
திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு கோழி பலியிடுதல் தடை செய்யப்பட வேண்டும் என்ற இந்து மக்களின் குரலாக இந்து முன்னணியின் கோரிக்கை நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் மலையை வேறு எந்த பெயர்களிலும் அழைக்கக்கூடாது என்ற கோரிக்கையும் நீதிமன்றத்தால் இன்று அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது – என்று இந்து முன்னணி அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்த வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் ஏற்கெனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதி அரசர் ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை தானும் உறுதி செய்வதாக மூன்றாவது நீதிபதியாக பொறுப்பேற்ற நீதியரசர் விஜயகுமார் தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மெஜாரிட்டி நீதிபதிகளாக இரண்டு நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
திருப்பரங்குன்றம் மலை மீது இனி ஆடு கோழி பலியிடுதல் என்பது தடை செய்யப்பட வேண்டும் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை வேறு பெயர்கள் கூறி அழைக்கக்கூடாது என்ற இந்து மக்களின் குரலாக இந்து முன்னணியின் கோரிக்கை வென்றது என்று அந்த அமைப்பினர் கூறினர்.
முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,’ என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ‘ அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்’ என்றார். இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கு 3வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்று இந்து முன்னணி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீர்ப்பு தர்மத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி தீர்ப்பு என்று குறிப்பிடுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
கடந்த ஜனவரி மாதத்தில் சில இஸ்லாமிய அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையை களங்கப்படுத்திட முனைந்தனர். மலைமீதுள்ள தர்கா போன்ற அமைப்பில் கந்தூரி எனும் ஆடு, மாடு, கோழி பலியிடுவதை செய்யப்போவதாக அறிவித்தனர்.
மேலும் ஆட்டைத் தோளில் எடுத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மணப்பாறை தொகுதி திமுக எம்.எல்.ஏ. அப்துல் சமது இதற்கு துண்டுதலாக அங்கு வந்து, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை எனக் கூறினார்.
இந்நிலையில் திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தலைவரும் இராமநாதபுரம் எம்.பி.யான நவாஸ் கனி, திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் வாரியத்திற்கு சொந்தம். அங்கு கந்தூரி தருவதற்கு தானே தடை, மாமிச உணவு சாப்பிட எப்படி தடைவிதிக்க முடியும்? என அதிகாரிகளை மிரட்டி மலைக்கு மேலே போய் மாமிச உணவை அவரது கும்பல் சாப்பிட வைத்து, அங்கே எச்சிலை போட்டு புனிதத்தை கெடுத்து அதன் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
இவற்றை கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் அங்கு சென்ற போது, என் மீதும் உடன் வந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் போட்டது. இதனைக் கண்டித்து மலையைக் காக்க பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவித்தது இந்து முன்னணி.
குமரன் குன்றை காக்க அறிவித்த ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க தமிழக சரித்திரத்தில் இல்லாத தடை உத்தரவை காவல்துறை போட்டது. தமிழகம் முழுவதும் 1600 பேர்களை வீட்டுக்காவலில் வைத்தது தமிழக காவல்துறை. நீதிமன்றம் சென்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று குறித்த நேரத்தில் குறித்த தேதியில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது இந்து முன்னணி.
திருப்பரங்குன்றம் புனித மலையை காக்க ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் ஐந்து லட்சம் முருக பக்தர்கள் கலந்து கொண்ட மாநாட்டை நடத்தி காட்டி, வரலாறு படைத்தது இந்து முன்னணி. பக்தர்களின் பக்தியின் சக்தி ஒருபுறம், மறுபுறம் திருப்பரங்குன்றம் மலையின் உரிமை மற்றும் புனிதம் காக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்ட போராட்டம்.
இவ்வழக்கை நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர் தீர்க்கமான கருத்தை கூறிய போதிலும் மற்றொருவர் கருத்து தெளிவில்லாத நிலையில் மூன்றாவது நீதிபதியின் கருத்திற்கு வழக்கின் தீர்ப்பு சென்றது.
நீதிபதி விஜயகுமார் நேற்று முன்தினம் கூறிய தீர்ப்பில் இம்மலை திருப்பரங்குன்றம் முருகனின் மலை தான். அம்மலையில் உயிர் பலியிடவோ, மாமிச உணவு சாப்பிடவோ அனுமதி கிடையாது என்று தெளிவான தீர்ப்பை தந்துள்ளார்.
இது தர்மத்திற்கும், ஜனநாயக வழியில் போராடிய முருக பக்தர்களுக்கும் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஆகும். ஆளும் கட்சியான திமுகவின் ஆதரவால், தூண்டுதலால் சில இஸ்லாமிய அமைப்புகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சித்தனர்.
முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்திற்கு நேர்ந்த அவமதிப்பால் முருக பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்த தீர்ப்பு முருகனின் அருளால் தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றே இந்து முன்னணி கருதுகிறது. இந்த தீர்ப்பை மதித்து தமிழக காவல்துறையும் அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதே போல திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். கோவிலின் வாயிலில் உள்ள மோட்ச தீபத் தூணில் ஏற்றிடக்கூடாது என பல ஆண்டுகளாக இந்து முன்னணி போராடி வருகிறது.
இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த அமரர் அட்வகேட் ராஜகோபாலன் தொடர்ந்து போராடினார். நீதிமன்றம் மூலமும் தீபத்தூணில் ஏற்றுவதற்கு தீர்ப்பு கிடைத்தது. ஆனாலும் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து வருகிறது. இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தி வருகிறது.
எனவே குன்றம் முருகனுக்கே என்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரியமான தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
அனைத்து முருக பக்தர்களும் நமது முருக பெருமானின் உரிமையை நிலைநாட்டிட கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றம் யாத்திரையாக வந்திடுவோம். முருகனின் அருளால் கிடைத்த நீதிமன்ற தீர்ப்பை இந்துமுன்னணி மனதார வரவேற்கிறது..





