
நம் மகரிஷிகள் ஞானத்தை பிரதானமாக வேதத்தின் வழியே அளித்துள்ளார்கள். வேதத்தில் உள்ள ஞான வாக்கியங்களை மந்திரங்கள் என்கிறோம். அந்த மந்திரங்களை அளித்தவர்களை ருஷிகள் என்கிறோம். ருஷி என்றால் “மந்த்ர த்ருஷ்டா” என்று பெயர். “மந்திரங்களை தரிசித்தவர்கள்” என்று பொருள்.
அவர்கள் அளித்துள்ள வேத விஞ்ஞானம் பற்றி சிந்தித்து பார்த்தால் வேதமானது எல்லையற்றது என்பதை அறியமுடிகிறது.
“வேதோகில தர்ம மூலம்” என்று ஸ்மிருதிகளில் கூறப்பட்டுள்ளது. அதாவது சர்வ தர்மங்களுக்கும் மூலமானது வேதம்.
தர்மம் பற்றி எடுத்துக் கூறும் தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், காவியம் இவை அனைத்தும் வேதத்தை சிரத்தின் மேல் தாங்கி கௌரவிக்கின்றன. உண்மையில் பலப் பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியங்களானாலும் அவையனைத்தும் வேதத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.
தர்ம சாஸ்திரத்தை எழுதிய பராசரர் முதலில் “வேதோகில தர்ம மூலம்” என்றார். கௌதம மகரிஷியும் அதையே கூறினார். அதேபோல் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் வேதத்தின் சிறப்பைப் போற்றுகின்றன.
பீஷ்ம பிதாமகர் தர்மபுத்திரருக்கு ஞான போதனை செய்கையில், “வேதம் சொன்னதையே நானும் சொல்கிறேன்!” என்று கூறுகிறார். வேதம் சொன்னதைச் சொன்னால் மட்டுமே அதற்கு கௌரவம் இருக்கும்.
கிருஷ்ண பரமாத்மா, “வேதைஸ்ச சர்வை ரஹமேவ வேத்யோ” என்கிறார். “வேதங்களால் காட்டப்படும் பரத்துவம் எதுவோ அதுவே நான்!” என்கிறார். அதுமட்டுமல்ல. “வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம் !!” என்கிறார்.
“வேதத்தின் தாத்பர்யமான வேதாந்த ஞானத்தை அளித்தவன் நான். வேதங்களைப் பற்றி அறிந்தவனும் நான். வேதங்களால் தெரிவிக்கப்படுபவனும், வேதத்தைத் தெரிந்து கொண்டவனும் நானே!” என்கிறார்.
இவ்வாறு கூறுவதன் உத்தேசம் என்னவென்றால், இறைவனைத் தவிர வேதங்களை வேறு யாராலும் முழுமையாக அறிந்துகொள்ள இயலாது. அதாவது அனந்த்தமான வேதம் பகவானைத் தவிர பிறருக்குத் தெரியாது. ஏனென்றால் வேதம் இறைவனின் சொரூபம். இறைவனைப் பற்றி இறைவனுக்குத் தான் தெரியுமே தவிர சாமானியர்களுக்கு தெரியாது என்ற உத்தேசத்தோடு கூறியுள்ளார்.
அதேபோல் பாகவதம் கூட “நிகம கல்பதரோர் கலிதம் பலம்” என்று கூறுகிறது. “வேதம் என்ற கற்பக மரத்தில் பழுத்த பழமே பாகவதம்” என்று கூறுகிறது. இதன் மூலம் வேதத்தில் கூறியதையே பாகவதமும் கூறுகிறது என்பது தெளிவாகிறது.
புராணங்களனைத்தும் கூட வேதத்தை தலைமேல் தாங்கி அடிக்கடி “இது ஸ்ருதி வாக்கியம்” என்று இயம்புகின்றன. இவ்விதம் பாரத தேசத்தில் பிறந்த இலக்கியங்கள் அனைத்தும் வேதத்தை கௌரவிக்கின்றன.

கலைகளும் வேதத்திற்கு கௌரவம் அளிக்கின்றன. சங்கீதம் காந்தர்வ வேதம் என்று கூறப்பட்டு சாம வேதத்திற்கு உபவேதமாக கூறப்படுகிறது. அதேபோல் தனுர் வேதம் யஜுர் வேதத்திற்கு உபவேதமாக கூறப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் கூட வேதத்தின் உபவேதமாகவே கூறப்படுகிறது.
இவ்விதம் கவனித்துப் பார்த்தால் பாரத தேசத்தில் தோன்றிய ஒவ்வொரு சாஸ்திரமும் வேதம் என்ற பெயரோடு விளங்குகின்றன என்பதைக் காணமுடிகிறது. அதாவது அவை வேதத்தை கௌரவிகின்றன.
ஒவ்வொரு சாஸ்திரத்திற்கும் வேதம் என்று பெயர் வைத்தார்களா? அல்லது வேதத்தில் இருப்பதை அனைத்து சாஸ்திரங்களும் எடுத்தியம்புகின்றனவா? என்ற சந்தேகம் எழுகிறது. இதனை ஆழமாக ஆராய்ந்து அறிந்த கருத்து என்னவென்றால் அனைத்து சாஸ்திரங்களும் வேதத்திலிருந்து பிறந்தவையே! அதனால் வேதம் என்ற சொல் அனைத்திலும் இணைந்துள்ளது.
உலகனைத்திற்கும் நன்மை செய்யக்கூடிய வைத்திய சாஸ்திரமான ஆயுர்வேதத்தின் விஷயங்கள் கூட வேத மந்திரத்தில் காணப்படுகின்றன. அவற்றையே சரகர், சுசிருதர் போன்றவர்கள் விரிவாக எடுத்து எழுதி உள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.
அதேபோல் காந்தர்வ வேதத்திற்கு மூலம் சாமகானம் என்பதை அறிகிறோம். சாமகானத்திலிருந்து சங்கீத வித்யை தோன்றியது. பாரதீய சங்கீதம்… அது ஹிந்துஸ்தானியானாலும் சரி, கர்நாடகமானாலும் சரி… அதற்கு ஆதாரமான “சரிகமபதநி என்ற சப்தஸ்வரங்கள்” வேதத்திலிருந்தே உற்பத்தியாயின.
அதனால்தான் தியாகராஜர், “சரிகமபதநி வர சப்தஸ்வர வித்யா லோலம் விமல ஹ்ருதய த்யாகராஜ பாலம்…” என்று கூறி, “மோதகரா நிகமோத்தமா சாமவேத சாரம் வாரம் வாரம்…” என்று கீர்த்தனை செய்கிறார்.
“சாமகானம், சங்கீதம் இவையனைத்தும் சாம வேதத்திலிருந்து பிறந்தவை” என்று கூறுகிறார்.
அது மட்டுமின்றி, கலைகளுக்கும் யுத்த வித்யைகளுக்கும் மூலம் வேதம் என்று தெரிகிறது. நாட்டிய சாஸ்திர கர்த்தாவான பரதர் கூட நாட்டிய சாஸ்திரத்தை சதுர் வேதங்களிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். அபிநயம் ஒரு வேதத்திலிருந்தும் அதற்கான சாகித்தியம் ஒரு வேதத்திலிருந்தும் எடுத்து…. இவ்வாறு வேதத்தில் உள்ள பகுதிகளே நாட்டிய சாஸ்திரத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது என்று கூறுகிறார் பரதர். அதற்கு ஆதாரம் என்ன என்று ஆராய்ந்தால் வேதத்தின் எந்த பாகம் நாட்டியத்தில் எந்த வடிவத்தில் வந்துள்ளது என்று கூறிவிட முடியும். அது போல் பரிசோதனை செய்த நாட்டிய சாஸ்திர நிபுணர்கள் பலர் உள்ளார்கள்.
இதன் மூலம் வேதம் சம்பூர்ணமான விஞ்ஞான சாஸ்திரம் என்பது தெளிவாகிறது. அதனை ஆதாரமாகக் கொண்டே பாரத தேசத்தில் பௌதீக வித்யைகளும், ஆன்மீக வித்யைகளும், தார்மீக வித்யைகளும், கலைகளும் தோன்றியுள்ளன.
பௌதீக வித்யைகளில் பௌதீக வாழ்க்கை சுகமாக நடைபெற உதவும் வித்யைகள் இருக்கின்றன. அதே போல் கலைகள் உள்ளன. ஆன்மிக போதனை செய்யும் வித்யைகளும் உள்ளன. இனி, உபாசனை தொடர்பான வித்யைகள், இறுதியாக தத்துவ சாஸ்திரத்தை விளக்கம் வித்யைகள்…. இவையனைத்திற்கும் ஆதார நூல் வேதமே!
அதனால் வேதம் ஒரு முழுமையான விஞ்ஞானம். நமக்கு கிடைத்துள்ள வேதமே எத்தனையோ அதிகம் என்று தோன்றுகிறது. ஆனால் நம் சாஸ்திரங்களில் வேதத்தின் எண்ணிக்கையை எத்தனையாக வர்ணித்துள்ளார்களோ அத்தனையும் தற்போது கிடைப்பதில்லை. அது காலப்போக்கில் சிறிது சிறிதாக பயன்படுத்தப்படாமல் மறைந்து போனது. மறைந்து போயுள்ளதே தவிர அழிந்து போயிற்று என்று கூற இயலாது. எப்போதுமே வித்யைகள் அழியாது. பிற்காலங்களில் அவை மீண்டும் வெளிப்படக்கூடும்.
தற்போது நமக்கு கிடைத்திருக்கும் வேதக் குவியலை கவனித்துப் பார்த்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது. வேதத்தின் கால நிர்ணயத்தில் கூட அநேக பண்டிதர்கள் அனேக விதமான காலங்களைக் கூறுகிறார்கள். ஒருவர் கூறுவதற்கும் மற்றொருவர் கூறுவதற்கும் வேறுபாடு காணப்படுகிறது.
ஆனால் சம்பிரதாயத்தின்படி யோசித்துப் பார்த்தால் வேதத்திற்கு கால நிர்ணயம் செய்ய இயலாது. அது எல்லையற்ற காலத்தோடு தொடர்பான விஞ்ஞானத்தை அளிக்கிறது. அது அனாதியானது. சிருஷ்டி எத்தனை பழமையானதோ வேதமும் அத்தனை பழமையானதே! ஆனால் சிருஷ்டி முடிவு பெறும் போது வேதமும் பரமாத்மாவோடு லீனமாகுமே தவிர அழியாது. அதனால் பரமாத்மா எத்தனை பழமையானவரோ வேதமும் அத்தனை பழமையானது. பரமாத்மா எத்தனை பழமையானவர் என்று யாராலும் கூற இயலாது. அவர் அனாதியானவர்.
பகவானின் சப்த வடிவமே வேதம்! வேதம் பகவத் ஸ்வரூபமாக இருப்பதால்தான் அதற்கு இத்தனை பவித்திரத்தன்மை உள்ளது.
தேசத்தில் இன்றைக்கும் ‘வேதவாக்கு’ என்ற சொல் பழக்கத்தில் உள்ளதைக் காண்கிறோம். “அவருடைய பேச்சு வேதவாக்கு!” என்று கூறுவதுண்டு. வேதவாக்கு என்றால் “தட்டாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டியதே!” என்ற பொருளில் உபயோகிக்கிறோம்.
அப்படிப்பட்ட வேத விஞ்ஞானத்திற்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



