Home Blog Page 222

IPL 2024: சிறப்பாக ஜொலித்த லக்னோ அணி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பனிரெண்டாம் நாள் |
ஐபிஎல் 2024 – 02.04.2024 – பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ ஜெயண்ட்ஸ்

          லக்னோ அணியை (181/5, க்விண்டன் டி காக் 81, பூரன் 40, ஸ்டோயினிஸ் 24, ராகுல் 20, கிளன் மேக்ஸ்வெல் 2/23) பெங்களூரு அணி (153, மஹிபால் லோமர் 33, ரஜத் படிதர் 29, விராட் கோலி 22, டியு பிளேசிஸ் 19, மயங்க் யாதவ் 3/14, நவீன் உல் ஹக் 2/25) 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் 5.3 ஓவர் வரை ஆடி 20 ரன் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான க்விண்டன் டி காக் (56 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 5 சிக்சர்) 16.4 ஓவர் வரை ஆடினார். அவரோடு ஜோடி சேர்ந்து மார்கஸ் ஸ்டோயினிஸ் (24 ரன்) மற்றும் நிக்கோலஸ் பூரன் (ஆட்டமிழக்காமல் 40 ரன்). பூரன் 19ஆவது ஓவரில் 3 சிக்சர்களும் 20ஆவது ஓவரில் 2 சிக்சர்களும் அடித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது.  

          182 என்ற இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் முதல் மூன்று வீரர்கள் விராட் கோலி (22 ரன்), டியு பிளேசிஸ் (19 ரன்), ரஜத் படிதர் (29 ரன்) ஆகியோர் ஆடியவரை ரன்ரேட் நன்றாக இருந்தது. ஆனால் கோலி, டியு பிளேசிஸ், மேக்ஸ்வெல் மூவரும் முதல் ஆறு ஓவருக்குள் ஆட்டமிழந்துவிட்டனர். அதன் பின்னர் ரன்ரேட் ஏறவே இல்லை.

கடைசில் மஹிபால் லோமர் 13 பந்துகளில் 33 ரன் சேர்த்தார். இருந்தாலும் தொடர்ந்து விக்கட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 153 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இன்றும் மயங்க் யாதவ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கட் எடுத்தார். பெங்களூரு அணியின் சரிவை கோலியின் விக்கட்டை எடுத்து தமிழக வீரரான மணிமாறன் சித்தார்த் தொடங்கிவைத்தார்.

          லக்னோ அணியின் மயங்க் யாதவ் சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த விருதை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் பெறுகிறார். நாளை விசாகப்பட்டிணத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

Modi Once More 2024: ஜான்சன் vs ஜானகிராமன்!

write thoughts - 2026
#image_title
  • K. V. Balasubramanian

ஜான்சன் – வாய்யா ஜானி … என்ன நேத்திக்கி மேட்ச் பாத்தியா? விசாகப்பட்டனத்துல நம்ம தல என்னமா ஆடினாரு தெரியுமா?

ஜானகி – நான் பாக்கல … அதான் தோத்தாச்சே …

ஜான்சன் – என்ன பாக்கலையா? … என்னடா சி.எஸ்.கேவின் பெரிய ஃபேனாச்சே நீ … ஏன் பாக்கல.

ஜானகி – நேத்திக்கி தந்தி டிவில மோதியோட நேர்காணல் கேட்டுகிட்டு இருந்தேன்.

ஜான்சன் – அதையெல்லாம் எதுக்கு கேக்கற … வேஸ்ட் … தமிழ்நாட்டுல அவங்க ஒரு சீட்டு கூட ஜெயிக்கமாட்டாங்க.

ஜானகி – ஏன் அப்படி சொல்ற?

ஜான்சன் – வடக்க ஸ்ரீ ராம்னு சொல்லி ஓட்டு வாங்கிரலாம் … ஆனா தமிழ்நாட்டுல முடியாது.

ஜானகி – உனக்கு ஊரு இராமநாதபுரம் தானே? அந்த ஊருக்கு ஏன் அந்தப் பெயர்? வடக்க ஜெய் ஸ்ரீ ராம்-ன்னு சொன்னா இங்க தமிழ்நாட்டுல ‘ராமஜெயம்’ அப்படீன்னு சொல்றீங்க … அங்க சீத்தாராம் அப்படீன்னா இங்க சீதாராமன்; அங்கே ஜானகிராம் என்றால் இங்கே ஜானகிராமன் … என்னோட பேரு …  அங்கே ராம்நரேஷ் என்றால் இங்கே ராமராஜன் … அங்கே ரகுராம் இங்கே ரகுராமன் … அங்கே ராம்சந்தர் இங்கே ராமசந்திரன் … அங்கே ராம்ஸ்வாமி இங்கே ராமசாமி.

ஜான்சன் – ஐயோ ராமா … அதை விடு. நான் இன்னொரு கேள்வி கேக்கறேன். மோதி அரசு அதானி, அம்பானி போன்ற கார்ப்பொரேட்டுக்குத்தான் வேலை செய்யுது … ஏழை மக்களுக்கு எதுவும் செய்யல அப்படீன்னு ராகுல் காந்தி சொல்றாரே அதுக்கு என்ன சொல்லற?

ஜானகி – இது நேரு காலத்திலிருந்து சொல்ற குற்றச்சாட்டு … அப்ப காங்கிரஸ் அரசை டாடா-பிர்லாவின் அரசு அப்படீன்னு சொல்லுவாங்க … இது ஒரு இடதுசாரி சிந்தனை … இப்ப காங்கிரஸ் கட்சியும் ஆலுகின்ற அரசைப் பார்த்து இதைச் சொல்றதுதான் வேடிக்கை.

முதல்ல கரீப் கல்யாண் அன்ன யோஜனாவிலிருந்து ஆரம்பிக்கிறேன். இது ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம். இந்த நாட்டில் 80 கோடி மக்களுக்கு கோவிட் சமயத்தில் இருந்து இன்று வரை இலவச ரேஷன் கிடைக்கிறது. இது நாட்டின் பணக்காரர்களுக்கான திட்டமா? அல்ல. கார்பொரேட்டுகளுக்கான திட்டமா? ஏழைமக்களுக்கான திட்டம் மட்டுமே.

அடுத்தது ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் – நாட்டின் 50% மக்களுக்கு வங்கியில் கணக்கு கிடையாது. மோதி அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளார். இதன் மூலம் அரசு மானியங்கள், திட்டப் பலன்கள் மக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேருகிறது. இடைத்தரகர்கள் நடுவில் கைவைக்க முடியாது. இது என்ன கார்ப்பொரேட்டுகளுக்கான திட்டமா? அல்லது  பணக்காரர்களின் திட்டமா? முழுக்க முழுக்க ஏழைகளின் திட்டம்.

வீடுகளுக்கு மின் இணைப்புத் திட்டம் – இதனை சௌபாக்யா யோஜனா என்று சொல்வார்கள். இந்த நாட்டில் இரண்டரைக் கோடி மக்களின் வீட்டில் மின்சாரம் கிடையாது. அவர்கள் மண்ணெண்ணை விளக்கு எரித்து வாழ்க்கை நடத்துகிறார்கள். 2014 வரை இதுதான் நிலைமை. மோதி, அவர்களது இரண்டரைக் கோடி வீடுகளுக்கு மின்சாரம் தந்திருக்கிறார். இந்த வீடுகளெல்லாம் கார்ப்போரேட்டுகளின் வீடுகளா? அல்லது பணக்காரர்களின் வீடுகளா? ஏழை மக்களின் வீடுகள் … மலைஜாதி மக்களின், பிந்தங்கிய மக்களின், 60 ஆண்டுகாளமாக மின்சாரத்தைப் பற்றி அறியாத மக்களின் வீடுகள்.

ஜான்சன் – அப்பா சாமி விடு தப்பா கேட்டுட்டேன் …

ஜானகி – அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா? இன்னும் சில முக்கியமான திட்டங்கள் இருக்கின்றன. முக்கியமாக தனிநபர் கழிவறைத்திட்டம். நமது தாய்மார்கள், சகோதரிகள் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டனர். அவர்கள் சொம்புல தன்னி எடுத்துகிட்டு காடுகளுக்கு சூரிய உதயத்திற்கு முன்னாடி அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் செல்ல வேண்டும். நகரத்தில வசிக்கின்ற உனக்கு எங்க இதெலாம் தெரியப்போவுது …  அவர்களின் துன்பத்தைப் போக்க மோதி அவர்கள் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டினார். வட இந்தியாவில் இதனை ‘மரியாதை வீடு’ எனச் சொல்லுகின்றனர். இதனை கழிவறை என்று சொல்லுவதில்லை. இதனால் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதை கிடைத்துள்ளது. இந்தப் பணி பெண்களின் டிகினிட்டி சம்பந்தப்பட்டது.

பெண்களுக்கு மரியாதை தந்த திட்டம் இதுமட்டுமல்ல பெண்கள் சுய உதவிக்குழு கேள்விப் பட்டிருக்கயா? அதானி அல்லது அம்பானி இதுல எங்கியாவது சம்பந்தப் படுறாங்களா? பத்து கோடி பெண்கள் இந்தக் குழுக்களில்  இணைந்துள்ளனர். இதனால் அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. இவர்கள் வங்கியில் கடன் பெறுகிறார்கள்.  மோதியின் இலக்கு என்னவென்றால் மூன்று கோடி சுய உதவிக் குழுவின் பெண்களை ‘லட்சாதிபதி அக்கா’-வாக மாற்றவேண்டும் என்பதுதான். இதெல்லாம் ஏழைகளுக்கான திட்டம் இல்லையா?

அடுத்தது ஆயுஷ்மான் பாரத் திட்டம்.  இந்த நாட்டின் 50 கோடி மக்களுக்கு 5 லட்சம் வரை சிகிச்சைக்கு ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 கோடி மக்கள் இதன் பயனாளர்கள். இந்த 50 கோடி மக்களும் பணக்காரர்களா? 

இதோடு மக்கள் மருந்தகம் திட்டம். மலிவுவிலையில் மருந்துகள் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களுக்கு எவ்வளவு பணம் மிச்சமாகிறது தெரியுமா?

அப்புறம் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் அதாவது குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம். இந்த நாட்டில் 80 விழுக்காடு வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக எங்கோ அலைய வேண்டியிருந்தது. இன்று குழாய் மூலம் குடிநீர் சுமார் 12 கோடி வீடுகளுக்குத் தரப்பட்டுள்ளது.

இன்னமும் உஜ்வலா திட்டம் எனப்படுகின்ற இலவச எரிவாயுத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ 6000 வழங்கும் திட்டம் என பல திட்டங்கள் இருக்கிறது. இப்ப சொல்லு மோதி கார்ப்பொரேட்டுகளுக்கு திட்டம் போடுகிறாரா அல்லது ஏழைகளுக்குத் திட்டம் போடுகிறாரா?

ஜான்சன் – இப்ப நீ என்ன சொல்ல வர?

ஜானகி – மீண்டும் மோதி; வேண்டும் மோதி

IPL 2024: தொடரும் மும்பை அணியின் சொதப்பல்கள்!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 01.04.2024 – மும்பை
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

          மும்பை அணியை (125/9, திலக் வர்மா 32, ஹார்திக் பாண்ட்யா 34, போல்ட் 3/22, சாஹல் 3/11) ராஜஸ்தான் அணி (127/4, ரியன் பராக் 54, ஆகாஷ் மத்வால் 3/20) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை அணியின் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. ரோஹித் ஷர்மா மற்றும் நமன் தீர் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மூன்றாவது ஓவரில் டிவால்ட் ப்ரீவிஸ் பூஜ்யத்தில் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மும்பை அணி மீண்டு வரவேயில்லை. திலக் வர்மா (32 ரன்) மற்றும் ஹார்திக பாண்ட்யா (34 ரன்) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 125 ரன் எடுப்பதற்கே மும்பை அணி தடுமாறியது.

          ராஜஸ்தான் அணியில் போல்ட் அற்புதமாக பந்துவீசினார். அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் அவரது புள்ளி விவரம் 2 ஓவர்-மெய்டன் இல்லை-4 ரன்- 3 விக்கட். பின் ஓவர்களில் யஜுவேந்திர சாஹால் சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர் வீசி 11 ரன் கொடுத்து மூன்று விக்கட் வீழ்த்தினார்.  

          126 என்ற எளிய இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் முதல் மூன்று வீரர்கள் யஸஸ்வி ஜெய்ஸ்வால் (10 ரன்), ஜாஸ் பட்லர் (13 ரன்), சஞ்சு சாம்சன் (12 ரன்) சரியாக விளையாடவில்லை. அதன் பிறகு ஆடவந்த ரியன் பராக் (54 ரன்), மற்றும் அஷ்வின் (16 ரன் இருவரும் நன்றாக ஆடி அணிக்கு 15.3 ஓவரில் வெற்றியைத் தேடித்தந்தனர்.

          ராஜஸ்தான் அணியின் ட்ரண்ட் போல்ட் சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடவிருக்கின்றன.

அண்ணாமலை, தமிழக பாஜக., பற்றி மோடி சொன்னது இதைத்தான்..!

pm narendra modi - 2026
#image_title

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்தியேக பேட்டியில், ராமர் கோயில் தொடர்பாக பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் ஒளிபரப்பான அந்த பேட்டியில் இருந்து சில துளிகள் … தந்தி டிவியின் சார்பில்  முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரசியமான பதில்கள்… 

தொடர்ச்சி…

கேள்வி : உங்களின் திறமையான முயற்சிகளுக்குப் பின்னரும் தமிழகத்தின் அரசியல் நிலைமை தங்களுக்கு ஒரு தீர்க்கமுடியாத சவாலாகவே உள்ளது. அது ஏன்? இந்தத் தேர்தலில் அந்த நிலைமை மாறிவருவதாக  நினைக்கிறீர்களா?

பிரதமர் மோடியின் பதில்:

நான் அரசியலில் இருக்கிறேன், அதற்காக எல்லா செயல்களையும் அரசியலுக்காகவே செய்வேனா? வாக்கு பெறுவதற்காக மட்டும் செயல்படுவேனா? ஆட்சியில் இருப்பதற்காகச் செய்வேனா? இந்த எண்ணம் குறைந்தபட்சம் எனக்குப் பொருந்தாது …

நான் நாட்டிற்காகப் பணிபுரிகிறேன். … தமிழ்நாடு என் நாட்டின் மிகப்பெரிய சக்தி … ஆட்சியை யாருக்குக் கொடுக்கிறீர்கள் அது பற்றி நான் சிந்திக்கவில்லை … ஒருவேளை இதுதான் விஷயம் என்றால் நான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் எந்தப் பணியையும் செய்திருக்க மாட்டேன்.  வடகிழக்கு மாநிலங்களில் என்னுடைய அமைச்சர்கள், 150க்கும் அதிகமான அமைச்சர்கள் அங்கே சென்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் எத்தனை பிரதமர் இருந்தார்க்ளோ அவர்கள் அனைவரும் சேர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு எத்தனை சென்றார்களோ நான் அதைவிட அதிக முறை சென்றிருக்கிறேன். எனவே ஒவ்வொரு விஷயத்தையும் தேர்தல் … அரசியல் … பிஜேபி … இந்த எண்ணத்திலேயே அளவிடுவது என்னுடைய இந்த வளர்ச்சிப் பணிகளுக்குச் செய்யப்படும் ஒரு அநியாயமாகும்.

நான் என்னுடைய நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காகப் பணிபுரிகிறேன் … தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது எனது பிரச்சனையல்ல … அவர்களின் திறமையைப்பற்றி … அவர்களின் ஆசைகள் பற்றி… அவர்களின் இலக்குகள் பற்றி நான் யோசிக்கிறேன் !

அந்த விஷயத்தில், மக்கள் இன்று என்னை எந்த இடத்தில் அமர்த்தியிருக்கிறார்களோ, அங்கிருந்து நான் அவர்களுக்கு நான் சேவை செய்ய முடியுமென்றால் அது எனது பாக்கியமாக இருக்கும் … இதனை நான் தில்லியில் அமர்ந்து கொண்டு செய்யமுடியாது … அந்தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் … இதற்காக இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் செல்கிறேன் … தமிழ்நாடிற்கும் செல்கிறேன். எனவே தயவுசெய்து நான் ஏதோ அரசியல் திட்டத்தோடு அங்கு செல்கிறேன் எனச் சொல்லாதீர்கள். குறைந்தபட்சம் என்விஷயத்தில் அப்படிச் சொல்லாதீர்கள்.

கேள்வி – நீங்கள் ஒரு பிரதமராக, பல நல்ல நடவடிக்கைகளை தமிழகத்துக்கு எடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஓர் அரசியல்வாதியாக … நான் இத்தனை நற்செயல்கள் செய்கிறேன் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறார்கள் என யோசித்ததுண்டா?

பிரதமர் மோடியின் பதில் – 

இல்லை … ஒருபோதும் இல்லை. தமிழக மக்கள் மீது எனக்கு எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லை! எனக்கு அவர்கள் மீது அன்பு இருக்கிறது … நான் அவர்கள் மீது பைத்தியமாக இருக்கிறேன்! தமிழர்களின் பண்பாட்டின்மீது நான் பைத்தியமாக இருக்கிறேன்! இந்த அன்பு என்னை அங்கே இழுத்துக் கொண்டுபோகிறது.

தேசப் பற்றின் காரணத்தால் அண்ணாமலை இங்கே சேர்ந்தார்!

கேள்வி – தமிழ்நாட்டில் அண்ணாமலை பாஜக.,வின் மாநிலத் தலைவராக வந்துள்ளார். அவரது தலைமியில் கட்சி வளர்ச்சி அடைவதாக நினைக்கிறீர்களா?

பிரதமர் மோடியின் பதில் – 

இதோ பாருங்கள் … பாரதிய ஜனசங்கத்தின் காலத்தில் இருந்து நான் நாடு முழுவதும் பணியாற்றுகிறேன். தமிழ்நாட்டிலும் பணியாற்றுகிறேன். முனிசிபாலிடியில் தேர்தலில் போட்டியிடும் நேரம் வந்தபோது அதற்காக எங்களில் வேட்பாளர்கூட கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் இருந்து நாங்கள் வேலை செய்கிறோம்.

என்னுடைய கட்சிக்கு நான்கு தலைமுறைகள் கடந்துவிட்டன. தமிழகத்தில் பாஜக அல்லது பாரதிய ஜனசங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் பணி நடக்கிறது. இதில் பல தலைமுறைகள் பணியாற்றியிருக்கின்றன. அதில் அண்ணாமலையும் ஒருவர்.

அண்ணாமலை இப்போது மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்; குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கிறார். அவர்து நல்ல் வேலையை உதறிவிட்டு இந்த மனிதன் கட்சிப் பணிக்கு வந்திருக்கிறார். அவர் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என நினைத்திருந்தால் திமுகாவில் இணைந்திருப்பார். அல்லது அஇஅதிமுகாவில் இணைந்திருப்பார். சிறந்த பின்னணியும் உள்ளது; சிறந்த உழைப்பாளி. இளவயதுடையவர். ஆனால் அவர் பாஜகவில் சேரும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்குப் பதிலாக அவர் நாட்டு நலனை கையிலெடுத்திருக்கிறார். அந்த விஷயத்தில் தமிழ்நாடு பிந்தங்கிவிடக்கூடாது என்ற அடிப்படையில் அண்ணாமலை பணியாற்றுகிறார்.  

அதிமுக.,வினர் தான் வருத்தப்பட வேண்டும்!

கேள்வி– இந்தத் தேர்தலில் அஇஅதிமுகவும் தே.ஜ. கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு இருந்தது. இன்று அவர்கள் கூட்டணியில் இல்லை என வருத்தப்படுகிறீர்களா?

பிரதமர் மோடியின் பதில் – 

இந்த விஷயத்தை நாம் வேறுவிதமாகப் பார்க்கவேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. நான் ஆட்சி அரசியலில் நீண்ட நாட்கள் இருந்ததில்லை. 1995இல் அம்மா ஜெயலலிதாவுடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பின்னர் நான் முதலமைச்சரானேன் …

பலர் … 2002 தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சியின் மீது குற்றம் சாட்டினர். அச்சமயத்தில் அம்மா குஜராத் வந்தார்கள். நான் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வந்தார்கள் … பிறர் எத்தனையோ விமர்சனம் செய்தபோதும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை … என்னுடையது இத்தகைய தொடர்பு … எனவே வருத்தம் யாருக்காவது இருக்குமானால் அது அஇஅதிமுக கட்சியினருக்கு இருக்க வேண்டும்.

எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. எதையாது இழந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் இழந்திருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்களின் கனவுகளைச் சிதைக்கின்ற பாபம் செய்பவர்கள் அவர்களுக்கு வருத்தம் ஏற்படவேண்டும். பாஜகவுக்கு வருத்தம் ஏற்படக் காரணமேயில்லை.

பாஜக.,வுக்குக் கிடைக்கும் வாக்கு நேர்மறையான வாக்கு!

கேள்வி – திமுக.,விற்கு எதிரான என் வாக்கை இந்த முறை அஇஅதிமுகவிற்குப் பதிலாக நான் ஏன் பாஜகவிற்கு தரக்கூடாது என பலர் நினைக்கலாம் அல்லவா?

பிரதமர் மோடியின் பதில் – 

இந்த முறை பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மிகவும் வலுவாக உள்ளன. சமூகத்தின் பல இடங்களில் உள்ள பல வலுவான சமூகங்களை இணைக்கும் கூட்டணி. வெவ்வேறுவிதமான பொருளாதார, சமூகக் குழுக்களை உள்ளடக்கியது. தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருவகையான மலர்ச்செண்டு; இதனுள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த மலரைப் பார்க்கின்றனர். இது என்னுடைய மலர் என நினைக்கிறார்கள். இது எங்களுடைய மிகப் பெரிய பலம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜகவிற்கு அளிக்கப்படும் வாக்கு ஒரு நேர்மறையான வாக்கு; அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு, இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு இதெல்லாம் இல்லை … இம்முறை பாஜகவிற்கு வாக்களிக்கவேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. எங்களுக்குக் கிடைக்கும் வாக்கு யாருக்கும் எதிராகக் கிடைக்கும் வாக்கு அல்ல; பாஜகவிற்கு ஆதரவான வாக்கு. நேர்மறையான வாக்கிறகு அதிக பலம் உண்டு.

எங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் இளைஞர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம் … மகளிருக்கான எங்கள் செயல்பாடுகள் … விவசாயிகளுக்கான எங்கள் செயல்பாடுகள் … ஏழைகள் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றிருக்கும் விதம் … இந்த அனைத்து விஷயங்களாலும் தமிழ் நாட்டில் பாஜகவிற்கு ஆதரவான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான நிலை நிலவுகிறது.

கேள்வி பதில் தொடர்கிறது…நீங்கள்

IPL 2024: சறுக்கிய சென்னை அணி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 31.03.2024இரண்டு ஆட்டங்கள்
குஜராத் டைடன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்றது.

குஜராத் vs ஹைதரபாத்

          ஹைதராபாத் அணியை (162/8, அபிஷேக் ஷர்மா 29, அப்துல் சமத் 29, கிளாசன் 24, மோஹித் ஷர்மா 3/29) குஜராத் அணி (168/3, சாய் சுதர்ஷன் 45, டேவிட் மில்லர் 44*, கில் 36, சஹா 25) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று முதல் போட்டி குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கும் அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக போட்டி ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் நன்றாக விளையாடினார்கள். இருப்பினும் அதிரடி ஆட்டம் எதுவும் எடுபடவில்லை. தொடர் இடைவெளியில் விக்கட்டுகள் விழுந்தன. ஐந்தாவது ஓவரில் மயங்க் அகர்வால் (16 ரன்), ஏழாவது ஓவரில் ட்ராவிஸ் ஹெட் (19 ரன்), பத்தாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா (29 ரன்), 15ஆவது ஓவரில் மர்க்ரம் (17 ரன்) என விக்கட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. கிளாசன் (24 ரன்), ஷபாஸ் அகமது (22 ரன்), அப்துல் சமது (29 ரன்) சற்று அதிரடியாக விளையாட முற்பட்டு தங்களது விக்கட்டுகளை இழந்தனர்.

          இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமன் சஹா (13 பந்துகளில் 25 ரன்), ஷுப்மன் கில் (28 பந்துகளில் 36 ரன்) ஆகிய இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். அந்த அடித்தளத்தின் மீது தங்களது ஆட்டத்தை அமைத்து சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 45 ரன்), டேவிட் மில்லர் (27 பந்துகளில் 44 ரன்), விஜய் ஷங்கர் (11 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் 19.1 ஓவரில் 168 ரன் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.

          குஜராத் அணியின் மோஹித் ஷர்மா சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சென்னை vs டெல்லி

          டெல்லி அணி (191/5, வார்னர் 52, ரிஷப் பந்த் 51, பிருத்வி ஷா 43, பதிரனா 3/31) சென்னை அணியை (171/6, ரஹானே 45, தோனி 37, மிட்சல் 34, ஜதேஜா 21, முகேஷ் குமார் 3/21, கலீல் அகமது 2/21, ) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று இரண்டாவது போட்டி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் (35 பந்துகளில் 52 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), பிருத்வி ஷா (27 பந்துகளில் 43 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) ஆகிய இருவரும் 10 ஓவர் வரை பிரமாதமாக ஆடினர். நீண்ட நாட்களாக சரியாக ஆடாத பிருத்வி ஷா இன்று சிறப்பாக ஆடினார். ஆனால் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த நான்கு ஓவர்களுக்கு ரிஷப் பந்த் (32 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மார்ஷ் (12 பந்துகளில் 18 ரன்)ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்டப்ஸ் இரண்டு பந்துகள் மட்டுமே விளையாடி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 19ஆவது ஓவர் முடிவில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 191 ரன் எடுத்தது.

          பின்னர் ஆடவந்த சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரில் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா அவுட்டானார். அஜிங்க்யா ரஹானே (30 பந்துகளில் 45 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மிட்சல் (26 பந்துகளில் 34, ஒரு ஃபோர், 2 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மிட்சல் 11ஆவது ஓவரிலும் ரஹானே 14ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். ரஹானே ஆட்டமிழந்த பின் அடுத்த பந்தில் சமீர் ரிஸ்வி அவுட்டானார். ஷிவம் துபே 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் தோனி 16.1 ஓவரில் மைதானத்திற்கு ஆடவந்தார். வந்ததும் முதல் பந்து ஃபோர் போனது. அவர் வந்தபோது 24 பந்துகளில் 72 ரன் எடுக்க வேண்டிய நிலை. 19ஆவது ஓவரை வீசிய முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

          இருபதாவது ஓவரில் 41 ரன்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலை. தோனி பேட்டிங். ஆறு பந்துகளிலும் சிக்சர் அடித்தால்கூட 36 ரன் மட்டுமே வரும். எனவே தோல்வி நிச்சயம் என்ற நிலையில், அந்த ஓவரில் தோனி இரண்டு ஃபோர் மற்றும் இரண்டு சிக்சர் அடித்தார். இரண்டு டாட் பந்துகள். எனவே சென்னை அணி 20 ரன் கள் வித்தியாசத்தில் இந்த சீசனில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது.

          டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அனியும் விளையாடவிருக்கின்றன.

செங்கோல், காசி தமிழ்ச் சங்கமம் – தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கானதா?: பிரதமர் மோடி அளித்த பதில்!

pm narendra modi - 2026
#image_title

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்தியேக பேட்டியில், ராமர் கோயில் தொடர்பாக பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் ஒளிபரப்பான அந்த பேட்டியில் இருந்து சில துளிகள் … தந்தி டிவியின் சார்பில்  முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரசியமான பதில்கள்… 

கேள்வி:  ‘காசி தமிழ் சங்கமம்’, நாடாளுமன்றத்தில் ‘தமிழ் செங்கோலை’ நிறுவியது போன்ற பல நல்ல விஷயங்களை நீங்கள் செய்து இருக்கிறீர்கள். ஒரு பிரதமராக இவற்றையெல்லாம் செய்யத் தூண்டியது எது?

பிரதமர் மோடியின் பதில்: 

நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பின்னர், காசி குறித்த எனது பார்வை மாறியது. காசிக்கு, குஜராத், மேற்கு வங்காளம்,;மகாராஷ்டிரா என பல இடங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். ஆனால் காசியின் படகோட்டிகள் இந்த மாநிலங்களின் மொழிகளைப் பேசுவது குறைவு. ஆச்சரியப்படும் விதமாக காசியின் படகோட்டிகள் பலர், தமிழ் பேசுகிறார்கள். காரணம், அதிகபட்ச பயணிகள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள். அவர்கள் இந்தி பேசுவதில்லை; அதனால் படகோட்டிகள் சகஜமாக தமிழைக் கற்றுக் கொண்டு தமிழில் பேசுகிறார்கள். நமது சுப்பிரமணிய  பாரதியாரின் குடும்பமும் அங்கே வசிக்கிறது. எனவே நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பெயரில் ஒரு ‘இருக்கை’ ஏற்படுத்தினேன். பிறகு ‘காசி தமிழ் சங்கமம்’ நடத்த எண்ணம் தோன்றியது. இதன் மூலம் காசியில் மக்கள் தமிழ்ப் பண்பாட்டை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினேன். அங்கே தமிழ்நாட்டின் உணவு வகைகள் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது; தமிழகத்தின் நாட்டிய வகைகள், தமிழிலக்கியம் பற்றிய நிகழ்ச்சிகள், இவையெல்லாம் நடத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான புத்தகங்ககள், தமிழிலக்கிய நிகழ்ச்சியில் விற்பனையாயின. நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் மிகப் பெரிய சக்தி இதிலே எனக்குத் தெரிந்தது.  

செங்கோல் பற்றி பலருக்கு தெரியவில்லை. நாட்டின் சுதந்திரத்தின் முதல் கணம் இந்தச் செங்கோலுடன் தொடர்புடையது. அதோடு தொடர்புடைய தமிழகத்தின் ஆதீனங்கள் இந்த செங்கோலைத் தந்தனர். இவர்கள் பண்டித நேருவிற்கு, ஓர் அரசியல் மாற்றத்தை உணர்த்தும் வண்ணம் அதைத் தந்தனர். ஆனால் அதன் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை … அது அலகாபாத் மியூசியத்தில் கிடந்தது … அது நேருவின் நடைப்பயிற்சிக்கான கைத்தடி என்றே கருதப்பட்டது. இவ்வளவு புனிதமான விஷயத்தை கைத்தடி என நினத்துவிட்டார்கள்… 

இந்த விவரங்கள் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. நான் அதை மியூசியத்தில் இருந்து கொண்டுவந்தேன். தமிழகத்தின் ஆதீனங்களிடம் இதுபற்றிக் கேட்டேன். இதை உருவாக்கிய தமிழகத்தின் பொற்கொல்லரிடம் கேட்டேன். விவாதித்தேன் … பின்னர் என் மனதளவில் முடிவு செய்தேன் … பாரதத்தின் சுதந்திரத்தின் அந்த முதல் கணத்தின் சின்னத்தை புதிய நாடாளுமன்றம் உருவாகும்போது அதில் நிறுவ முடிவுசெய்தேன். அதன் பின்னர் அந்த செங்கோலை ஒரு மூலையில் தூக்கி வைத்துவிடும் நிலை வரக்கூடாது என்பதற்காக அதனை மையப்பகுதியில் நிறுவினேன். இந்த முறை குடியரசுத்தலைவர் நாடாளுமன்றம் வந்தபோது முதலில் செங்கோலைப் பார்வையிட்டார்  செங்கோல் முதலில் குடியரசுத்தலவருக்கு அளிக்கப்பட்டது… அதன் பின்னர் அவர் தனது உரையைத் தொடங்கினார். இதைப் போன்ற ஒரு சபை மரபினை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 

நாட்டிற்கு அதன் சுதந்திரத்தின் முதல் கணம் நினைவில் இருக்க வேண்டும். மேலும் செங்கோல் என்பது நாட்டில் அரசு செயல்பாடுகளுடன் தொடர்புடைய … தமிழகத்திலிருந்து நாட்டிற்கு கிடைத்திருக்கும் ஒரு பாரம்பரியம் … இதனை நாம் பெருமையாக நினைக்கவேண்டும் … 

ஆனால் நாட்டின் துரதிருஷ்டத்தைப் பாருங்கள் … தமிழ்நாட்டின் தலைவர்கள் இதனைப் புறக்கணிக்கிறார்கள் … இதைவிட துரதிருஷ்டம் வேறு என்ன இருக்கமுடியும்? தமிழ்நாட்டின் தலைவர்கள் தமிழகப் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றின் மீது பெருமை கொள்ளவில்லை என்றால், இதனால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை.  

***

கேள்வி: ஆனால் மோதி இவை அனைத்தையும் அரசியல் காரணங்களுக்காகச் செய்கிறார்… தமிழ்நாட்டிலிருந்து வாக்குகள் பெறுவதற்காகச் செய்கிறார் என்று விமர்சிக்கிறார்களே!

பிரதமர் மோடியின்  பதில்:

ஒருவேளை இதனால் வாக்குகள் கிடைக்குமென்றால் இவர்கள்தானே இந்தச் செயலை,  நான் செய்வதற்கு முன்னால் செய்திருப்பார்கள்?! அவர்களிடம் அதற்கான் சக்தி இருக்கிறதே! ஆனால்  செய்யவில்லை!. அவர்களுக்குத் தெரியும் இதனால் நாடு வலுவடைகிறது… இதனால் வாக்கு வங்கி அரசியல் முடிவடைகிறது … இதனால் குடும்ப அரசியல் முடிவுக்கு வருகிறது… எனவேதான் இவர்கள் இந்த விஷயங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் … 

கேள்வி: காசியில் இருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வதந்தியாகக் கூறினார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து போட்டியிடலாம் என நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?

பிரதமர் மோடியின் பதில்:

நான் கட்சியின் ஒரு படைவீரன் … கட்சி என்னை தேர்தலில் போட்டியிடச் சொன்னது, நான் பொட்டியிட்டேன் … முதலில் ராஜ்கோட் சென்று போட்டியிடச் சொன்னது, போட்டியிட்டேன் … பின் மணிநகர் தொகுதி … பின் பரோடா தொகுதி … பின்னர் நாடாளுமன்றத்திற்கு காசியிலிருந்து போட்டியிடச் சொன்னார்கள்! இப்படி கட்சி என்னை எங்கிருந்து போட்டியிடச் சொல்கிறதோ அங்கிருந்து போட்டியிடுகிறேன். எனக்கு இதில் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துமில்லை!

கேள்வி: நீங்கள் 2047இல் வளர்ச்சியடைந்த பாரதம் பற்றிப் பேசுகிறீர்கள்! இதில் தமிழகத்துக்கான திட்டங்கள் என்ன?

பிரதமர் மோடியின் பதில்:

முதலில், வளர்ச்சியடைந்த பாரதம் என்றால் தில்லி மட்டும் வளர்ச்சியடைவது அல்ல … பாரதத்தின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் உரிமை கொண்டாடவேண்டும். இரண்டாவது … பாரதம் ஒரு கூட்டாட்சி நாடு … நான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பாரதத்தின் வளர்ச்சிக்காக குஜராத்தின் வளர்ச்சி என செயல்பட்டேன் … நாம் அனைவரும் இதன் அடிப்படையிலேயே செயல்படவேண்டும் … நாம் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய வளர்ச்சியடைந்த மாநிலங்களை உருவாக்க வேண்டும் … வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க ஒவ்வொரு தமிழரும் முயற்சி செய்ய வேண்டும் … ஒவ்வொரு தமிழரும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் போல இந்தப் பணியில் இணைய வேண்டும்! வளர்ச்சியடைந்த பாரதத்தின் உந்து சக்தியாக தமிழகம் இருக்கக்கூடும் …

தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள் … மெட்ராஸ் ஐ.ஐ.டியைப் பாருங்கள் …   5G  தொடர்பான விஷயங்களில் மெட்ராஸ் ஐ.ஐ.டி தலைமை வகிக்கிறது. நம் 6G தொடர்பான விஷயங்கள் … நாம் உலகில் இத்துறையில் முத்லிடத்தில் இருக்கிறோம் … அதிலும் மெட்ராஸ் ஐ.ஐ.டி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது … அதாவது தொழில்நுட்பத்தில், தொழில்துறையில் மிகப்பெரிய பங்களிப்பு … 

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டம் … தஞ்சாவூரில்  ஒரு ஏக்கருக்கு விளைவிக்கப்படும் நெல்லின் அளவு ஒரு சாதனை அளவாக இருந்தது … அந்தச் சாதனையை இன்னும் யாரும் இதுவரை உலகில் முறியடிக்கவில்லை… இது ஒரு திறமை … இந்தத் திறனை இருட்டடிப்பு செய்ய முடியாது … 

வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக வேண்டும் என்றால் இந்த சக்திகளால்தான் அது நடக்க வேண்டும் … அந்த சக்தியை அதிக திறன் மிக்கதாக ஆக்குதல், அதற்குத் தேவையான வாய்ப்புகளை வழங்குதல், இந்த முழு நாட்டின் சக்தியுடன் அதனை இணைத்தல் … இப்போது பாதுகாப்பு முனையம் உருவாக்குதல் … இது பாரதத்தை சுயசார்பு பாரதமாக மாற்றும் விஷயம் … பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பு பாரதமாக மாறவேண்டும் என்றால் அது இந்த பாதுகாப்பு முனையத்தால் மட்டுமே முடியும்.

( கேள்வியும் பதிலும் தொடர்கின்றன…)

அதிகரிக்கும் அபஸ்வரங்கள்!

music academyy letter - 2026

சங்கீத கலாநிதி சர்ச்சை: அபஸ்வரம் கூடுகிறது.

— ஆர். வி. ஆர்

சங்கீத கலாநிதி சர்ச்சை இப்படிப் போகிறது. கச்சேரி முடியவில்லை. அபஸ்வரம் கூடுகிறது.

அபஸ்வரத்தை ஆரம்பித்தவர், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி. கூட்டியவர், அவர் சகோதரர் என். ராம். இருவரும் ‘ஹிந்து’ பத்திரிகை கம்பெனியின் முக்கியப் பங்குதாரர்கள்.

2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப் படும் என்று மியூசிக் அகாடமி சமீபத்தில் அறிவித்தது. விருது அவருக்குப் போவதற்கு ஆட்சேபம் செய்தவர்களில் முதன்மையானவர்கள், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள். காரணம் என்ன?

கர்நாடக சங்கீதத்தில் கலந்துள்ள ஹிந்துமத இறை உணர்வு மற்றும் ஆன்மிகம், அதைச் சார்ந்த பண்புகள், அதைப் போற்றிய மனிதர்கள், சாதனை செய்த முன்னோடிகள், ஆகியோரை, ஆகியவற்றை டி. எம். கிருஷ்ணா அவமதிப்பு செய்தவர், கர்நாடக இசைக் குடும்பத்தை அவர் தூற்றியவர், கர்நாடக சங்கீதக் கலைஞராக இருப்பதே வெட்கக் கேடானது என்ற எண்ணத்தைப் பரப்ப முயன்றவர், பிராமணர்களைக் களையெடுக்கப் பிரஸ்தாபித்த ஈ. வெ. ராமசாமியை அவர் உயர்த்திப் போற்றியவர், என்பது ரஞ்சனி-காயத்ரி செய்த எதிர்ப்பிற்கு அவர்கள் அளித்த விளக்கம். மற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலரும், இசை ரசிகர்கள் பலரும், அந்த எதிர்ப்பில் சேர்ந்தனர்.

ரஞ்சனி-காயத்ரி தங்கள் எதிர்ப்பைத் தெளிவாக, அழுத்தமாக, ஆனாலும் நாகரிகமாக, வெளிப்படுத்தினார்கள். மறுநாள் பொங்கி எழுந்த மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி, அவர்களுக்குச் சூடாக ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டார்.

“உங்கள் கடிதம் வசைபாடுவதாக, அவமதிப்பதாக, மான நஷ்டம் செய்வதாக இருக்கிறது, சக கலைஞர் மீது குரூர தொனி காண்பிக்கிறது” என்று தனது பதிலில் அபஸ்வரத்தை ஆரம்பித்தார் என். முரளி. பிறகு உச்சஸ்தாயியைத் தொட்டு, சங்கீத கலாநிதி விருதுக்கு ஒருவரைத் தேர்வு செய்வது மியூசிக் அகாடமியின் “பிரிராகெடிவ்” (prerogative) என்று அவர் மார் தட்டினார்.

Prerogative என்றால் “விசேஷ உரிமை, அதிகாரம் மற்றும் சிறப்புரிமை”, “பிரிட்டிஷ் அரசருக்கு உரித்தான விருப்ப அதிகாரம்” என்று மெரியம் வெப்ஸ்டர் டிக்ஷனரி அர்த்தங்கள் தருகிறது. அதாவது, “கொடுப்பது நாங்கள், கேட்பதற்கு நீங்கள் யார்?” என்று பேச வந்தார் என். முரளி. கடிதத்தின் அடுத்த வரியிலேயே, “இந்த விருது எப்போதும் கவனமான ஆராய்வுக்குப் பின்னர் அளிக்கப் படுகிறது” என்று அவர் சொல்லி இருந்தாலும், ராஜ தொனியில் அவர் தொடங்கி இருக்கவேண்டாம்.

ரஞ்சனி-காயத்ரியின் எதிர்ப்பை மியூசிக் ஆகாடமி ஏற்காமல் இருப்பது வேறு – அதுவும் விமரிசனத்துக்கு உட்பட்டது. ஆனால் தனது கருத்தை, விளக்கத்தை, அகாடமி இன்னும் நாகரிகமாகத் தெரிவித்திருக்க வேண்டும்.

என். முரளியின் பதிலைத் தொடர்ந்து, அவரது சகோதரர் என். ராம் X தளத்தில் ஒரு அறிவிப்பு செய்தார். அது எடுத்த எடுப்பிலேயே திராவிட மாடல் ஸ்டைலில் தொடங்கியது. “கண்மூடித்தனமான ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம் (bigoted and casteist coterie) டி. எம் கிருஷ்ணாவையும் மியூசிக் அகாடமியையும் குறி வைக்கிறது” என்று தொடங்கி, முரளி ஆரம்பித்த அபஸ்வரத்தை ராம் அதிகப் படுத்தினார். தான் குறிப்பிட்ட ஜாதிய உணர்வு எது, இந்த விஷயத்தில் அது ரஞ்சனி-காயத்ரியிடம் எந்த வகையில் காணப்படுகிறது என்று ராம் ஒரு துளியும் விளக்கவில்லை.

டி. எம். கிருஷ்ணா, என். முரளி, என். ராம், மற்றும் ரஞ்சனி-காயத்ரி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சங்கீத கலாநிதி விருதுக்கு டி. எம். கிருஷ்ணா ஏற்றவரல்ல என்று ரஞ்சனி-காயத்ரி கருத்து சொன்னால், அதில் என்ன ஜாதியப் பார்வை இருக்க முடியும்? என். ராம் அபாண்டமாகச் சொல்ல வருவது இதுதான்: ‘டி. எம். கிருஷ்ணா குப்பத்திற்குச் சென்று அந்த மக்களுக்காகப் பாடியவர், ஈ. வெ. ராமசாமியையும் போற்றியவர். ஆனால் ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் குப்பத்து ஜனங்களிடம் ‘ஜாதிய வெறுப்புணர்வு’ கொண்டு, ஈ. வெ. ரா-வையும் ஏற்காமால், சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்குக் கிடைப்பதை எதிர்க்கிறார்கள்’. என். ராமின் சுத்தமான அரசியல் வகைப் பிதற்றல் இது.

ஒரு மதத்தை, ஒரு ஜாதியை, குறிப்பிட்டு அந்த மதத்தினரை அல்லது ஜாதியினரைக் களையெடுப்பேன் என்று ஒருவர் பிரஸ்தாபிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மதத்திலோ ஜாதியிலோ உள்ள மனிதர்கள் அதை எதிர்க்கத்தான் செய்வார்கள். அப்படி எதிர்த்தால் அவர்கள் மதவாதியா, ஜாதியவாதியா? என்ன சொல்ல வருகிறார் என். ராம்?

ராம் நினைத்திருந்தால் இதற்கு மேலும் ரஞ்சனி-காயத்ரியை அபாண்டமாக இழிவு செய்திருக்கலாம். ஆனால் இதற்கும் கீழாக முடியாது என்ற அளவுக்கு அவர் தரம் தாழ்ந்து போனார்.

ஒரு போக்கிரி உங்கள் முகத்தில் சேற்றை எறிந்துவிட்டு ஓடினால், நீங்கள் கௌரவம் பார்க்கும் ஒரு அமைதியானவர் என்றால், சாதாரணமாக நீங்கள் பொறுமையாகத் துடைத்துக் கொண்டு போகவேண்டும். அந்த நினைப்பில் ரஞ்சனி-காயத்ரியைப் பார்த்துச் சேறு எறிவதுபோல் பேசினார் என். ராம். அந்த இருவர் மட்டுமல்ல, அவர்களைப் போல டி. எம். கிருஷ்ணாவுக்கான விருதை வேறு யார் எதிர்த்தாலும், அவர்களும் “ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம்” என்று அனைத்து எதிர்ப்பாளர்களையும் சகட்டுமேனிக்கு அற்ப சந்தோஷத்தில் பழித்தார் என். ராம்.

ராம் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ரஞ்சனி-காயத்ரியிடமிருந்து இரண்டு நாட்களில் வந்தது. அவர்கள் முரளியின் கடிதத்திற்கு மறுமொழி சொல்ல வந்து, அதில் ராம் சேறாக வீசிய வார்த்தைகளைக் குறிப்பிட்டு, “ஜாதி சமத்துவத்தை மியூசிக் அகாடமியின் நிர்வாகக் கமிட்டியில் ஆரமியுங்கள். தேவையான தீர்மானத்தைப் போடுங்கள். கொத்தாக சில கமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்யுங்கள்.” என்று சொல்லிவிட்டனர்.

வேண்டுமென்றே அரசியல்வாதி மாதிரி பிரச்சனையின் திசையைத் திருப்பியவர், அவரோடு சேர்ந்தவர்கள், இப்போது மேலும் கீழும் பார்ப்பார்கள். என்ன நடந்திருக்கிறது என்றால்: அரசியல் ஸ்டைலில் தன் மீது எறியப்பட்ட சேற்றை வழித்தெடுத்து, அது வந்த திசையில் ரஞ்சனி-காயத்ரி திருப்பி எறிந்து தங்களை ஒரு குயுக்தியான பழியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஷயம் எங்கோ போகிறது.

கர்நாடக சங்கீதத்தில் ஹிந்து சமய பக்தியும் உணர்வும் மேலோங்கி இருக்கும். ‘ஹிந்து’ சமாச்சாரம் பழமையானது, தொன்மையானது. அதில் சில ஒட்டுண்ணிகள் அவ்வப்போது வரலாம், சேதமும் செய்யலாம். இதனால் பாதிப்படையும் கர்நாடக இசைக் கலைஞர்கள், பொறுமையும் கண்ணியமும் காத்துத் தங்களையும் இசை உலகையும் மீட்பார்கள் என்று நம்புவோம்.

இப்படி நல்லதாகத் தானே நாம் நினைக்க முடியும்? கன்னாபின்னாவென்று நினைக்க, பேச, நாம் ஒன்றும் கிருஷ்ணா, முரளி, ராம் இல்லையே?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com

லால்கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று பாரத ரத்னா வழங்கிய குடியரசுத் தலைவர்!

bharath ratna for lk advani - 2026

முன்னாள் துணை பிரதமரும், பாஜக., மூத்த தலைவரும் ரத யாத்திரை நாயகன் என்று புகழப் படுபவருமான லால் கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று, பாரத ரத்னா விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

முன்னதாக, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்தாண்டு பாஜக., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான லால் கிஷன் அத்வானிக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சௌத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இவர்கள் ஐந்து பேரில், எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருதினை வழங்கினார்.

எனினும் வயது மூப்பு காரணமாக வெளியில் வராமல் இல்லத்தில் முடங்கிக் கிடக்கும் லால் கிஷன் அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே நேரில் சென்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதினை வழங்கினார். அப்போது, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர்ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சூடுபிடித்த கச்சத்தீவு விவகாரம்: திமுக., வின் சதிகளை அம்பலமாக்கிய அண்ணாமலை!

bjp annamalai - 2026
#image_title

அண்ணாமலை மூலம் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இன்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை என கச்சத்தீவு பற்றிக் குறிப்பிட்டு, மீண்டும் அதை ஒரு விவாதப் பொருள் ஆக்கி விட்டனர். கச்சத்தீவு தேர்தல் நேர சர்ச்சைக்கானது அல்ல என்றாலும், அது எந்நேரமும் பேசப்படக் கூடிய தேசப் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைக்கு உரியது என்பதால், இந்நேரம் அது தேசிய அளவில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்த்தது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதில்:

கச்சத்தீவு தொடர்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு 1961 மே 10ல் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த தீவு தொடர்பாக அவர், இந்த சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதற்கான நமது உரிமையை விட்டுக் கொடுக்க தயங்க மாட்டேன். இந்த விவகாரம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருப்பதையும் மீண்டும் பார்லிமென்டில் எழுப்பப்படுவதை விரும்பவில்லை என்றார்.

இந்த பதிலானது அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960 ல் கச்சத்தீவை இந்தியா உரிமை கோர வலுவான ஆதாரங்கள் இருந்தன எனக் கூறியதற்கு எதிராக இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனி, ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்த உரிமை பற்றியும் செடல்வாட் குறிப்பிட்டு இருந்தார். நாட்டில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் ராமநாதபுரம் ராஜா கொழும்புவுக்கு எந்த வரியும் கட்டாமல் கச்சத்தீவை நிர்வகித்து வந்தார்.
1968 ல் கச்சத்தீவு தொடர்பாக இந்தியா – இலங்கை பிரதமர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பார்லிமென்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, அரசை விமர்சித்தனர்.

அதற்கு அரசு அளித்த பதிலில், கச்சத்தீவை ஒப்படைப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்றதுடன் அந்த பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்தது எனக்கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 1969 ல் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கையின் உரிமையை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தம் போடுவதை நோக்கி இரு நாடுகளும் நகர்ந்தன.
கொழும்புவில் 1973ல் இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அடுத்த ஆண்டு (1974) ல் கச்சத்தீவை தாரை வார்ப்பது குறித்த முடிவு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கேவல் சிங் தெரிவித்தார்.

இது குறித்து கேவல் சிங் கூறுகையில், கச்சத்தீவு மீது ராமநாதபுரம் ராஜாவிற்கு அசல் உரிமை இருந்தது என்ற ஆவணங்களை காட்ட தமிழக அரசு, தவறிவிட்டது. 1925 முதல் இந்தியாவின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இலங்கை கச்சத்தீவை நிர்வகித்து வந்தது எனக்கூறினார். இவ்வாறு அந்த தகவலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இதனை மேற்கோள் காட்டி ‛எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரை வார்த்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியதுடன், காங்கிரசை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பதை மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதை எண்ணியே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் உழைத்துக் கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி அந்த பதிவில் கூறியுள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் கட்சியினர் மனமுவந்து கச்சத்தீவை விட்டுக் கொடுத்தார்கள். அதைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை. சில சமயங்களில் காங்கிரஸின் எம்.பி., நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும், இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளை இழிவுபடுத்துவதாகவும் பேசுகிறார். அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் நம் தேசத்தை பிளவுபடுத்த வேண்டும் என விரும்புகிறார்கள்

கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

IPL 2024: கலக்கிய லக்னோ அணி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 30.03.2024 – லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்க்ஸ்

          லக்னோ அணி (199/8, டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43*, பூரன் 42, சாம் கரன் 3/28, அர்ஷ்தீப் சிங் 2/30) பஞ்சாப் அணியை (178/5. ஷிகர் தவான் 70, ஜானி பெயர்ஸ்டோ 42, லிவிங்க்ஸ்டோன் 28*,  மயங்க் யாதவ் 3/27, மொஷின் கான் 2/34) 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் லக்னோவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (54 ரன்) நன்றாக ஆடினார்.

ராகுல் (15 ரன்), படிக்கல் (9 ரன்), பதோனி (8 ரன்), ரவி பிஷ்னோய் (பூஜ்யம்), மோஷின் கான் (2 ரன்) ஆகியோர் வந்தார்கள் போனார்கள் ரகம். நிக்கோலஸ் பூரன் (42 ரன்) மற்றும் க்ருணால் பாண்ட்யா (43 ரன் ஆட்டமிழக்காமல்) நன்றாக ஆடியதால் லக்னோ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்கு வந்தது.

          இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (50 பந்துகளில் 70 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) பெயர்ஸ்டோ (29 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் ஆடவந்த பிரப்சிம்ரன் சிங் (19 ரன்), ஜிதேஷ் ஷர்மா (6 ரன்), சாம் கரன் (பூஜ்யம்) ஆகியோர் வெற்றி பெறும் நிலையில் இருந்த பஞ்சாப் அணியை தோல்வியை நோக்கித்தள்ளினர்.

17ஆவது ஓவரின் அடுத்தடுத்தடுத்த பந்துகளில் மொஷின் கான் ஷிகர் தவான் மற்றும் சாம் கரன் விக்கட்டுகளை எடுத்தார். அந்த இடத்தில் பஞ்சாப் அணி தோல்வியைச் சந்தித்துவிட்டது. அதன் பின்னர் லியம் லிவிங்க்ஸ்டோன், ஷஷாங்க் சிங் இருவராலும் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் பஞ்சாப் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

          லக்னோ அணியின் மயங்க் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடக்கவுள்லது. இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.