Home Blog Page 79

ஆப்ரேஷன் சிந்தூர் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம்! மோடி பெருமிதம்!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் (122ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள்: 25-05-2025

தமிழில் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது. நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேயாக வேண்டும், இதுதான் இன்று அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, நமது படைகள் வெளிப்படுத்திய பராக்கிரமம், இந்தியர்கள் அனைவரின் தலைகளையும் பெருமையில் உயர்த்தியது. நமது படையினர் கையாண்ட துல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதல் காரணமாக எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசம் செய்யப்பட்டன, இது அற்புதமான விஷயம். ஆப்பரேஷன் சிந்தூர், உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் புதியதொரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.

நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூர் என்பது ஒரு இராணுவச் செயல்பாடு மட்டுமல்ல, இது நமது உறுதிப்பாடு, சாகஸம், மாறிவரும் பாரதத்தின் காட்சி இது; இந்தக் காட்சி தான் நாடு முழுவதிலும் தேசபக்தி உணர்வால் நிரப்பியது, மூவண்ணத்தால் கொட்டி முழக்கியது. நீங்களே கவனித்திருக்கலாம், தேசத்தின் பல நகரங்களில், கிராமங்களில், சின்னச்சின்ன பகுதிகளில் எல்லாம், மூவண்ண யாத்திரைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான மக்கள், கைகளிலே மூவண்ணக்கொடியை ஏந்திக் கொண்டு, தேசத்தின் இராணுவத்திடம் தங்கள் அன்புகலந்த வணக்கங்களை வெளிப்படுத்தினார்கள். பல நகரங்களில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக ஆக, அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் ஒன்று திரண்டார்கள். சண்டீகட்டின் காணொளிகள் மிகவும் பிரபலமாகியதை நாமுமே கூட பார்த்தோம். சமூக ஊடகங்களில் கவிதைகள் எழுதப்பட்டன, உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடப்பட்டன. சின்னச்சின்னக் குழந்தைகள் கூட, ஓவியங்கள் வரைந்தார்கள், அதிலே பெரிய செய்திகள் மறைபொருளாக இருந்தன. நான் மூன்று நாட்கள் முன்பாகத்தான் பீகானேர் சென்றிருந்தேன். அங்கே குழந்தைகள் இப்படிப்பட்டதொரு ஓவியத்தைத் தான் எனக்குப் பரிசாக அளித்திருந்தார்கள். ஆப்பரேஷன் சிந்தூர், நாட்டுமக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சொன்னால், பல குடும்பங்கள் இதைத் தங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார்கள். பிஹாரின் கடிஹாரிலே, உபியின் குஷிநகரிலே, மேலும் பல நகரங்களிலே, இந்த வேளையில் பிறந்த குழந்தைகளுக்கு, சிந்தூர் என்று பெயர் சூட்டினார்கள்.
நண்பர்களே, நமது வீரர்கள், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நாசம் செய்தார்கள், இது அவர்களின் மாபெரும் சாகஸம். மேலும் அதிலே பாரதத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் பலமும் கூட அதிலே இடம் பெற்றிருந்தது. அதிலே தற்சார்பு பாரதத்தின் உறுதிப்பாடு வெளிப்பட்டது. நமது பொறியாளர்கள், நமது தொழில்நுட்பவியலாளர்கள் என அனைவரும் இந்த வெற்றிக்கு வியர்வை சிந்தியிருக்கிறார்கள். இந்த இயக்கத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதை முன்னிறுத்தி, புதிய சக்தி வெளிப்படுகிறது. பல விஷயங்கள் மனதைத் தொடும் வண்ணம் இருக்கிறது. ஒரு தாய்-தந்தை இணை – இனிமேல் நாங்கள் எங்களின் குழந்தைகளுக்கு பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளையே வாங்கித் தருவோம், சிறுவயது முதற்கொண்டே தேசபக்தி தொடங்க வேண்டும் என்று சொன்னார்கள். சில குடும்பங்களோ– நாங்கள் எங்களுடைய விடுமுறைகளை தேசத்தின் ஏதாவது ஒரு அழகான இடத்தில் செலவு செய்வோம் என்று சபதமே மேற்கொண்டார்கள். பல இளைஞர்கள், Wed in India, அதாவது இந்தியாவில் திருமணம் செய்வோம் என்ற உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி எந்தவொரு பரிசுப்பொருளை வாங்க வேண்டும் என்றாலும், ஒரு இந்தியக் கைவினைஞர் தயாரித்த பொருளையே வாங்குவேன் என்று ஒருவர் கூறினார்.

நண்பர்களே, இது தானே பாரதத்தின் மெய்யான பலம், மக்களின் மனங்களின் இணைவு, மக்கள் பங்களிப்பு!! நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன், வாருங்கள், இந்த சந்தர்ப்பத்திலே நாம் உளவுறுதி பூணுவோம் – நாம் நமது வாழ்க்கையிலே, முடிந்த வரையில், நம்முடைய தேசத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முதன்மை அளிப்போம். இது பொருளாதார தற்சார்பு தொடர்பான விஷயம் அல்ல, இது தேசத்தின் நிர்மாணத்தில் பங்களிப்பு பற்றிய உணர்வு. நமது ஒரு அடியெடுப்பு, பாரதத்தின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும்.

நண்பர்களே, பேருந்துப்பயணம் எத்தனை எளிமையான விஷயம். ஆனால் நான் எப்படிப்பட்ட கிராமத்தைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன் என்றால், அங்கே முதன்முறையாக ஒரு பேருந்து சென்றடைந்தது. இந்த நாளுக்காகத் தான் அங்கே மக்கள் பல்லாண்டுகளாகக் காத்துக் கிடந்தார்கள். அந்தக் கிராமத்தில் முதன்முறையாக ஒரு பேருந்து சென்ற போது, அந்த மக்கள் மேள வாத்தியங்கள், தாரை தப்பட்டைகளை இசைத்து அதை வரவேற்றார்கள். பேருந்தைப் பார்த்து அவர்களின் உற்சாகம் நிலை கொள்ளவில்லை. கிராமத்திலே நல்ல சாலை இருந்தது, மக்களுக்குத் தேவையும் இருந்தது என்றாலும் இதற்கு முன்பாக அங்கே பேருந்துகள் செல்லவில்லை. ஏன்? ஏனென்றால் இந்த கிராமம் மாவோவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த இடம் மகாராஷ்டிரத்தின் கட்சிரௌலி மாவட்டத்தில் இருக்கிறது, கிராமத்தின் பெயர் காடேஜரி ஆகும். காடேஜரி கிராமத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை, அக்கம்பக்கத்தில் இருந்த பகுதியில் எல்லாம் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது இங்கே நிலைமை வேகமாக இயல்பாக மாறிக் கொண்டிருக்கிறது. மாவோவாதிகளுக்கு எதிராக, சமூகப் போராட்டம் காரணமாக, இப்போது அடிப்படை வசதிகள் இப்படிப்பட்ட இடங்களுக்குக் கூட சென்றடையத் தொடங்கிவிட்டது. பேருந்து வருவதால் தங்களின் வாழ்க்கையில் சுலபத்தன்மை அதிகரித்து விடும் என்று கிராமவாசிகள் கூறுகிறார்கள்.

நண்பர்களே, மனதின் குரலில் நாம் சத்திஸ்கட்டில் நடைபெற்ற பஸ்தர் ஒலிம்பிக்ஸ் மற்றும் மாவோவாதம் பாதித்த பகுதிகளில் அறிவியல் சோதனைக்கூடங்கள் பற்றி பேசியிருக்கிறோம். இங்கே இருக்கும் குழந்தைகளிடம் அறிவியல் தொடர்பாக பேரார்வம் இருக்கிறது. இவர்கள் விளையாட்டுக்களில் அற்புதம் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளால் என்ன தெரிய வருகிறது என்றால், இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் எத்தனை திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது தான். இந்த மனிதர்கள் தடைகள்-சவால்கள் அனைத்தையும் தாண்டி, தங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கக்கூடிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 10ஆவது, 12ஆவது வகுப்புக்களுக்கான, தந்தேவாடா மாவட்டத்தின் பொதுத்தேர்வு முடிவுகள் மிகச் சிறப்பானவையாக இருந்தன என்பதை அறிந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமார் 95 சதவீத தேர்ச்சி விகிதத்தோடு இந்த மாவட்டம் 10ஆவது வகுப்பு தேர்வு முடிவுகளில் தலைசிறந்து விளங்குகிறது. அதே போல 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் இந்த மாவட்டமானது, சத்திஸ்கட்டிலே 6ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சற்றே சிந்தித்துப் பாருங்கள்!! எந்த தந்தேவாடாவில் மாவோவாத சித்தாந்தம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்ததோ, அங்கே இன்று கல்வி கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மாற்றங்கள் தாம் அனைவரின் உள்ளங்களிலும் பெருமிதத்தை நிரம்பச் செய்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, இப்போது நான் சிங்கங்களோடு தொடர்புடைய ஒரு மிக அருமையான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வெறும் ஐந்தாண்டுகளிலே, குஜராத்தின் கிர் பகுதியிலே, சிங்கங்களில் எண்ணிக்கை 674லிருந்து அதிகரித்து 891ஆக அதிகரித்திருக்கிறது. சிங்கங்களுக்கான கணக்கெடுப்பை நடத்திய பிறகு தெரிய வந்த இந்த சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. நண்பர்களே, இந்த விலங்குகளின் கணக்கெடுப்பு எப்படி நடக்கிறது என்று உங்களில் பலர் தெரிந்து கொள்ள விருப்பப்படலாம். இந்தச் செயல்பாடு மிகவும் சவால்கள் நிறைந்த ஒன்று. சிங்கங்களின் கணக்கெடுப்பு 11 மாவட்டங்களிலே, 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலே செய்யப்பட்டது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கணக்கெடுப்பிற்காக குழுக்கள் 24 மணிநேரமும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். இந்த மொத்த இயக்கத்திலும் சரிபார்த்தல், மறுமுறை சரிபார்த்தல் என இரண்டும் செய்யப்பட்டன. இதன் வாயிலாக மிக நுணுக்கமான முறையிலே சிங்கங்களைக் கணக்கிடுதல் பணியை நிறைவு செய்ய முடிந்தது.

நண்பர்களே, சமூகத்திலே தங்களுடையதாக ஏற்கும் தன்மை பலமடையும் போது, எத்தகைய அருமையான முடிவுகள் வருகின்றன என்பதைத் தான் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நமக்குக் காட்டுகிறது. சில தசாப்தங்கள் முன்பு, கிர் பகுதியில் இருந்த நிலைமை மிகவும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் அங்கே இருந்த மக்கள் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்தும் சவாலை மேற்கொண்டார்கள். அங்கே நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, உலக அளவிலான மிகச்சிறப்பான செயல்பாடுகள் கையாளப்பட்டன. பெரிய அளவில் வன இலாக்கா அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்படும் முதல் மாநிலமாக இந்த வேளையில் தான் குஜராத் மாநிலம் ஆனது. இன்று நாம் அதன் விளைவுகளைப் பார்க்கிறோம், இதிலே இவர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது. வன உயிரினப் பாதுகாப்பிற்காக நாம் இப்படித்தான் எப்போதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

என் அன்பான நாட்டுமக்களே, 2-3 நாட்கள் முன்பு, நான், முதல் Rising North East Summit, உயர்வடையும் வடகிழக்கு உச்சிமாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அதற்கு முன்பாக, நாம், வடகிழக்கின் வல்லமைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஷ்டலக்ஷ்மி மகோத்சவத்தையும் கொண்டாடினோம். வடகிழக்கு பற்றிய பேச்சு வேறுரகமானது, அங்கே இருக்கும் திறமைகள், அங்கே இருக்கும் திறன்கள் எல்லாம் உண்மையிலேயே அலாதியானவை. எனக்கு ஒரு மிக சுவாரசியமான விஷயம் தெரிய வந்தது, இது Crafted Fibers பற்றியது. இந்த Crafted Fibers என்பது ஒரு பிராண்ட் மட்டுமல்ல, இது சிக்கிம் மாநிலத்தின் பாரம்பரியம், நெசவுக்கலை, மற்றும் இன்றைய ஃபேஷன் நோக்கு என்ற இந்த மூன்றின் அழகான சங்கமம். இதன் தொடக்கத்தை டாக்டர் சேவாங்க் நோர்பூ பூடியா (Dr. Chewang Norbu Bhutia) தான் ஏற்படுத்தினார். தொழில்ரீதியாக இவர் ஒரு கால்நடை மருத்துவர் என்றாலும் இவருடைய மனதால் இவர் சிக்கிம் கலாச்சாரத்தின் மெய்யான ப்ராண்ட் தூதுவர் என்று கூறலாம். ஏன் நாம் நெசவுக்கலைக்கு ஒரு புதிய கோணத்தை ஏற்படுத்தக் கூடாது என்று இவர் சிந்தித்தார். இந்த எண்ணத்தில் விளைந்தது தான் Crafted Fibers. இவர் பாரம்பரியமான நெசவை, நவீன ஃபேஷனோடு இணைத்ததால், இதை ஒரு சமூக முன்னெடுப்பாக உருவாக்கினார். இப்போது இவரிடத்தில் துணிகள் மட்டும் தயாராவதில்லை, இவரிடத்தில் வாழ்க்கைகள் நெசவு செய்யப்படுகின்றன. இவர் உள்ளூர் மக்களுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கிறார், அவர்களைத் தற்சார்புடையவர்களாக ஆக்குகிறார். கிராமங்களைச் சேர்ந்த நெசவாளர்கள், கால்நடைப் பராமாரிப்பாளர்கள், சுயவுதவிக் குழுக்கள் ஆகிய அனைவரையும் இணைத்து டாக்டர் பூடியா, வேலைவாய்ப்புக்களுக்கான புதிய பாதையை அமைத்திருக்கிறார். இன்று, வட்டாரப் பெண்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, சிறப்பாக வருவாய் ஈட்டி வருகிறார்கள். இந்த crafted fiberகளால் உருவாக்கப்பட்ட சால்வைகள், ஸ்டோல்கள், கையுறைகள், காலுறைகள் என அனைத்தும் உள்ளூர் கைத்தறியால் உருவானவை. இவற்றில் பயன்படுத்தப்படும் இழைகள், சிக்கிமின் முயல்கள் மற்றும் செம்மறியாட்டிலிருந்து வருபவை. வண்ணம் கூட முழுமையாக இயற்கையாகவே இருக்கிறது, எந்த ரசாயனப் பயன்பாடும் இல்லை, இயற்கையான வண்ணம் மட்டுமே. டாக்டர். பூடியா, சிக்கிமின் பார்ம்பரிய நெசவுக்கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கிறார். நாம் பாரம்பரியத்தை, பேரார்வத்தோடு இணைக்கும் போது, அது உலகத்தை எந்த அளவுக்குக் கவர்கிறது என்பதையே டாக்டர் பூடியாவின் இந்தப் பணி நமக்குக் கற்பிக்கிறது.எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று நான் உங்களுக்கு ஒரு அருமையான நபரைப் பற்றிக் கூற இருக்கிறேன், ஒரு கலைஞர், தவிர வாழும் உத்வேகக் காரணியாகவும் இவர் இருக்கிறார். இவர் பெயர் ஜீவன் ஜோஷி, வயது 65 ஆண்டுகள். நீங்களே சிந்தியுங்கள், யாருடைய பெயரிலேயே ஜீவன் இருக்கிறதோ, அவரிடம் எத்தனை உயிர்ப்பு நிறைந்திருக்கும் என்பதை. ஜீவன் அவர்கள் உத்தராகண்டின் ஹல்த்வானியிலே வசிக்கிறார். சிறுவயதில் போலியோவால் பாதிப்பு ஏற்பட்டு இவருடைய கால்களின் பலத்தை இழந்தார் என்றாலும், போலியோவால் இவருடைய நெஞ்சுரத்தை பறிக்க இயலவில்லை. இவர் நடப்பது கொஞ்சம் மெதுவாக இருக்கலாம் ஆனால், இவருடைய மனத்தின் கற்பனைகளோ சிறகு கட்டிப் பறந்து கொண்டிருக்கும். இந்தப் பறத்தலில் தான், ஜீவன் அவர்கள் ஒரு விசித்திரமான கலைக்குப் பிறப்பளித்தார், பகேட் என்று இதற்குப் பெயர் சூட்டினார். இதிலே இவர் பைன் மரங்கள், அதாவது தேவதாரு மரங்களிலிருந்து விழும் காய்ந்த பட்டைகளிலிருந்து அழகான கலைப்படைப்புக்களை உருவாக்குகிறார். இந்த மரப்பட்டைகள், பொதுவாக பயனற்றவையாகக் கருதப்படுபவை. ஜீவன் அவர்களின் கைகளுக்கு இவை வரும் போது இவை சிறப்புத்தன்மை பெற்று விடுகின்றன. இவருடைய ஒவ்வொரு படைப்பிலும் உத்தராகண்டின் மண்ணின் மணம் கமழும். சில வேளைகளில் மலை மக்களின் இசைக்கருவிகள், சில வேளைகளில் மலைகளின் ஆன்மா அந்த மரத்தில் உறைந்திருப்பதாகத் தோன்றும். ஜீவன் அவர்களின் பணி வெறும் கலையோடு நின்று போவதில்லை, இது ஒரு சாதகம். இவர் இந்தக் கலைக்காகத் தன் வாழ்கை முழுவதையும் அர்ப்பணம் செய்திருக்கிறார். ஜீவன் ஜோஷி போன்ற கலைஞர்கள், சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், நோக்கம் பலமானதாக இருந்தால், சாத்தியமில்லாதது என்ற ஒன்று கிடையாது என்று நமக்கெல்லாம் நினைவுபடுத்துகிறார். இவருடைய பெயர் ஜீவன், வாழ்க்கையை வாழ்வது என்றால் என்ன என்பதை இவர் நமக்குக் காட்டியிருக்கிறார்.எனதருமை நாட்டுமக்களே, இன்று பல பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதோடு கூடவே, வானைத் தொடும் உயரங்களுக்கு இணையாகப் பணியாற்றி வருகின்றார்கள். ஆமாம். நீங்கள் சரியாகத் தான் கேட்டீர்கள்!! இப்போது கிராமத்துப் பெண்கள், ட்ரோன் சகோதரிகளாக ஆகி ட்ரோன்களைப் பறக்க விடுகிறார்கள், விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே, தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்திலே, சில காலம் முன்புவரை எந்தப் பெண்கள் எல்லாம் மற்றவர்களைச் சார்ந்து வாழ்ந்து வந்தார்களோ, இன்று அதே பெண்கள் ட்ரோன்கள் வாயிலாக 50 ஏக்கர் நிலத்தின் மீது மருந்து தெளிக்கும் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். காலையில் 3 மணிநேரம், மாலையில் 2 மணிநேரம், வேலை முடிந்தது. வெப்பத்தில் வெந்து போவது இல்லை, விஷத்திற்கு ஒப்பான ரசாயனங்களின் அபாயம் இல்லை. நண்பர்களே, கிராமவாசிகளும் கூட இந்த மாற்றத்தை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இப்போது இந்தப் பெண்கள் ட்ரோன் ஆப்பரேட்டர்கள் மட்டுமல்ல, வான் வீரர்கள் என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். உத்தியும் உறுதிப்பாடும் ஒன்றிணைந்து பணியாற்றும்போது மாற்றம் ஏற்படுகிறது என்பதையே இந்தப் பெண்கள் நமக்குக் கற்பிக்கிறார்கள்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, சர்வதேச யோகக்கலை தினத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நேரமே இருக்கிறது. நீங்கள் இதுவரை யோகக்கலையை இன்னும் பயிலத் தொடங்கவில்லை என்றால் இப்போது அதோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் நினைவூட்டுகிறது. யோகக்கலை நீங்கள் வாழ்க்கையை வாழும் முறையையே மாற்றி அமைத்து விடும். நண்பர்களே, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று, யோகக்கலை தினம் தொடங்கப்பட்ட பிறகிலிருந்து இதன்பால் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த முறையும் கூட யோகக்கலை தினம் தொடர்பாக உலகெங்கிலும் மக்களின் உற்சாகமும், உவகையும் தெளிவாகக் காண முடிகிறது. பல்வேறு அமைப்புகள் தங்களுடைய தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டுகளின் காட்சிகள் எல்லாம் மிகுந்த உள்ளெழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. பல்வேறு நாடுகளில், ஒரு சமயம் மக்கள் யோகக்கலை சங்கிலித் தொடரை உருவாக்கினார்கள், யோகக்கலை வளையத்தை ஏற்படுத்தினார்கள். இப்படி பலவிதமான காட்சிகளில், ஒன்றாக நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து யோகக்கலையைப் பயின்றதையும் நான் பார்த்தோம். பலர் தங்களுடைய நகரின் பிரபலமான இடங்களை யோகம் பயிலத் தேர்ந்தெடுத்தார்கள். நீங்களும் கூட இந்த முறை சில சுவாரசியமான வழிமுறைகள் வாயிலாக யோகக்கலை தினத்தைக் கொண்டாடுவது பற்றி சிந்திக்கலாமே!!

நண்பர்களே, ஆந்திர பிரதேச அரசாங்கம் யோகாந்திரா இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மாநிலத்திலும் யோகக்கலை கலாச்சாரத்தை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த இயக்கத்தின்படி, யோகக்கலை பயில்வோர் பத்து இலட்சம் பேர் கொண்ட கூட்டத்தை ஏற்படுத்துவது. இந்த ஆண்டு விஷாகப்பட்டனத்தில் யோகக்கலை தின நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவிருக்கிறது. இந்த முறை நம்முடைய இளைய நண்பர்கள், தேசத்தின் மரபோடு தொடர்புடைய பாரம்பரிய இடங்களில் யோகக்கலையைப் பயில இருக்கிறார்கள் என்பது எனக்கு மிக இனிமையாக இருக்கிறது. பல இளைஞர்கள், புதிய பதிவுகளை ஏற்படுத்தவும், யோகக்கலை சங்கிலித்தொடரின் அங்கமாக ஆகவும் உறுதி மேற்கொண்டிருக்கிறார்கள். நமது பெருநிறுவனங்களும் இதிலிருந்து பின் தங்கிப் போகவில்லை. சில அமைப்புகள் தங்கள் அலுவலகங்களிலேயே யோகக்கலையைப் பயில பல்வேறு இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கூட தங்கள் இடங்களில், யோகக்கலையைப் பயில்வதற்கெனவே சில மணிநேரங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். சிலரோ கிராமங்களுக்குச் சென்று யோகக்கலையைப் பயில்விக்கச் செல்லும் தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். உடல்நலம் மற்றும் உடலுறுதி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது எனக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது.

நண்பர்களே, யோகக்கலை தினத்தோடு கூடவே ஆயுர்வேதத் துறையிலும் கூட சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, இவை பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். நேற்றுத் தான் அதாவது மே மாதம் 24ஆம் தேதியன்று, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரும் எனது நண்பருமான துளசி பாய் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தோடு கூடவே உடல்நல இடையீடுகளின் சர்வதேச வகைப்படுத்தல்படி, பிரத்யேகமான பாரம்பரிய மருந்துகள் பாகம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த முன்முயற்சி காரணமாக, ஆயுஷை ஒட்டுமொத்த உலகிலும் விஞ்ஞான முறைப்படி அதிக அளவு மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப் பேருதவியாக இருக்கும்.

நண்பர்களே, நீங்கள் பள்ளிகளில் கரும்பலகையைப் பார்த்திருக்கலாம் ஆனால், இப்போது சில பள்ளிகளில் சர்க்கரைப் பலகை அமைக்கப்பட்டிருக்கிறது. கரும்பலகை அல்ல, சர்க்கரைப் பலகை. சிபிஎஸ்ஈ, மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தின் இந்த வித்தியாசமான முன்னெடுப்பின் நோக்கம் என்னவென்றால், குழந்தைகளிடம் சர்க்கரை உட்கொள்ளல் அளவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல். எவ்வளவு சர்க்கரையை உண்ண வேண்டும், எவ்வளவு சர்க்கரையை உண்ணலாம் என்பதைத் தெரிந்து கொண்டு குழந்தைகள் தாங்களாகவே ஆரோக்கியமான வழிமுறையைத் தேர்தெடுக்கிறார்கள். இது ஒரு வித்தியாசமான முயற்சி, இதன் தாக்கம் கூட அதிக நேர்மறையாக இருக்கும். சிறுவயது தொடங்கியே ஆரோக்கியமான வாழ்கைமுறை தொடர்பான பழக்கங்களை ஏற்படுத்தும் போது இது மிகவும் பயனுடையதாக இருக்கும். பல பெற்றோர்களும் இதைப் பாராட்டி இருக்கிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இப்படிப்பட்ட முன்னெடுப்புகள், அலுவலகங்கள், கேண்டீன்கள் மற்றும் அமைப்புகளிடத்திலும் இருக்க வேண்டும். ஏனென்றால், உடல்நலம் தான் அனைத்துமே. உடலுறுதியான இந்தியா தான் பலமான இந்தியாவுக்கான அடித்தளம்.

என் கனிவுநிறை நாட்டுமக்களே, தூய்மையான பாரதம் பற்றிய பேச்சு எழும் போது, மனதின் குரல் நேயர்கள் எப்படி பின் தங்கிப் போவார்கள்!! நீங்கள் அனைவரும் அவரவர் நிலையில் இந்த இயக்கத்திற்கு பலம் சேர்த்து வருவீர்கள் என்பதில் எனக்கு சற்றும் ஐயமில்லை. ஆனால் இன்று உங்களிடத்தில் ஒரு எடுத்துக்காட்டு குறித்துப் பேச விரும்புகிறேன். இங்கே தூய்மைக்கான உறுதிப்பாடு, மலையை ஒத்த சவால்களையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள், ஒரு நபர் பனிமூடிய மலைகளின் மீது ஏறிக் கொண்டிருக்கிறார், அங்கே மூச்சு விடுவதே கடினமான பணியாக இருக்கிறது, ஒவ்வொரு அடியிலும் ஆபத்து நிறைந்திருக்கிறது, இவற்றையெல்லாம் தாண்டியும் கூட அந்த நபர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நமது இந்தோ திபத்திய எல்லையோரப் பாதுகாப்புப் படையினரின் குழு உறுப்பினர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டார்கள். இந்தக் குழு, மகாலூ போன்ற மலையில், உலகின் மிகவும் கடினமான சிகரத்தின் மீது ஏறச் சென்றார்கள். ஆனால் நண்பர்களே, அங்கே அவர்கள் மலையேற மட்டும் செல்லவில்லை, தங்கள் இலக்கோடு கூட அவர்கள் ஒரு இயக்கத்தையும் இணைத்துக் கொண்டார்கள், அது தான் தூய்மை. சிகரத்தினருகே இருந்த குப்பையை அகற்றும் சவாலை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நீங்களே கற்பனை செய்து பாருங்கள், 150 கிலோவுக்கும் அதிகமான மக்கா குப்பையை இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களோடு கீழே எடுத்துக் கொண்டு வந்தார்கள். இத்தனை உயரங்களில் தூய்மை செய்வதில் ஈடுபடுவது எளிய பணி அல்ல. ஆனால் எங்கே உறுதிப்பாடு இருக்கிறதோ, அங்கே பாதை தாமாகவே துலக்கப்படும் என்பதையே இது காட்டுகிறது.

நண்பர்களே, இதோடு தொடர்புடைய மேலும் ஒரு முக்கியமான விஷயம் – காகிதக் குப்பை மற்றும் மறுசுழற்சி. நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிக அளவில் காகிதக் கழிவுகள் ஏற்படுகின்றன. நாம் இவற்றை சாதாரணமானவையாகக் கருத நேரலாம் ஆனால், தேசத்திலே குப்பைக்கிடங்குக் கழிவுகளில் நான்கில் ஒருபங்கு காகிதக் கழிவாக இருக்கிறது. ஒவ்வொரு நபரும் இந்தத் திசையில் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும் என்பது இன்றைய அவசியமாக இருக்கிறது. பாரதத்தின் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தத் துறையில் அருமையாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விசாகப்பட்டினம், குருக்கிராமம் போன்ற பல நகரங்களில் பல ஸ்டார்ட் அப்கள், காகித மறுசுழற்சி செய்வதில் நூதனமான வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். சிலர் மறுசுழற்சி காகிதத்தால் பேக்கேஜ் செய்யப்படும் பலகைகளைத் தயாரிக்கிறார்கள், சிலர் டிஜிட்டல் வழிமுறையில் செய்தித்தாள் மறுசுழற்சியை எளிமையாக்கி வருகிறார்கள். ஜாலானா போன்ற நகரங்களில் சில ஸ்டார்ட் அப்புகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் பேக்கேஜிங் சுருள் மற்றும் காகிதக் குழாய்களைத் தயாரித்து வருகிறார்கள். இந்த விஷயம் உங்களுக்குக் கருத்தூக்கத்தை அளிக்கலாம், ஒரு டன் காகிதத்தை மறுசுழற்சி செய்வதன் காரணமாக 17 மரங்கள் வெட்டப்படுவதை நாம் தடுக்கலாம், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும். சற்றே சிந்தனை செய்யுங்கள் நண்பர்களே, மலையேறுபவர்கள் இத்தனை கடினமான சூழலிலும் கூட குப்பைகளைத் திரும்பக் கொண்டு வர முடியும் போது, நாமும் கூட நமது இல்லங்களிலோ, அலுவலகங்களிலோ காகிதத்தைத் தனியாக்கி மறுசுழற்சி செய்யப்பட நமதுபங்களிப்பை அளிக்க வேண்டும். தேசத்தின் அனைத்துக் குடிமக்களும் தேசத்தை எப்படி சிறப்பாக ஆக்கலாம் என்று சிந்திக்கும் போது, நாம் இணைந்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.நண்பர்களே, கடந்த நாட்களில், கேலோ இண்டியா விளையாட்டுக்கள் பெரும் பேசுபொருளாக இருந்தன. கேலோ இண்டியாவினை பிஹாரின் ஐந்து நகரங்கள் ஏற்று நடத்தின. அங்கே பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பாரதம் நெடுகவிருந்தும் வந்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 5000த்திற்கும் அதிகமாக இருந்தது. இந்த வீரர்கள் பிஹாரின் விளையாட்டு உணர்வையும், பிஹார் மாநில மக்களின் இனிமையையும் மிகவும் பாராட்டியிருக்கிறார்கள்.நண்பர்களே, பிஹாரின் மண்ணுக்கு என்று ஒரு விசேஷம் உண்டு, இந்த ஏற்பட்டின் போது இங்கே பல தனித்தன்மையான விஷயங்கள் நடந்தன. கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களின் முதல் நிகழ்ச்சி இது. இது ஒலிம்பிக் சேனல் வாயிலாக உலகெங்கும் சென்று சேர்ந்தது. உலகெங்கிலும் இருப்பவர்கள் நமது இளைய விளையாட்டு வீரர்களின் திறமைகளைப் பார்த்தார்கள், பாராட்டினார்கள். நான் பதக்கங்களை வென்ற அனைவருக்கும், குறிப்பாக முன்னணி மூன்று வெற்றியாளர்களான, மகாராஷ்ட்டிரம், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே, இந்த முறை கேலோ இண்டியாவிலே மொத்தம் 26 பதிவுகள் ஏற்படுத்தப்பட்டன. பளுதூக்கல் போட்டிகளில் மகாராஷ்ட்ராவின் அஸ்மிதா தோனே, ஒடிஷாவின் ஹர்ஷ்வர்தன் சாஹு, உத்தர பிரதேசத்தின் துஷார் சௌத்ரி ஆகியோரின் மிகச் சிறப்பான வெளிப்பாடுகள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டன. அதே போல மகாராஷ்டிரத்தின் சாய்ராஜ் பர்தேசி, மூன்று சாதனைகளைப் படைத்தார். தடகளப் போட்டிகளில் உத்தர பிரதேசத்தின் காதிர் கான், ஷேக் ஜீஷான் ஆகியோரும், ராஜஸ்தானத்தின் ஹன்ஸ்ராஜும் மிக அருமையாகச் செயல்பட்டார்கள். இந்த முறை, பிஹாரும் கூட 36 பதக்கங்களை வென்றெடுத்தது. நண்பர்களே, யார் விளையாடுகிறார்களோ அவர்களே மலர்கிறார்கள். இளம் விளையாட்டுத் திறமையாளர்களுக்கு போட்டிகள் மிக முக்கியமானவை. இந்த மாதிரியான ஏற்பாடுகள், பாரதநாட்டு விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தை மேலும் சிறப்பாக்க வல்லவை.எனதருமை நாட்டுமக்களே, மே மாதம் 20ஆம் தேதியன்று உலக தேனீக்கள் நாளை நாம் கொண்டாடினோம். அதாவது, தேன் என்பது வெறும் இனிப்பு நிறைந்தது மட்டுமல்ல, தேன் என்பது சுயவேலைவாய்ப்பு மற்றும் சுயசார்புக்கான ஒரு எடுத்துக்காட்டும் கூட என்பதைத் தான் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. கடந்த 11 ஆண்டுகளிலே, தேனீக்கள் பராமரிப்பிலே, பாரதம் ஒரு இனிமைப் புரட்சியை அரங்கேற்றியிருக்கிறது. இன்றிலிருந்து 10-11 ஆண்டுகள் முன்பு, பாரதத்தின் தேன் உற்பத்தி ஓராண்டிலே சுமார் 70 முதல் 75 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இன்று இது அதிகரித்து சுமார் ஒண்ணேகால் இலட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இருக்கிறது. அதாவது தேன் உற்பத்தியில் சுமார் 60 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம் தேன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஆகி விட்டோம். நண்பர்களே, இந்த நேர்மறைத் தாக்கத்தில் தேசிய தேனீக்கள் பராமரிப்பு மற்றும் தேன் மிஷன் ஆகியவற்றின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. இதற்குட்பட்டு, தேனி வளர்ப்போடு தொடர்புடைய ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது, கருவிகள் கொடுக்கப்பட்டன, மேலும் சந்தைகள் வரை அவர்களின் அணுகல் திறன் மேம்படுத்தப்பட்டது.நண்பர்களே, இந்த மாற்றம் என்பது வெறும் எண்ணிக்கையை மட்டும் காட்டவில்லை, இதை கிராமங்களின் அளவிலும் கூடத் தெளிவாகக் காண முடிகிறது. சத்திஸ்கட்டின் கோரியா மாவட்டத்தின் ஒரு எடுத்துக்காட்டு, இங்கே பழங்குடியின விவசாயிகள், சோன் ஹனி என்ற பெயருடைய சுத்தமான இயற்கையான தேன் பிராண்டை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று இந்தத் தேன் ஜெம் உட்பட அநேக இணைய வலைத்தளங்களிலும் கிடைக்கிறது. அதாவது கிராமங்களின் உழைப்பு இப்போது உலக அளவில் கொட்டி முழக்குகிறது. இதைப் போலவே உத்தர பிரதேசம், குஜராத், ஜம்மு கஷ்மீரம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பெண்களும், இளைஞர்களும் இப்போது தேன் உற்பத்தி செய்யும் தொழில்முனைவோராகி விட்டார்கள். நண்பர்களே, இப்போது தேன் உற்பத்தி என்பது உற்பத்தி அளவோடு நின்று போவதில்லை, இதன் தூய்மை தொடர்பாகவும் பணிகள் நடந்தேறி வருகின்றன. சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையோடு, தேனின் தரத்திற்கான ஆதாரச் சான்றை ஏற்படுத்துகிறார்கள். அடுத்த முறை நீங்கள் தேன் வாங்கச் சென்றால், இந்தத் தேன் தொழில்முனைவோர் உற்பத்தி செய்த தேனைக் கண்டிப்பாகச் சுவைத்துப் பாருங்கள், உள்ளூர் விவசாயி யாரிடத்திலாவது, அல்லது யாராவது பெண் தொழில்முனைவோரிடமிருந்து தேனை வாங்க முயலுங்கள். ஏனென்றால் அதன் ஒவ்வொரு சொட்டிலும் சுவை மட்டுமல்ல, பாரதத்தின் உழைப்பும் நம்பிக்கைகளும் கலந்திருக்கும். தேனின் இனிமை, தற்சார்பு பாரதத்தின் சுவை.நண்பர்களே, நாம் தேனோடு தொடர்புடைய நாடுகளின் முயற்சிகளைப் பற்றிப் பேசும் போது, நான் மேலும் ஒரு முன்னெடுப்பு குறித்தும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தேனீக்களின் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழலோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது வேளாண்மை மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் பொறுப்புமாகும் என்பதை இது நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த எடுத்துக்காட்டு புணே நகரைச் சார்ந்தது, அங்கே ஒரு குடியிருப்பு சமூகத்திலே தேன் கூடு ஒன்று அகற்றப்பட்டது, ஒரு வேளை பாதுகாப்பு காரணமாக இருக்கலாம் அல்லது பயம் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தச் சம்பவம் ஒருவரை சிந்திக்கத் தூண்டியது. அமித் என்ற ஒரு இளைஞர், தேனீக்களை அகற்றக் கூடாது, அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்தார். அவர் சுயமாகக் கற்றுக் கொண்டதோடு, தேனீக்கள் பற்றிய தேடலில் இறங்கினார், மற்றவர்களையும் இதோடு இணைத்துக் கொண்டார். மெல்ல மெல்ல ஒரு குழுவை ஏற்படுத்தினார், இதற்கு Bee Friends, அதாவது தேனீக்களின் நண்பர்கள் என்று பெயரிட்டார். இந்த தேனீக்களின் நண்பர்கள், தேன் கூடுகளை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, பாதுகாப்பான முறையிலே இடமாற்றம் செய்கிறது. இதன் காரணமாக மக்களுக்கும் தேனீக்களால் ஆபத்து இல்லை, தேனீக்களும் பிழைத்திருக்கும். அமித் அவர்களின் இந்த முயற்சி ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அருமையாக இருந்தது. தேனீக்களின் வாழ்விடங்கள் காப்பாற்றப்பட்டன. தேன் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது, மிகவும் முக்கியமானது என்னவென்றால், மக்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்திருப்பது தான். நாம் இயற்கையோடு இசைவாகப் பணியாற்றினோம் என்றால், இதனால் அனைவருக்கும் ஆதாயம் உண்டாகும் என்பதையே இந்த முன்னெடுப்பு நமக்குக் கற்பிக்கிறது.எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இந்த முறை இம்மட்டே. நீங்கள் இதைப் போலவே, நாட்டுமக்களின் சாதனைகளை, சமூகத்தின் நலனுக்கான அவர்களின் முயற்சிகளை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள். மனதின் குரலின் அடுத்த பகுதியில் நாம் மீண்டும் சந்திப்போம், பல புதிய விஷயங்களையும், நாட்டுமக்களின் புதிய சாதனைகளையும் பற்றி விவாதிப்போம். நீங்கள் அனுப்பும் தகவல்களுக்காக நான் காத்திருப்பேன், உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள், வணக்கம்.

IPL 2025: கடைசி கட்டத்தில் விறுவிறுப்பு சேர்க்கிறார்களாம்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs டெல்லி – லக்னோ – 24.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (206/8, ஷ்ரேயாஸ் ஐயர் 53, மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆட்டமிழக்காமல் 44, ஜோஷ் இங்கிலிஷ் 32, பிரப்சிம்ரன் சிங் 28, முஸ்டாஃபிசுர் ரஹ்மான் 3/33, விப்ராஜ் நிகம் 2/38, முகேஷ் குமார் ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ் அணி (19.3 ஓவர்களில் 208/4, சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்கமல் 58, கருண் நாயர் 44, கே.எல். ராகுல் 35, டியு பிளேசிஸ் 23, செதிகுல்லா அடல் 22, ஸ்டப்ஸ் ஆட்டமிழக்கமல் 18, ஹர்பிரீத் ப்ரார் 2/41, மார்கோ ஜேன்சன், ப்ரவீண் துபே தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரப் சிம்ரன் சிங் (18 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர்)மூன்றாவதாகக் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஷ் (12 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து பவர்பிளே ஓவர்களில் 60 ரன் எடுக்க உதவினார்.

அவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (34 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), நேஹல் வதேரா (16 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர்), ஷஷாங்க் சிங் (10 பந்துகளில் 11 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (16 பந்துகளில் 4 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோர் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 206 என்ற அளவிற்கு உயர்த்தினர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

கே.எல். ராகுல் (21 பந்துகளில் 35 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்), ட்யூ பிளேசிஸ் (15 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), கருண் நாயர் (27 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), செதிகுல்லா அடல் (16 பந்துகளில் 22 ரன், 2 சிக்சர்), சமீர் ரிஸ்வி (25 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (14 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர்) ஆகியோர் நன்றாக ஆடி 19.3 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 208 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்னமும் நான்கு ஆட்டங்கள் மீதமுள்ளன.

நாளை, ஞாயிறு அன்று இரண்டு ஆட்டங்கள் (1) குஜராத் – சென்னை குஜராத் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தி இருக்கும்; (2) கொல்கொத்தா-ஹைதராபாத் – எந்த அணி வெற்றி பெற்றாலும் அதனால் தாக்கம் இல்லை; திங்கள் அன்று மும்பை-பஞ்சாப் – மும்பை வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்திற்குச் செல்லும்;

ஒருவேளை பஞ்சாப் வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்தில் ஒன்றைப்பெறும்.

கடைசி ஆட்டம் லக்னோ-பெங்களூரு எந்த வெற்றி பெற்றாலும் தாக்கம் இல்லை.

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs பெங்களூரு – லக்னோ – 23.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (231/6, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 94, அபிஷேக் ஷர்மா 34, அனிகேத் வர்மா 26, ஹென்றி கிளாசன் 24, ட்ராவிஸ் ஹெட் 17 ஷெப்பர்ட் 2/14, புவனேஷ் குமார், லுங்கி நிகிடி, சுயேஷ் ஷர்மா, க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கட்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (19.5 ஓவர்களில் 189, பில் சால்ட் 62, விராட் கோலி 43, ஜிதேஷ் ஷர்மா 24, ரஜத் படிதர் 18, மாயங்க் அகர்வால் 11, கம்மின்ஸ் 3/28, ஈசன் மலிங்கா 2/37, உனத்கட், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கட்) 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (17 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (10 பந்துகளில் 17 ரன், 3 ஃபோர்) சுமாரான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) கடைசி வரை ஆடி அணிக்கு வலு சேர்த்தார்.

பின்னர் வந்த வீரர்களான ஹென்றி கிளாசன் (24 ரன்), அனிகேத் வர்மா (26 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (4 ரன்), அபினவ் மனோகர் (12 ரன்), மற்றும் பாட் கம்மின்ஸ் (13 ரன்) இஷான் கிஷன் உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தனர்.

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

பில் சால்ட் (32 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), விராட் கோலி (25 பந்துகளில் 43 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), மயாங்க் அகர்வால் (10 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்), ரஜத் படிதர் (16 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர்), ஜிதேஷ் ஷர்மா (15 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர்.

ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. அந்த சமயத்தில் அவர்களின் இரண்டு பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அடுத்த 26 பந்துகளில் 7 விக்கட்டுகளை எடுத்து, சன்ரைசர்ஸ் அணி அவர்களது வெற்றியைப் பறித்தனர். இறுதியில் பெங்களூரு அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 189 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

சன்ரைசர்ஸ் அணியின் இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது என்பது இன்னமும் முடிவாகவில்லை. அந்த வகையில் ஆட்டம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது.

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

IMG 20250523 WA0021 - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

மதுரை மாவட்டம்,
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்

குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மறுபுறம் என பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றன

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக , காலை நேரங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கோவில் முன்பு அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க விட்டு செல்வதும் மற்றும் வாகனங்களை மறித்து பயணிகளை துன்புறுத்துவதும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகமோ
காவல்துறையோ இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை கோவில் முன்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என, சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால், பள்ளி செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது மேலும் போக்குவரத்து நெருக்கடியால் சோழவந்தானின் நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது

ஆகையால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மீறி நடத்துபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

IMG 20250523 WA0019 - 2026

மதுரை,திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா -மேளதாளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜுலை 14 ல் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் விரைவாக நடைபெறுகிறது.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றுபக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடைபெற கோவில் நிர்வாகம் முன் வந்தது.

அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது.தொடர்ந்து, வரும் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை 5 :25 மணி முதல் 6:10 மணிக்கள் மகா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக, கோவில் உற்சவர் மண்டபத்தில் முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முகூர்த்தகாலை சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவில் கந்த சஷ்டி மண்டபம் அருகே யாகசாலை மண்டபம் அமையும் இடத்தில் நவதானியம் பால் ஊற்றப்பட்டு மேளதாளங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் முகூர்த்தக்கால் நடும் விழா விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து, முகூர்த்த காலுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்ட பின்னர் ஜூலை 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை காலையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 14ஆம் தேதி அதிகாலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பாக துணை ஆணையர் சூரிய நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குழந்தைத் தனமானதா என்ன?

rahul gandhi - 2026

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*

       
*— ஆர். வி. ஆர்*

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது பொதுவெளியில் அசட்டுத்தனமாக ஒரு கேள்வியை இரு முறை எழுப்பி இருக்கிறார் – வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நோக்கி.

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களை இந்தியா தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா அது பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்னதாகத் தகவல் தெரிவித்தது’ என்று ஜெய்சங்கர் சொன்னதாக வைத்துக் கொண்டார் ராகுல் காந்தி. அதன்படி அவர் தனது கேள்வியை முன் வைத்திருக்கிறார். ராகுல் கேட்டது:

“நமது தாக்குதல் பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? நாட்டிற்கு உண்மை தெரிய வேண்டும்”.

ராகுல் காந்தியின் கேள்விக்கு வெளிவிவகாரத் துறை பதில் சொல்லிவிட்டது. என்னவென்றால்: இந்தியா தனது தாக்குதலைத் துவங்குவதற்கு முன்னதாக அது பற்றிப் பாகிஸ்தானுக்குத் தகவல் சொல்லவில்லை, இந்தியா தனது ஆரம்ப அடியை அடித்த பின்னர், அந்தத் தாக்குதலானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் நடத்தப் பட்டது, அந்நாட்டின் ராணுவத் தளங்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப் பட்டது, இதைத்தான் அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார், ஆனால் அவர் பேச்சு திரிக்கப் படுகிறது

பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் முதலில் தாக்குதல் நடத்திய இந்தியா, பின்னர் ஏன் அது பற்றிப் பாகிஸ்தானிடம் தகவல் சொன்னது? ஏனென்றால், அந்த அடியை வாங்கிய கலக்கத்தில் பாகிஸ்தான் இந்திய ராணுவத் தளங்களின் மீது தாக்குதல் செய்யக் கூடாது, அது நடந்தால் இந்தியா பாகிஸ்தானின் ராணுவத் தளங்களையும் தீவிரமாகத் தாக்க வேண்டியிருக்கும், பிறகு அது நீண்ட போருக்கு வழிவகுக்கும், முடிந்தவரை போரைத் தவிர்க்கலாம், என்ற மேலான எண்ணத்தில் இந்தியா பாகிஸ்தானிடம் பின்னர் அந்தத் தகவலைச் சொன்னது.

ஒரு பயில்வான் தன்னை அனாவசியமாக அடித்து ஒடும் ஒரு தெருக் காவாலியைப் பிடித்து, தன்னை அடித்த கையைப் பற்றி முறுக்கி அதன் மணிக்கட்டில் பலமாக ரண்டு போட்டு, அதன் பின் “பாரு, இத்தோட விட்றேன். இனிமே நீ பேஜார் பண்ண, பெண்டை நிமித்திருவேன். ஜாக்கிரதை!” என்று அந்தக் காவாலியை எச்சரிக்கும் செயலைப் போல் இந்தியா செய்தது – தனது முதல் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த தகவலின் மூலமாக.

ராகுல் காந்தியின் கேள்வியைச் சற்று ஆராயலாம்.

காங்கிரஸின் முடிசூடா மன்னர் ராகுல் காந்தி. அவர்தான் லோக் சபாவில் எதிர்க் கட்சித் தலைவர். எதுவானாலும் அவர் இப்படி ஒரு மழலையாக, பாகிஸ்தானை மகிழ்விக்கும் விதமாக, நமது மத்திய அமைச்சரைப் பார்த்துக் கேட்கலாமா என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?  அப்படியானால் நீங்கள் தேசபக்தர்.

ராகுல் காந்தியின் கேள்விக்கான பின்னணி நமக்குத் தெரியும்.

சென்ற மாதம் பாகிஸ்தான் ராணுவம் நான்கு பயங்கரவாதிகளை இந்தியாவின் பஹல்காமிற்கு அனுப்பி 25 அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் படுகொலையை நிகழ்த்தியது. அதை அடுத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்னும் ராணுவ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை வெளுத்து வாங்கிப் பணிய வைத்தது – நான்கே நாட்களில்.  நிலைகுலைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் கேட்க, போர் நின்றது. 

சமீபத்திய ஜெய்சங்கரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ஏன் தனது பிதற்றல் கேள்வியைக் கேட்டார்? அரசியல் முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தி தன்னைச் சுற்றித் தானே பின்னிக் கொண்ட வலைதான் அவரை அப்படிக் கேட்க வைத்தது.

2004-2014 ஆகிய பத்து வருடங்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பை மதித்துச் செயல்படும் மன்மோஹன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தது. 

2014-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, 11 வருடங்களாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.

மோடி ஆட்சியில் சாதாரண மக்களுக்கான குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை வசதிகள், மருத்துவக் காப்பீடு, வீடு கட்ட உதவி போன்ற தேவைகள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பெரிதும் நிறைவேறுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கின்றன. இன்னும் பல சாதனைகளும் மோடி ஆட்சியில் உண்டு. இந்த ஆட்சியில் மத்திய அரசு செய்யும் வேலைகளில் – அதுவும் உயர் மட்டத்தில் – லஞ்ச ஊழல் இல்லாமல் போனது. நாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளும் வெகுவாகக் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.

இது போன்ற பரவலான பெரிய சாதனைகளை, இவற்றுக்கு இணையானதை, மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி – அதாவது, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் லகான் பிடித்த ஆட்சி – செய்யவில்லை. அப்போது மத்தியில் ஊழல் ஊற்றெடுத்தது.

கோணல் புத்தியில், ராகுல் காந்தி தனது அம்மா சோனியா காந்தியை ஓரம் கட்டியவர். கொழுப்புப் பேச்சில் அவர் எவரையும் மிஞ்சியவர். அடுத்த பிரதமருக்கான ஆசையில் மோடியை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்று அவர் துடிக்கிறார். “எங்கள் மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி சாதனைகள் மாதிரி, மோடி அரசு தனது பதினோரு ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை” என்று ராகுல் காந்தியால் பேச முடியாது, அப்படிப் பேசி அவர் மோடி அரசை எதிர்க்க முடியாது. எரிச்சலான ராகுல் காந்தி அவ்வப்போது என்ன செய்கிறார்?

“தேசத்தின் காவலாளி மோடி, ஒரு திருடர். சீனாவின் எல்லைக் கட்டுப்பாட்டு அத்துமீறல்களை அவர் ராணுவ ரீதியாக எதிர்க்க முடியாமல் நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மோடி முறைகேடு செய்கிறார்” என்ற வகையில் மலிவான பொய்களை மட்டும் ராகுல் காந்தியால் பேச முடிகிறது. 

இப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் மோடியின் பேரும் புகழும் இந்திய மக்களிடையே மேலும் உயர்கிறது. பார்த்தார் ராகுல் காந்தி. மோடியின் பேரை உடனே ரிப்பேர் செய்யவேண்டும் என்று எண்ணினார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மோடி அரசு முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு இந்தியத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் கொடுத்தது, அதனால் நாம் சில போர் விமானங்களை இழந்தோம், தேசப் பாதுகாப்பு நடவடிக்கையில், நமது போர் விமானிகள் உயிரைக் காப்பதில், ராகுல் காந்தியான நான்தான் கிங்கு என்று அவிழ்த்து விடுவோம். வேறு வகையில் மோடி அரசை நம்மால் எதிர்க்க முடியவில்லை என்றால் இதைச் செய்வோம்’ என்று நினைத்தார் ராகுல் காந்தி. விளைவு, அவரது பாப்பா கேள்வி. இதுதான் விஷயம்.

நல்ல வேளை. ஆபரேஷன் சிந்தூரின் நியாயத்தை எடுத்துச் சொல்ல பிற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வரும் குழுக்கள் எதிலும் ராகுல் காந்தி இல்லை. அந்தக் குழு ஒன்றில் அவர் சேர்க்கப் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?

ஒரு குழு உறுப்பினராக ராகுல் காந்தி ஏதாவது வெளிநாட்டுக்குச் செல்கையில் அந்த நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளின் முன்னால் அமர்ந்து, “பஹல்காம் பயங்கரவாதத்திற்கு முன்பாக மோடி அரசு நான்கு பேரைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி அங்கு 25 அப்பாவி பாகிஸ்தானியர்களைக் கொன்று போட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது, அதை ஜெய்சங்கர் தீர்த்துவைக்க வேண்டும்!” என்று அவர் உச்சகட்டமாக உளற மாட்டாரா?

Author: R. Veera Raghavan
Advocate, Chennai

veera.rvr@gmail.com

https://rvr-india.blogspot.com

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்து உள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதி ரீதியாக வசை பாடுவதை திமுகவினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்! என்று இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கை…

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர், நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகிய நீதிபதிகளை ஜாதி ரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனர். இவர்களெல்லாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இது ஒரு பிராமண நீதிமன்றம் என்றும் வசைபாடி வருகின்றனர்.

நீதிமன்றம் என்பது நமது ஜனநாயக நாட்டின் இறையாண்மையைக் காக்கும் இடமாகும். பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்கி சட்டத்தை பாதுகாக்கும் நீதிபதிகளை இவ்வாறு பேசுவது கண்டனத்துக்குரியதாகும்.

தி.மு.க என்ன நினைக்கிறதோ ன, எதற்காக வழக்கு தொடுத்து இருக்கிறதோ அது அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு எழுதப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் எதிர்பார்க்கின்றனர்.
திமுக பல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்துள்ளது. திமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இது திராவிடத்திற்குக் கிடைத்த வெற்றி, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று குதூகளிப்பார்கள்.
அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் போது ஜாதியை கையில் எடுத்து
தங்களின் வக்கிர புத்தியைக் காட்டுவார்கள்.

நமது ஜனநாயகத்தையும், இறையாண்மையையும், நமது பண்பாடு – கலாச்சாரங்களையும்
தி.மு.க பலமுறை கொச்சைப்படுத்தி இருக்கிறதை பட்டியலிட முடியும்.

உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதித்துறையையும் தி.மு.கவினர் விட்டு வைப்பதில்லை. யு.ஜி.சி எனப்படும்
பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து நிதி பெற்றே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன.
இதில் மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவு தான்.

எனவே யு.ஜி.சி மற்றும் கவர்னர் அனுமதி இன்றி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க சட்டத்தில் வழியில்லை. இதை தெளிவாக தெரிந்து கொண்டே தி.மு.க காய் நகர்த்துகிறது.

சமூக நீதி பேசும் இவர்கள், பட்டியல் இன சமூகத்திற்கு தி.மு.க போட்ட பிச்சை நீதிபதி பதவி என்று கூட பேசினார்கள்.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஜாதி ரீதியாக, மொழி ரீதியாக பிரிவினையை உண்டாக்கி தரம் தாழ்ந்த கருத்துக்களை தி.மு.க வெளிப்படுத்தும்.

இதே தீர்ப்பை பிராமணர் அல்லாத
பிற நீதிபதிகள் வழங்கி இருந்தால்
திமுக அவர்களின் ஜாதியைச் சொல்லி
பேசி இருக்குமா?

ஆபாசப் பேச்சும், தனிநபரை மோசமாக தாக்கிப் பேசுவதும் திமுகவின் இரட்டை குழல் துப்பாக்கிகள்.

அங்கே தொட்டு இங்கே தொட்டு இன்று நீதிபதிகளையே கொச்சைப்படுத்தி பேசும் செயலை திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கலாமே தவிர நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது போன்றது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஜாதி பாகுபாடு கற்பித்து கருத்து தெரிவித்த தி.மு.கவினரை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

valmiki ramayan lavan kusan - 2026

உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பகுதியே!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

ராமாயணத்திற்குப் பல பழமையான பாஷ்யங்கள் உள்ளன. திலக பாஷ்யம், பூஷண பாஷ்யம் முதலானவை. இவையனைத்தும் உத்தரகாண்டத்தோடு சேர்த்தே சம்பூர்ணமாக உரை கூறியுள்ளன. பண்டைக் காலத்தில் உத்தர காண்டத்தைப் பிரித்துப் பேசவில்லை.

ஆனால் பிற்காலத்தில் அந்நியர்களின் முற்றுகையால் சம்பிரதாயங்களுக்கு எதிராக, ராமாயணத்தை ரிஷிகளின் படைப்பாகப் பார்க்காமல் வெறும் இலக்கியமாகப் பார்க்கத் தொடங்கிய பின்னர், பல ஆய்வுகள் செய்து வேறுபாடுகளும் விவாதங்களும் பெருகி விட்டன. உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூட சில காலமாக   சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூறுவதால் சில சௌகர்யங்கள் உண்டு. சில அறிஞர்கள் இது குறித்துத் தீர்மானம் கூட செய்து விட்டனர்.  உத்தர காண்டம் இல்லாவிட்டால் சீதாவைத் துறப்பது இல்லை. ராமனின் மீது குற்றம் சுமத்த இயலாது. சம்பூக வதம் போன்ற சூட்சுமங்கள் பற்றிய வாதங்களோ விவாதங்களோ இருக்காது. ராமர் மேல் யாரும் விரலை நீட்டிக் குற்றம் சாட்ட முடியாது என்பதால் உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூறிச் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள்.

அதற்காக யாரும் அதை விட்டுவிடுவதுமில்லை. திரைப்படங்கள், கதைகள், நாவல்கள் வடிவில் லவனையும் குசனையும் பற்றிக் கூற நினைக்கும் போது உத்தர காண்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அதிலிருக்கும் கதைகளால் வளர்ச்சி பெறுபவர் பலர் உள்ளனர்.

வட இந்தியர்கள் ராமாயணத்தை உத்தர காண்டத்தோடு சேர்த்தே பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். உத்தர காண்டம் ராமாயணத்தில் இல்லை என்று கூறுவதற்கோ, பிற்சேர்க்கை என்று கூறுவதற்கோ எந்த ஒரு ஆதாரமோ, பிரமாணமோ கிடைக்கவில்லை என்பதே உண்மை.

சிறிது காலமாகவே இது பற்றி விவாதங்கள் நடந்து வருவதால் சம்பிரதாயவாதிகளும் அறிஞர்களும் உத்தர காண்டம் ராமாயணத்தின் ஒரு பகுதியே என்று நிரூபித்துள்ளார்கள். அது எவ்விதத்தில் ராமாயணத்தின் பாகம் என்பதைப் பார்ப்போம்.

உத்தர ராமாயணம் என்ற பெயரைப் பிற்காலக் கவிஞர்கள் தம் நூலுக்கு வைத்தார்களே தவிர உத்தர காண்டம் என்பதே அதன் பெயர். பால காண்டத்தின் தொடக்கத்திலேயே வால்மீகி எப்படி ராமாயணம் எழுதினேன் என்று அவதாரிகையில் கூறுகிறார்.

சுலோகம்:

“சதுர்விம்சதி சஹஸ்ராணி ஸ்லோகானாமுக்த வான்ரிஷி:
ததா சர்க ஸதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்”

(பாலகாண்டம், 4-2).

பொருள்: இருபத்து நான்காயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சர்க்கங்களும் கொண்ட ஆறு காண்டங்களையும், அப்படியே உத்தரகாண்டத்தையும் செய்தருளினார்.

இதில் தெளிவாக இருபத்து நான்காயிரம் சுலோகங்களும் ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் என்று இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார். நடந்து முடிந்த ராம  கதையை யுத்த காண்டம் வரை கூறிவிட்டு நடக்கப்போகும் இராமகதையை உத்தர காண்டத்தில் கூறுகிறார். அதற்காகத் தான் அவ்வாறு பிரித்துக் கூறுகிறார்.

சுலோகம்:

க்ருத்வாபி தன்மஹாப்ராஞ: சபவிஷ்யம் சஹோத்தரம்
சிந்தயாமாஸ கோன்வேதத் ப்ரயுஞ்ஜீயாதிதி ப்ரபு
(பாலகாண்டம், 4-3)

பொருள்: அறிவிற் சிறந்த மகாமுனிவர் நடக்கப் போவதைக் கூறும் உத்தர காண்டம் என்ற பெயரோடு கூடிய பகுதியைச் செய்தபின், “எந்த சமர்த்தன் இதைப் பிரசங்கம் செய்யப்  போகிறான்?” என்று ஆழ்ந்து சிந்தித்தார்.

சுலோகம்:

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி:
சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ரபதமாத்மவான்”
. (பாலகாண்டம், 4-1)

இந்த சுலோகத்திலும், “ராமன் அரசைத் திரும்பப் பெற்று அரசாண்ட வரலாற்றை வால்மீகி முழுமையாக இயற்றினார்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

எல்லாவற்றையும் எவ்வாறு வால்மீயால் காண முடிந்தது? சாதாரண கவியாக இருந்தால் நடந்து முடிந்த சரித்திரத்தை நேரடியாகப் பார்த்தோ, பெரியவர்கள் கூறக் கேட்டோ எழுதிவிட முடியும். யோக நிலையில் தெய்வீகப் பார்வையால் பார்த்து தர்ம சொரூபரான வால்மீகி மகரிஷி இயற்றினார்.

வால்மீகி முனிவர் தர்ம சுபாவமும், யோக நிலையும் கொண்டவர். அவருடைய இயல்பு தவமியற்றுவது. யோகநிலை என்றால் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலை. அதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல நடந்ததையும் நடக்கப் போவதையும் பார்த்ததாகக் கூறுகிறார்.

“நதே வாகந்ருதா காவ்யே” என்கிறார் பிரம்மதேவர். “உம்முடைய வாக்கில் ஒரு பொய் கூட வராது” என்று ராமாயணம் எழுதுவதற்கு முன்னரே பிரம்மா வால்மீகியிடம் கூறுகிறார்.

“ரஹஸ்யம் ச ப்ரகாசம் ச” என்கிறார் பிரம்மா. யாராவது எப்போதாவது ஒரு வரலாற்றை ஆராய்ந்து எழுதும் போது ரகசியத்தையோ பிரகாசத்தையோ யாரும் தெரித்து கொண்டு எழுத முடியாது. ரிஷிக்கு மட்டுமே அது சாத்தியம். வெளியில் தெரிவது, வெளியில் தெரியாதது என்று இரண்டு விஷயங்கள் உண்டு. ராமன் மானுடனாக வாழ்ந்தாலும் அவன் நாராயணனே என்பது ஒரு ரகசியம். அதற்குப் பின்னால் இருக்கும் தெய்வீகத் திட்டம் ஒரு ரகசியம்.

சுலோகம்:

“ஸ்வராஷ்ட்ர ரஞ்ஜனம் சைவ வைதேஹ்யாஸ்ச விசர்ஜனம்

பொருள்: தன் தேசத்து மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக வைதேஹியை  அகற்றியதைப் பற்றியும் காவியம் இயற்றினார்.

அனாகதம் ச யத் கிஞ்சித் ராமஸ்ய வசுதாதலே
தச்சகாரோத்தரே காவ்யே வால்மீகிர் பகவான் ரிஷி:” (பால காண்டம், 3-40)

பொருள்: பகவான் வால்மீகி முனிவர் ராமருடைய கதையில் பூமியில் இன்னும் நடக்காதது எது உள்ளதோ அது முழுவதையும் உத்தர காவியத்தில் இயற்றினார்.

பாலகாண்டத்தையும் சேர்த்து ராமாயணம் படிப்பவர்கள் யுத்தத் காண்டத்தோடு முடிந்துவிட்டது என்று எப்படிக் கூற முடியும்? ராமர் ராஜ்ஜியத்தில் மக்கள் நன்றாக வாழும் வண்ணம் ஆண்டு வந்தார் என்று கூறும் வால்மீகி, சீதையைத் துறந்ததும் இன்னும் எதெது நடக்கப் போகிறதோ அதையெல்லாம் உத்தர காண்டத்தில்  தெரிவிக்கிறார் என்று தெளிவாக உள்ளது.

இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் ராமாயணத்திற்கு உள்ளது என்பதை ஏற்கையில் உத்தரகாண்டத்தைச் சேர்த்தால்தான் அது இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் வரும் என்பதையும் ஏற்க வேண்டும்.

கோவில்களிலும் உற்சவங்களிலும், பண்டிகை தினங்களிலும் பிரவசனம் செய்யும் போது யுத்தகாண்டத்தோடு முடித்தால் போதும் என்பது சம்பிரதாயமாக உள்ளது.

பால காண்டத்தில் ராவண சம்ஹாரமே அவதார நோக்கம் என்று உள்ளதால் யுத்த காண்டத்தோடு வரலாறு முடிவதாக ஒரு வாதம் உள்ளது. உத்தரகாண்டத்தோடு சேர்த்து மொத்தமும் படிப்பது கடமை என்பது பெரியோர் கூற்று. இதில் ஐயமில்லை.

சுந்தரகாண்டம் வரை பாராயணம் செய்தால் போதும் என்ற சம்பிரதாயம் கூட உள்ளது. அப்படியென்றால் மீதி ராமாயணத்தைப் படிக்க வேண்டாம் என்று பொருளா? விசேஷங்கள், விரதங்களின் போது அது போல் சுத்தர காண்டம் வரை பாராயணம் செய்தால் போதும் என்று கூறினார்களே தவிர யுத்த காண்டத்தைப் படிக்கக் கூடாதென்று கூறவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். 

நவராத்திரி, ஸ்ரீராம நவமி, போன்ற பண்டிகைகளின் போது யுத்தகாண்டம் வரை பாராயணம் செய்யும்படிக் கூறியுள்ளார்கள். ராமாயணம் இருபத்து நான்காயிரம் சுலோகங்களோடு 108 முறை ஹோமம் செய்தவர்கள் உள்ளார்கள். காயத்ரி மந்திரத்தின் புரச்சரணையோடு என்ற தீர்மானமும் உள்ளது.

ராமாயணத்தை முழுமையாக அறிய வேண்டுமென்றால் உத்தரகாண்டமும் படிக்க வேண்டும் எனறு சம்பிரதாயவாதிகளான உரையாசிரியர்கள் அனைவரும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல. புராணங்களிலும் ராமாயணத்தின் சிறப்பு பேசப்படுகிறது. புராணங்களை சிலர் பிரமாணமல்ல என்று கூறுவது வருத்தத்திற்குரியது. அவர்களுக்கு அனுகூலமானவற்றைப் பிரமாணமாக ஏற்பதும் பிறவற்றை அங்கீகரிக்காமல் பிற்சேர்க்கை என்பது சரியல்ல.

ரிஷிகள் இயற்றிய நூல்களை முதலில் ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், இதிகாசங்கள் என்று முழுமையாகப் பார்க்க வேண்டும். ரிஷிகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறின்றி புகழ் பெற்றவை என்பதால் ராமாயணத்தைக் காவியமாகவும் மகாபாரதத்தை ஒரு கதையாகவும் பாகவதத்தை வெறும் நூலாகவும் பார்ப்பதென்பது  கோணலான பார்வை. சம்பிரதாயமான ரிஷிகளின் படைப்புகள் என்ற தொகுப்பில் இருந்து இவற்றைப் பிரித்துப் பார்ப்பது குற்றம். புராணங்களிலும் பிற சம்ஹிதை நூல்களிலும் ராமாயண பாராயணம் பற்றிக் கூறியுள்ளார்கள். அதில் உத்தரகாண்டத்தோடு சேர்த்தே பாராயணம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காண்டத்திலும் ராமனை ஒவ்வொரு விதமாக தியானிக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உள்ளது. ராமாயணத்தை வெறும் புத்தகமாகப் பார்க்காமல் ராமரின் சொரூபமாகவே கருதிப் பாராயணம் செய்யும் சம்பிரதாயவாதிகள் உத்தரகாண்டத்திற்கும் தியான சுலோகம் கூறியுள்ளார்கள். உத்தரகாண்டத்தைத் தனியாகப் பிரித்து பார்ப்பதென்பது பண்டைய காலத்தில் நிகழவில்லை என்பது தெளிவாகிறது.

சிறிது காலமாக நவீனம் என்று நினைத்தும், மேற்கத்தியவர்களின் ஆராய்ச்சி பார்வையில் இருந்தும் பார்ப்பவர்கள் மட்டுமே இப்படிப் பிரிக்கிறார்கள். இவர்த்கள் எத்தனை தூரத்திற்குப் போகிறார்கள் என்றால் ராமாயணத்தில் பாலகாண்டத்திலேயே சில பகுதிகளை பிற்சேர்க்கையாகவும் யுத்தகாண்டத்திலும் சில பகுதிகள் பிற்சேர்க்கை என்றும் கூற ஆரம்பித்துள்ளார்கள். எங்கெங்கெல்லாம் தெய்வீகம், விஷ்ணு தத்துவம் தென்படுகிறதோ அதையெல்லாம் பிற்சேர்க்கையாக எடுத்தெறிந்து திருப்திப்படுகிறார்கள்.

ஆனால் ராம பக்தர்கள் யாரும் அதை ஏற்கமாட்டார்கள். “இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் கொண்டது வால்மீகி ராமாயணம்” என்பது பிரசித்தியான வாக்கியம். ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு சுலோகமாகத் தனியாக எடுத்து காயத்திரி ராமாயணமாகப் பாராயணம் செய்யும் முறை உள்ளது. சம்பிரதாயத்தை நம்புபவர்கள் உத்தரராமாயணத்தைத் துண்டாடுவதை விரும்பமாட்டார்கள்.

சுலோகங்களின் நடையில் வேறுபாடு உள்ளது என்று கூறுபவரும் உள்ளார்கள். “ததா உத்தரம்” என்று வால்மீகி கூறியபடி நடக்க இருக்கும் எதிர்கால விஷயங்களை வேறு நடையில் எழுதியிருக்கலாம். அது அவருடைய கவிச் சிறப்புக்கு உதாரணம். உத்தரகாண்டத்தின் நிறைய சுலோகங்கள் யுத்த காண்டத்தோடு தொடர்புடையவையாகவே உள்ளதைப் பார்க்க முடிகிறது.

உத்தரகாண்டம் ராமாயணத்தோடு சேர்ந்தது அல்ல என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டரேட் வாங்குகிறார்களாம். சம்பிரதாயத்திலிருந்து நழுவிய எழுத்துக்களுக்கு வெகுமதி கொடுப்பதற்கு பாரத தேசத்தில் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் பார்க்கிறோம். இங்கு ‘புரஸ்காரம்’ வாங்கலாமே தவிர, அது ‘பகவத் திரஸ்காரத்தையே பெற்றுத் தரும் என்பதை மறவலாகாது.

ராமனை தெய்வமாக வழிபடுபம் பக்தர்கள் மிகப் பலர். ராமாவதாரத்தின் முடிவை அறியாவிட்டால் முழுமை எப்படிக் கிடைக்கும்? பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தின் முடிவு உள்ளது. உத்தர காண்டம் இல்லாவிட்டால் ராமாவதாரத்தின் முடிவை எவ்வாறு அறிய முடியும்?

பல ராமாயாணங்கள் எழுதப்பட்டுள்ள`ன. அத்யாத்ம ராமாயணம் போன்றவை உள்ளன. எல்லாவற்றிலும் சீதையைத் துறப்பதும் ராமாவதார முடிவும் கூறப்பட்டுள்ளன. பாகவதம் நவம ஸ்கந்தத்திலும் உள்ளது. பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பத்ம புராணம் என்று எல்லா புராணங்களில் இருந்தும் எடுத்துக் காட்டி வாதிப்பவர்கள் புராணங்களை பிரமாணமல்ல என்று கூறும் விந்தையையும் நாம் பார்க்கிறோம்.

“யார் உத்தரகாண்டத்தை பக்தி சிரத்தையோடு கேட்பார்களோ அவர்களுக்கு ராமரின் பிரசாதத்தால் சர்வ ஸித்திகளும் கிடைக்கும்”. (சிரத்தை என்றால் சத்தியப் பார்வை சத்தியத்தின் மீதுள்ள நம்பிக்கை). 

உத்தரகாண்டத்தைத் தனியாகப் பிரவசனம் செய்வதானால், உத்தரகாண்டத்தைக் கூறி முடித்த பின் ராமாயணத்தை முதலில் இருந்து ஆரம்பித்து சீதா கல்யாணம் வரை படிக்க வேண்டும் என்று சம்பிரதாயம் தெரிவிக்கிறது. தனியாக உத்தரகாண்டத்தை மட்டுமே பிரவசனம் செய்யக் கூடாதென்று பெரியோர் கூறியுள்ளார்கள்.

காயத்ரி மந்திரத்தின் 22, 23, 24 என்ற மூன்று எழுத்துக்களோடு தொடங்கும் சுலோகங்கள் உத்தரகாண்டத்தில் உள்ளன. உத்தரகாண்டம் இல்லாவிட்டால் காயத்ரி மந்திரத்தின் மூன்று அட்சரங்கள் ராமாயணத்தில் இருக்காது. இத்தனை பிரமாணங்கள் உள்ளன.

ஸ்காந்த புராணத்தில் ஏழு காண்டங்களோடு கூடிய ராமாயணம் ஏழு வித பலன்களை அளிக்கிறது என்ற குறிப்பு உள்ளது. மகா கவிகள் உத்தர காண்டத்தைக் கொண்டு பல காவியங்களை எழுதி உள்ளார்கள். சமஸ்கிருதத்தில் நாடகமாக பவபூதி எழுதிய உத்தர ராம சரிதம் மிகச் சிறந்த சமஸ்கிருத இலக்கியமாகப் புகழ் பெற்றுள்ளது.

தெலுங்கில் ‘திக்கனா’ எழுதிய உத்தர ராமாயணத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. முழுக்க செய்யுட்களால் எழுதியுள்ளார். ‘கன்டண்டி பாப்பராஜு’ என்பவர் வேணுகோபால சுவாமி  உபாசகர். மிக மதுரமான உத்தர ராமாயணத்தைத் தெலுங்கில் படைத்துள்ளார்.

உத்தரம் என்றால் ‘பிறகு’ என்று பொருள். பிறவற்றோடு ஒப்பிடும் போது இது உயர்ந்தது  என்று குறிப்பதற்காக ‘உத்தரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். யுத்த காண்டம்  வரை படிப்பவருக்கு பல சந்தேகங்கள் வருவது இயல்பு. அவற்றுக்கெல்லாம் உத்தர காண்டத்தில் பதில் கிடைக்கிறது.

அனுமனை சபையில் பார்த்ததும், ராவணனுக்கு, “என்னை அன்றொரு நாள் சபித்த நந்தீஸ்வரர் நினைவுக்கு வருகிறாரே. அவரே இந்த வடிவில் வந்தாரா?” என்று எண்ணினானாம். எப்போது நந்தி ராவணனை சபித்தார் என்பது உத்தரகாண்டம் படித்தால்தான் தெரிய வரும்.

ராவணன் எத்தனை சிறந்தவன் என்று கூறியிருந்தாலும் அவனுடைய வரலாறு என்ன? எதனால் அத்தனை பலம்? எப்படி அத்தனை வரங்களைப் பெற்றான்? என்பதெல்லாம் உத்தர காண்டம் இல்லாவிட்டால் தெரிய வராது. அனுமன் ஒருமுறை, “நீ இத்தனை வரங்களைப் பெற்றுள்ளாய். உனக்குச் சமமான தேவர், அரக்கர் யாரிடமிருந்தும் உனக்குத் தோல்வியில்லை. ஆனால் மனிதரைப் பற்றி அதில் கூறப்படவில்லை” என்கிறார். வரமளித்தவர் யார்? அந்த வரம் என்ன? என்பது உத்தர காண்டம் படித்தால்தான் தெரியவரும்.

பால காண்டம் நான்காவது சர்க்கத்தில் “ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய” என்ற சுலோகம் உள்ளது. உத்தர காண்டத்தில் முதல் சுலோகமாகவும் அதன் முதல் பகுதியே உள்ளது.

“ராமர் ராஜ்ஜியத்தைப் பெற்ற பின்” என்று தொடங்கி, ராமாயணத்தின் தொடர்ச்சியாக எத்தனை அழகாக எழுதியுள்ளார் பாருங்கள். நடையில் சிறிது வேறுபாடு இருப்பதை இலக்கியச் சுவையாகக் கருத வேண்டும்.

லவனும் குசனும் நைமிசாரண்யத்தில் அஸ்வமேத யாக சபையில் உத்தர காண்டத்தோடு கூடிய ராமாயணத்தை வால்மீகி இயற்றினார் என்று ராமரிடம் கூறுகின்றனர்.

சுலோகம்:

“சம்நிபத்தம் ஹி ஸ்லோகானாம் சதுர்விம்சத் சஹஸ்ரகம்
உபாக்யான சதம் சைவ பார்கவேண தபஸ்வினா”
(உத்தர காண்டம், 94-25).

“தபஸ்வியான பிருகு வம்சத்தைச் சேர்ந்த வால்மீகி முனிவர் இருபத்து நான்காயிரம் சுலோகங்களோடும் பலப்பல உபகதைகளோடும் முற்றிலுமாக இயற்றியுள்ளார். அரசரே,  முதலிலிருந்து ஐந்நூறு சர்க்கங்கள் அடங்கிய ஆறு காண்டங்கள் இதுவரை நடந்ததைக் கூறுகின்றன. அந்த காண்டங்களுக்கு மேல், இனி நடக்க இருப்பதைக் கூறும் உத்தரம் என்னும் கடைசி காண்டமும் செய்து முடிக்கப் பட்டுள்ளது. ராஜா, இவ்வுலகில் இருக்கும் ஆயுட்காலம் எவ்வளவோ அதற்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் பிரமாணமாக இந்தக்  காவியம் விளங்குகிறது. ராஜா, தாங்கள் செவிசாய்க்க விரும்புவதால் யாகத்தின் இடையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தம்பிமார்களோடு கேட்டருளுங்கள்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர். ஸ்ரீ ராமரும், “அப்படியே செய்க” என்று ஆணையிட்டார்.

சர்வம் ஸ்ரீ சீதா ராமார்ப்பணம்ஸ்து.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs குஜராத்
அகமதாபாத் – 22.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (235/2, மிட்சல் மார்ஷ் 117, நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 56, எஉடன் மர்க்ரம் 36, ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 16, அர்ஷத் கான், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணியை (202/9, ஷாருக் கான் 57, ரூதர்ஃபோர்ட் 38, ஷுப்மன் கில் 35, ஜாஸ் பட்லர் 33, சாய் சுதர்ஷன் 21, வில் ஓ ரூர்கே 3/27, ஆவேஷ் கான் 2/51, ஆயுஷ் பதோனி 2/4, ஆகாஷ் சிங், ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கட்) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (24பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) 10 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான மிட்சல் மார்ஷ் (64 பந்துகளில் 117 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்), நிக்கோலச் பூரன் (27 பந்துகளில் 56 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரிஷப் பந்த் (6 பந்துகளில் 16 ரன், 2 சிக்சர்) உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவருக்கு 2 விக்கட் இழப்பிற்கு 235 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் மார்ஷ் மற்றும் பூரன் இருவரின் அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்து போனார்கள்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள். சாய் சுதர்ஷன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (20 பந்துகளில் 35 ரன், 7 ஃபோர்) ஆகிய இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.  

பின்னர் வந்த ஜாஸ் பட்லர் (18 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 2சிக்சர்), ரூதர்ஃபோர்ட் (22 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), ஷாருக் கான் (29 பந்துகளில் 57 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று தமிழக வீரர், ஷாருக் கான் ரன் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் கடைசி வரை இருந்து வெற்றிக்கு வழிவகுக்காமல் 18.5 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதற்கு முன்னரே ராகுல் திவாத்தியா (2 ரன்), அர்ஷத் கான் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்து விட்டதால் குஜராத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

லக்னோ அணியின் மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை இழக்கவில்லை. இருந்தாலும் இது ஒரு பின்னடைவு.

ஏற்கெனவே நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

image 3 - 2026

நீதிபதிகள் மீது திமுக.,வினர் சாதிய வசை பாடுவது நியாயமா?

Dr Krishnasamy pudiyathamizagam

திமுக என்ன கட்டளையிடுகிறதோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டுமா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி. குறிப்பாக, நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது திமுகவினர் சாதிய வசைபாடுவது எவ்விதத்தில் நியாயம்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூகத் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

திடீர் சமூகநீதிப் பிரியர்கள் மாஞ்சோலை தீர்ப்பின் போது எங்கே சென்றார்கள்.?

அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்த துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடை விதித்து நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தாங்கிக் கொள்ள முடியாத திமுக அடிவருடிகள் நீதிபதிகளின் புகைப்படங்களை வெளியிட்டும், அவர்களை சாதி ரீதியாகவும் வசைபாடியுள்ளனர்.

இது திமுக மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் வக்கிரப்புத்தியைக் காட்டுகிறது. இவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டும். இல்லையேல், அது பார்ப்பனிய நீதிமன்றம் ஆகிவிடும். இதற்கும் இது மக்கள் பிரச்சனை சார்ந்தது அல்ல; பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழகங்களும் மானியக் குழுவிடம் நிதி பெற்றே இயங்குகின்றன. மாநில அரசின் நிதி அளிப்பு மிகக் குறைவு. எனவே யூஜிசி மற்றும் ஆளுநர் அனுமதி இல்லாமல் துணைவேந்தர்களை நியமனம் செய்ய வழி இல்லை. ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை அனைத்து அம்சங்கள் – சட்ட சிக்கல்களை கணக்கிலே கொள்ளாமல் ஆளுநரின் காலதாமதத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்து விட்டனர். அதுவும் தற்போது ஜனாதிபதியால் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில்., அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரே வேந்தர் எனவும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் எனவும் அரசாணை பிறப்பித்தது. இது தற்போது நடைமுறையில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.

உச்ச நீதிமன்றம் சென்றால் உடனடியாக அதற்கு தடை ஆணை பெற இயலாது. அதன் ஆத்திரத்திலே திமுகவின் ரூபாய் 200 கூலிப்படை மற்றும் அதன் அடிவருடிகள் நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோரை அவர்களின் சாதிகளைக் குறிப்பிட்டு வசை பாடுகிறார்கள். திமுகவின் இந்த கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

திடீர் மனிதநேய சமூகநீதிப் பிரியர்கள் கடந்த 2024 டிசம்பர் 3 ஆம் தேதி மாஞ்சோலை மக்களின் நூறாண்டு கால வாழ்வுரிமை பறிக்கக் கூடிய வகையில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு எழுதினார்களே?

அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்.? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் க. கிருஷ்ணசாமி.