திமுக., எதிர்க்கட்சியாக இருந்த போது, கடந்த வருடம் கொரோனா முதல் அலையின் போதே, கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இப்போது வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், திமுக., அரசு அவ்வாறு ஒரு கோடி ரூபாய் வழங்குவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறது.
கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெளிவுபடக் கூறியிருக்கிறார்.
கொரோனா தோற்றால் இறந்த அனைவரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சட்டசபையில் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி பேசியபோது… கொரோனா தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாட்டால் மையங்களுக்குச் சென்று பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்… என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் 172 இடங்களில் தொற்றை கண்டறியும் ஆய்வு மையங்கள் உள்ளன0 இங்கு மே 21 வரை பரிசோதனை மாதிரிகள் அதிகம் வந்ததால் முடிவுகள் அறிவிப்பு தாமதம் ஆனது உண்மைதான். ஆனால் கடந்த 15 நாட்களாக பரிசோதனை செய்த 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன
தொற்றால் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லாதது. எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டும் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. இதை தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்திற்கு இதுவரை 1.29 கோடி தடுப்பூசி பெறப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது தடுப்பூசியை முறையாக செலுத்தியதால், அதைப் பாராட்டி கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.
அரசின் கணக்குப் படி, ஜூன்22ம் தேதி வரையிலான குறிப்பில், 31,580 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஸ்டாலின் பதவி ஏற்ற மே 7ம் தேதி வரை 15,171 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனாவால் இறந்தவர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் படி பார்த்தால், இப்போது 32 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கப் பட வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலால், தமிழக அரசுக்கு ரூ.32 ஆயிரத்து கோடி சொச்சம் மிச்சமாகியிருக்கிறது.