புது தில்லி: காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் தள்ளிவைக்கப் பட்டது. தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வேறு ஒரு வழக்கின் விசாரணையில் உள்ளார் எனபதால் இந்த ஏற்பாடு செய்யப் பட்டது.
காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவிரி வரைவு திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகுமா என தமிழக விவசாயிகள் எதிர் பார்துள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாதென கர்நாடகம் மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை கடந்த 3ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மே மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாள்கள் அவகாசம் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, மே 8-ஆம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, கர்நாடகாவில் குறைவான தண்ணீரே இருப்பதாகவும், ஏற்கனவே தமிழகத்துக்கு ஏப்ரல் மாதம் வரை 116 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறியுள்ள அம்மாநில அரசு, தண்ணீரை திறக்க மறுத்தது. இதுகுறித்து மனுவை அம்மாநில அரசு நேற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், இதுவரை 1.4 டிஎம்சி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், மே மாதம் வரை 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.