
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேலூரில் பேசியது என்ன என்பது குறித்து பல்வேறு கருத்துகள் சமூகத் தளங்களிலும் அரசியல் மட்டத்திலும் பரபரப்பாகப் பேசப் பட்டு வருகிறது. தமிழகத்தில் திடீர் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமித் ஷாவின் பயணம் அதிமுக., மட்டுமல்லாது திமுக.,வட்டாரங்களிலும் பெரும் பேசுபொருளாயிற்று.
தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஞாயிறு காலை தமிழக பாஜக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர்வதில், தமிழகத்தின் பங்கும் இருக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று உற்சாகமூட்டினார்.. சென்னையில் கட்சியினரின் கூட்டத்தில் பேசியபோது, பாஜக. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வியூகத்தைப் பற்றி அமித் ஷா பேசினார்.
அதே நேரம் அமித் ஷாவின் வருகையை அரசியலாக்கும் விதத்தில், சேலத்தில் அரசு சார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அரசு தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்ற கேள்விக்கு அமித் ஷா பதில் சொல்லட்டும் என்று ஒரு திரியைப் பற்ற வைத்தார்.
அதற்கு பதிலடி கொடுப்பது போல், அமித் ஷா வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி செய்தவற்றைப் பட்டியலிட்டார். அவர் பேசியது குறித்து பல்வேறு மட்டங்களில் விவாதம் கிளம்பியிருக்கிறது.
ஞாயிறு அன்று மாலையில் வேலூர் மாநகரில், பெரும் மக்கள் திரளிடையே நடைபெற்ற, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் அமித் ஷா. இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், மத்திய இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங்கும் கலந்து கொண்டார். மேலும், தமிழக பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள், பாஜக.,வினர் திரளாகக் கலந்துகொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழர்களுக்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு தமிழக மாணவர்களின் உயர் கல்விக்கு விவசாயிகளுக்கு, தமிழக மகளிர் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு என ஒவ்வொரு துறையிலும் தமிழகத்துக்குச் செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார்.
பிரதமர் மோடி, உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும். தமிழின் பெருமையைப் பற்றிப் பேசியிருக்கிறார். காசி தமிழ்ச் சங்கமம். சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகளின் மூலம், தமிழகத்துக்கும், காசி மற்றும் சௌராஷ்டிரா இடையே இருந்து கலாச்சாரத் சௌராஷ்டிரா இடையே இருந்த கலாச்சாரத் தொடர்பைப் பெருமைப்படுத்தினார்.
திருக்குறளை எல்லா மாநில மக்களும் படிக்கும் வகையில், காசி தமிழ்ச் சங்கமத்தில் திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்த்து வழங்கினார். சமீபத்தில் பப்புவா நியூ கினியா நாட்டிற்குச் சென்ற பிரதமர், அந்த நாட்டு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.
சீன அதிபர் இந்தியா வந்தபோது, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் சந்திப்பினை அமைத்து தமிழகத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவினார்.
பத்தாண்டு கால காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு 96 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஒன்பது ஆண்டு கால மோடியின் ஆட்சியில், தமிழகத்துக்கு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் திமுக ஆட்சியில் தமிழகத்துக்குக் கொடுக்கப்பட்ட Grand in Aid 58,000 கோடி. ஆனால், பாரதப் பிரதமர் மோடியின்ஆட்சியில், 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், ரூ.58,000 கோடி மதிப்பில், தமிழகத்தில் 2,052 கிமீ., தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 3,719 கிமீ., தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, 150 கிமீ தொலைவு கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டத்துக்கு. ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு, சென்னை பெங்களூர் விரைவுப் பாதைக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு, சென்னை மெட்ரோ முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, ரூ.72,000 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழகத்தின் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னை மைசூர் மற்றும் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள், சென்னை விமான நிலைய புதிய முனையம். 1,260 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி. ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெய்வேலியில் புதிய நிலக்கரித் திட்டம்….
தமிழகத்தில் 56 லட்சம் விவசாயிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் வருடம் ஆறாயிரம் ரூபாய், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 84 லட்சம் குடிநீர் இணைப்புகள், ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இரண்டரை கோடி மக்களின் மருத்துவ சிகிச்சை, ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 62 லட்சம் கழிப்பறைகள், 1 கோடி ஏழை மக்களுக்காக ரேஷன் கடைகளில் ஐந்து கிலோ உணவு தானியங்கள்…
தரமணியில், செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கு புதிய கட்டிடம், ரூ. 1,500 கோடி நிதியில் கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், நாட்டின் இரண்டு ராணுவத் தொழில் தளவாடங்களில் ஒன்று…
நீட் தேர்வு, மத்திய ரிசர்வ் காவல்துறை தேர்வு, குடிமையியல் தேர்வுகள் உள்ளிட்ட அகில இந்தியத் தேர்வுகளில் தமிழ் மொழியில் தேர்வெழுதும் வாய்ப்பு என…
தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ள பணிகள் அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது உரையில் பட்டியலிட்டார்.
மேலும், தமிழர்களின் பெருமையான சோழப் பேரரசின் செங்கோல், இன்று நாடாளுமன்றத்தை அலங்கரிப்பதை பெருமையுடன் வெளிப்படுத்தினார்.
2G, 3G, 4G என்று ஊழலில் மட்டுமல்ல. 2G – இரண்டாம் தலைமுறையான மாறன் குடும்பம், 3G – மூன்றாம் தலைமுறையான கருணாநிதி குடும்பம். 4G நான்காம் தலைமுறையான ராகுல் காந்தி குடும்பத்தினையும் குறிக்கிறது என்று, வாரிசு அரசியலிலும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் திமுக., காங்கிரஸ் கட்சிகளைச் சாடினார்.
மீண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர, அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை எதிர்நோக்கி கடுமையாக உழைத்து வரும் பாஜக தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.