பகவத் ராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும் இரட்டைக்கரடு வனப் பகுதியில் அமைந்த சுவாமி ராமானுஜரின் சிறிய சந்நிதியில் எம்பெருமானார் ஜயந்தி விழா நடத்தப் பெற்றது.
ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காவிரிக் கரை வழியே கர்நாடகம் மைசூர் பகுதியில் உள்ள மேல்கோட்டை திருநாராயணபுரம் செல்லும் வழியில் இரட்டைக்கரடு எனப்படும் இந்த வனப் பகுதிக்கு வந்திருக்கிறார். அங்கே அவர் ஓர் அதிசயத்தை நிகழ்த்தினார்.
அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் இரண்டு கருடன்கள் மிக ஆக்ரோஷமாக சண்டையிட்டபடியும், மக்களை அச்சுறுத்தியும் இருந்தன. இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், இந்த கருடன்களின் ஆக்ரோஷத்தைக் கண்டு பெரிதும் அச்சமடைவார்கள். மகாசாதுவான ஸ்ரீராமானுஜர் இந்த வழியாக மேல்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்தவர்கள் இந்த இரட்டை கருடன்களைக் குறித்து சொல்லி, ராமானுஜரை எச்சரிக்கை செய்தார்கள்.
மேலும், சுவாமியின் தவ வலிமையால் தங்களை பாதுகாக்க உதவுமாறும் கோரினர். பகவத் ராமானுஜர் அன்பர்களால் ஆதிசேஷன் அம்சம் எனப் போற்றி வணங்கப் படுபவர்.
அன்று இரவு ஸ்ரீராமானுஜர் அந்த இடத்தில் தங்கியிருந்துள்ளார். அப்போது இரு கருடன்களும் வரவே, அவரற்றைத் தம் தபோவலிமையால் சாந்தப் படுத்தி, அவற்றைத் திருத்திப் பணி கொண்டார். இந்தத் தகவல் இங்குள்ள செப்பேட்டில் குறித்து வைக்கப் பெற்றிருக்கிறது.
பவானி நதியும் காவிரியும் சங்கமிக்கும் இடத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கிறது இரட்டைக் கரடு. முன்னர் இரட்டைக் கருடன் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் மருவி இரட்டைக்கரடு ஆனதாம். இங்கே பெரிய அளவில் சுவாமி ராமானுஜருக்கு ஆலயம் என்று எதுவும் இல்லை. ஆயினும் சிறிய கட்டடம், சிறிய அளவிலான பாறைக்குவியல்களுக்கு மத்தியில் சுவாமி ராமானுஜரின் அழகிய சிற்பம் வடிக்கப் பெற்றிருக்கிறது.
இங்குள்ளவர்கள் சுவாமி ராமானுஜரைப் போற்றி துதிக்கின்றனர். பெரிய அளவில் பராமரிப்பு ஏதும் இல்லை என்றாலும், முக்கிய நாட்களில், ராமானுஜரின் ஜயந்தி தினம் போன்ற விசேஷ நாட்களில் இங்கே பூஜைகளை செய்து மகிழ்கின்றனர். சுவாமி ராமானுஜரின் இந்தத் திருமேனி இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டு 800 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் என்கிறார்கள்.
இங்கே, தற்போது நடைபெற்ற ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன மடத்தின் சார்பாக திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நடைபெற்றது.