spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுசகல நோய் நிவாரணி: சரஸ்வதி கீரை!

சகல நோய் நிவாரணி: சரஸ்வதி கீரை!

- Advertisement -

வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரை கீரை’ எனப் பெயர் பெற்றது. வல்லாரை கீரையானது சரசுவதிக் கீரை எனவும் அழைக்கபடுகிறது. மனித மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது.

இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. இந்த வல்லாரை கீரையானது நீர்நிலைகளான குளம், குட்டை, ஏரி, ஆறு, கால்வாய் பகுதிகளில் வளரக்கூடியது. இது பூண்டு வகையைச் சார்ந்த கீரையாகும்.

வேறு பெயர்கள் -: சஸ்வதி, சண்டகி, பிண்டீரி, யோகனவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்திக் குறத்தி, மற்றும் அசுரசாந்தினி

அரை வட்ட வடிவில் வெட்டு பற்களுடன், நீண்ட காம்புகளுடன் இதய வடிவில் இலைகளை கொண்டிருக்கும். வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் இந்த கீரை கொண்டுள்ளது.

வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும். இக்கீரை, இருமல், தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும். காச நோய்க்கு சிறந்த மருந்து.

வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டால், மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இக்கீரையுடன், சம அளவு கீழா நெல்லியை அரைத்து, அதன் விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். பச்சையாக சாப்பிட்டால், மூளை நரம்புகள் பலம் பெறும்.

வல்லாரை கீரை, துளசி, மிளகு மற்றும் சீரகம் சம அளவு எடுத்து, மைய அரைத்து, மிளகு அளவிற்கு உருட்டி, அதை நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இருமல், சளி, நீர்கடுப்பு, தோலில் அரிப்பு போன்றவற்றிற்கு இதை, மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

இக்கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி, தைலமாக தலையில் தேய்த்து வந்தால், உடல் உஷ்ணம் மற்றும் உடல் எரிச்சல் குறையும்.

மேலும், வல்லாரைக் கீரையை, சம அளவு வெந்தயத்துடன் சேர்த்து, சிறிதளவு ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில், 10 கிராம் சாப்பிட்டால், உடல் சூடு, கண் எரிச்சல் மற்றும் தலைவலி மட்டுப்படும்.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும. இந்த சூரணத்தை ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் தலைமுடியில் ஏற்படும் நரைகள் மறையும்.

குளிர்காலங்களில் பலருக்கும் நெஞ்சில் சளி சேர்ந்து இருமல், சுவாச கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. இப்பிரச்சனையை போக்க வல்லாரை கீரையோடு தூதுவிளை இலைகளை சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. அளவில் தினமும் சாப்பிட்டு வர சயரோகம், இருமல் சளி போன்ற சுவாச நோய்கள் முற்றிலும் குணமாகும்.

யானைக்கால் வியாதி

சாக்கடையில் இருந்து உற்பத்தியாகும் ஒரு வகை கொசு கடிப்பதால் யானைகால் நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு ஆங்கில வழி மருத்துவம் செய்து கொள்ளும் அதே நேரத்தில் வல்லாரை கீரையின் இலைச்சாறு தினந்தோறும் 5 மி.லி.காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் யானைக்கால் வியாதி மற்றும் அந்நோய் பாதிப்பால் ஏற்ப்படும் விரைவாதம் நோயும் நீங்கும்.

கட்டிகள், புண்கள்

பலருக்கு உடல் அதிக வெப்பமடைவதால் கட்டிகள் ஏற்பட்டு புண்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகின்றன. மற்ற சிலருக்கு அடிபடுவதாலும் ரத்த காயங்கள் ஏற்பட்டு புண்கள் உண்டாகி மிகுந்த வழியை ஏற்படுத்துகின்றன. வல்லாரை கீரையின் இலைகளை ஆமணக்கெண்ணையில் வதக்கி புண்கள், கட்டிகள் மேலே பற்றிடுவதால் அவை சீக்கிரம் ஆறும்.

ஜுரம், காய்ச்சல்

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவிழக்கும் போது பல வகையான ஜுரங்கள், காய்ச்சல் போன்றவை நமக்கு ஏற்படுகின்றன. வல்லாரை கீரையோடு உத்தாமணி மற்றும் மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் அனைத்து வகையான காச்சலும் தீரும்.

நீர் சுருக்கு

கோடை காலங்களில் பலருக்கும் ஏற்படும் பிரச்சனை தான் நீர் சுருக்கு அல்லது நீர் எரிச்சல். தண்ணீரை சரியான அளவில் குடிப்பவர்களுக்கு பெரும்பாலும் இப்பிரச்சனை ஏற்படுவதில்லை. இத்தகைய நீர் சுருக்கு ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் வல்லாரை மற்றும் கீழாநெல்லி சமஅளவு எடுத்து, அரைத்து சுண்டக்காயளவு காலை வேளையில் மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

குரல் வளம், மூளை

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். அது போல் சிலருக்கு தொண்டை கட்டு, குரல் வளம் குறைவு போன்றவை இருக்கின்றன.

இவையனைத்தும் தீர வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிடுவதால் மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் ஆகியவற்றை கொடுக்கும்.

மாதவிடாய்

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், மாதவிலக்கு தள்ளிப்போதால் போன்றவை ஏற்பட்டு இடுப்பு, அடிவயிறு வலி ஏற்படுகிறது. இதற்கு வல்லாரை கீரையோடு உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

குஷ்ட ரோகம்

குஷ்ட ரோகம் அல்லது தொழு நோய் எனப்படும் கொடுமையான வியாதியை போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும்.

நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது போன்றவற்றை தவிர்த்து பத்தியம் இருந்து வந்தால் குட்டம் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.

வல்லாரை கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் தன்மை நீங்கும்.
வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும், மங்களான பார்வையை சரியாக்கும்
பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம்.
வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.
வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மனநோய்கள் மறைய…
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சை யாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்த வும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.

வல்லாரை இலைகள் மூன்று, அக்ரோட் பருப்பு ஒன்று, பாதாம் பருப்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் – ஆகியவற்றை அம்மியில் விழுதாய் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, அன்னையின் அருளால் இதயநோய்கள் மாயமாய் மறையும்.

கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்றவை விலகும்.

வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு மேம்படும். நினைவாற்றல் பெருகும். அன்னை அருளால் அற்புதமான மூளை பலம் உண்டாகும்.

வலிப்பு குணமாக…
அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தவும். இதனைத் தூள் செய்து வைத்துக்கொண்டு, காலையும் மாலையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வர, வலிப்பு குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.

காமாலை குணமாக…
அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.

வல்லாரை இலையை முறைப்படிக் பச்சையாய் உண்டால் அறிவு துலங்கும். வல்லாரைச் சாற்றில் உப்பும், சாதிபத்ரியும் சேர்த்துக் கொடுக்க பெருவயிறு, மகோதரம் முதலிய நோய்கள் நீங்கும். வல்லாரையை உணவில் துவையல் போன்று அடிக்கடி சேர்த்துவர உடலுக்கு வன்மையைத் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி எந்த நோயும் நம்மை அணுகாமல் செய்யும்

கபம், இருமல் விலக…
வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.

உடல் வலிமை உண்டாக…
நிழலில் உலர்த்தித் தூள் செய்த வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் – இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனை இரண்டு கிராம் அளவில் காலை – மாலை தேனுடன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் வலிமை, ஆரோக்கியம் உண்டாகும். இளைத்த உடல் பருக்கும்.

பித்த நோய்கள் விலக…
வல்லாரை, நெல்லிக்கனி, முசுமுசுக்கை இலைகளை உலர்த்தி, ஒவ்வொன்றையும் 100 கிராம் அளவில் எடுத்துத் தூள்செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வர, பித்தநோய்கள், பித்தக் கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை விலகும்.

வல்லாரைக் கற்பம்…

வல்லாரை கற்ப மூலிகைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. உடலை அழியா நிலைக்கு எடுத்துச் செல்லும் சித்தர்கள் அருளிய வல்லாரையை கற்ப மருந்தாய்க் கொள்ளும் முறையை அறிவோம்.

வல்லாரைக் கற்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, பேதி மற்றும் வாந்தி செய்விக்கும் மருந்துகளால் உடல் சுத்தி செய்துகொள்ள வேண்டும். வேது பிடித்தல் போன்ற ஆவிக் குளியல் முறைகளால் உடலில் வியர்வையை உண்டாக்கி கழிவுகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஐந்து வல்லாரை இலைகளை எடுத்து அரைத்துப் பிழிந்து சாறெடுத்து உட்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, அதன்பின் உப்பில்லாக் கஞ்சியைத் தேவையான அளவில் பருக வேண்டும்.

நாள்தோறும் ஒவ்வொரு இலை அதிகம் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு, உப்பில்லாக் கஞ்சியைப் பருகி வர, மூளை பலப்படும். அறிவுக் கூர்மை, அற்புத நினைவாற்றல், சுறுசுறுப்பு போன்றவை உண்டாகும்.

சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களி லேயே நூல்களைப் படைக்கும் சக்தி உண்டாகும். நுண்ணிய செய்திகளை ஏற்கும் தன்மை உண்டாகும். மூன்று வாரங்களில் நூறு பாடங்களை வாய்ப்பாடமாய் சொல்லும் அளவுக்கு மனசக்தி உண்டாகும்.

அதிக இரத்தக் கழிச்சலால் உண்டாகும் ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் எரிச்சல், யானைக்கால், நெறிகட்டுதல், மேகப்புண் ஆகிய நோய்களுக்கும் நல்லது.
தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல் இறுகும். உடலில் காந்த சக்தி, அழகு உண்டாகும். ஆயுள் விருத்தியாகும்.
ல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். குறிப்பாக வல்லாரை சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும் . உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வல்லாரை இலை கசப்பு சுவை கொண்டிருப்பதனால் இதனை பச்சையாக வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பச்சையாக தொடர்ந்து சாப்பிட முடியாதவர்கள் இந்த வல்லாரை இலையை பாடம் செய்து பொடியாக வைத்துக் கொண்டு பொடியினைக்கூட சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம்.

கூந்தல் மற்றும் தலைச் சருமம் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு வல்லாரை எண்ணெயைப் பயன்படுத்தி வரலாம். காரணம் வல்லாரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மயிர்க்கால்களை உயிரூட்டி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

மேலும் உடம்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி சரும செல்களை புதுப்பிக்கிறது. எனவே தலையில் அரிப்பு, பொடுகு, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் இருப்பவர்கள் வல்லாரை எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சீக்கிரமாகவே கூந்தல் பிரச்சனையை ஆற்றும்.

இந்த கீரையை நிறைய உலர வைத்து பொடியாக்கி பயன்படுத்தி வரலாம். இது மனநோய், பாலியல் செயல்திறன் அதிகரிக்க, முதுகு வலி, மூட்டுவலிகளுக்கு கூட இதை பயன்படுத்தி வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe