தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, சினிமா படப்பிடிப்புகளுக்கு முழு அனுமதி கொடுத்தும், நவம்பர் 1 முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதியளிக்கப் படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்நாளில் தான் முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகிக்கும், சன் பிக்சர்ஸ் தயாரித்து ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
நவ.1 முதல் அனைத்து வகையான படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. படப் பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள், கலைஞர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அனைத்து வகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் மேலும் தளர்வு. கடைகள், பேக்கரிகள் இரவு 11 மணி வரை செயல்பட ஏற்கனவே அனுமதித்திருந்த நிலையில், இன்று முதல் மேலும் தளர்வு அறிவிக்கப் பட்டிருக்கிறது.
அதே நேரம், திருவிழா, அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை நீடிக்கப் பட்டிருக்கிறது. முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
நவம்பர் 1 முதல் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே (கேரளா தவிர) சாதாரண மற்றும் ஏசி பொது பேருந்து போக்குவரத்து 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று வர மக்கள் ஆர்வத்துடன் இருக்கும் போது, ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு கட்டணம் உயர்த்தப் பட்டு வசூலிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்ணாத்த படத்தையும் தமிழக அரசின் அறிவிப்பையும் இணைத்து பல்வேறு கருத்துகள் சமூகத் தளங்களில் முன்வைக்கப் படுகிறது. தமிழக இதழ் ஒன்றில் வெளியான செய்தியுடன் பகிரப்படும் ஒரு வைரல் கருத்து…
ஆட்டம் ஆரம்பம்…
அண்ணாத்த பட வினியோக உரிமையை ரெட் ஜெயின்ட் பெற்றது.
அல்லது வாங்கியது.
படம் திபாவளி ரிலீஸ்.
உடனே ஸ்டாலின் மேலும் தளர்வுகளை அறிவித்தார்.
எத்தனை அறிவிப்புகள் ?
ஒரே ஒரு அறிவிப்பு தான்.
சினிமா தியேட்டர்களுக்கு 100% இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தார் ஸ்டாவின்.
அண்ணாத்த படத்தின் டீசரை ரசித்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். அவருக்குச் சூடாகக் கேசரியும், அவித்த வேர்க்கடலையும் தட்டில் நிரப்பிவைத்துவிட்டு, ‘‘டீசரை ரசித்தது போதும்… ‘அண்ணாத்த’ படம் தொடர்பாக ஒரு விவகாரம் சினிமா வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கிறதே, கேள்விப்பட்டீரா?” என்றோம். கேசரியைச் சுவைத்தபடியே, ‘ 75-25 அக்ரிமென்ட் விவகாரம்தானே… .?
கேள்விப்பட்டேன். ‘ ஆட்சிக்கு வந்தவுடனேயே ஆட்டமா? ’ என்று தியேட்டர் அதிபர்கள் வட்டாரம் கொந்தளிக்கிறது’’ என்ற கழுகார், செய்திகளுக்குள் நுழைந்தார்.
‘‘ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் விநியோக உரிமையை ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது.
தீபாவளியன்று படத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாகின்றன.
முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட்’-க்கு இந்த விநியோக உரிமை வழங்கப்பட்டவிதமே ‘மிரட்டல்’ அடிப்ப டையில்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.’’
விவரமாகச் சொல்லும்…
‘‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழ்நாட்டில் தியேட்டர் இருக்கைகளுக்கான அனுமதி தற்போது 50 சதவிகிதமாக மட்டும் இருக்கிறது.
‘இருக்கைகளுக்கான அனுமதியை 100 சதவிகிதமாக உயர்த்தினால்தான், ‘அண்ணாத்த’ படத்தில் லாபம் பார்க்க முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திடம் முறையிட்டார்களாம்.
இதை ஆட்சிபீடத்திடம் ‘சன் பிக்சர்ஸ்’ கொண்டு சென்றபோது, ‘ உதயநிதியோட ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’க்கு விநியோக உரிமையைக் கொடுத்துடுங்க. 100 பர்சன்ட் இருக்கைக்கு அனுமதித்துவிடலாம்’ என்று டீல் பேசப்பட்டதாம்.
வேறு வழியில்லாமல், விநியோக உரிமை உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விநியோக உரிமை பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் போட்ட நிபந்தனைதான் தியேட்டர் அதிபர்களைக் கொதிப்பாக்கியிருக்கிறது.’’
“அவர்களுக்கு என்ன பிரச்னை?”
“இருக்கிறதே… இது போன்ற விநியோக உரிமை கடந்த காலங்களில் வழங்கப்பட்டபோது, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பும், விநியோகஸ்தர் தரப்பும் சரிபாதியாக லாபத்தைப் பிரித்துக்கொள்வார்கள். விஜய் நடித்த ‘மாஸ்டர்’ போன்ற ஒருசில படங்களில், இந்த விகிதாசாரம் விநியோகஸ்தருக்குக் கூடுதலாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், எப்போதுமே லாபத்தின் பங்கு 70 சதவிகிதத்தைத் தாண்டியதில்லையாம். ‘அண்ணாத்த’ படத்துக்கான விநியோக உரிமையை வாங்கியிருக்கும் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம், லாபத்தில் 75 சதவிகிதம் பங்கு கேட்கிறதாம். 25 சதவிகிதம்தான் தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும்.
இதுவரையில் இது போன்ற நடைமுறை இல்லை என்கிறது தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பு.’’
அடக் கொடுமையே
‘‘தமிழகத்தில், மல்டிபிளெக்ஸ் உட்பட சுமார் 1,050 தியேட்டர்கள் இயங்குகின்றன. இவற்றில், சிறிய தியேட்டர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தீபாவளியன்று விஷால் நடித்த ‘எனிமி’ திரைப்படமும் வெளியாகிறது. தியேட்டர் அதிபர்களிடம், ‘ பெரும்பாலான தியேட்டர்களில் ‘அண்ணாத்த’ படத்தைத்தான் ஓட்ட வேண்டும்’ என்று மறைமுக அழுத்தம் கொடுக்கிறதாம் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ தரப்பு.
இதில் டென்ஷனான தியேட்டர் உரிமையாளர்கள் சிலர், ‘இவர்களின் 75-25 அக்ரிமென்ட்டுக்குக் கட்டுப்பாட்டால், தியேட்டர்களெல்லாம் நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கும். 2006-11 தி.மு.க ஆட்சிக் காலத்தில் சினிமாதுறையையே கருணாநிதி குடும்பம்தான் கட்டுப்படுத்தியது. மீண்டும் அது போன்ற காட்சிகள் அரங்கேறுகின்றன. இவர்களைப் பகைத்துக்கொண்டால், லோக்கலில் மாவட்ட ஆட்சியர் மூலமாகக் குடைச்சல் கொடுப்பார்கள். அதனால், யாரும் பொதுவெளியில் எதிர்த்து பேசுவதில்லை’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள்.’’