்பியது. 

இவ்வாறு சமூகத் தளங்களில் பரப்பப்பட்ட போதே,  இந்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு துறை (பி ஐ பி)  தனது உண்மை சரிபார்ப்பு குழுவின் மூலம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.  இவ்வாறு ஜெய்சங்கர்  அப்படி  முன்பே தகவல் எதுவும் கொடுத்ததாக வீடியோ எதுவும்  வெளியில் வரவில்லை. என்று மறுத்தது. அதாவது இந்த வீடியோ செய்தி குறித்து ஃபேக்ட் செக் செய்து, முன்கூட்டியே தகவல் எதுவும் தரவில்லை என்பதை உறுதிப் படுத்தியது. 

பி ஐ பி யின் உண்மை சரிபார்ப்பு குழு மே 15ஆம் தேதி இவ்வாறு எக்ஸ் தளத்தில் தெளிவாக வெளியிட்டது .

ஆனாலும் நான்கு நாட்கள் கழித்து மலினமான அரசியலுக்காக பாகிஸ்தானின் குரலை பேசும் வகையில்,  இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தப் போவதாக முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது என்ற போது இந்தியாவின் எத்தனை விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டன அதற்கான கணக்கை வெளியிடுங்கள் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அவர் சமூக வலைதளங்களில் பதிந்தது பலரையும் முகம் சுளிக்க மட்டுமல்ல கடுமையான கோபத்தையும் வர வைத்துள்ளது.  

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பேசிய வீடியோக்களில் ராணுவம் குறிப்பிட்டபடி, நாம் முதலில் பயங்கரவாத முகாம்களைத் தான் குறிவைத்துத் தாக்குவோம் என்ற செய்தியை அவர்களுக்குக் கொடுத்தோம் என்றுதான் மே 10க்குப் பிறகான பேட்டிகளில் சொல்கிறார்.

செய்தி தெளிவு –  நாங்கள் தாக்குவது பயங்கரவாத முகாம்களை – இராணுவமோ பொதுமக்களோ அல்ல என்ற செய்தியை – என்பதாகத்தான் சொன்னார். இந்த வார்த்தைகளை குயுக்தியாக எடுத்துக் கொண்டு, வழக்கம்போல் வெட்டி ஒட்டி செய்யும் வேலைகளை செய்து ராகுல் பேசும் அரசியல் – கோமாளித்தனமாகத் தெரியவில்லை, குரூரத் தனமாகவே தெரிகிறது.

இவ்வாறு சமூகத் தளங்களில் பொய்களைப் பரப்புபவர்கள் – “நாங்கள் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” என்று தடயங்கள் எதுவும் இல்லாத வெற்றுப் பொய்களை மட்டுமே சொல்லி வந்த பாகிஸ்தானின் குரலையே ராகுல் எதிரொலிக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், அதிலும் அவர்களை அறியாமல் பாகிஸ்தானுக்கும் ஒரு தீயதையே செய்திருக்கிறார்கள். முன்கூட்டியே தகவல் வரப்பெற்றும், பாகிஸ்தான் தனது பயஙகரவாத முகாம்களையும் பயங்கரவாதிகளையும் பாதுகாக்காமல், பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்காமல், இப்படி பலரையும் சாகடிக்க வைத்துள்ளதே – என்று பாகிஸ்தான் மக்கள் யோசிக்க மாட்டார்களோ?! ஒருவேளை அப்படியெல்லாம் யோசித்து அரசியல் செய்வதற்கு பாகிஸ்தானில் இந்திரா காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களைப் போன்ற தேச விரோதிகள் இல்லை என்ற தைரியம் தான் காரணமோ?!

இவ்வளவு நடந்த பிறகு, பொய்யான போலியான கருத்துகளைத் திரித்து வெளியிட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

அப்பாவி சுற்றுலா பயணிகளை கொலை செய்தால் கண்டிப்பாக இந்திய ராணுவம் களத்தில் இறங்கும் என்பது, உலகத்திற்கே தெரிந்திருக்கும்போது, பாகிஸ்தானுக்குத் தெரியாதா என்ன?! காரணம், காஷ்மீருக்குள் பயங்கரவாதப் போர்வையில் இந்தப் படுகொலைகளைச் செய்ய அனுப்பப்பட்டவர்கள் நம் ராணுவத்தின் பயிற்சி பெற்ற இரண்டு கமாண்டோகள் என்பது பாகிஸ்தான் ராணுவத்துக்கு புரியாதா என்ன.  அல்லது அவர்களை இந்திய ராணுவம் சரியாக அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் என்பதும் அதற்கு தெரியாதா? என்ன?!  ஆனால் ராகுல் காண்டிக்குத் தெரியாமல் போனது அதிசயம் தான்!

இப்போது, எந்தத் தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருக்கிறார் என்ற கேள்விகளை நாட்டு மக்கள் எழுப்புகிறார்கள். முன்னர், சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததாக இந்திய ராணுவம் சொன்னபோது, Surgical strike பற்றிய ஆதாரத்தை இந்திய ராணுவம் வெளியிட வேண்டும் என கேட்டவர்தானே ராகுல் காண்டி. 

பொய்களை மட்டுமே ஊடகங்களிலும், அந்நாட்டு பார்லிமெண்டிலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமருக்கும், இந்திய எதிர்க் கட்சித் தலைவருக்கும் எந்த வித்தியாசமும் தென்படவில்லை. 

சீனாவின் டம்மியான டிரோனை பேட்டியின் போது  கையில் வைத்துக் கொண்டு இதே போன்ற கருவிகளை இந்தியாவால் செய்ய முடியாது என சீன அரசுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்ததும் இதே ராகுல் காண்டி. 

இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்கவில்லை என இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பும் ராகுல் சந்தேகம் கிளப்புகிறார். 

ராணுவம் சொன்னபடி, இந்திய எல்லைக்குள் மட்டுமே பறந்து பாகிஸ்தானை வீழ்த்தியதாக இருந்தால், இந்திய நாட்டின் எல்லைக்குள் பறந்த விமானங்களை பாகிஸ்தான் எப்படி சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் என்ற  அடிப்படைக் கேள்வி கூட ராகுலுக்குத் தோன்றவில்லையா!?

ஒருவேளை அப்படி ஒரு விமானத்தையாவது  பாகிஸ்தான் தாக்கி இருந்தால், அனைத்து விமானங்களையும் இந்தியா பாகிஸ்தானுக்கு பேரழிவைப் பரிசாக அளித்திருக்குமே! 

இந்திய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்றிருந்தால் மட்டுமே பாகிஸ்தான் ஏவுகணைகளைக் கொண்டு அவற்றைத் தாக்கி இருக்க முடியும். அவ்வாறு பாகிஸ்தான் தாக்கி இருந்தால் இந்திய விமானப் படையின் அந்த விமானங்களைக் காட்சிக்கு வைத்து உலகுக்கே இந்நேரம் பீற்றிக் கொண்டிருப்பார்களே! அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றபோதே, உணமையை உணர்ந்து கொள்ள வேண்டாமா?!

இப்போது, பாகிஸ்தான் மீடியாக்களில் ராகுல் காண்டியின் பேட்டி தான் தலைப்புச் செய்தியாக சென்று கொண்டு வருகிறது! இந்திய எதிர்க்கட்சித் தலைவரே ஒப்புக் கொண்டார் பாகிஸ்தான் ரபேல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதை என பேசிக் கொண்டிருக்கிறார்கள்! ராகுல் செய்வது எதிர்க்கட்சி அரசியல் அல்ல, தேச விரோதம் என்று தெரிந்ததால் தான், காங்கிரஸின் பழுத்த தலைகளே இப்போது காங்கிரஸை ஓரம் கட்டி விட்டு, அரசுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்திய நாட்டின் ரத்தம் ஓடும் எவருமே இப்படி அந்நிய நாடுகளுக்கு ஒத்தூதிக் கொண்டு வயிறு வளர்க்க மாட்டார்கள். 

இந்திரா காங்கிரஸ் – தேசியத்தின் சாபக்கேடு! ராகுல் காண்டி – நாட்டின் சாபக்கேடு!

IPL 2025: பிளேஆஃப் வாய்ப்பை இழந்த லக்னோ

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs ஹைதராபாத் – லக்னோ – 19.05.2025

லக்னோ பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (205/7, மிட்சல் மார்ஷ் 65, எய்டன் மர்க்ரம் 61, நிக்கோலஸ் பூரன் 45, ஈஷன் மலிங்கா 2/28, ஹர்ஷ் துபே, நித்தீஷ் குமார் ரெட்டி , ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (206/4, அபிஷேக் ஷர்மா 59, ஹென்றி கிளாசன் 47, இஷான் கிஷன் 35, கமிந்து மெண்டிஸ் 32, அதர்வா டைடே 13, திக்வேஷ் ரத்தி 2/37, வில் ஓ ரூர்கே, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (39 பந்துகளில் 65 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் எய்டன் மர்க்ரம் (38 பந்துகளில் 61 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் அற்புதமான தொடக்கம் தந்தனர். ரிஷப் பந்த் (7 ரன்) இந்த ஆட்டத்திலும் சரியாக ஆடவில்லை. நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 45 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினார். இவருக்குப் பின்னர் வந்த ஆயுஷ் பதோனி (3 ரன்), அப்துல் சமத் (3 ரன்), ஷர்துல் தாகூர் (4 ரன்), ரவி பிஷ்னோய் (ஆட்டமிழக்காமல் 4 ரன்), ஆகாஷ் தீப் (ஆட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) வேகமாக ரன் சேர்க்கும் முயற்சியில் வந்தது ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

          206 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அவர்களது தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் இன்று விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அதர்வா டைடே (13 ரன்) விளையாடினார். அவர் இரண்டாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணி ஜெட் வேகத்தில் ரன் சேர்த்தது.

அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரைச் சதம் அடித்தார். அபிஷேக் ஷர்மா (20 பந்துகளில் 59 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்), இஷான் கிஷன் (28 பந்துகளில் 35 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஹென்றி கிளாசன் (28 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (21 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

இடையில் அபிஷேக் ஷர்மாவுக்கும் திக்வேஷ் ரத்திக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு அதற்காக திக்வேஷ் 50% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலு ஒரு ஆட்டம் ஆட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அபிஷேக் ஷர்மாவுக்கு 25% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. இறுதில் 18.2 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

          அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி லக்னோ பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதைத் தடுத்துவிட்டது.

இனி பிளே ஆஃப்க்குச் செல்லும் அணி மும்பையா அல்லது டெல்லியா என்பது தீர்மானிக்கப்படவேண்டும்.