டிஜிட்டல் கட்டணத் துறையில் இந்தியா இன்று மற்றொரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மின்-வவுச்சர் அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண முறையான e-RUPI என்னும் பண பரிவர்த்தனை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், இடைதரகர் இன்றி பயனாளிகளுக்கு முழுமையான பலன்கள் கிடைக்கும்.
இ-ருபி (e-RUPI) என்பது கேஷ்லெஸ் மற்றும் காண்டாக்ட்லெஸ் பரிவர்த்தனை முறை. இது ஒரு QR குறியீடு அல்லது SMS ஸ்ட்ரிங் அடிப்படையிலான இ-வவுச்சர் ஆகும்.
இது பயனாளிகளின் மொபைலுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த பரிவர்த்தனை முறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் (Debit or Credit Cards) , டிஜிட்டல் கட்டணப் செயலி அல்லது இண்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
e-RUPI ஆனது பயனாளிகள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் சேவை பெறுபவர்களை டிஜிட்டல் முறையில் எவ்வித இடைத்தரகர் இல்லாமல் இணைக்கிறது.
மேலும் பரிவர்த்தனை முடிந்த பின்னரே சேவை வழங்குநருக்கு பணம் செலுத்துவதை உறுதி செய்கிறது. ப்ரீபெய்ட் என்பதால், எந்த இடைத்தரகரும் ஈடுபடாமல் சரியான நேரத்தில் சேவை வழங்குநருக்கு பணம் சென்றடைகிறது.
பல சமூக நலத் திட்டங்களில் e-RUPI தளத்தைப் பயன்படுத்தலாம். ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, தாய் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள், உர மானியம், காசநோய் ஒழிப்பு திட்டங்கள், மருந்துகள் மற்றும் நோயறிதல்கள் மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்தல் தொடர்பான சேவைகளை வழங்கவும் செய்யலாம்.
தனியார் துறையினர் கூட இந்த டிஜிட்டல் வவுச்சர்களை தங்கள் ஊழியர் நலன் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் கட்டணத் தீர்வு e-RUPI ஐத் தொடங்குவதன் முக்கிய நோக்கம் ஆன்லைன் கட்டண முறைய எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதும் ஆகும்.
இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ, கனரா வங்கி, உள்ளிட்ட பல வங்கிகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யுபிஐ, பீம் செயலி போல, பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் இ-ருபி பரிவர்த்தனை முறையும், அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது