பிரபல டோலிவுட் நடிகர் சாய் தரம் தேஜ் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது தம்பி பவன் கல்யாணின் சகோதரியான விஜய துர்காவின் மகன் தான் சாய் தரம் தேஜ்.
மருமகன் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் துடித்துப் போன பவன் கல்யாண் மருத்துவமனைக்கு விரைந்தார். ஒட்டுமொத்த கோனிடேலா குடும்பமும் மருத்துவமனையில் சாய் தரம் தேஜ் குணமாக வேண்டும் என காத்திருக்கின்றனர்.
நடிகர் சிரஞ்சீவியின் கோனிடேலா குடும்பத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகின்றனர். சிரஞ்சீவியின் சகோதரி மகனான சாய் தரம் தேஜ் கடந்த 2014ல் ‘பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சுப்ரமணியம் ஃபார் சேல், வின்னர், ஜவான், தேஜ் ஐ லவ் யூ, பிரதி ரோஜு பண்டகே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத்தின் கேபிள் பிரிட்ஜில் வேகமாக பைக் ஓட்டி வந்த போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நடிகர் சாய் தரம் தேஜை ஆம்புலன்ஸில் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருமகன் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்ததும் நடிகர் பவன் கல்யாண் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், கோனிடேலாவின் குடும்பத்தினர் பலரும் மருத்துவமனையில் சாய் தரம் தேஜ் எப்போது கண் விழிப்பார் என்பதை காண பிரார்த்தனையுடன் காத்திருக்கின்றனர்.
தெலுங்கு திரையுலகின் பெரிய குடும்பமான கோனிடேலா குடும்பத்து நடிகருக்கு இப்படியொரு விபத்து ஏற்பட்ட நிலையில், ஒட்டுமொத்த தெலுங்கு திரை பிரபலங்கள் பிரார்த்தனை ட்வீட்களை சமூக வலைதளங்களில் போட்டு வருகின்றனர். நடிகர் விஜய தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் “Saying a prayer.. @IamSaiDharamTej See you on the other side happy, healthy and smiling” என பிரார்த்தனை செய்துள்ளார்.
நடிகர் சாய் தரம் தேஜின் மாமா அல்லு அரவிந்த் மீடியாவிடம் குடும்பத்தினர் சார்பாக பேசினார். அப்போது பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை. குறிப்பாக தலை மற்றும் முதுகு தண்டில் எந்தவொரு அடியும் ஏற்படவில்லை. சீக்கிரமே ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என பேட்டி அளித்துள்ளார்.
மித்ரம்மா சாய் தரம் தேஜ் நீங்க ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சீக்கிரமே பழைய படி பூரண நலம் பெற்று திரும்பி வருவீங்க என நடிகர் மனோஜ் மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் கூறியுள்ளார்.
நடிகர் சாய் தரம் தேஜின் விபத்து குறித்து அறிந்த அவரது ரசிகர்கள் ரொம்பவே சோகத்தில் உள்ளனர். சீக்கிரமே சாய் தரம் தேஜ் குணமாகி வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். பல ரசிகர்கள் அப்பல்லோ மருத்துவமனையையும் சுற்றி வருகின்றனர்.