அந்த ‘ஒரே ஒரு வார்த்தை’… ஓபிஎஸ்., மகனை தூக்கி வைத்துக் கொண்டாடும் பாஜக., எம்பி.,க்கள்!

Published:

ravindranath - 2026ஒரே ஒரு முழக்கத்தால் ஒட்டு மொத்த அவையையும் பலத்த கைத்தட்டலுக்கு உட்படுத்தி, தன் பக்கம் ஈர்த்துவிட்டார் ஓபிஎஸ்.,சின் மகன் ரவீந்த்ரநாத்.

17ஆவது மக்களவைக்கான எம்.பி.க்களின் பதவிப் பிரமாணம், மக்களவையில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பி.,க்களும் அப்போது பதவியேற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியில் உறுதிமொழி ஏற்று, உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதில், திமுக கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க என்று அவரவருக்குத் தக்க முழக்கங்களை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினர்.

இறுதியில் தமிழகத்தில் இருந்து தேர்வான அதிமுக.,வின் ஒரே எம்பி.,யான தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், மற்ற தமிழக எம்பி.,க்களைப் போல் தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவை ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது. ஆனால் அதிமுக., என்பதால், எம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று முழக்கமிட்டார். அப்போதும் அமைதியாக இருந்தது அவை. .ஆனால், இறுதியில், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என மிகவும் உறுதியுடன் சத்தமிட்டு முழங்கிய போது, அவை ஆர்ப்பரித்தது.

பாஜக எம்பி.,க்கள் அனைவரும் அவருக்கு பலத்த கரவொலி எழுப்பி, அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். ரவீந்திரநாத் இப்போது அனைவராலும் கவனிக்கப் படும் நபர் ஆகிவிட்டார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஆனால், அதிமுக., என்ற கட்சியே, அகில இந்திய அதிமுக., என்று தேசியத்தை முன்னிறுத்தி பெயர் சூடிக் கொண்ட கட்சிதான்! மேலும், ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை முதன் முதலில் கொடுத்தவரும் ஒரு தமிழர்தான். அவர் பெயரே ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்பதுதான்!

தமிழகத்தின் தென்கோடிப் பகுதியான நாஞ்சில் மண்ணில் தோன்றிய செண்பகராமனின் ஜெய் ஹிந்த் முழக்கத்தைத்தான் பின்னாளில் வங்கத்துச் சிங்கம் சுபாஷ் பெற்றுக் கொண்டு, தம் இந்திய தேசிய ராணுவத்தின் முழக்கம் ஆக்கினார். அவருடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தீவிரப் பணி ஆற்றிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜெய் ஹிந்த் முழக்கத்தை பரவலாக்கினார்.

தேவரின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தைக்காவதுசுபாஷ் என்றும் போஸ் என்றும் பெயர் சூட்டுவதும், ஜெய் ஹிந்த் என்று சொல்லிக் கொடுப்பதும் இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. எனவே ரவீந்திரநாத் முழக்கத்தில் எந்த வித ஆச்சரியமோ, கூடுதல் கவனிப்போ உள்நோக்கமோ இருக்க வாய்ப்பில்லை!

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

ஆனால் அவரது இயல்பு கோஷம் இன்று தமிழகத்தின் தனித்துவத்தை தேசிய அரங்கில் உயர்த்தியிருக்கிறது! இந்த நாட்டுக்கே தேசிய எண்ணத்தையும் முழக்கங்களையும் கொடுத்த புனித மண் இந்தத் தமிழ் மண் என்பதை நிறுவியிருக்கிறார் ரவீந்திரநாத்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img