பக்தர்கள் சரணஹோசம் முழங்க மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சபரிமலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் கடந்த 27ம் தேதி நடைபெற்ற பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடை மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.தந்திரி கண்டரரு ராஜீவரரு நடையை திறந்து ஐயப்பனின் தவகோலத்தை களைந்து தீபமேற்றி வைத்தார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இரவு நடை அடைக்கப்பட்டு நாளை (31ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கும்.
நாளை முதல் கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். 20ம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல மகரவிளக்கு காலம் நிறைவடையும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 18ம் தேதியுடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஜனவரி 11ம் தேதி நடைபெறுகிறது.மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த திருவாபரணம் ஜனவரி 12ம் தேதி பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்படும். 14ம் தேதி மாலை 6.30 மணி அளவில் திருவாபரண ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். இன்று தரிசனத்திற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், நாளை (31ம் தேதி) 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் முன்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.