Home Blog Page 24

பரமன் அளித்த பகவத் கீதை! தொடர் – 2

bhagavat githa series - 2026

பகவத் கீதை : எனது தந்தையார் மறைதிரு வைத்தீஸ்வரன்

முனவர் கு.வை.பால சுப்பிரமணியன்

பகவத்கீதை பற்றி எனக்கு என்ன தெரியும்? பகவத்கீதை பற்றி எழுதும் அளவிற்கு நான் தகுதியானவனா? இந்தக் கேள்விகள் எப்போதும் என்னைத் துளைத்துக்கொண்டிருக்கும். நான் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது என் தந்தையார் மறைந்த வைத்தீஸ்வரன் அவர்கள் இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களை வீட்டில் அடிக்கடி சொல்லிகொண்டிருப்பார்.

அவர் சமஸ்கிருதம் படித்தவர். பகவத்கீதையைப் படித்தவர். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பொனார்கோவில் இரயில்வே ஸ்டேஷனில் உதவி இரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.

இப்போது அந்தப் பாதையில் இரயில் ஓடவில்லை. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர்மீடியட் வரை படித்தவர். அவரது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த அவருக்கு, எனக்கு கிடைத்த அளவிற்குகூட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

அவர் சொல்லிக்கொண்டிருந்த அந்த இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களில் ஒன்று 

ஸ்ரீபகவானுவாச

ப்ரஜஹாதி யதா காமான்ஸர்வான்பார்த்த மனோகதான் |ஆத்மன்யேவாத்மனா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே || 55||  

பகவத்கீதை, இரண்டாம் அத்தியாயம், 55ஆவது ஸ்லோகம். ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் யார் என்ற விளக்கம் சொல்லும் ஸ்லோகம். 

இதன் பொருள் என்னவென்றால் – பகவான் கூறுகிறார் – ஒரு மனிதன் மனதின் அனைத்து ஆசைகளையும் முற்றிலுமாகத் துறந்து, ஆத்மாவில் நிலைத்திருக்கும் தனது மனதை முழுமையாக திருப்திப்படுத்தும்போது, அவன் நிலையான ஞானமுள்ள மனிதன் என்று அறிவிக்கப்படுகிறான்.

இதனைப் பற்றி விளக்கமாக நாளை காணலாம்.

ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

srivilliputhur pachai sathi utsavam - 2026

அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது.

திரு அத்யயன உற்சவம் : மார்கழி மாதம் 05ம் தேதி இன்று 20-12-2025 முதல் மார்கழி மாதம் 25ம் தேதி 09-01-2026 வரை நடைபெறும்.முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி 30-12-2025 – பரமபத வாசல் திறப்பு காலை 05.30 மணி நடைபெறும்.ஸ்ரீ ஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் மார்கழி மாதம் 24ம் தேதி 08-01-2026 முதல் தை மாதம் 1-ம் தேதி 15-01-2026 வரை நடைபெறும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்திப்பெற்ற பகல்பத்து உற்சவம் வெகு விமர்சையாக இன்று தொடங்கப்பட்டது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சைப் பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிகப் பிரசித்திப்பெற்ற நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்தப்படியாக மார்கழி திருவிழாவின் பகல்பத்து, இராப்பத்து, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும் மிக முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்நிலையில், மார்கழி உற்சவத்தையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் இன்று தொடங்கப்பட்டது. பகல்பத்து நிகழ்ச்சியின், தொடக்கமாக பச்சைப் பரத்துதல் நிகழ்வு ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது.

சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என்றழைக்கப்படும் ஆண்டாளை நந்தவனத்தில் இருந்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் என்பது புராணம். அந்த வழித்தோன்றலில் வந்த பெரியாழ்வாரின் சந்ததியினர் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பகல்பத்து உற்சவம் தொடங்கும் நாளன்று ஆண்டாள், தன்னை எடுத்து வளர்த்த தந்தை பெரியாழ்வாரின் வீட்டுக்கு ரெங்கமன்னாருடன் வருகைத்தந்து சீர் வாங்கிச் செல்வது வழக்கம்.

அவ்வாறு ரெங்கமன்னாருடன், ஆண்டாள் பல்லக்கில் வரும்போது உற்சவர்களின் பார்வைபடும்படி பச்சைக் காய்கறிகளைப் பரப்பி வைத்தால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எப்போதும் பசி, பட்டினியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதிகம்.

இவ்வாறு பரப்பி வைக்கப்படிருக்கும் பச்சை காய்கறிகளை ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் பார்த்தப்பின்பு அதனை பக்தர்கள் தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் தங்களின் வீடுகளிலும் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மார்கழி உற்சவத்தில் ஆண்டாள் கோயிலில் மட்டுமே நடைபெறும் இந்த பச்சைப் பரத்தல் நிகழ்ச்சியைக்காண தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகை தருவார்கள்.

அதன்படி இன்று நடைபெற்ற பச்சைப்பரத்தல் நிகழ்ச்சிக்காகப் பல்வேறு மாவட்டத்திலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஆண்டாள்‌, ரெங்கமன்னரை மனமுருக தரிசித்து வழிபட்டனர். தரிசனத்துக்குப் பின்னர் பச்சைப் பரத்தலுக்காகப் பரப்பி வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை பக்தர்கள் ஆர்வமுடன் தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

பகல்பத்து உற்சவம் இன்று தொடங்கியதையடுத்து ஆண்டாள் கோயிலில் தேதி எண்ணெய்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. பகல்பத்து, இராப்பத்து நிகழ்வாக கொண்டாடப்படும் 20 நாள் உற்சவத்தின் ஒவ்வொரு நாள் விழாவுக்கும் ஆண்டாள் – ரெங்கமன்னர் சாமி சிலைகள் திருக்கோயில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

30-12-2025 அன்று பரமபத வாசல் திறப்பு காலை 05.30 மணி நடைபெறும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவே இராப்பத்து வைபவமும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

The Vanishing Votaries of the December Durbar!

margazhi mahotsav - 2026

— Narasimhan Vijayaraghavan

In the sandalwood-laced stillness of Narada Gana Sabha, where December evenings once swelled with anticipatory murmurs and rustling silks, this Margazhi has arrived with a quieter cadence.

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions, and a globally followed exponent of Sanātana Dharma whose upanyāsams on the Rāmāyaṇam and Mahābhārata have long bridged tradition and modernity. Few contemporary speakers command his reach or rhetorical assurance.

It was therefore ironic that he had earlier, with disarming courtesy, contested my lament on dwindling rasikas, offering his humble opinion that post-pandemic turnouts were buoyant, even furnishing photographs of full houses. One acknowledged that experience can differ, and wished him well. Exceptions, after all, do exist.

Yet the hall that evening spoke its own arithmetic. The balcony—sustained by daily-ticket rasikas and of relatively modest capacity—was reasonably full, a familiar and comforting sight.

The ground floor, however, with its far greater seating capacity and once the true barometer of Sabha vitality, remained conspicuously under-occupied. This was no fleeting impression. Quiet conversations with the canteen staff, those unacknowledged auditors of cultural footfall, confirmed that this was symptomatic of the season rather than an anomaly of the evening.

If the turnout felt ‘high’ to the speaker, that would indeed be a different matter. But the hall was nowhere near the fullness it once routinely achieved, especially on a weekend at a major Sabha. Numbers, stripped of nostalgia, remain stubbornly factual. One rests one’s case there.

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ayodhya temple dwajarohan - 2026

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா|
புரீ துவாராவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயகா:||  

இது நம் பண்டைய பாரதத்தின் ஆழ்ந்த நம்பிக்கை. மிகப் பழமையான நூல்களில் குறிப்பிடப்படுவது. அதன்படி, மோட்சத் தலங்களான ஏழு நகரங்களில் முதலாவது அயோத்தி! அயோத்தி என்றாலே யுத்தம் இல்லாதது, அல்லது யுத்தங்களைக் கடந்தது என்று பொருள். அயோத்தி என்றாலே, ராமன், ராமாயணம், இக்ஷ்வாகு வம்சம் இவை நம் நினைவுக்கு வரும். வானுலகில் இருந்து பூமிக்கு எடுத்துவரப்பட்ட புண்ணிய மண் என்று அயோத்திக்கு சிறப்பு உண்டு. ஆனால் அந்த அயோத்திதான் இந்தக் கலியுகத்தில் பெரும் யுத்தங்களையும் சந்தித்தது. இன்று நாம் காணும் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீராமரின் ஆலயம் உருவானதன் பின்னணியில் மிகப் பெரும் போராட்ட வரலாறே புதைந்திருக்கிறது. 

ஸ்ரீராம ஜன்ம பூமியில் சுமார் 500 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது ஆலயம் அமைந்து, கடந்த 2024 ஜன.22ல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதன் பின்னும் ஆலயம் தொடர்ந்து திட்டமிடப்பட்ட வகையில் கட்டடப் பணிகள் பூர்த்தியாகி, கடந்த 2025 நவ. 25 அன்று, துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது. இதன் மூலம், ஆலயம் முழுவதும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆக்கிரமிப்பாளர்கள் ஒரே நாளில் வாள் முனையில் பலரை ஈவு இரக்கமின்றிக் கொன்று, பலரைத் தங்களின் அடிமைகளாக்கிக் கொண்டனர். ஆனால் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியோர் அதேபோன்ற உயிர்க் கொலை நிகழாவண்ணம் தங்கள் உயிர்களையும் வாழ்க்கையையும் தியாகம் செய்து போராட்டங்கள் பல நடத்தி, இறுதியில் சட்டப் போராட்டத்தின் மூலம் நியாயத்தை மீட்டெடுத்தனர். சத்தியம் ஒரு நாள் உறுதியாக வெல்லும்; ஆனால் அதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பது அயோத்தி விஷயத்திலும் உண்மையானது. 

உலக வரலாற்றிலேயே ஒரு இனம் தனது வழிபாட்டு உரிமையையும் கலாச்சாரத் தொன்மையையும் பாதுகாக்க எப்படிப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்தை மேற்கொண்டது என்பதற்கான ஒரே உதாரணம் அயோத்தி மட்டுமே! உலகின் மற்ற பண்டைய நாகரிகங்கள் எல்லாம் இத்தகைய காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறை வெறியாட்டத்துக்கு உயிரிழந்து உருக்குலைந்து போய்விட்ட நிலையில், அயோத்தி எனும் அடையாளம் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது என்றால், அதன் காரணம் ‘தியாகம்’ என்பதே! 

இந்தத் தியாகப் போராட்டத்துக்கு நீதி எப்படிக் கிடைத்தது?

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டலாம். அதே நேரம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம்! அவ்வகையில், சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டது உச்ச நீதிமன்றம். 

1528: பாபரின் படைத்தளபதி மிர் பாகியால் ராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் மேல் பாபர் மசூதி கட்டப்பட்டது. அப்போது உயிர்த் தியாகம் செய்தோர் எண்ணற்றோர். தொடர்ந்து மன்னர்கள் தலைமையிலும் குழுவாகவும் மீட்புப் போர்கள் தொடர்ந்தன.

1857: முதல் சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்கள் இணைந்து, முகலாய அரசர் பகதூர் ஷா தலைமையில் பொது எதிரியாக ஆங்கிலேயருடன் போராடினர். அப்போது ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட, ராமஜன்ம பூமியை ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்க தீர்மானித்தனர். ஹிந்துக்கள் சார்பில் ராமசந்திரதாஸும் முஸ்லிம்கள் தரப்பில் அமீர் அலியும் சமாதான ஒப்பந்தம் செய்தனர். ஆனால் பிரிவினையை ஏற்படுத்த இருவரையும் கைதுசெய்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 

1885: மசூதி – ராமஜன்ம பூமி இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பக் கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபிர்தாஸ் மனு அளித்தார். மனு தள்ளுபடியானது.

1949: ராமஜன்ம பூமி மைய மண்டபத்தில் ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள் வைக்கப்பட்டன.

1950: ராமர் சிலைகளை வழிபட அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனு அளித்தார். பரமஹன்ஸ ராமசந்திர தாஸ் அங்கே வழிபாடு நடத்த மனு அளித்தார்.

1959: சர்ச்சை இடத்துக்கு உரிமை கோரி நிர்மோகி அகாரா சார்பில் மனு தாக்கலானது. உ.பி., சன்னி வக்பு வாரியமும் அந்த இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.

1961 டிச.18 : 12 ஆண்டுகளில் நீர்த்துப்போக வேண்டிய வழக்கில், சரியாக ஒரு தினம் முன் சன்னி வக்ப் போர்டு தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. ராம்லல்லா சார்பில் அந்த இடத்துக்கு உரிமை கோரி  தேவகி நந்த அகர்வால் வழக்கு தொடுத்தார்.

1980: பிரயாகையில் கூடிய விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத பொதுக் குழு, அயோத்தி பிரச்சினையைக் கையில் எடுத்தது.

1984: நாடு முழுதும் கவனத்தை ஈர்க்க போரட்டங்கள் நடந்தன. மக்களிடம் கொண்டு செல்ல ராமர் ரத யாத்திரை, ராம ஜோதி யாத்திரை, பாதுகை யாத்திரைகள் நடந்தன.

1986, பிப்.1: சர்ச்சை இடத்தில் வழிபாடு நடத்த உள்ளூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1989, ஆக.14: சர்ச்சை இடத்தில் முன்பு இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பாஜக., 89 உறுப்பினர்களுடன் வி.பி.சிங் அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. உ.பி.யில் முலாயம் சிங் யாதவும், பீகாரில் லாலு பிரசாத் யாதவும் முதல்வர் ஆனார்கள். 

அயோத்தியில் ஆலயம் அமையக் கோரி, குஜராத்தின் சோம்நாத்திலிருந்து அயோத்தி நோக்கி 12 மாநிலங்கள் வழியாக ரத யாத்திரை மேற்கொண்டார் எல்.கே.அத்வானி. மக்கள் ஆதரவு பெருகியது. அவர் பீகாரின் சமஸ்திபூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அயோத்தி நோக்கிச் சென்ற லட்சக் கணக்கான கரசேவகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. எனினும் கரசேவைக்கு குறித்த நாளில், லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். குறித்த நேரத்தில் சர்ச்சைக் கட்டடத்தின் மேலேறி காவிக் கொடியை நட்டனர். மசூதியின் அடையாளத்துடன் திகழ்ந்த மூன்று கும்பங்கள் சிதைக்கப்பட்டன. அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ராம பக்தர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

1992, டிச.6: சர்ச்சை இடத்தில் மீண்டும் கரசேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டிச.2ல் அயோத்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் வேண்டுமென்றே தீர்ப்பைத் தள்ளி வைக்க, கோபமுற்ற கரசேவகர்கள் மசூதியை இடித்துத் தள்ளினர். காலை 11 மணிக்குத் தொடங்கிய ஆவேசப் போராட்டத்தில், ஆயுதம் ஏதுமின்றி கட்டடம் நிர்மூலமாக்கப்பட்டது. கரசேவகர்களால் பூஜிக்கப்பட்ட செங்கற்கள் கொண்டு, தற்காலிக கட்டடம் கட்டப்பட்டு, அதில் ராம்லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்டார். அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக., அரசு கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1993, ஏப்.3: சர்ச்சை இடத்தைக் கைப்பற்ற அயோத்யா சட்டம் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி உள்பட அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர்.

1994, அக்.24: பரூக்கி தொடர்ந்த வழக்கில், மசூதி இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல என்று தீர்ப்பானது.

2002, ஏப்: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

2003, மே 13: அஸ்லாம் தொடர்ந்த வழக்கில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வித மத நடவடிக்கைகளும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

2010, செப் 30: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா மூவரும் 2:1 என்ற அளவில் பிரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

2011, மே 9: அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2017, மார்ச் 21: இவ்வழக்கில் அனைத்துத் தரப்பிலும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணலாம் என பரிந்துரைக்கப்பட்டது.

2017, ஆக.7: 1994ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீரப்பை எதிர்த்துத் தாக்கலான மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2018, பிப்.8: அயோத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.

2018, ஜூலை 20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

2018, செப்.27: மசூதி இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல என ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தது. அக்.29 முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது.

2018, அக்.29: ஜனவரி முதல் வாரத்திலிருந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அந்த அமர்வு விசாரணையை முடிவு செய்யும் என்றது நீதிமன்றம்.

2018, டிச.24: 2019, ஜன.4ல் இருந்து மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

2019, ஜன.4: எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து ஜன.10ல் அறிவிக்கப்படும் என்றது உச்ச நீதிமன்றம்.

2019, ஜன.8: மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அமைத்தது.

2019, ஜன.10: வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக்கொள்வதாக அறிவித்ததால், ஜன.29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

2019, ஜன.25: புதிய அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

2019, ஜன.29: உண்மையான உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியது.

2019, பிப்.26: சமரசப் பேச்சுக்கு பரிந்துரைப்பது குறித்து மார்ச் 5ல் முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் பஞ்சு ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் சமரசக் குழுவாக அமைத்தது.

2019, ஏப்.9: உண்மையான நில உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசின் மனுவுக்கு எதிராக நிர்மோகா அஹாரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

2019, மே 9 : சமரசக் குழுவினர் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.

2019,மே 10: ஆக.15-க்குள் சமரசப் பேச்சுவார்த்தையை முடிக்க உத்தரவானது.

2019, ஜூலை 11: சமரசப் பேச்சின் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டது.

2019, ஜூலை 18: சமரசப் பேச்சு தொடரலாம்; ஆக.1-ல் அறிக்கை தாக்கல் செய்க என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஆக.1: சமரசக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

2019, ஆக.2: ஆக.6 முதல் தினமும் விசாரணை நடக்கும் என்றது உச்ச நீதிமன்றம். அதன்படி விசாரணை தொடர்ந்தது.

2019, அக். 4: அக்.17க்குள் விசாரணை முடிக்கப்படும். நவ.17க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றது உச்ச நீதிமன்றம்.

2019, நவ. 9: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், நிலம் மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும். முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக மசூதி கட்ட உ.பி. அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நெடிய சட்டப் போராட்டத்தின் மூலம், அயோத்தி கோயில் பூமி பூஜை கடந்த 2020 ஆக.5ல் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை 2020 மார்ச்சில் கட்டுமானத்தைத் தொடங்கியது. கோவிட் போன்ற தொற்று தடைகள் அகல, விஷ்வ ஹிந்து பரிஷத் ‘விஜய மஹாமந்த்ர ஜப அனுஷ்டானத்துக்கு’ ஏற்பாடு செய்தது. 2024 ஜன.22 அன்று, அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்பகிரகத்தில் ராமர் விக்ரஹப் பிரதிஷ்டை நடக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதன்படி வெகு விமர்சையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்ள, அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.   

ஸ்ரீராமபிரானுக்கும் நம் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. இந்த மண்ணில் தான் ஸ்ரீராமன் தன் பாதம் தோய நடந்தான். அதன் பின் இந்த மண்ணில் ராமனுக்காக ஆண்டாண்டு காலமாய் ஆலயங்கள் பல அமைந்தன. சங்க காலப் புலவர்களும் அப்போது மக்கள் மத்தியில் நிலவி வந்த ராம காதையைத் தம் பாடல்களில் பதிவு செய்தனர். பின்னாளில் எழுந்த பக்தி இயக்கத்தில் ஆழ்வார்களால் ராமன் பெரிதும் கொண்டாடப்பட்டான். ராமனுக்காக எழுந்த அறநெறிக் காவியமாக தமிழின் கவிச் சிறப்புடன் கம்பன் ராமாயணம் செய்தான். ராம நாடகக் கீர்த்தனைகள் என அருணாசலக் கவிராயர் பாடல்கள் புனைந்தார். 

இப்படியெல்லாம் ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச நீதிமன்றத்தில் போராடி, வாதாடி வெற்றித் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் அவர். 94 வயதிலும் தள்ளாத நிலையிலும், அவர் வாதாடிய நேரத்தில், “நீங்கள் அமர்ந்தே வாதாடலாம்” என்று நீதிபதி சொன்னபோதும், “இதை என்  ராமனுக்காகச் செய்கிறேன். அதனால் அமர்ந்து வாதிட மாட்டேன்” என்று சொல்லி, பல மணி நேரம் நின்றே வாதாடி வெற்றி பெற்றுத் தந்தார். ஆலயம் அமையவும், ஆலய கட்டுமானப் பணிகளுக்கும் அதிகபட்ச நன்கொடைகளை தமிழகம் அளித்தது. 

ராமர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை அளிக்க வீடுதோறும் சென்ற ஸ்வயம்சேவகர்களுக்கு பல சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். கும்பாபிஷேக அழைப்பிதழைக் கூட ஒவ்வொருவரும் தங்கள் காலணிகளை கழற்றிவிட்டு, பயபக்தியுடன் பெற்று கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். ராமன் ஆலயத்துக்காக தமிழகத்தின் ஏக்கம் எத்தகையது என்பதை அந்த அனுபவக் கதைகள் உணர்த்தின. என்னதான்  திராவிடமும் நாத்திகமும் வேற்று மதத்தினரும் தமிழகத்தில் ராமனுக்கு எதிராகப்  பேசி வந்தாலும், மக்களின் உணர்வுகளில், மரபணுக்களில் ராம பக்தி இருப்பதை அந்நேரம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆலய பிராணப் பிரதிஷ்டை தினத்தில், தங்கள் வீட்டு வாசலில் அலங்கரித்து, கோலமிட்டு, விளக்கேற்றி,, ராம நாமத்தை ஜபித்தார்கள். இவையெல்லாம் அந்த வெற்றிச் சரித்திரத்தின் பலன்களாக இந்தத் தலைமுறையில் நாம் பார்க்கிறோம். அந்த வகையில் நாம் புண்ணியம் செய்தவர்களே! 

– செங்கோட்டை ஸ்ரீராம்

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

delhi terror attack plotted - 2026

ஒசாமா ராவல் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

பொதுவெளியில் ஆழமாக பரவியுள்ள அறிவுசார் நேர்மையின்மையை தில்லி குண்டு வெடிப்பு அம்பலப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே கேட்டு கேட்டு அலுத்து போன கருத்துக்களும் செயல்களும் அம்பலம் ஏறின. இந்த தாக்குதல் ‘நாட்டை துண்டாடும்’ நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்று தொடங்கி ‘இந்திய சமுதாயத்தை பிரிப்பதற்காக’ என்பது வரை அறிவித்து, எனவே இந்த விஷயத்தை எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று முடிந்தன. ஆனால் இவையெல்லாம் மையமாக உள்ள உண்மையை தவிர்ப்பதாகவே இருந்தன. தாக்குதலை நடத்தியவர் இதை கருத்தியலின் காரணமாக செய்ததாகவும் தன்னார்வத்துடன் முன் வந்து இதை செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த விஷயத்தை எதிர்கொள்ள பலரும் மறுக்கின்றனர்.

உண்மைகளை மறைக்காமல் சொல்ல வேண்டுமென்றால், இந்த தாக்குதலை நடத்தியவர் உமர் நபி என்ற மருத்துவர். நிரூபிக்கப்பட்ட இந்த உண்மை சம்பவத்தை பற்றி மேலும் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

பொதுவெளியில் நீண்ட காலமாக உலா வரும் ஒரு வசதியான மாயையை இது நொறுக்கி தகர்ப்பதாக இருக்கிறது. கல்வியறிவு, வளர்ச்சி, பொருளாதார உயர்வு, சமூக அந்தஸ்து போன்றவை மத ரீதியிலான குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தை மழுங்கடிக்கும் என்று சொல்லப்பட்டு வந்தன. இந்த விவரிப்பு மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் நடந்துள்ள பெரிய பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பலரும் மிகவும் படித்தவர்கள். பிரபல கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள். நவீன வாழ்க்கை போக்குடன் இரண்டற கலந்தவர்கள்.

பயங்கரவாதம் அதாவது பொதுமக்களை கொல்வது, அது எந்த காரணத்திற்காக இருந்தாலும், நிச்சயம் வறுமையினால் வந்தது அல்ல. மத அடையாளத்தின் இயல்பான வளர்ச்சியும் அல்ல. அது மிகவும் சிக்கலானது. அது சிக்கலானது என்று ஒப்புக் கொள்வது தான் தீர்வுக்கான முதல் படியாகும்.

சிக்கலானது என்பதை ஒப்புக் கொள்வது அவசியமாகும் . ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சந்தேகப்படுவது மற்றும் இஸ்லாத்துக்குள் எந்த உள் முரண்பாடும் இல்லை என்று மறுப்பது ஆகிய வழக்கமான தடத்தில் நடை போட்டால் நாம் எதையுமே கற்றுக் கொள்ள முடியாது. கற்றுக் கொள்ளவில்லை என்று பொருளாகும்.

அந்த தாக்குதல் நம்மை நெருடலான கேள்விகளை எதிர்கொள்ள தூண்ட வேண்டும். கல்வி அறிவு பெற்ற தனிநபர்கள் எப்படி தங்கள் சக மனிதர்கள் மீது வன்முறையை பயன்படுத்த துணிகிறார்கள்? ஒரு வெற்றிகரமான மருத்துவர் எப்படி தன்னை ஒரு தற்கொலை குண்டாக மாற்றிக் கொண்டார்? அந்த நிலைக்கு அவர் வர தூண்டியது எது? பயங்கரவாதத்தை நோக்கி ஈர்க்க அடி நீரோட்டமாக இருக்கும் கருத்தியல் , உளவியல் அல்லது அரசியல் சித்தாந்தம் எது ? சமூக அமைப்பா, உளவுத்துறையா, நிர்வாக அமைப்பா எதன் தோல்வியால் இந்த சம்பவம் நடந்தது? இது போன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நாம் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ?

2025 நவம்பர் 10ஆம் தேதி டில்லியில் நடந்த தாக்குதல் பொதுவெளியில் விவாதத்தை கிளப்பியுள்ளது. முஸ்லிம்கள் சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறும் ஹிந்து சமுதாயத்தினர் தாங்கள் சொல்லியது நிரூபிக்கப்பட்டு விட்டதில்லையா என்று நெஞ்சை நிமிர்த்தி கேட்கிறார்கள். இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லியபடி முஸ்லிம்கள் தங்கள் மதத்தை பாதுகாக்க முனைகிறார்கள். இடதுசாரிகள் இந்த தற்காப்பு நிலையை கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்த சந்தடியில் நேர்மையான சுயபரிசோதனை என்ற விஷயம் முற்றிலும் அடிபட்டு போயுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து நிற்கின்றனர் குடும்பத்தினர். மக்கள் மாண்டுள்ளார்கள். ஆனாலும் விவாதமானது உண்மையை தேடுவதற்கு பதிலாக குற்றச்சாட்டுகளும் மறுப்புகளும் என்ற வலையில் சிக்கிக் கொண்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் யார் என்ற அடையாளம் சம்பவத்தை பற்றி மேலும் கவலையை ஏற்படுத்துகிறது . உமர் நபி வறுமையில் திண்டாடியவரோ, படிப்பறிவு இல்லாத இளைஞனோ இல்லை. அவர் ஒரு மருத்துவர். அவரது விவரங்களை பார்க்கும் போது பொருளாதார வளர்ச்சி, தொழிலில் வெற்றி, சமூக மரியாதை ஆகியவை தனிநபரை பயங்கரவாதத்திலிருந்து விலக்கிவிடும் என்ற வசதியான விவரிப்பு பொய்யாய் போயுள்ளது.

இந்த விவரிப்பு பொய்யானது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான அழிவை ஏற்படுத்திய பயங்கரவாதிகள் – அல்கொய்தா தொடங்கி ஐ எஸ் ஐ எஸ், இந்தியன் முஜாஹிதீன் வரையிலும் – பலரும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். பயங்கரவாதமானது வறுமையின் பிள்ளை அல்ல, அது நம்பிக்கை பெற்று வளர்த்த குழந்தை.

அந்த நம்பிக்கை கருத்தியலால், இறையியலால், உளவியலால் அல்லது அரசியலால் வந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் அது வறுமையினாலோ புறக்கணிப்பினாலோ வந்ததல்ல. ஒரு படித்த மருத்துவரை மனித வெடிகுண்டாக மாற்றும் சக்தி இதற்கில்லை.

இது தீவிரமாக , ஆழமாக அலசப்பட வேண்டிய விஷயம். மிகவும் படித்த தனி மனிதன் எப்படி மிக தீவிரமான வன்முறையை ஏற்றுக் கொள்கிறான் ? எது அந்த நம்பிக்கையை உறுதியாக்கியது? எந்த கருத்தியல் சூழல் வன்முறையை நியாயப்படுத்துகிறது அல்லது வன்முறையை புனிதச் செயலாக கருதுகிறது? இது போன்று சிந்தனைகளுக்கு உரமிட்டு வளர்க்கும் சமூக அல்லது அரசியல் எது ? காவல்துறை, உளவுத்துறை , சமூக சூழல் என எந்த நிறுவனத்தின் தோல்வியால் இந்த செயல் நடந்தேறியது ? இனி எப்போதும் இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க நாம் என்ன விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ?

முரண்பாடு மிகவும் தெளிவாக தெரிகிறது. ஒரு முஸ்லிம் அரிய செயலைச் செய்தால் – சலாஹூதீன் அய்யூம் (எகிப்து அரசராக இருந்த வரலாற்று நாயகர்) அல்லது ஜோஹ்ரான் மம்தானி (நியூயார்க் மேயர்) – அவர்களை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதை இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறார்கள். (மகாராஷ்டிரா) குர்லாவில் உள்ள இளைஞர்கள் ஜோஹ்ரானின் வெற்றியை தங்கள் வெற்றியெனக் கூறுகிறார்கள்.

ஆனால் வெளிப்படையாக இஸ்லாத்தின் பெயரில் வன்முறை இழைக்கப்படும் போது அதே முஸ்லிம் சமுதாயம் இது இஸ்லாம் அல்ல என்ற மறுப்புக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது. வெற்றி என்றால் ஒட்டுமொத்த சமுதாயமும் பயங்கரவாத செயல் என்றால் தனி நபர். இது தார்மீக முரண்பாடு.

உலகளவில் கள்ளக் கொடி தாக்குதல் (ஒருவர் செய்த செயலுக்கு பழியை வேறொருவர் மீது சுமத்துவது அதாவது முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்துவது ) நடப்பதாக ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட , ஒரு நாட்டின் தலைநகரின் மையப் பகுதியில் கார் வெடிகுண்டு வெடிப்பை வீண்பழி சுமத்தும் சதி செயல் என்று எந்த சான்றும் இல்லாமல் புறம் தள்ள முடியாது. இஸ்லாமிய வெறுப்பு மனநிலை என்று முத்திரை குத்துவது இடதுசாரிகளுக்கு சுகபோதை தருவதாக இருக்கலாம். ஆனால் அவர்களின் வசதியான , கற்பனை வாதத்திற்கு உள்ளாகாமல் இந்த பயங்கரவாத செயலுக்கு பின்னால் இருக்கும் கருத்தியலை பற்றி விவாதிக்க வேண்டும்.

சூழ்நிலை அக்டோபர் 7 இல் (இஸ்ரேலில்) நடந்ததை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அங்கும் ‘தற்காப்பு’ என்ற பெயரில் திரள் படுகொலை நியாயப் படுத்தப்பட்டது. இஸ்ரேல் உளவுத்துறையின் தோல்வி என்று பழி சுமத்தியவர்களின் கருத்தியல் சாய்வு வெளிப்படையாக தெரிந்தது.

இந்த நிலையில் ஒரு கேள்வி தானாகவே எழுகிறது. உமர் நபி பொதுமக்களை திரள் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்று அதே அறிவு ஜீவிகளுக்கு முன்னதாக தெரிய வந்தால் அவர்கள் அரசுக்கு அதை சொல்லி எச்சரித்திருப்பார்களா ?அல்லது முஸ்லிம்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் பாருங்கள் என்று கும்பல் கூடி வாதிட்டு கொண்டிருப்பார்களா ?

‘ பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை ‘ என்று வாதிடுவதும் , பயங்கரவாதிகள் குரான், ஹதீஸ் வசனங்களை மேற்கோள் காட்டி தங்கள் செயலை நியாயப்படுத்தும் போது பரிதாபமாக சரிந்து விடுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தங்களை தூண்டிய கருத்தியல் பற்றி கூறி தங்கள் செயலை நியாயப்படுத்தும் போது அது பற்றி வேறு விதமாக விளக்கம் கூற வெளியில் இருக்கும் அந்நிய தரப்புக்கு அதிகாரம் இல்லை.

முஸ்லிம் சமுதாயத்தினர் இதை நேரடியாக எதிர் கொள்ள வேண்டும் . சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுவது இந்துத்துவர்களின் தரப்பை ஏற்பது என்று கருதக்கூடாது. மாறாக தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டுமென இஸ்லாமிய சமுதாயத்துக்குள்ளிருந்து எழும் கோரிக்கையாகும்.

பல முஸ்லிம்கள் வெடிகுண்டு தாக்குதலை கண்டிக்க தயங்குகிறார்கள். அவர்களே இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். தாக்குதல் அப்பாவி மக்கள் மீது மட்டுமல்ல. இவர்கள் எதை உயர்த்தி பிடிக்கிறார்களோ அதே மதத்தின் கௌரவத்தை சிதைக்கும் செயல் இது என்பதை மறந்து விடுகிறார்கள்.

நூபூர் சர்மா இஸ்லாமிய மதத்தை அவமதித்து விட்டார் என்று கூறி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீதிக்கு வந்து போராடினார்கள் என்றால் 13 பேர்கள் இஸ்லாத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டதற்காக அதைவிட பத்து மடங்கு அதிகமான முஸ்லிம்கள் வீதிக்கு வந்து கண்டனம் செய்து இருக்க வேண்டும் . அதற்கு மாறாக தனிப்பட்ட முறையில் படுகொலையை நியாயப்படுத்தியும் பொது வெளியில் அதை தவிர்த்து விட்டும் செல்கிறார்கள். தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்ளும் இந்த தார்மீக உணர்வு பிற்போக்குத்தனத்தின் உச்சமாகும்.

இடதுசாரி இகோ சிஸ்டம் வழக்கமான பாணியில் எதிர்வினையாற்றி இருக்கிறது. உளவுத் துறையின் செயலின்மை, ராஜினாமா செய், புலன் விசாரணையை இந்த அளவில் நிறுத்து என்று கூறுகிறார்கள் . இதுபோன்ற கொடூர திரளப்படுகொலையை செய்ய தூண்டிய கருத்தியல் பார்வை எது என்பதை ஆய்வு செய்ய மறுக்கிறார்கள். 13 பேர்கள் மாண்டுள்ளார்கள். ஆனாலும் விவாதம் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இஸ்லாமிய வெறுப்பு என்று திசை திருப்பப்படுகிறது. தில்லி வீதியில் கிடக்கும் 13 சடலங்களின் எடையை விட இந்த வாதத்திற்கு கூடுதல் எடை கொடுக்கப்படுகிறது. அறவுணர்வின் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

முஸ்லிம்கள் இதை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் முன்பு மூன்று வழிகள் உள்ளன. (மார்க்க) அறிஞர்கள் சொல்வதை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்வது. மரபுகளை மறு விளக்கம் செய்வது. நவீன காலத்துக்கு ஒவ்வாத வசனங்களை விலக்கி விடுவது. இதைத்தவிர வேறு எதைச் செய்தாலும் அது பிரச்சினையைத் தவிர்த்து விட்டு சுற்றி வளைத்து செல்வதாகும்.

கடினமான கேள்விகளை எதிர்கொள்ள மறுக்கும் சமுதாயத்தினால் தன் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாத செயல்களை அர்த்தமுள்ள வகையில் எதிர்க்க முடியாது. இந்த நேரத்தில் தார்மீக தெளிவு என்பதுதான் முன்னேற்றத்திற்கான ஒரே வழி.

ஒருபுறம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளி ஆக்குகின்றனர். மறுபக்கம் இஸ்லாமிய சமுதாயத்தில் எந்த விதமான உள் முரண்பாடும் இல்லை என மறுத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்த இரண்டில் நாம் சிக்கிக் கொண்டால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. இது குறைகூறிக் கொண்டிருப்பதற்கான நேரம் அல்ல. சரியான தீர்வுக்கு நேர்மையாக முயல வேண்டும்.

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக – பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு – சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

நன்றி : மில்லி கிரானிக்கல்


கட்டுரையாளர் மும்பையை சேர்ந்தவர். உலக விவகாரங்கள், நீதித்துறை , சமுக அடையாளங்கள் பற்றி பிரபல செய்தி ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்


IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

ind vs sa t20 winner cup - 2026

இந்தியா தென் ஆப்பிரிக்கா டி-20 தொடர் 2025 – தொடரை இந்திய அணி வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

            தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் பயணம் செய்து வருகிறது. மூன்று டெஸ்ட்கள் கொண்ட தொடர், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடர், ஐந்து டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆகியவற்றில் ஆடியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வென்றது. ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி வென்றது. அடுத்து நடந்த டி-20 தொடரிலும் இந்திய அணி வெற்றி பெர்றிருக்கிறது.

            முதல் டி-20 ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் ஆடி 6 விக்கட் இழப்பிற்கு 175 ரன் (ஹார்திக் பாண்ட்யா 59 ரன்) எடுத்தது. இரண்டாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வியுற்றது. இரண்டாவது டி-20 ஆட்டம் சண்டிகர் முல்லன்பூரில் நடந்தது. இங்கு ஐ.பி.எல் ஆட்டங்கள் இதற்கு முன்னர் நடந்துள்ளது. ஆனாலும் இதுவே இங்கு நடக்கும் முதல் பன்னாட்டு போட்டியாகும். இதில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கட் இழப்பிற்கு 213 ரன்கள் (க்விண்டன் டி காக் 90, வருண் 2 விக்கட்) எடுத்தது. பதிலுக்கு இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன் (திலக் வர்மா 62, பார்ட்மேன் 4 விக்கட்டுகள்) எடுத்து அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது. இதனால் தோல்வியுற்றது.

            மூன்றாவது ஆட்டம் தர்மசலாவில் நடந்தது. இங்கே முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்னுக்கு (மர்கரம் 61 ரன்) அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. பின்னால் ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 120 ரன்கள் (அபிஷேக் ஷர்மா 35, கில் 28, திலக் 26*) எடுத்து வெற்றி பெற்றது. நான்காவது டி 20 ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. ஆனால் பனி, புகைப்பனி காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் நான்காவது டி-20 ஆட்ட முடிவில் தொடர் 2-1  என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும்; தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் தொடர் சமனி முடியும் என்ற நிலை இருந்தது.

            ஐந்தாவது டி-20 ஆட்டம் அகமதாபாத்தில் நடந்தது. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் தொடக்கவீரராக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் (22 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) ஆடினார். அவரும் அபிஷேக் சர்மாவும் (21 பந்துகளில் 34 ரன்கள், 6 ஃபோர், 1 சிசர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். அபிஷேக் சர்மா 5.4 ஓவரில் ஆட்டமிழக்க, திலக் வர்மா (42 பந்துகளில் 73 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) ஆடவந்தார். சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 5 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஆடவந்த ஹார்திக் பாண்ட்யா (25 பந்துகளில் 63 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார். அதிலும் அந்த 14ஆவது ஓவர் மறக்க முடியாத ஓவர். முதல் பந்தில் திலக் வர்மா ஒரு சிக்சர் அடித்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்து பாண்ட்யா மட்டையாட வந்தார். மூன்றாவது பந்தில் ஒரு ஃபோர், நாலாவது பந்தில் ஒரு சிக்சர், ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர், ஆறாவது பந்தில் ஒரு ஃபோர் என பாண்ட்யா 20 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 27 ரன்கள் எடுக்கப்பட்டது. பாண்ட்யா 19.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது ஆடவந்த ஷிவம் துபே (3 பந்துகளில் 10 ரன்) சிறப்பாக ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது.

            இரண்டாவதாக ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (35 பந்துகளில் 65 ரன், 9 ஃபோர், 1 சிக்சர்) ரீசா ஹெண்ட்ரிக்ஸ் (12 பந்துகளில் 13 ரன்) இருவரும் நல்ல் தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய டிவால்ட் பிரிவிஸ் (17 பந்துகளில் 31 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) டேவிட் மில்லருடன் (14 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர்) இணைந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஏழாவது ஓவரில் முதல் விக்கட்டை வருண் வீழ்த்தினார். இரண்டாவது விக்கட்டை (டி காக்) பும்ரா 11ஆவது ஓவரில் வீழ்த்தினார். 12ஆவது ஓவரில் மூன்றாவது விக்கட் (டிவால்ட் ப்ருவிஸ்) ஹார்திக் பாண்ட்யாவால் எடுக்கப்பட்டது. 13ஆவது ஓவரில் வருண் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். 15ஆவது ஓவரில் அர்ஷதீப் டேவிட் மில்லரின் விக்கட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் வருண் மற்றொரு விக்கட்டை வீழ்த்தினார். 17ஆவது ஓவரில் பும்ரா மார்கோ யான்சன் விக்கட்டை வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் தெ ஆப்பிரிக்க அணி 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

            இந்தத் தொடரில் பும்ரா 100 விக்கட்டுகள் எடுத்த சாதனையைப் புரிந்தார். அதுபோல ஹார்திக் பாண்ட்யா 100 விக்காட்டுகள் எடுத்தார்; டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பரமன் அளித்த பகவத் கீதை!

bhagavat githa series - 2026

பகவத் கீதை: தொடர் பகுதி 1

முனவர் கு.வை. பால சுப்பிரமணியன்

பகவத்கீதை பற்றி எழுத வேண்டும்; வீடியோ வெளியிடவேண்டும் என எனக்கு ஒரு நீண்டநாள் ஆசை. 2016ஆம் ஆண்டு மதிமுகம் தொலைக்காட்சியில் பகவத்கீதை பற்றிப் பேச ஒரு அழைப்பு வந்தது. என்னுடைய ஆசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் மூலமாக வந்த அழைப்பு அது.

மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு திருக்குறள், பைபிளில் இருந்து ஒரு வசனம், குரான் கருத்துக்கள் என காலை நேரத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அதில் பகவத்கீதை பற்றிப் பேச என்னை அழைத்தார்கள். நான் அதற்கு முழுமையாகத் தயாராகவில்லை. இருப்பினும் எட்டு நாட்களுக்குத் தேவையான வீடியோக்களைப் பதிவு செய்துவிட்டு வந்தேன். அவர்களும் அவற்றை 2017இல் ஒளிபரப்பினார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை; நானும் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை.

பின்னர் ஸ்ரீடிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாபாரதம் பற்றி ஒரு மணி நேர சொற்பொழிவுகளாக 10 சொற்பொழிவுகள் ஆற்ற நான் வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர்கள் தினமும் 10 நிமிடங்களாக எத்தனை நாள்கள் வேண்டுமென்றாலும் நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம். பின்னர் அது ஐந்து நிமிடமாகக் குறைக்கப்பட்டது. நானும் ஒரு 15 எபிசோடுகள் வீடியோ பதிவு செய்து கொடுத்தேன். அவர்கள் ஒளிப்பரப்பினார்களா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நானும் அவர்களை தொடர்பு கொள்வதை விட்டுவிட்டேன்.

இதனை வீடியோவாகக் கொண்டுவரலாம் என நினைத்தேன். எனக்கே பாலாவின் குரல் என்ற யூட்யூப் சேனல் இருக்கிறது. ஆனால் வீடியோக்கள் தயார் செய்வதில் நிறைய நேரம் செலவானது.

சிலப்பதிகாரம் பற்றி ஒரு வீடியோத் தொடர்  தயாரித்து அது 10 வீடியோக்களுடன் நிற்கிறது. வீடியோ எடிட்டிங்கிற்காக யாரையாவது பணிக்கமர்த்தலாம் என்றால் அதற்கு பணச் செலவாகிறது. வீடியோ போடுவதை என் மகள் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவளை உற்சாகப் படுத்துவதற்காகச் செய்தது. அவள் குணமடைந்து விட்டாள். அவளுக்கென்று யூட்யூப் சேனல். இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கிறது. திருமணமாகிச் சென்று விட்டாள். எனவே அவள் வேலையைச் செய்வதற்கே அவளுக்கு நேரம் போதவில்லை. எனவே வீடியோ எண்ணம் கைவிடப்பட்டது.

இருந்தாலும் ஆசை அரித்துகொண்டிருந்தது. கம்பர் இராமாயணம் எழுதும் முன்னர் சொன்னதுபோல

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

நானும் பகவத் கீதை பற்றி எழுதலாம் என முடிவு செய்தேன். இதற்குச் சில காரணங்கள் உள்ளன.

(1) எழுதுவது கைவந்த கலை. யாருடைய உதவியும் தேவையில்லை. ஒரு பத்து பகுதிகள் எழுதிய பின்னர் முகநூலிலோ, அல்லது நண்பர் திரு செங்கோட்டை ஸ்ரீராம் மனது வைத்தால் தினசரி மின் நாளிதழிலோ எழுதலாம் என நினைத்தேன். செங்கோட்டை ஸ்ரீராம் தினசரியில் எழுத ஒப்புதல் தந்துவிட்டார். அவருக்கு என் நன்றி. இதோ தொடங்கி விட்டேன். எல்லாம் வல்ல அந்த கண்ணபிரான் எனக்கு அருள் செய்யவேண்டும்.

பகவத்கீதை பற்றி நான் நினைப்பவற்றையெல்லாம் எழுத எனக்கு நீண்ட ஆரோக்கியமும் ஆயுளும் சூழலையும் அருளவேண்டும் என வேண்டிக்கொண்டு, எழுதத் தொடங்குகிறேன்.

முதலில் முன்னுரையாகச் சில கட்டுரைகள். பின்னர் மகாபாரதம் பற்றிய கட்டுரைகள். அதன் பின்னர் பகவத் கீதை எனத் திட்டமிட்டிருக்கிறேன். நண்பர்கள் அனைவரும் என்னை இக்காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

madurai temple kalyana utsav devotees - 2026

“வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்.”

வாழ்க்கை என்பது உங்கள் உணர்வுகள், உங்கள் செயல்கள் மற்றும் உங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி போன்றது. வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களின் பிரதிபலிப்பே என்பதே இதன் கருத்து. இதற்கு 3 விளக்கங்கள் உள்ளன.

நீங்கள் பழகும் மக்கள் உங்கள் மனப்பான்மைக்கும் நடத்தைக்கும் ஏற்ப எதிர்வினை ஆற்றுவார்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ, அதையே திரும்பப் பெறுகிறீர்கள் என்பதே இங்குள்ள கருத்து. நீங்கள் அவர்களிடம் அன்பாக இருந்தால், அவர்களும் உங்களிடம் அன்பாக இருப்பார்கள்; நீங்கள் அவர்கள் மீது அக்கறை காட்டினால், அவர்களும் உங்கள் மீது அக்கறை காட்டுவார்கள்; நீங்கள் அவர்களுக்கு உதவினால், அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள், இப்படியே தொடரும்.

ஆனால், இதற்கு மாறாக, நீங்கள் எதிர்மறையாக இருந்தால், நீங்கள் வெறுத்தால், நீங்கள் கோபமாக இருந்தால், நீங்கள் பதட்டமாக இருந்தால், இப்படியே தொடர்ந்தால், இந்த உணர்வுகள் அனைத்தும் விரும்பத்தகாத நடத்தைகளுக்கு வழிவகுக்கும்.

மக்கள் உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எதிர்வினையாற்றுகிறார்கள். மக்கள் உங்கள் மனநிலையையும் உணர்வுகளையும் எதிரொலிப்பார்கள். வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் அவர்களை நடத்தும் விதத்திற்கு ஏற்ப அவர்களும் உங்களை நடத்துவார்கள்.

உங்கள் விதியின் எஜமானர் நீங்களே. உங்கள் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நீங்களே (உங்கள் மனமே) காரணம், அதே நேரத்தில் தீர்வும் கூட. உங்கள் சொந்தத் தடைகளையும் தடங்கல்களையும் நீங்களே உருவாக்குகிறீர்கள். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான தடைகள் நாமாகவே ஏற்படுத்திக் கொண்டவை.

நீங்களே உங்கள் மோசமான எதிரி. தோல்வி பற்றிய பயமும் எதிர்மறை சிந்தனையும் தன்னம்பிக்கையின்மைக்குக் காரணமாகின்றன. மேலும் உங்கள் உண்மையான திறனை அடைய உங்களைத் தடுக்கின்றன. நினைவில் கொள்ளுங்கள், வரம்புகள் நம் மனதில் மட்டுமே உள்ளன. மறுபுறம், உங்கள் சொந்த வெற்றிக் கதையை நீங்களே உருவாக்க முடியும். வாழ்க்கையை ஒரு புத்தகம் போல நினைத்துப் பார்க்க விரும்புகிறோம். ஒவ்வொரு நபருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது. நம்மில் ஒவ்வொருவரும் நம் சொந்தக் கதையின் எழுத்தாளரே.

இந்தக் கதையில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். இந்த பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மக்களையும் நீங்களே தீர்மானிக்கிறீர்கள். உங்கள் சொந்த சூழ்நிலைகளையும் உங்கள் சொந்த குணாதிசயத்தையும் உருவாக்குபவர் நீங்களே. உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் உங்களால் மாற்ற முடியும்.

muslim prayer - 2026
#image_title

ஆனால் முதலில் உங்கள் மனதை மீட்டமைத்து, அதை மறுஆக்கம் செய்து, பின்னர் புதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இது எளிமையானது, அதே நேரத்தில் சிக்கலானதும் கூட. நேர்மறையாக இருப்பதும், உங்கள் அச்சங்களை விலக்கி ஓடுவதும் தான் முக்கியம்.

நீங்கள் விரும்பும் அளவுக்குப் பெரியதாகச் சிந்தியுங்கள், நீங்கள் உண்மையில் யார் என்பதை உலகிற்குக் காட்டத் தயங்காதீர்கள், ஏனென்றால் உங்கள் சொந்த விதியின் எஜமானர் நீங்களே.

பிரபஞ்சத்தின் மர்மமான செயல்பாடுகளும் ஈர்ப்பு விதியும். பிரபஞ்சம் நீங்கள் கேட்பதை உங்களுக்கு வழங்குகிறது (நனவாகவும் ஆழ்மனதாலும்). அது ஏன் அல்லது எப்படி வேலை செய்கிறது என்று நமக்குத் தெரியாது, அது நமக்கும் மற்ற பலருக்கும் வேலை செய்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரியும்.

இது ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அல்லது பொறிமுறை போன்றது. நீங்கள் எதைப் பற்றி நினைக்கிறீர்களோ, அதை ஈர்க்கும் ஒரு காந்தம் என்று உங்களை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். ஒருவேளை, உங்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில், நீங்கள் நீண்ட காலமாகப் பார்க்காத ஒரு நண்பரிடமிருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரலாம். காலம் தோன்றியதிலிருந்தே, மனிதர்கள் இந்த ஈர்ப்பு விதியைத் தங்கள் பிரார்த்தனைகள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர்.

மக்கள் தாங்கள் கேட்பதைப் பெறுவதற்காகவே பிரார்த்தனை செய்கிறார்கள். அனைவரும் (மத நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் மத நம்பிக்கையற்றவர்கள்) ஏதோ ஒரு வகையில் பிரார்த்தனை செய்கிறார்கள்; சிலர் கடவுளிடம் பிரார்த்திக்கிறார்கள், மற்றவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தேடி பிரபஞ்சத்திடம் கோரிக்கைகளை அனுப்புகிறார்கள்.

நீங்கள் எந்தக் கடவுள், சக்தி அல்லது கூறுகளை நோக்கிப் பிரார்த்திக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் விரும்புவதைக் கேட்பதுதான் உண்மையில் முக்கியம். ஆனால் ஒரு கட்டளையை விதிப்பதோ அல்லது ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி ஆணையிடுவதோ அல்ல. நீங்கள் கேட்பதை ஈர்க்க, நீங்கள் ஒரு தெளிவான மற்றும் யதார்த்தமான கோரிக்கையை எழுப்ப வேண்டும்.

ஏனென்றால், நமது யதார்த்தம் காரணம் – விளைவின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது, எந்தவொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றிற்கும் யார் காரணம்? இறுதியில் அது ‘நான்’ தான். அந்தப் பெரிய ‘நான்’. அந்தப் பேரறிவு. பேரறிவின் ஒவ்வொரு அசைவும் யதார்த்தத்தில் அதன் பிரதிபலிப்பைக் கொண்டுள்ளது, அது ஒரு கண்ணாடி போன்றது! ஆனால் 3D பரிமாணங்களில் நாம் பழகிய பிரதிபலிப்பு விதிகளுக்கு அது கீழ்ப்படிவதில்லை.

இந்த விஷயத்தில், பரிமாணங்கள் உயர்வானவை, எனவே நமது எண்ணங்கள் நமக்கு எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதை நாம் தனித்தனியாகப் புரிந்துகொள்வது கடினம்.

வரலாற்று உணர்வையும், சமூக மற்றும் கலாச்சார சூழல் மற்றும் அர்த்தங்கள் குறித்த எந்தவொரு உணர்வையும் நாம் இழந்துவிட்ட இந்தச் சூழ்நிலையில் — அதாவது, வளர்ந்த உலகின் இன்றைய சூழ்நிலையில் — தொடர்பு கொள்வதற்குப் பொருத்தமான எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் நம்மைப் பற்றி நமக்கு எதையாவது சொல்லக்கூடிய முக்கியமான அல்லது உண்மையான தொடர்புகளும் இல்லை. இதன் விளைவாக, நாம் நம்மை நாமே கண்டுகொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமது அகங்காரத்தையும் நமது உணர்ச்சிகளையும் எதிர்கொள்வது போல் இருக்கிறது.

வாழ்க்கை ஒரு “கண்ணாடியாக” மாறுகிறது. நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள, நாம் ஆற்றல் மற்றும் அதிர்வுகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்ற டெஸ்லாவின் கூற்றை நாம் எடுத்துக்கொண்டால், அதன்படி, நீங்கள் எந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறீர்களோ, அதையே நீங்கள் பதிலாகப் பெறுவீர்கள்.

மேலும், என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல, ஒரு சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதே முக்கியம் என்று மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் கண்ணாடிக் குவளையை பாதி நிறைந்ததாகப் பார்க்கிறீர்களா அல்லது பாதி காலியாகப் பார்க்கிறீர்களா என்பதைப் பொறுத்தது அது. வாழ்த்துகள்!

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

poornachandran suicidal for thiruparankundram - 2026

திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இந்துக்கள் மனது புண்படும்படி நடந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி வழங்கும் வகையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
 
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் மனம் விரக்தியிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டிலும் மனம் வேதனையடைந்த மதுரையைச் சேர்ந்த பூரணச்சந்திரன் என்பவர் தீக்குளித்து மரணம் அடைந்துள்ளார்.
 
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. சமீபத்தில் சில ஆண்டுகளாக பழமையான வழக்கம் மாற்றப்பட்டு மோட்க்ஷ தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
 
இதன் அடிப்படையில் பழங்காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அது இந்துக்களின் உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை மாற்றக்கூடாது என்றும், அது முருகப்பெருமானுக்கு சொந்தமான இடம் என்றும் அதில் தீபமேற்றி அதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
 
நீதிமன்ற தீர்ப்பில் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நூறு வருடங்களாக ஏற்றப்படாமல் இருந்த கார்த்திகை தீபம் மலை உச்சியில் ஏற்றப்படும் என்ற எதிர்ப்பார்ப்போடு மகிழ்ச்சியிலும் இருந்தார்கள்.
 
ஆனால் தமிழக திமுக அரசு இந்து விரோத மனப்பான்மையுடன் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றவில்லை. மனுதாரர்கள் மத்திய அரசு பாதுகாப்பு படையுடன் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னரும் தீபம் ஏற்ற சென்ற மனுதாரர்களையும் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தது.
 
இந்த செயலால் தமிழகத்தில் முருகன் மீது அளப்பரிய பக்தியை கொண்ட மக்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.
 
இது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தில் அரசு தரப்பிலும் இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை தரப்பிலும் இந்து விரோத மனப்பான்மையில் தன் வாதத்தை எடுத்து வைத்தார்கள்.
 
அது தீபத்தூண் அல்ல சர்வே கல் என்றும், அது தர்காவுக்கு சொந்தமானது என்றும் பல்வேறு வகையான இந்து விரோத இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலான வாதங்களை முன் வைத்தனர்.
 
இதனால் முருக பக்தர்கள் பலர் மிகுந்த மன வேதனையிலும் விரக்தியிலும் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில் இன்று மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்ற முருக பக்தர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றாமல் தவறான முடிவை எடுத்து இந்துக்களுக்கு விரோதமாக தீபம் ஏற்றவில்லை என்ற மன வேதனையிலும், மன விரக்தியிலும் அடுத்த வருடம் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வலியுறுத்தியும் தீக்குளித்து இறந்துள்ளார்.
 
அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் பக்தியையும் காப்பாற்றி அவர்களுக்கான உரிமையை பெற்று தர வேண்டிய அரசே, இந்து மதத்திற்கு எதிராக இருந்து இந்துக்களின் உரிமைக்கு எதிராகவும் இழிவுபடுத்தும் வகையிலும் செயல்படுவது என்பது கண்டிக்கத்தக்க விஷயமாகும்.
 
இவ்வாறான இந்த செயலால் மனம் வேதனை அடைந்து தன்னைத்தானே தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரன் அவர்களின் இறப்பிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 
ஆன்மீக பூமியான தமிழகத்தில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு இந்து தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டு அழித்துக் கொள்ளும் நிலையில் தமிழகம் இருக்கிறது.
 
இந்துக்களுக்கு துரோகம் விளைவித்து அதன் காரணமாக மன வேதனையிலும் மனவிரக்தியிலும் இறந்த மதுரையைச் சார்ந்த பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி வழங்கும் வகையில் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்துகிறது…

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்றம் உத்திரவிட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கும் முஸ்டாலின் அரசை கண்டித்து தீக்குளித்து இன்னுயிர் நீத்த பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்டு நெல்லைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு #கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் டாக்டர் அரசுராஜா தலைமையில் 21/12/2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, நெல்லை மாநகர் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

namakkal anjaneyar 1 lakh vada - 2026

ஹனுமத் ஜயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் இன்று காலை தங்கக் கவசம் சார்த்தி ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். கடந்த ஒரு வார காலமாக தயார் செய்யப்பட்ட வடைகள் மாலைகளாகக் கோக்கப்பட்டு இன்று காலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது. 

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை. இங்கே நாமகிரி தாயார் உடனாய நரசிம்மர் ஆலயம் குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது.  இந்த கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயில் தனிக் கோயிலாக அமைந்திருக்கிறது. 

இங்கே ஆஞ்சநேயர் இடுப்பில் வாளுடனும், சாளக்கிராம மாலையுடனும் காட்சியளிக்கிறார்.  சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என கருதப்படும் இங்கே கூரையோ, கோபுரமோ இன்றி வெட்டவெளியில் நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார் ஆஞ்சநேயர். 

அனுமத் ஜயந்தியான இன்று,  இந்த கோயிலில் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமத் ஜயந்தி விழாவின் முக்கிய நிகழ்வாக, இங்கே 1,00,008 வடைகள் கொண்ட பிரம்மாண்ட மாலை ஆஞ்சநேயருக்கு அனுபவிக்கப்படும்.  இதை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு இன்று வருகிறார்கள். 

namakkal vadai preparation - 2026

முன்னதாக  இந்த வடை மாலையை தயாரிக்கும் பணியில்  திருவரங்கத்தை சேர்ந்த சுமார் 40 சமையல் கலைஞர்கள் கடந்த ஒரு வார காலமாக  ஈடுபட்டிருந்தனர். இதற்காக ஒரு லட்சத்துக்கு எட்டு வடைகளைத்  தயாரித்து, மாலையாக கோக்கும் பணி நிறைவடைந்தது. இந்த வடை தயாரிக்க, 2.5 டன் உளுத்தம் பருப்பு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு மற்றும் 700 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தப்பட்டது.  ஒரு சொட்டு நீர் கூட சேர்க்காமல் உளுந்த மாவு பிசைந்து, எண்ணெயில் பொரித்து எடுக்கப்பட்டது. இதனால் வடைகள் கெட்டுப் போகாமல், நீண்ட காலத்துக்கு அதன் மொறுமொறுப்பும் சுவையும் குறையாமல் இருக்கும். சாதாரண நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்காக 2,000 வடைகள் கொண்ட மாலைகள் சாற்றப்படுகின்றன. இன்று அனுமத் ஜயந்தி சிறப்பு என்பதால் பக்தர்களின் பங்கேற்பில் இந்த ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை தயாரிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் இதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு குழு வந்து தயாரிக்கிறது குறிப்பிடத் தக்கது. 

அனுமன் ஜயந்தியான இன்று காலை 5 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. இந்த மாலை இன்று மதியம் வரை ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டிருக்கும். சுவாமிக்குச் சாற்றப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும். பின்னர் மதியம் 1 மணி அளவில் வடை மாலை களையப்பட்டு,  ஆஞ்சநேயருக்கு  வாசனைத் திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.