
அருணாசல அக்ஷரமணமாலை
காப்பு
அருணாசல வரற்குஏற்ற அக்ஷரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரம்அருளிக் காப்பாயே.
நூல்
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
- அருணா சலம்என அகமே நினைப்பவர்
அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா! (அ) - அழகு சுந்தரம்போல் அகமும் நீயுமுற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா! (அ) - அகம்புகுந்து ஈர்த்துஉன் அககுகை சிறையாய்
அமர்வித்தது என்கொல் அருணாசலா! (அ) - ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா! (அ) - இப்பழி தப்பு உனை ஏன்நினைப் பித்தாய்
இனியார் விடுவார் அருணாசலா! (அ) - ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனதருள் அருணாசலா! (அ) - உனையே மாற்றி ஓடாது உளத்தின்மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா! (அ) - ஊர்சுற்று உளம்விடாது உனைக்கண்டு அடங்கிட
உன்னழகைக் காட்டு அருணாசலா! (அ) - எனையழித்து இப்போது எனைக்கலவா விடில்
இதுவோ ஆண்மை அருணாசலா! (அ) - ஏன்இந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
இதுஉனக்கு அழகோ அருணாசலா! (அ) - ஐம்புலக் கள்வர் அகத்தினிற் புகும்போது
அகத்தில்நீ இலையோ அருணாசலா! (அ) - ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார்
உன்சூதே இது அருணாசலா! (அ) - ஓங்காரப் பொருள் ஒப்புயர்வு இல்லோய்
உனையார் அறிவார் அருணாசலா! (அ) - ஔவைபோல் எனக்குன் அருளைத் தந்துஎனை
ஆளுவது உன்கடன் அருணாசலா! (அ) - கண்ணுக்குக் கண்ணாய்க் கண்இன்றிக் காண்உனைக்
காணுவது எவர்பார் அருணாசலா! (அ) - காந்தம் இரும்புபோல் கவர்ந்துஎனை விடாமல்
கலந்துஎனோடு இருப்பாய் அருணாசலா! (அ) - கிரிஉரு ஆகிய கிருபைக் கடலே
கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா! (அ) - கீழ்மேல் எங்கும் கிளர்ஒளி மணியென்
கீழ்மையைப் பாழ்செய் அருணாசலா! (அ) - குற்றமுற்று அறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
குருஉருவாய் ஒளிர் அருணாசலா! (அ)
20 கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
கூர்ந்துஎனைச் சேர்ந்தருள் அருணாசலா! (அ)
- கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல்என்றே அருள் அருணாசலா! (அ) - கேளாது அளிக்கும்உன் கேடில் புகழைக்
கேடுசெய்யாது அருள் அருணாசலா! (அ) - கையினிற் கனிஉன் மெய்ரசம் கொண்டுஉவகை
வெறி கொளவருள் அருணாசலா! (அ) - கொடியிட்டு அடியரைக் கொல்லுனைக் கட்டிக்
கொண்டுஎங்ஙன் வாழ்வேன் அருணாசலா! (அ) - கோபம்இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறைஎன் செய்தேன் அருணாசலா! (அ) - கௌதமர் போற்றும் கருணைமா மலையே
கடைக்கணிந்து ஆள்வாய் அருணாசலா! (அ) - சகலமும் விழுங்கும் கதிரொளி இனமன
சலசம் அலர்த்தியிடு அருணாசலா! (அ) - சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவாயான்
சாந்தமாய்ப் போவன் அருணாசலா! (அ) - சித்தங் குளிரக்கதிர் அத்தம்வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாசலா! (அ) - சீரை அழித்து நிர்வாணமாச் செய்துஅருள்
சீரை அளித்தருள் அருணாசலா! (அ) - சுகக்கடல் பொங்கச் சொல்லுணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடுஅங்கு அருணாசலா! (அ) - சூதுசெய்து என்னைச் சோதியாது இனிஉன்
சோதி உருக்காட்டு அருணாசலா! (அ) - செப்படி வித்தைகற்று இப்படி மயக்குவிட்டு
உருப்படு வித்தைகாட்டு அருணாசலா! (அ) - சேராய் எனின்மெய் நீராய் உருகிக்கண்
நீராற்று அழிவேன் அருணாசலா! (அ) - சைஎனத் தள்ளிற் செய்வினை கடும்அலால்
உய்வகை ஏதுஉரை அருணாசலா! (அ) - சொல்லாது சொலிநீ சொல்லற நில்என்று
சும்மா இருந்தாய் அருணாசலா! (அ) - சோம்பியாய்ச் சும்மா சுகம்உண்டு உறங்கிடில்
சொல்வேறு என்கதி அருணாசலா! (அ) - சௌரியங் காட்டினை சழக்குஅற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாசலா! (அ) - ஞமலியிற் கேடா நானென் உறுதியால்
நாடிநின் உறுவேன் அருணாசலா! (அ) - ஞானம் இல்லாதஉன் ஆசையாற் தளர்வுஅற
ஞானந் தெரித்தருள் அருணாசலா! (அ) - ஞிமிறுபோல் நீயும் மலர்திலை என்றே
நேர் நின்றனைஎன் அருணாசலா! (அ) - தத்துவம் தெரியா தத்தனை உற்றாய்
தத்துவம் இதுஎன் அருணாசலா! (அ) - தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாசலா! (அ) - திரும்பி அகந்தனைத் தினம்அகக் கண்காண்
தெரியும் என்றனைஎன் அருணாசலா! (அ) - தீரம்இல் அகத்தில் தேடிஉந்தனை யான்
திரும்பஉற்றேன் அருள் அருணாசலா! (அ) - துப்பறிவு இல்லா இப்பிறப்பு என்பயன்
ஒப்பிட வாயேன் அருணாசலா! (அ) - தூய்மன மொழியர் தோயும்உன் மெய்அகம்
தோயவே அருள்என் அருணாசலா! (அ) - தெய்வமென்று உன்னைச் சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா! (அ) - தேடாது உற்றநல் திருவருள் நிதிஅகத்
தியக்கம் தீர்த்துஅருள் அருணாசலா! (அ) - தைரியமோடும் உன் மெய்யகம் நாடயான்
தட்டழிந்தேன் அருள் அருணாசலா! (அ) - தொட்டுஅருள் கைமெய் கட்டிடாய் எனில்யான்
நட்டமாவேன் அருள் அருணாசலா! (அ) - தோடம்இல் நீஅகத்தோடு ஒன்றி என்றும்
சந்தோடம்ஒன்றிட அருள் அருணாசலா! (அ) - நகைக்குஇடம் இலைநின் நாடிய எனைஅருள்
நகையிட்டுப் பார்நீ அருணாசலா! (அ) - நாணிலை நாடிட நானாய் ஒன்றிநீ
தாணுவாய் நின்றனை அருணாசலா! (அ) - நின்எரி எரித்தெனை நீறு ஆக்கிடுமுன்
நின்அருள் மழைபொழி அருணாசலா! (அ) - நீதான் அறப்புலி நிதம்களி மயமாய்
நின்றிடு நிலைஅருள் அருணாசலா! (அ) - நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
எண்அலை இறுமென்று அருணாசலா! (அ) - நூலறிவு அறியாப் பேதையன் என்தன்
மால்அறிவு அறுத்தருள் அருணாசலா! (அ) - நெக்குநெக்கு உருகியான் புக்கிட உனைப்புக
நக்கனா நின்றனை அருணாசலா! (அ) - நேசம்இல் எனக்குஉன் ஆசையைக் காட்டிநீ
மோசம் செயாதுஅருள் அருணாசலா! (அ) - நைந்துஅழி கனியால் நலன்இலை பதத்தில்
நாடிஉட் கொள்நலம் அருணாசலா! (அ) - நொந்திடாது உன்தனைத் தந்துஎனைக் கொண்டிலை
அந்தகன் நீஎனக்கு அருணாசலா! (அ) - நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவம்
ஆக்கிநீ ஆண்டருள் அருணாசலா! (அ) - பற்றிமால் விடம்தலை உற்றுஇறு முனம்அருள்
பற்றிட அருள்புரி அருணாசலா! (அ) - பார்த்தருள் மால்அறப் பார்த்திலை எனின்அருள்
பார்உனக்கு ஆர்சொல்வர் அருணாசலா! (அ) - பித்துவிட்டு உனைநேர் பித்தன் ஆக்கினைஅருள்
பித்தம் தெளிமருந்து அருணாசலா! (அ) - பீதியில் உனைச்சார் பீதியில் எனைச்சேர்
பீதிஉன் தனக்குஏன் அருணாசலா! (அ) - புல்லறிவு ஏதுஉரை நல்லறிவு ஏதுஉரை
புல்லிடவே அருள் அருணாசலா! (அ) - பூமண மாமனம் பூரண மணம்கொளப்
பூரண மணம் அருள் அருணாசலா! (அ) - பெயர்நினைத் திடவே பிடித்து இழுத்தனைஉன்
பெருமையார் அறிவார் அருணாசலா! (அ) - பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்துஎனைப்
பேயன் ஆக்கினைஎன் அருணாசலா! (அ) - பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல்
பற்றுக் கோடாய்க்கா அருணாசலா! (அ) - பொடியான் மயக்கிஎன் போதத்தைப் பறித்துஉன்
போதத்தைக் காட்டினை அருணாசலா! (அ) - போக்கும் வரவுமில் பொதுவெளியினில் அருள்
போராட்டம் காட்டு அருணாசலா! (அ) - பௌதிகம் ஆம்உடல் பற்றுஅற்று நாளும்உன்
பவிசுகண்டு உறவருள் அருணாசலா! (அ) - மலைமருந்து இடநீ மலைத்திடவோ அருள்
மலைமருந்தாய் ஒளிர் அருணாசலா! (அ) - மானங்கொண்டு உறுபவர் மானத்தை அழித்து
அபிமான மில்லாதுஒளிர் அருணாசலா! (அ) - மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவனியான்
வஞ்சியாது அருள்எனை அருணாசலா! (அ) - மீகாமன் இல்லாமல் மாகாற்று அலைகலம்
ஆகாமல் காத்தருள் அருணாசலா! (அ) - முடிஅடி காணா முடிவிடுத்து அனைநேர்
முடிவிடக் கடனிலை அருணாசலா! (அ) - மூக்கிலன் முன்காட்டு முகுரம் ஆகாதுஎனைத்
தூக்கி அணைந்துஅருள் அருணாசலா! (அ) - மெய்யகத் தின்மன மென்மலர் அணையில்நாம்
மெய் கலந்திடஅருள் அருணாசலா! (அ) - மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்ச் சேர்ந்துநீ
மேன்மை உற்றனைஎன் அருணாசலா! (அ) - மைமயல் நீத்துஅருள் மையினால் உனதுஉண்
மைவசம் ஆக்கினை அருணாசலா! (அ) - மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில்நீ
நட்டம் ஆடினைஎன் அருணாசலா! (அ) - மோகம் தவிர்த்துஉன் மோகமா வைத்தும்என்
மோகம் தீராய்என் அருணாசலா! (அ) - மௌனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மௌனம் இதுஆமோ அருணாசலா! (அ) - யவன்என் வாயில் மண்ணினை அட்டி
என்பிழைப்பு ஒழித்தது அருணாசலா! (அ) - யாரும் அறியாதுஎன் மதியினை மருட்டி
எவர்கொளை கொண்டது அருணாசலா! (அ) - ரமணன்என்று உரைத்தேன் ரோசம் கொளாதுஎனை
ரமித்திடச் செயவா அருணாசலா! (அ) - ராப்பகல் இல்லா வெறுவெளி வீட்டில்
ரமித்திடு வோம்வா அருணாசலா! (அ) - லட்சியம் வைத்துஅருள் அஸ்திரம் விட்டுஎனைப்
பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா! (அ) - லாபநீ இகபர லாபம்இல் எனைஉற்று
லாபம்என் உற்றனை அருணாசலா! (அ) - வரும்படி சொலிலை வந்துஎன் படிஅள
வருந்திடுஉன் தலைவிதி அருணாசலா! (அ) - வாவென்று அகம்புக்குஉன் வாழ்வுஅருள் அன்றேஎன்
வாழ்வுஇழந்தேன் அருள் அருணாசலா! (அ) - விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனைஉயிர்
விட்டிட அருள்புரி அருணாசலா! (அ) - வீடுவிட்டு ஈர்த்துஉள வீடுபுக்குப் பையஉன்
வீடுகாட்டினை அருள் அருணாசலா! (அ) - வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடாது உன்அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா! (அ) - வேதாந் தத்தே வேரற விளங்கும்
வேதப் பொருள்அருள் அருணாசலா! (அ) - வைதலை வாழ்த்தா வைத்துஅருட் குடியா
வைத்துஎனை விடாதுஅருள் அருணாசலா! (அ) - அம்புவில் ஆலிபோல் அன்புஉரு உனில்எனை
அன்பாக் கரைத்துஅருள் அருணாசலா! (அ) - அருணைஎன்றூ எண்ணையான் அருள்கண்ணி பட்டேன்உன்
அருள்வலை தப்புமோ அருணாசலா! (அ) - சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச்
சிறையிட்டு உண்டனை அருணாசலா! (அ) - அன்பொடு உன் நாமம்கேள் அன்பர்தம் அன்பருக்கு
அன்பன் ஆயிடஅருள் அருணாசலா! (அ) - என்போலும் தீனரை இன்புறக் காத்துநீ
எந்நாளும் வாழ்ந்துஅருள் அருணாசலா! (அ) - என்புருகு அன்பர்தம் இன்சொற்கொள் செவியும்என்
புன்மொழி கொளஅருள் அருணாசலா! (அ) - பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்துஅருள் இஷ்டம்பின் அருணாசலா! (அ) - மாலை அளித்து அருணாசல ரமணஎன்
மாலை அணிந்துஅருள் அருணாசலா! (அ)
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!