spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: விருகோதரன் என்ற பீமன்

திருப்புகழ் கதைகள்: விருகோதரன் என்ற பீமன்

- Advertisement -
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 343
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நெச்சுப் பிச்சி – திருவேங்கடம்
விருகோதரன் என்ற பீமன் 1

     பஞ்ச பாண்டவர்களில் பீமன் உடல் வலிமை வாய்ந்தவன். பாண்டுவின் புதல்வன். ஒரு முனிவரின் சாபத்தால் பாண்டு தன் மனைவியரோடு இணைந்து பிள்ளைப் பேறு பெற இயலாதவனாகிறான். அதனால் பாண்டு, தன்னுடைய தமையன் திருதராட்டிரனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு காட்டிற்கு தவ வாழ்க்கை வாழ தனது மனைவியர் குந்தி, மாத்ரி ஆகியோருடன் செல்கிறான். அங்கே அவனுக்கு வாரிசு இல்லாமல் இறக்கிறோமே என்ற வருத்தம் ஏற்படுகிறது.

அப்போது குந்தி துர்வாச முனிவரின் வரத்தால் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை பாண்டுவிடம் தெரிவிக்கிறாள். ஆகா என்னே இறைவனின் கருணை; தனக்கு கிடைத்த சாபத்திற்கு சாப விமோசனமும் இறைவன் தந்திருக்கிறானே என எண்ணி, குந்தியை தனக்கு வாரிசுகளைப் பெற்றுத் தர வேண்டுகிறான். அப்படி குந்திக்கு பிறந்தவர்கள்தான் யுதிஷ்டிரர் (தரும தேவதையின் அம்சமாக), பீமன் (வாயு தேவனின் அம்சமாக), அர்ச்சுனன் (இந்திரனின் அம்சமாக). பின்னர் மாத்ரி தேவிக்கு, குந்தி அந்த மந்திரத்தை உபதேசிக்கிறாள். மாத்ரிக்கு அஸ்வினி தேவர்கள் அம்சமாக நகுலனும் சகாதேவனும் பிறக்கிறார்கள். சில நாட்கள் கழித்து பாண்டு இறந்து போகிறான். அவனுடன் மாத்ரியும் உடன்கட்டை ஏறுகிறாள்.

     அதன் பின்னர் குந்தி தன் ஐந்து பிள்ளைகளுடன் அஸ்தினாபுரம் வருகிறாள். அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரனின் மகன்களுடன் விளையாடும்போது, தங்கள் பலத்தின் மிகையால் பாண்டவர்கள் தனியாகத் தெரிந்தனர். வேகத்திலும், குறித்த பொருளை அடிப்பதிலும், உணவு சம்பந்தமான பொருட்களை உண்பதிலும், புழுதியை வாரி இறைப்பதிலும் பீமசேனன், திருதராஷ்டிரனின் அனைத்து மகன்களையும் வென்றான். அந்த வாயு தேவனின் மைந்தன் {பீமன்}, அவர்களின் முடியைப் பற்றி இழுத்து அவர்களுக்குள்ளேயே சண்டையிட வைத்து, எந்நேரமும் சிரித்து மகிழ்ந்தான்.

அந்த நூற்றொரு பிள்ளைகளையும் ஒருவராகப் பாவித்த பெரும் சக்தி படைத்த விருகோதரன் {பீமன்}, தான் ஒருவனாகவே அவர்களை வென்றான். பாண்டவர்களில் இரண்டாமவன் {பீமன்} அவர்களை {கௌரவர்களை} முடியைப் பிடித்து இழுத்துத் தூக்கி வீசி, தரையில் இழுத்துச் சென்றான். இதனால் சிலர் தங்களது முட்டியை உடைத்துக் கொண்டனர், சிலர் தங்கள் தலைகளையும், சிலர் தங்கள் தோள்களையும் உடைத்துக் கொண்டனர்.

     சில சமயங்களில் அந்த இளைஞன் {பீமன்}, அவர்களில் பத்துப் பேரை ஒரு பிடியில் பற்றி, அவர்கள் இறப்பின் அருகே செல்லும் வரை நீரில் அமிழ்த்தினான். திருதராஷ்டிரனின் மகன்கள் பழங்களைப் பறிக்க மரங்களில் ஏறினால், பீமன் அந்த மரத்தைத் தனது காலால் எட்டி உதைத்துக் குலுக்கி, மரத்திலிருந்த அனைவரையும், பழங்களுடன் சேர்ந்து கீழே விழுச் செய்தான். குத்துச்சண்டையிலும், வேகத்திலும், நிபுணத்துவத்திலும் நிச்சயம் அந்த இளவரசர்களில் யாரும் பீமனுக்குச் சமமாக இல்லை.

பீமன், குழந்தைத்தனத்தால் தனது பலத்தைக் காட்டி அவர்களை இம்சித்தானே ஒழிய விரோத மனப்பான்மையால் அல்ல. பீமனுடைய வலிமையின் அற்புத வெளிப்பாடுகளைக் கண்டவனும், திருதராஷ்டிரனின் மூத்த மகனுமான பலமிக்க துரியோதனன், அவனிடம் பகைமை கொள்ளத் தொடங்கினான்.

     நேர்மையற்றவனான அந்தத் தீயத் துரியோதனன் தனது அறியாமையாலும், ஆவலாலும், ஒரு பாவச் செயலைச் செய்யத் திட்டமிட்டான். “ஆற்றலில் பாண்டுவின் இரண்டாவது மகனான பீமனுக்கு ஒப்பாக எந்த மனிதனும் இல்லை. சூழ்ச்சியின் மூலமே நான் அவனை அழிக்க வேண்டும். பீமன் தனியொருவனாகவே நம் நூற்றொருவரையும் போருக்கு அழைக்கும் துணிவுடனிருக்கிறான். எனவே, அவன் தோட்டத்தில் துயிலும்போது, நாம் அவனைக் கங்கையின் நீரோட்டத்தில் தூக்கி எறியவேண்டும்.

அதன் பிறகு அவனது மூத்த சகோதரனான யுதிஷ்டிரனையும், இளையவனான அர்ஜுனனையும் சிறையில் அடைத்து, எந்தத் தொல்லையும் இல்லாமல் நாம் தனியாளாக அரசாளலாம்” என்று மனத்தில் திட்டமிட்டுக் கொண்ட அந்தத் தீய துரியோதனன், எப்போதும் பீமனைத் தாக்கவல்ல ஒரு வாய்ப்புக்காக நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

     கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பிரமாணகோடி என்ற பெயர் கொண்ட இடத்தில், ஓர் அழகான மாளிகையை எழுப்பி, அதில் அகலமான துணிகளையும், ஆடம்பரப் பொருட்களையும் தொங்கவிட்டான். அவன் அந்த மாளிகையில், நீர் விளையாட்டை நடத்த வேண்டி, எல்லாவகை உற்சாகமூட்டும் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் நிரப்பி வைத்தான். உற்சாகமூட்டும் கொடிகள் அந்த மாளிகையின் மீது பறந்தன. அந்த மாளிகையின் பெயர் “நீர்விளையாட்டு மாளிகை” என்பதாகும்.

அங்கே சமையற்கலை நிபுணர்கள் பல்வேறு வகைகளிலான உணவுப்பொருட்களைத் தயாரித்தனர். எல்லாம் தயாரான நிலையில் அதிகாரிகள் துரியோதனனுக்குச் சொல்லியனுப்பினர். அதன்பிறகு அந்தத் தீய மனத்தையுடைய இளவரசன் {துரியோதனன்} பாண்டவர்களிடம், “வாருங்கள், நாம் பூக்கள் நிறைந்த, மரங்கள் அடர்ந்த கங்கையின் கரைக்குச் சென்று நீர் விளையாடலாம்” என்று அழைத்தான்.

அங்கேதான் பீமனுக்கு விஷம் வைக்கும் செயலை அந்தக் கயவன் துரியோதனன் செய்தான். எப்படி? நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe