spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஐந்தை அடக்கி ஐந்தைத் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஐந்தை அடக்கி ஐந்தைத் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

- Advertisement -
panchamugha hanuman
panchamugha hanuman

குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்ட ஆஞ்சநேயரை சில கோயில்களில்- விக்கிரகங்களாகவும், வீடுகளில் வண்ண படங்களாகவும் காணலாம் இந்த வடிவம் தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

இப்படி, மகிமை மிகு ஐந்து திருமுகங்களுடன் அனுமன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் கதை இது:

யுத்தத்தில் கணக்கிலடங்காத தன் போர் வீரர் களை இழந்த ராவணனுக்கு, ‘ஸ்ரீராமனால் தானும் கொல்லப்படுவோமோ?’ என்ற பயம் எழுந்தது. எனவே, அவன் பாதாள உலகின் வேந்தனான மயில்ராவணனை வரவழைத் தான். பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன் மயில்ராவணன். மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன்.

தன்னை வணங்கிய மயில்ராவணனிடம் தனது நிலையை எடுத்துக் கூறி, ராம.லட்சுமணரை அழிக்கும்படி உத்தரவிட்டான் ராவணன் அவன் கட்டளையைச் சிரமேற் கொண்ட மயில்ராவணன், ராம-லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் செய்து புறப்பட்டான்.

விபீஷணனின் ஒற்றர்கள் மூலம் அறிந்த சுக்ரீவன், ராம- லட்சுமணரைப் பாதுகாக்கும் படி அனுமனிடம் கூறினார். அனுமன், ராம- லட்சுமணரை பர்ணசாலையின் உள்ளே அமர்த்தி, தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன் மீது அமர்ந்து காவல் புரிந்தார்.

விபீஷணரின் உருவெடுத்த மயில்ராவணன், அனுமனிடம் வந்தான். ராம.லட்சுமணரைப் பார்த்து வருவதாகக் கூறி உள்ளே சென்றவன் தனது மாய சக்தியால் அவர்களைச் சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
”மாருதி ஜாக்கிரதை, மயில்ராவணன் என் உருவத்தில்கூட இங்கு வர முயற்சிப்பான்..” என்று அனுமனை எச்சரித்து புறப்பட்டான். பாதாள லோகம் வந்த மயில்ராவணன், ராம- லட்சுமணரை நிஜ உருவம் பெறச் செய்தபின் சிறை வைத்தான்.

மயில்ராவணன் சென்ற பிறகு உண்மையான விபீஷணர் அனுமனிடம் வந்தார். ”இப்போது தானே வந்து போனீர்கள்!” என்று அவரிடம் வினவினான் அனுமன். தான் வரவில்லையே என்றார் வீபிஷணர்.

அனுமன் பதற்றத்துடன் பர்ணசாலைக்குள் சென்று பார்க்க அங்கே ராம- லட்சுமணர் இல்லை. இது மயில் ராவணனின் வேலையே என்று உணர்ந்தார். அவரிடம் மயில் ராவணனது இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹி ராவணன் பற்றியும் சொன்னார் விபீஷணன்.

ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும், அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் சொன்னார்.
அதன்படி பாதாள லோகம் சென்ற ஆஞ்சநேயர், அங்கிருந்த காளிதேவி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்கு பின்னால் மறைந்து கொண்டார்.

மயில்ராவணனும் மஹிராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம- லட்சுமணரை அழைத்து வந்தனர். அப்போது, ”மயில்ராவணா உனது பக்திக்கு மெச்சினேன். நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வர வேண்டாம்!” என்று காளிபோல குரல் கொடுத்தார் அனுமன்
அதன்படி ராம- லட்சுமணருடன் மஹிராவணன் கோயிலுக்குள் நுழைந்ததும் ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்துக் கொன்றார். பிறகு, தான் கொண்டு வந்திருந்த வில், அம்புகளை ராம- லட்சுமணர்களிடம் கொடுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி வேண்டினார்.
நெடுநேரமாகியும், மஹிராவணன் திரும்ப வராததால் சந்தேகம் கொண்ட மயில்ராவணன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ராம-லட்சுமணர்களை தன் தோள்களில் அமர செய்து மயில்ராவணன் மீது அம்புகளைத் தொடுக்கச் செய்தார் அனுமன்.

மயில்ராவணன் மாயப் போர் புரிந்தான். போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணிய அனுமன், ராம- லட்சுமணரைக் கீழே இறக்கி விட்டார். அவர்களிடம் போரைத் தொடருமாறு கூறி, மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுகளைத் தேடிப் புறப்பட்டார் அனுமன்.

விபீஷணர் கூறியபடி ஏழு கடல்கள் கடந்து, ஒரு தீவை அடைந்தார். அங்கு தன்னை எதிர்த்த அரக்கர்களை அழித்து, தடாகம் ஒன்றில் தாமரைப் பூவுக்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பினார்.

‘ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொன்றால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்!’ என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான் மயில்ராவணன். அப்படி முடியாவிட்டால், கொல்ல முயல் பவரே மடிய நேரிடும்.

அசரீரி மூலம் இதையறிந்த அனுமன் வானரம், நரசிம்மம், கருடன், வராஹம், குதிரை முகங்களோடு விசித்திர உருவெடுத்தார். இதைக் கண்ட மயில் ராவணன் நிலை தடுமாறினான்.

ஆஞ்சநேயர் அவனிடம், ”அதர்ம வழிகளில் சென்ற அரக்கனே, நீ அழியப் போகும் நேரம் வந்து விட்டது” என்று கூறி, பெட்டியைத் திறந்து ஐந்து வண்டுகளையும், ஐந்து முகங்களின் வாயினால் ஒரே நேரத்தில் கடித்துத் துப்பினார். வண்டுகள் இறந்தன.

மயில் ராவணன் பாதாளமே அதிரக் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான். பிறகு ராம- லட்சுமணர்களை தோள்களில் தூக்கிக் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையை அடைந்தார். வானர சேனைகள் மகிழ்ந்தன. பிறகு நடந்த போரில் ராவணன், ஸ்ரீராமரால் கொல்லப்பட்டான். ‘ஸ்ரீராமருக்கு வெற்றி’ என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

மயில்ராவணனின் பிராணன் வாயு சொரூபமானதால், தன் உயிரை பறக்கும் ஐந்து வண்டுகளாக மாற்றிக் கொள்ள பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தான். ஒரே நேரத்தில் ஐந்து வண்டுகளையும் எவராலும் பிடிக்க முடியாது என்று இறுமாந்திருந்தான். சகல சக்திகளையும் பெற்ற ஸ்ரீஆஞ்சநேயர், ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் பாய்ந்து பிடித்ததுடன் அவை எங்கு சென்றாலும் அவற்றைக் கொல்லும் வல்லமை படைத்த பஞ்ச முகங்களுடன் உருவெடுத்தார்.

தாவித் தாவிச் செல்ல வானரம், ஆகாயத்தில் பறக்க கருடன், பாய்ந்து செல்ல நரசிம்மம், பூமியில் ஓட குதிரை, பாதாளத்தினுள் நுழைய வராஹம் என ‘பஞ்சமுக ஆஞ்சநேயராக’ உருவெடுத்து மயில்ராவணனை அழித்தார்.

பஞ்ச இந்திரியங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் துயரப்படும் நாம், மகிமை மிக்க பஞ்சமுக ஆஞ்சநேயரை தியானித்து வழிபட்டால் தைரியம், பலம், பெரும் புகழ், புத்திக் கூர்மை, ஆரோக்கியம், நல்ல எண்ணங்கள், மன நிம்மதி, குடும்ப ஒற்றுமை, நல்லுறவு ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe