கவனித்திருக்கலாம்… நடுத்தர வர்க்கத்தில், மாரடைப்பு வந்த ஆண்களை!
அப்பொழுது தான் மகள் மகனை செட்டில் பண்ணியிருப்பார். இருபத்திச் சொச்ச வயதிலிருந்து, குடும்பச் சுமைக்கு முட்டுக் கொடுக்க உழைக்க ஆரம்பித்து, தன் கல்யாணத்து கௌரவச் செலவில் சிக்கி, புது மனைவிக்கு படோடோபம் காட்ட கூடுதலாக உழைத்து, பெற்ற பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்து, தன் வலி அவர்களுக்குத் தெரிய விடாது உழைத்து, மகள்களைக் கட்டிக் கொடுத்து, மகன் தலையெடுத்து விட்டான் என்று தெரிந்த கணத்தில், உஸ்ஸ்ஸ் அப்ப்பா என்று உட்காரலாம் என்று உடம்பு ஏங்க, ஐயோ தன் மகன் மட்டும் தனியாகக் கஷ்டப்படுகிறானே என்று மனசு கேட்காததால், தன் நெடிய உழைப்பை நிறுத்தாமல் தொடரும் தருணத்தில் தான், அந்த மாரடைப்பு வரும். அல்லது ஒரு விபத்து நேர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்கு வேலைக்குப் போகக் கூடாது என்று டாக்டர் அறிவுறுத்துவார்.
வெளிப்படையாகப் பார்க்கும் போது, வயசாயிடுச்சு, அதனால் உடம்பு கெட்டுடுச்சு என்று தோன்றும். ஆனால், நிஜம் என்னவென்றால், மனசுக்கு ஓய்வு தேவை என்று தோன்றும் போது, அவசியம் ஓய்வு எடுத்திடணும். இல்லாவிட்டால் அதற்கான சூழலை உருவாக்கி அதற்குத் தேவையான ஓய்வை அதுவே எடுத்துக் கொள்ளும். மனம் அத்தனை வலிமையானது.
விடாது அடம் பிடிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு ஓரிரு நாட்கள் லீவ் போட்டு விளையாட விடுங்கள். இல்லாவிட்டால், காய்ச்சலோ, விளையாடும் போது அடிபட்டோ ஓய்வெடுக்க வேண்டிவரும்.
இன்று, நாற்பது வயதில் ஒரு நண்பருக்கு மரணம். நிச்சியம் இறக்கும் வயதில்லை. உற்சாகமான மனமும் உறுதியான உடல்வாகும் உடையவராகத் தான் தோற்றம் கொண்டவர். ஆனால், ஏன் இந்த மரணம்?
மன உளைச்சலோ, உடல் உபாதைகளோ, பொருளாதார, குடும்பச் சிக்கலோ இருந்தால், பிரச்சினைகளைக் கடக்க, போதுமான ஓய்வெடுங்கள். சில நாட்களோ வாரங்களோஉங்கள் உழைப்பையும் முனைப்பையும் தள்ளி வைத்து, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களில் மட்டும்…ஆம் அதில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த தருணத்தில் இழக்கப் போகும் நாட்களைக் கணக்குப் பார்த்துக் கொண்டு, வாழ்வைப் பாதியிலேயே முடித்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் உயிர் என்பது, உங்கள் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளின் வாழ்வாதாரம்…