“என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த
பெண்மணியிடம்) (யாருக்கு
எது கிடைக்கணும்னு இருக்கோ, அதை
என்னதான் முயற்சி பண்ணினாலும் தடுக்க முடியாது.
கிடைக்காதுன்னு இருக்கிறதை தக்கவைச்சுக்கவும்
முடியாது. இதே மாதிரி ஒரு சம்பவம்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-21-04-2016தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)
ஒரு சமயம் ரொம்ப தொலைவுல இருக்கிற ஊர்ல
இருந்து வசதி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவா சிலர்,
மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தா.
ஆசிர்வாதம் பண்ணி கற்கண்டும்,குங்குமமும் தந்த
மகாபெரியவா அவாகிட்டே ஒரு விஷயத்தைச்
சொன்னார்.
“நீங்க இங்கேர்ந்து புறப்படறச்சே வழியில் யாராவது
நோயாளியைப் பார்த்தேன்னா,அவாளுக்கு உங்களால்
முடிஞ்ச உபகாரத்தைப் பண்ணிட்டுப் போங்கே!” அப்படின்னார்.
“சரின்னு தலையை ஆட்டிட்டு வழக்கம்போல
பிரசாதத்தை வாங்கிண்டு புறப்பட்டா எல்லாரும்.
மடத்தோட வாசலைத் தாண்டறதுக்குள்ளே,ஆசார்யா சொன்னது மறந்துபோயிடுத்து
அவாளுக்கு. அதனால யாருக்கும் எந்த உதவியும் பண்ணாம ரயிலேறி நேரா ஊருக்குப்
போய்ச்சேர்ந்துட்டா.
அங்கே போனதும், பெரியவா தந்த பிரசாத குங்குமத்தை
எடுத்து சுவாமி மாடத்துல வைக்கலாம்னு பையைத்
தேடினப்பதான் தெரிஞ்சுது, பையையே எங்கேயோ
தொலைச்சுட்டோம்கறது.அதுல பிரசாதம் மட்டுமில்லாம
கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ரூபாய் பணமும் வைச்சிருக்கா
அவா. அது அந்தக் காலத்துல ரொம்ப பெரிய தொகை.
அப்போதான் யோசிச்சிருக்கா. அடடா,பரமாசார்யா சொன்னபடி உதவி பண்ணாம வந்துட்டோமே,
அதான் இப்படியெல்லாம் நடந்திருக்குன்னு. சரி அவசரத்துல
மறந்துட்டோம். தெரியாம பண்ணிட்டோம்னு பரமாசார்யாகிட்டேயே மனசார வேண்டிப்போம்.
அவரே பையைத் திரும்ப கிடைக்க வைப்பார், அப்படின்னு தீர்மானம் செஞ்சா. அதே
மாதிரி வேண்டிண்டா.
ரெண்டு மூணு நாள் ஆச்சு. தபால்ல ஒரு கவர் வந்தது,
அவா ஆத்து முகவரிக்கு. என்னவா இருக்கும்னு
பிரிச்சுப் பார்த்தா,உள்ளே அவா தொலைச்ச பை இருந்தது
அவசர அவசரமா பணம் இருக்கான்னு பார்க்க, பையைக்
குடைஞ்சா. ஊஹூம், உள்ளே மகாபெரியவா தந்த பிரசாதமும் கூடவே ஒரு கடுதாசியும்
மட்டும் இருந்தது.
“உங்கள் பையை வீதியில் பார்த்தேன்.அதில் உங்கள் முகவரி அட்டையும்
இருந்தது.உரியவரிடம் சேர்த்து விடலாம் என்றுதான் எடுத்தேன்.ஆனால் திடீரென்று
என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக
உங்கள் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது
மன்னிக்கவும்.பையில் இருந்த பிரசாதத்தை இத்துடன்
அனுப்பி இருக்கிறேன்!” கடிதத்தைப் படித்தார்கள்.
ஆசார்யா குடுத்த பிரசாதம் திரும்பக் கிடைச்சுது
சந்தோஷமா இருந்தாலும், பணம் திரும்பக்
கிடைக்கலையேங்கற வருத்தம் அவாளுக்குள்ளே
இருந்தது.கொஞ்சநாள் கழிச்சு மறுபடியும் ஆசார்யாளை
தரிசனம் பண்ண வந்தா அந்தக் குடும்பத்தினர். அவாளோட
முறை வந்ததும், பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.
“என்ன கேட்டது கிடைச்சுதா? அப்படின்னு அந்தக் குடும்பத்
தலைவியைப் பார்த்து கேட்டார் மகாபெரியவா.
“இல்லை பெரியவா..பையும் பிரசாதமும் மட்டும்தான் கிடைச்சுது. பணம் போனது
போனதுதான்!” அவசர அவசரமா சொன்னார் அவாள்ல ஒருத்தர்.
“இல்லையே.பணத்தைப்பத்தி கேட்கலையே..பிரசாதப் பை
கிடைச்சா போதும். பணம் உதவி பண்ணினதா இருந்துட்டுப்
போகட்டும்னுதானே வேண்டிண்டா?” பெரியவா சொல்லி முடிக்கறதுக்கு முன்னாலயே,
“ஆமாம்.நான் அப்படித்தான் வேண்டிண்டேன்.பெரியவாளோட ஆணைப்படி யாருக்கோ
உதவினதா இருக்கட்டும்னு நினைச்சுண்டேன்”
தழுதழுக்கச் சொன்னா, அந்தப் பெண்மணி.
ஏழை நோயாளியோட சிகிச்சைக்கு இவாளோட பணம்
போய்ச்சேரணும்கறதை முன்கூட்டியே எப்படித்
தீர்மானிச்சார்? பிரசாதம் திரும்பக் கிடைக்கணும்னு
வேண்டிண்டவாளுக்கு அதை எப்படி திருப்பிக் கிடைக்க
வைச்சார்? இதெல்லாம் பரமாசார்யாளுக்கு மட்டுமே
தெரிஞ்ச பரம ரகசியம்.




