சென்னையில் சாலை நடுவே வைக்கப் பட்டிருந்த பேனர் சரிந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் பேனரை அச்சிட்ட அச்சகத்துக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.
பள்ளிக்கரணையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து, சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேனர் அச்சடித்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சண்முகா Graphics & Stickers பிரிண்டிங் நிறுவனத்திற்கு சீல் வைத்தது சென்னை மாநகராட்சி நிர்வாகம்…! இதற்கு எந்த ஊர் நியாயம்டா இது என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.
ஆயினும், தற்போதைய புதிய விதிகளின் படி, அச்சகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறுகின்றனர் போலீஸார்.
இதனிடையே நடந்த சம்பவம் குறித்து தங்களது வேதனையை வெளிப்படுத்தும் பொதுமக்கள், இந்த விவகாரத்தில் விதிகளை மீறியது யார்..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சென்னை, கோவிலம்பாக்கம் ஜெ.டி.திருமண மஹாலில் நடைபெற்ற காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பள்ளிக்கரணை முன்னாள் கவுன்சிலர் சி.ஜெயகோபால் மகன் திருமண விழாவிற்காக வருகை தரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு பேனர் சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்துள்ளார். பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். சுபஸ்ரீ கனடா செல்வதற்காக தேர்வு எழுதியுள்ளாராம்.
திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அவர்களை வரவேற்க வைக்கப்பட்ட பேனர் ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது.
கோவையில் ரகு… சென்னையில் சுபஸ்ரீ… இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால், சாலை ஓரங்களில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்படும்..?? என்று மனம் குமுறுகின்றனர் பொதுமக்கள்.
சென்னையில் மனம் பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறியபோது…
குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ(வயது 22) கந்தன்சாவடியில் உள்ள, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் (ASV Titaniam Information Service) இருந்து, தனது யமஹா ரே இருசக்கர வாகனத்தில் (வண்டி எண் : TN 11 Q 3760 ) தன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். தலைக்கவசம் அணிந்துள்ளார்.
துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே Ocean Dew அபார்ட்மெண்ட் எதிரில் வரும் போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி (வண்டி எண் : TN 01 AA 6810) நிலை தடுமாறிய சுபஸ்ரீயின் மீது மோதிவிட்டது.
இரண்டு கைகளின் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. தலையில் காயம். அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிறிது நேரத்தில் இறந்து விட்டார். உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது.
சென்னை மெளண்ட் போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறை வழக்குப் பதிவு செய்து (Cr No 297/m1/19 Uls 279, 336, 304 A IPC) விசாரித்து வருகிறார்கள்.
சென்னை, கோவிலம்பாக்கம் ஜெ.டி.திருமண மஹாலில் நடைபெற்ற காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பள்ளிக்கரணை முன்னாள் கவுன்சிலர் சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, துணை முதல்வர் உள்ளிட்ட அஇஅதிமுக பிரமுகர்களை வரவேற்று துரைப்பாக்கம் – பல்லாவரம் சாலையின் இருபுறமும், சாலையின் நடுவே தடுப்புச் சுவரிலும் பேனர்கள் வைத்திருந்துள்ளனர். அந்தப் பேனர்தான் சாலையில் சென்ற சுபஸ்ரீயின் மீது விழுந்து உயிரிழப்புக்கும் காரணமென்று கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியின்றி பேனர் வைக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.