சூரிய பகவான் சாட்சியாக பாரம்பரிய நடனம். வந்தே சூரியம். சாஸ்திரிய நடனக் கலைஞர்களின் கனவு மேடை கோனார்க்.
சூரியபகவானுக்கு நாட்டிய வழிபாடு செய்வதற்கு உலகெங்கிலுமிருந்து பல கலைஞர்கள் உற்சாகத்தோடு பங்கு பெறும் நிகழ்ச்சி இது.
ஒவ்வொரு ஆண்டும் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள கோனார்க் ஆலயம் அருகில் வண்ணமயமாக நடத்தப்படும் ‘கோனார்க் ஃபெஸ்டிவல் ஆஃப் கிளாசிகல் டான்சஸ்’ ஞாயிறு டிசம்பர் 1ம் தேதி கண்ணுக்கு விருந்தாக தொடங்கியது.
கோனார்க் பாரம்பரிய திருவிழா2019வை துவக்கி வைத்தார் ஒடிஷா ஆளுநர்.
5 நாள் கோனார்க் பாரம்பரிய நடன ஆண்டுவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் ஒடிஷா ஆளுநர் ப்ரொபசர் கனேஷி லால்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோதி பிரகாஷ் பாணிக்ரஹி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் துஷார் கண்டி பெஹெரா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கிளாசிகல் ஒடிசி,கதக் நடனங்கள் திறப்பு விழாவை தொடர்ந்து நடைபெற்றன.
வந்தே சூர்யம், வந்தேமாதரம் பாடல்களோடு காளிங்க நர்த்தனம், தாள்ரூபா, தாள் தீனதயால் ஆகிய நடனங்கள் முதல்நாள் நிகழ்ச்சியில் இடம் பெற்றன.
கோனார்க் சூரியனார் கோயில் சர்வதேச மணல் சிற்ப திருவிழாவும் ஐந்து நாள்நாட்டியத் திருவிழாவும் கோனார்க்கின் சந்திரபாகா கடற்கரையில் ஞாயிறன்று துவங்கின .
இந்த ஆண்டு திருவிழாவின் தீம் சூழலியல் சுற்றுலா, கலாச்சாரம், கண்காட்சி, மகளிர் சுய வேலைப்பாடு, ஹெரிடேஜ், மற்றும் பிளாஸ்டிக் நிராகரிப்பு.
123 கலைஞர்கள் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ரஷ்யா, கனடா, டோகோ, மற்றும் ஸ்ரீலங்காவில் இருந்து மணல் சித்திரத் திருவிழாவில் பங்கேற்கிறார்கள்.
பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றுகூடும் இந்த திருவிழாவில் பங்கு பெறுவதை கலைஞர்கள் பெருமதிப்பும் கௌரவமாகவும் கருதி மகிழ்ந்தனர்.
இத்திருவிழா சர்வதேச பண்பாட்டு ஒருமைப்பாடு, சகோதரத்துவம், ஆன்மீகம் மற்றும் அழகியல் உணர்வோடு நடப்பதை பார்வையாளர்களும் கலைஞர்களும் ஒருசேர வரவேற்கின்றனர்.