சிவன் அழித்தல் கடவுளா ?

Published:

brahma vshnu sivan - 2026சிவ பக்தியில் முழுமையாக ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ‘ சிவம் ‘ என்றதுமே அச்சமடைகிறார்களே, ஏன் ? முத்தொழிலில் ‘ சிவன் ‘ அழித்தல் கடவுள் என்பதாலா ? அதேபோல், வீரசைவர்கள் போன்ற முதிர்ந்த பக்தர்களல்லாத சாதாரண பக்தர்கள், சிவன் கோவிலுக்குப் போகும்போது ஒரு பய உணர்வோடும் எச்சரிக்கை உணர்வோடுமே செல்கிறார்கள். ஆனால் அதே பக்தர்கள் விஷ்ணு கோவிலுக்குப் போகும்போது பயமின்றி சொந்த வீட்டிற்குச் செல்வது போல் செல்கிறார்கள், அது ஏன் ?முதல் கேள்வி சிவனை அழித்தல் கடவுளாகக் காண்பிப்பதைப் பற்றியது. ஆனால் அழித்தலில் தானே படைத்தலும் காத்தலும் அடங்கியுள்ளன. அழிதல் இல்லாவிட்டால் படைப்பு எங்கனம் செம்மையாக நடைபெறும் ? படைப்பிற்கு அவசியமில்லாவிட்டால் பின் காத்தல் எதற்கு ? ஆகவே படைப்பிற்கும், காத்தலுக்கும் காரணமாக இருப்பவனே அவ்வப்போது அழித்தலையும் செய்து வருகிறான். முத்தொழிலையும் செய்பவன் அனைத்திற்கும் மூலப்பொருளான ஈசன் என்ற தீர்ந்த கருத்துடையவர்கள் சிவனடியார்கள். அதனாலேயே அவர்கள் அச்சமேதுமின்றி சிறப்பாக பக்தி செய்து சிவனை ஆராதிக்கிறார்கள்.

இரண்டாவது கேள்வி சிவ வழிபாடும் அது சார்ந்த இடம் பற்றியதும். பொதுவாக சிவாலங்களுக்கு செல்லும் போது ஒருவித உணர்வோடு பக்தர்கள் செல்வது உண்மைதான். அது பய உணர்வு என்று சொல்லிவிட முடியாது, அது பயபக்தி. அது ஒருவிதக் கட்டுப்பாடான உணர்வு. தம்மை தாமே நெறிப்படுத்த முயலுதல். பெரும்பாலானவர்கள் சிவத்தின் தன்மையை உணரும் அளவிற்கு மனப்பக்குவம் அடையாதவர்களே. அதை அவர்களின் குறையென்றோ தவறென்றோ நாம் கூறிவிட முடியாது. அது ஒருவித அறியாமை.

சர்வ மங்களத்தையும் கொடுப்பவன் சிவன் ! சங்கரன் ! சிவம் என்றால் அன்பு என்று பொருள். அன்பைக் காட்டுபவன் சிவன் என்பதோடு அன்பு காட்டுபவர்களுக்கு அளவிடாத அருள் புரிபவனும் சிவனே. சிவபக்தியில் மூழ்கியவர்களுக்கு அன்பைக் காட்டுவதே மூச்சுக் காற்று ! அன்பு வார்த்தை பேசுவதே ருத்திராட்சனை. அன்பு வழி நடப்பதே சிவாலய பிரதட்சனம். ஐந்தெழுத்தே – நமசிவாய – சகலமும். இத்தனை பெருமையோடு நம்மைக் காத்து ரட்சிக்கும் தெய்வாம்சத்தை நமது முன்னோர்கள் அமைத்து அருளியுள்ளனர். தத்துவ ரீதியில் வேதாகமங்களை முற்றிலும் ஆராய்ந்து, பாஷ்யம் அருளிய ஸ்ரீ ஆதிசங்கரர், சிவ-சக்தி ஐக்கியத்தை மூலாதாரமாக வைத்து ஷண்மத ஸ்தாபனத்தில் சாக்தத்தையும் – சைவத்தையும் தோற்றுவித்திருக்கிறார்கள்.அவருக்குப் பின்னரும் முன்னரும் தோன்றிய சிவனடியார்களும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

சாதாரன பக்தன் கண்களை மூடிக்கொண்டு, பயந்து நடுங்கிக் கொண்டு சிவாலயத்தில் ” ஹர ஹர மஹாதேவா ! ” , ” நம சிவாய ” என வேண்டிக்கொள்ளும்போது அவனுக்குக் காட்டும் அருளைத்தான் எல்லாமறிந்த சிவனடியார்களுக்கும் பரமன் காட்டுகிறான். இதில் பாரபட்சமோ, அளவுகோளோ இல்லை. தாயின் பரிவு சேய் அறியாததா ! அந்தப் பரிவு தாயிடமிருந்து குழந்தைக்கு கேட்ட பிறகா வருகிறது ? பரிவு காட்டுவது தாயின் இயல்பல்லவா ? அந்த அம்மையப்பனின் அருளும் அவ்வாறே சேயை நோக்கி ஓடி வருகிறது. தாயிடம் எந்தச் சேயும் பயப்படுவதில்லை. தாயின் தொடர்பில் மட்டுமே பிரத்தியேகமாக இந்த ” பயமின்மை ” எனும் சலுகை கிடைக்கிறது. கருணையும் பரிவும் கலந்த சலுகையை எதிர்பார்க்குமிடத்தில் பயமேன் ? பரமன் கருணை வடிவானவன். அன்பின் முழு உரு. அருளின் ஆதியும் அந்தமும் அவனே ! இப்படி எல்லாத் தாய்க்குணங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ள ஈசுவரனிடம் பயப்படுவானேன் ?

நாம் இங்கு ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம பாஷ்யத்தில் வரும் சில சிவனாருடைய நாமங்களைப் பார்ப்போம். ” ஓம் காமாய நம: ” இதன் விளக்கம் யாதெனில், செயல்கள் விருப்பங்களால் எழுகின்றன. படைப்பு ஈசனின் காமலேசத்தால், காம கோடியால் எழுகின்றது. காமம் எனும் சொல் படைப்பாகப் பரிணமிப்பதால் காம: என்ற சொல் ஈசனைக் குறிப்பால் உணர்த்தும். அடுத்ததாக ” ” ஓம் காமநாசகாய நம: ” இதன் விளக்கம் யாதெனில், ஞானம் மஹேசனின் அனுக்கிரஹம். அதற்கு இடையூறாக இருக்கும் பற்றுக்களை அழித்து அவர் ஞானம் அளிப்பவர். அடுத்தது, ” ஓம் கம்பீராய நம: ” இதன் விளக்கம் யாதெனில், பயமும் சாந்தமும் ஒருங்கே இனைந்தவர் என்பதாகும். எனவே ஈசன் எனும் மூர்த்தியை அழித்தல் கடவுள் எனும் ஒரு வட்டத்திற்குள் அடைத்து, அவரை ஒரு பயமுறுத்தும் மூர்த்தியாக காண்பது அறியாமையின் உச்சம்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

சாஸ்திரங்களையும், ஆகமங்களையும் சிருஷ்டித்த மகான்கள், தெய்வ சந்நிதிகளை பேதப்படுத்தவில்லை. தெய்வாராதனைக்கான விதி முறைகளை ஒரே மாதிரியாகத்தான் அமைத்துக் கொடுத்தார்கள்.சிவா – விஷ்ணு பேதமின்றியே அக்காலத்தில் வழிபட்டார்கள். பின்னர் நாட்டின் மக்கள்தொகை பெருகி, அயல்நாட்டினரின் நாகரிகமும், கருத்துக்களும் நம் மக்களிடையே பரவி, நமது மதமும் பண்பும் ஆபத்துக்குள்ளான சமயத்தில், மதாசாரியார்களும், சிவ – விஷ்ணு பக்தர்களூம் தோன்றி, மக்களின் மனப் போக்கிற்கேற்ப சாஸ்திர சம்பிரதாயங்களை மாற்றியமைத்து, மதம், கலாசாரம், பண்பாடு எல்லாவற்றையும் நிலைகுலையாமல் காப்பாற்றினார்கள். உலகின் எல்லா மதங்களும் காலப்போக்கில் இத்தகைய சோதனைக்கு உள்ளாகுகின்றன. வீர சைவர்கள், வீர வைஷ்ணவர்கள், வீர முருக பக்தர்கள், வீர சாக்தர்கள் என்றெல்லாம் பக்தர்களிடையே பிளவுகளும் பிரிவுகளும் ஏற்பட்டது பிற்காலத்திலேயே.

சைவ சமயத்தில் திருமாலை அம்பாள் வடிவமாகப் போற்றுவது மரபாகும். அவரின் மோகினி வடிவம் குறித்து ” அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே ” என்பது அப்பர் வாக்கு. அதன்படி திருமாளாகிய அம்மை ஒரு பாதி இறைவனின் உடலில் இருக்கிறார். இதன் படி இவர் பாதி ஹரியாகவும் பாதி ஹரனாகவும் கொண்டு சங்கர நாராயணராகவும், பாதி அம்பாளாகவும் பாதி உமையவளாகவும் ( திருமாளாகிய அம்பாள் + உமையவளாகிய பார்வதி ) இருந்து இறைவன் ஈசனின் முழு உடலிலும் ( இரு பாகத்திலும் ) அவளே வியாபித்திருக்கிறாள் என்றும் சொல்லலாம். இறைவனிடத்தில் பேதமும் வேண்டாம் பயமும் வேண்டாம். தாயிடம் எத்தகைய அன்பையும் பரிவையும் நாம் எதிர்பார்க்கிறோமோ அதே அன்பையும் பரிவையும் இறைவனிடமும் நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

ஈசனைப் பாடிய ஆழ்வார்களும் உண்டு இவ்வுலகில், விஷ்னுவைப் பாடிய சிவ சித்தர்களும் உண்டு. இதற்கு உதாரணமாக அண்மைக்காலத்தில் நம்மிடையே வாழ்த அறிஞர், ஆன்மீகக் கனி திரு. த. வே. அனந்தராமசேஷன் அவர்களைக் கூறலாம். வடமொழி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்றிலும் வல்லவர். ” தி ஹிண்டு ” நாளிதழில் உதவி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றியவர். சென்னை ” லயோலா ” கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் நாராயண வழிபாட்டில் கழித்தவர். சிவ சஹஸ்ரநாமத்திற்கு அவர் விளக்கவுரை எழுத விரும்பினார். நோய்வாய்ப்பட்டு மருத்துவனையில் அவர் நுழையும் தருவாயில் 760 சிவ நாமங்களுக்கு விளக்கவுரை எழுதிவைத்துச் சென்றிருந்தார். ஒரு பெரும் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் திரும்பி வந்து, மிகத்தளர்ந்த நிலையிலும் தனது சக்தி அனைத்தையும் திரட்டி மீதி 240 நாமங்களுக்கும் விளக்கவுரை எழுதினார். விஷ்ணு பக்தராகவே தம் வாழ்நாளைக் கழித்த அவர் சிவ சஹஸ்ரநாமத்திற்கு விளக்கம் எழுதிவிட்டுப் பிரிந்தது எத்துனை சிறப்பு !

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

இறைவனைத் தாயாக மட்டும் பார்கவேண்டும், அது சிவனா அல்லது விஷ்ணுவா என்று பார்ப்பது நமது பகுத்தறிவின் விபரீதப் போக்கு மட்டுமின்ற பக்தியின் நெறிதவறலும் கூட. அதற்கு எடுத்துக்காட்டாக ஈசன் தாமே ஹரிஹரனாகவும், மாதுடைய பாகனாகவும் தோன்றி எவ்வுலகிலும் என்றென்றும் தெய்வங்களில் வேற்றுமை காண்பது தவறு, ” ஹரியும் ஹரனும் ஒன்றே ! சிவமும் சக்தியும் ஒன்றே ! ” எனும் தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறார்.

” தானும் மாலும்ஒன் றாகிய வடிவினைத் தயங்க – மான்
உலாங்கரத் திறையவன் காட்டினன் வணங்கிக் – கான்
உலாங்குழல் உமையவள் கண்டுகண் களித்தாள் ”

தகவல் தொகுப்பு: ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

  • சைவம், ஆதிசங்கரர் அருளிய ஷண்மத ஸ்தாபனம், சாஸ்தா பதிப்பகம், சென்னை – 18
  • ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம பாஷ்யம், திரிசக்தி பதிப்பகம், சென்னை – 20.

Related articles

Recent articles

spot_img