சிறுவயதில் பல நாடுகளின் இயற்கை அழகைப் பார்த்து வியந்த, மாணவன் விஸ்வா ஐயர். அதுவே இயற்கையின் மீதான காதலையும் சுற்றுச்சூழல் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால், தாய் நாடான இந்தியாவில் நிலவும் மாசுபடும், அந்த காற்று மாசுபாட்டால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொண்டு பிறகு அவரின் ஆர்வத்தைத் தாண்டி சுற்றுச்சூழலை காக்க, சில நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியது.
விஸ்வாவின் பூர்வீகம் இந்தியா என்றாலும், அவர் தற்போது இருப்பது அமெரிக்கா. கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள அமெரிக்கன் உயர்நிலைப் பள்ளியில் சீனியர் மாணவராக இருக்கும் விஸ்வா, புகைப்படங்களின் மூலம் காற்றின் தரத்தை தீர்மானிக்க உதவும் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார்.
Air Variance Authority (AVA) என்ற அந்த மொபைல் ஆப்’பை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கினார். இப்போது இந்த செயலி Android போன்களில் பயன்படுத்தும் விதமாக சாதாரண பிரவுசர்கள் மற்றும் Google PlayStore-ல் கிடைக்கிறது.
யுவர்ஸ்டோரியுடன் இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக பேசியுள்ள விஸ்வா, காற்றுத் தரக் குறியீடு (AQI) சென்சார்கள் விலை மார்க்கெட்டில் அதிகம். மேலும், இந்தியாவில் இருக்கும் அதிக மக்கள்தொகை எண்ணிக்கை காரணமாக அது அதிகம் கிடைக்காது.
இருப்பினும், இந்தியாவில் 800 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் உள்ளன, மேலும் அந்த எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
‘இந்த விஷயங்களை மையமாகக் கொண்டு இந்தியர்களுக்குக் கிடைக்கும் காற்றின் தரம் மற்றும் வளங்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டேன். ஒரு படத்தின் மூலம் காற்றின் தரத்தை அடையாளம் காணும் திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவ சிறந்த வழி முடிவு செய்தேன்.’
புரோகிராம் எளிமையாக இயங்க வேண்டும். அதேநேரம் ஒரு படத்தை எடுத்து AQI ஐக் கண்டறியவும் வேண்டும். இந்தச் சிக்கலுக்கு செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். அதனால், தரவுத்தொகுப்பை உருவாக்கத் தொடங்கினேன்.
இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள பலர் #smogselfies என்ற ஹேஷ்டேக் உடன் மாசுபட்ட வானத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியிட, அதை பயன்படுத்தி அவை எடுக்கப்பட்ட நாளில் AQI-ஐ குறித்து கொண்டேன். இதேபோல் கூகுளில் இருந்த படங்களையும் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த சில படங்களையும் பயன்படுத்தினேன்.
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி AQI மதிப்புகளுடன் பொருந்திய புகைப்படங்களின் தரவுத்தளத்தை தயார் செய்துகொண்டேன். எனது AVA செயலியில் இரண்டு மாதிரிகள் உள்ளன. ஒன்று 16 அடுக்கு கன்வல்யூஷனல் நியூரல் நெட்வொர்க் மாடல். இது Google Cloud-ல் பயன்படுத்தப்படுகிறது.
புதிய மாடல் கிராமப்புற இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த இணையமும் தேவையில்லை. அதன்படி, இதில் பதிவேற்றப்படும் புகைப்படத்தில் உள்ள வானத்தின் சிவப்பு, பச்சை, நீலம் (RGB) மதிப்பு எடுக்கப்பட்ட எளிய k-Nearest-Neighbour அல்காரிதம் ஆகும்.
இந்த மதிப்பு தரவுத்தொகுப்பில் உள்ளவற்றுடன் ஒப்பிடப்படுகிறது.
கலிபோர்னியாவில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நிகழ்ந்த AQI மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நகரங்களுக்கு அருகிலுள்ள தொழில்துறை பெல்ட்களில் இருந்த AQIவுடன் ஒப்பிடப்பட்டது.
‘இந்தியாவில் ஏற்கனவே, காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி (SAFAR) போன்ற செயலிகள் உள்ளன. இவற்றுடன் AVA செயலியும் போட்டியிடுகிறது,” என்று விரிவாக பேசியுள்ளார்.
இதனிடையே, இந்த பணிக்காக சோப்ரா அறக்கட்டளை உட்பட பல உள்ளூர் அறக்கட்டளைகளுடன் கூட்டு சேர்ந்துள்ள விஸ்வா, பொது சுகாதார வழிகாட்டுதலை மேம்படுத்த பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்தும் வருகிறார்.
மேலும், இந்த செயலி தற்போது ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கிறது. பல உள்ளூர் மொழிகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் அதிகமான மக்களைச் சென்றடைய முடியும் என்று விஸ்வா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் ஊக்கம் பெற்ற விஸ்வா, எதிர்காலத்தில் செயலியை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார். காற்று, சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை போன்ற பிற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு AQI-ல் சிறந்த முடிவை எடுக்க முடியும் என்றும் நம்புகிறார்.