திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பல பெண் வி.ஏ.ஓ.,க்களை, ‘வீடியோ கால்’ பேசுமாறு சிலர் மிரட்டி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பணியாற்றும் பெண் வி.ஏ.ஓ., ஒருவருக்கு, கடந்த வாரம், ‘வாட்ஸ் ஆப்’பில் சாதாரண அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், ‘நான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி. உங்களைப் பற்றி அதிக புகார்கள் வந்துள்ளன. நீங்கள் லஞ்சம் வாங்கும் ‘போட்டோ’க்களும் உள்ளன.
உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளோம்’ எனக் கூறி உள்ளார்.அந்த அழைப்பை, ‘கட்’ செய்து, அந்த எண்ணை பார்த்தபோது, அதில் தமிழக அரசின் கோபுர சின்னம் ‘புரொபைல்’ படமாக இருந்துள்ளது.
மேலும், 86040 63673, 85623 04266 ஆகிய எண்களில் இருந்தும் அழைப்புகள் வந்துள்ளன.அந்த எண்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க முடியாத அளவுக்கு, ‘லாக்’ செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப்பில் மட்டும் பேசும் வசதி உள்ளது என தெரிந்தது.
இதேபோல் முசிறி, மண்ணச்சநல்லுார், லால்குடி பகுதி பெண் வி.ஏ.ஓ.,க்களுக்கும் அழைப்புகள் வந்துள்ளன. சில வி.ஏ.ஓ.,க்களிடம், ‘உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, தனி அறையில் வந்து வீடியோ கால் பேச வேண்டும்’ எனக் கூறி, ஆபாசமாக பேசி உள்ளனர்.
இப்படி இரு மாதங்களாக பெண் வி.ஏ.ஓ.,க்கள் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ‘டார்ச்சரை’ அனுபவித்து வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வி.ஏ.ஓ., ஒருவர் கூறியதாவது: லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக மிரட்டல் தொனியில் பேசுகின்றனர். பெண் வி.ஏ.ஓ.,க்களை குறிவைத்துத் தான் இந்த அழைப்புகள் வருகின்றன. ஆபாசமாக பேசுகின்றனர்.
மேலும், பலவீனமான பெண் வி.ஏ.ஓ.,க்களையே குறி வைத்து பேசுகின்றனர். தவறான எண்ணத்துடன் பேசுவோரை கண்டு பிடிக்க, எங்கள் சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் போலீசாருக்கு தெரிவித்துள்ளோம். தேவைப்பட்டால் புகார் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.