Home Blog Page 27

சிவப்புக் கோட்டையில் விழுந்த ஓட்டை! தலைநகரை வசமாக்கிய காவிப்படை!

kerala bjp won the local elections - 2026

கேரளாவில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக, ஆச்சரியப்படுத்தும் வகையில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக திருவனந்தபுரம் மேயராக பாஜக.,வின் நபர் பதவியேற்க உள்ளார். மேலும் அரசியல் எதிர்பார்ப்புக்கும் மேல் பாஜக., பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக.,வின் இந்த வெற்றியை தொண்டர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும் வழக்கம் போல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி பெரும் சரிவைக் கண்டுள்ளது. 

இந்நிலையில், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. தோல்வி குறித்து விரிவாக ஆராயப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் 

உள்ளாட்சித் தேர்தல்களில், எவரும் எதிர்பார்க்காத வகையில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி பெரும் சரிவைச் சந்தித்து, காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வென்றுள்ளது. ஆளும் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தேர்தலில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி, பெருவெற்றியை எதிர்பார்த்தது. ஆனால் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்படும். தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறுவோம். வகுப்புவாத சக்திகளின் தவறான தகவல், பிளவு தந்திரங்களுக்கு மக்கள் பலியாகி விடாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக விழிப்புணர்வு தேவை என்பதற்கான எச்சரிக்கையாக தேர்தல் முடிவுகள் உள்ளன. 

அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதின் அவசியம், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவுடன் முன்னேற, இடதுசாரிகள் ஜனநாயக முன்னணியானது விரிவாக விவாதித்து, முடிவுகளை எடுக்கும். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த மக்கள் ஆதரவை மேலும் வளப்படுத்தவும், அதன் அடிப்படையை பலப்படுத்தவும் உறுதியுடன் செயல்படுவோம் – என்று அந்த அறிக்கையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியை, பாஜக., கைப்பற்றியுள்ளது. அங்கே மெஜாரிட்டிக்கு தேவையான அளவில் 50 இடங்களைத் தொட்டுள்ளது பாஜக., 101 உறுப்பினர் மாமன்றத்தில் பெருவாரியான உறுப்பினர்களுடன் பாஜக., கூட்டணி நுழைவதால், பாஜக.,வில் கடந்த வருடம் சேர்ந்தவரும், கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபியுமான ஸ்ரீலேகா மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.  

கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றி பெற்ற இடதுசாரி முன்னணியில் இருந்து பெண் உறுப்பினரான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் இளம் மேயராக பதவியேற்றார். இப்போதும் அதேபோல் ஒரு பெண்மணிக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும். 

திருவனந்தபுரத்தின் சாஸ்தாமங்கலம் வார்டில் பாஜக வேட்பாளரான ஸ்ரீலேகா வெற்றி பெற்றிருக்கிறார். தமது வெற்றி குறித்து  அவர் குறிப்பிட்ட போது, சாஸ்தாமங்கலம் வார்டில் இதற்கு முன்னர் வேறு எந்த வேட்பாளரும் இவ்வளவு முன்னிலையில் வெற்றி பெற்றது இல்லை என்பதை அறிந்தேன். இப்படியான தீர்ப்புக்காக மக்களுக்கு நன்றி கூறுகிறோம். யார் மேயராக அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என்பதை கட்சி மேலிடம் முறைப்படி அறிவிக்கும் என்று கூறினார்.  

வெற்றி பெற்றுள்ள ஸ்ரீலேகா கேரள காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி. சிபிஐ, குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு, சிறை, மோட்டார் வாகனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். 2017ல் டிஜிபி.,யாக பதவி உயர்வு பெற்று, கேரளாவின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெற்றார். 33 ஆண்டு பணிக் காலத்தை நிறைவுசெய்து  2020ல் ஓய்வு பெற்றார். 2024ல் பாஜக.,வில் இணைந்தவர், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

பாஜக., பெரிதும் எதிர்பார்த்த சுரேஷ் கோபியின் தொகுதியான திருச்சூரில் பாஜக.,வுக்கு பெரிதும் வெற்றி கிட்டவில்லை. அதே நேரம், கண்ணூரில் ஒரு உறுப்பினர் என்ற எண்ணிக்கையில் இருந்து இப்போது 4 உறுப்பினர்கள் என்ற அளவுக்கு பாஜக., முன்னேற்றம் கண்டுள்ளது. கண்ணூர் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்பது குறிப்பிடத் தக்கது.  

வக்பு சட்டத்திருத்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்த கேரளாவின் முனம்பம் பகுதியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கேரள மாநில பாஜ பொதுச் செயலாளர் அனூப் ஆண்டனி ஜோசப் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

வக்ப் வாரியத்தின் சட்டவிரோத உரிமைக் கோரல்களால் ஐநூறு கிறிஸ்தவ குடும்பங்கள் வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது முனம்பம். இங்கு உள்ளாட்சித் தேர்தலில் , தேஜ., கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. மோடி அரசும் பாஜக.,வும் வக்ப் வாரியத்தின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் முனம்பம் மக்களுக்கு துணை நின்றதால், அம்மக்கள் பாஜக.,வை தங்கள் வார்டு பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர் – என்று அவர் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் பாஜக., அடைந்துள்ள வெற்றி, வரலாற்றுச் சாதனை என்று அத்தொகுதியின் காங்கிரஸ் எம்பி., சசி தரூர் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இன்றைய கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. மக்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. கேரளாவின் ஜனநாயக உணர்வு வெளிப்பட்டுள்ளது. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎஃப்) மனமார்ந்த வாழ்த்துகள். இது வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான முன்னோட்டம். ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். இது 2020 தேர்தலை விட மிகச் சிறப்பான முடிவுகள்.  அதேபோல, திருவனந்தபுரத்தில் பாஜக., அடைந்துள்ள வெற்றி ஒரு வரலாற்று சாதனை. இடதுசாரி கூட்டணியின் 45 ஆண்டுகால முறையற்ற ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். இறுதியில் ஆட்சி முறையில் மாற்றத்தை விரும்பிய மக்கள், மற்றொரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இதுவே ஜனநாயகத்தின் அழகு. காங்கிரஸ் கூட்டணி அடைந்த வெற்றியாக இருந்தாலும், எனது தொகுதியில் பாஜக., கூட்டணி பெற்ற வெற்றியாக இருந்தாலும், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நல்லாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் – என்று குறிப்பிட்டுள்ளார்.

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

sashi tharoor - 2026

— சசி தரூர்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

சசி கரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர் . காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் . திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் . அவர் எழுதிய இந்தக் கட்டுரையில், ஆங்கில மொழி ஒரு கருவி. அது நமக்கு தேவை. ஆனால் ஆங்கிலேய உளநிலை தேவையில்லை. ஆங்கில இலக்கியங்களை, மரபுகளை தெரிந்து கொள்வதற்கு இணையாக நம் மண் சார்ந்த இலக்கியங்களை, புராணங்களை நம் தாய் மொழியில் கற்க முடியாவிட்டால் ஆங்கில மொழியிலாவது கற்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறார் .


அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மெக்காலே மனோபாவத்தை கைவிட வேண்டுமென கூறியுள்ளார். முதலில் ராமநாத் கோயங்கா நினைவு உரையிலும் அதன் பிறகு அயோத்தியில் தர்ம துவஜம் ஏற்றும் நிகழ்விலும் இதை கூறினார். இதன் மூலம் இந்தியாவில் ஆங்கிலத்தில் இடம் என்ன என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

சரியான நேரத்தில் இந்த விவாதம் துவங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியா முக்கிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியர்களை ஆதிக்கத்தின் கீழ் அழுத்தி வைக்க திணிக்கப்பட்ட மொழி ஆங்கிலம். ஆனால் அதுவே ஆதிக்கத்திற்கு எதிராக சவால் எழுப்பவும் விடுதலைக்கு வித்திடவும் செய்த மாய சக்தி கொண்டதாக இருந்தது. இந்த முரண் நகை சுவையானது.

தாமஸ் பாபிங்டன் மெக்காலே 1835இல் இந்திய கல்வியை பற்றி எழுதியுள்ள, விமர்சனத்திற்குரிய, விரிவான அறிக்கையில், ‘நிறத்தாலும் ரத்தத்தாலும் இந்தியர்களாக ஆனால் கருத்துக்களாலும் உளநிலையாலும் அறிவாலும் வாழ்வியல் விருப்பங்களிலும் ஆங்கிலேயர்களாக இந்தியர்களை மாற்றும்’ கல்வித் திட்டத்தை வலியுறுத்தினார். அவரது நோக்கம் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவது அல்ல. மாறாக ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு வசதியாக, ஆங்கிலேயர்களை விட மேலதிக திறமையுடன் ஆங்கிலப் பேரரசுக்கு பணி செய்யக்கூடிய குமாஸ்தாக்களையும் கூட்டாளிகளையும் உருவாக்குவதாகும். பல நூற்றாண்டுகளாக இருந்த இந்திய கல்வி முறையை, நம்பவே முடியாத அளவற்ற ஆணவத்துடன், ‘ இந்திய, அரேபிய நூல் அறிவு மொத்தமும் ஒரு அலமாரியில் உள்ள ஐரோப்பிய நூல்களுக்கு இணையாகாது’ என்று அறிவித்தார்.

மொழியை போலவே வரலாறும் திருப்பி அடிக்கும். ஆதிக்கம் செய்த ஆட்சியாளர்களின் மொழியை அடிமைப்பட்டவர்கள் தங்கள் வசமாக்கி கொண்டார்கள். மெக்காலே உருவாக்க நினைத்த ஆங்கிலம் படித்த வர்க்கத்தினரே இந்திய தேசியத்தின் முன்னணி படையினராயினர். அடி பணிய வைக்க கருவியாக இருந்த ஆங்கிலம் எதிர்ப்பின் ஆயுதமானது .

ராமநாத் கோவிந்தா பெயரில் நடந்த உரை நிகழ்ச்சியில் மோடி தனது முதல் குண்டை வீசினார். கோயங்கா ஆங்கில மொழி நாளேட்டின் – இந்தியன் எக்ஸ்பிரஸ் – மூலம் பிரிட்டிஷ் ராஜ்யத்தையும் பின்னர் (இந்திரா காந்தி அறிவித்த) நெருக்கடி நிலையையும் எதிர்த்தார். கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இதில் உள்ள முரண் நகை புரியாமல் போகாது.

ஆனால் மெக்காலேவின் தொடர்ச்சி என்பது மொழி மாத்திரம் அல்ல, அது அறிவு சார்ந்தது. அவர் உருவாக்கிய கல்விமுறை மேற்கத்திய அறிவுக்கு முதலிடம் கொடுப்பது மட்டுமின்றி இந்திய மரபுகளை இழிவு படுத்துவதாகும். சுதந்திரத்திற்கு பிறகும் கூட பல தசாப்தங்களாக ஆங்கில வழி பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஷேக்ஸ்பியரை படித்தார்களேயன்றி காளிதாசனை படிக்கவில்லை. பைபிளை (அல்லது குறைந்தபட்சம் பைபிள் கதைகளை) படித்தார்களேயன்றி இராமாயணத்தை படிக்கவில்லை. கிரேக்க, ரோமானியர்களின் உயர்வை தெரிந்து கொண்டார்களே அன்றி மகாபாரதத்தை பற்றி அறியாமலே இருந்தார்கள். மெத்த படித்தவர்கள் கூட ப்ளூடார்ச் (கிரேக்க அறிஞர்) பற்றியும் பிளினி (ரோமானிய அறிஞர்) பற்றியும் அதிகம் தெரிந்தவர்களாக இருந்தார்களேயன்றி உபநிஷதங்களை பற்றியும் புராணங்களை பற்றியும் அறியாமையில் இருந்தார்கள்.

இதெல்லாம் ஆங்கிலத்தினால் நேர்ந்த குறைபாடல்ல. இந்த இந்திய நூல்கள் எல்லாம் நல்ல ஆங்கில மொழியாக்கத்திலும் கிடைக்கின்றன. பிரச்சனை – அப்போதும் இப்போதும் – மனோ நிலையில் தான் இருக்கிறது. காலனி ஆதிக்கத்தின் தொடர் பின்விளைவாக ஆங்கிலம் உயர்வானதாகவும் இந்திய அறிவு பழமையானதாகவும் கருதப்பட்டது. இந்த உளநிலையே பிரதமரின் கோபத்திற்கு காரணமேயன்றி, ஆங்கில மொழியல்ல.

1989 ல் தி கிரேட் இந்தியன் நாவல் என்ற நூலை எழுதி வெளியிட்டேன். அதில் 20 நூற்றாண்டில் இந்திய வரலாற்று நீதிக்கதைகள் என்று மகாபாரதத்தை அங்கத மொழி நடையில் மறு ஆக்கம் செய்திருந்தேன். அதில் , இந்த இதிகாசத்தை ஒவ்வொரு பள்ளி மாணவரும் – அவரது கற்றல் மொழி எதுவானாலும் – கட்டாய பாடமாக படிக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். முப்பத்தியாறு ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும் அந்த வேண்டுகோள் ஏற்கப்படாமலேயே இருக்கிறது.

இந்தியாவில் இன்று ஆங்கில மொழி அசாதாரணமான இடத்தை பிடித்திருக்கிறது. காலனிய ஆதிக்கத்தின் எச்ச சொச்சங்களை அகற்ற வேண்டுமென அரசியல்வாதிகள் முழங்கி கொண்டிருக்கும் வேளையில் ரிக்க்ஷா வலிப்பவர் கூட தன் பிள்ளையை ‘ஆங்கில வழி பள்ளிக்கூடத்திற்கு’ – அது மூன்றாம் தரமானதாக இருந்தாலும் கூட – சிரமப் பட்டாவது பணம் கட்டி படிக்க அனுப்புகிறார்.

இந்தியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்காக ‘வெட்கப்பட வேண்டுமென ‘ ஒரு முக்கிய தலைவர் சொல்லி உள்ளார். ஆனால் ரிக் ஷா வலிப்பவரோ வீட்டு வேலை செய்பவரோ தன் பிள்ளைகள் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக , டோரண்டோவில் செவிலியராக ஆவதற்காக ஆங்கிலம் கற்றுக் கொள்வதை அவமானமாக நினைக்கவில்லை. அவர்களை பொறுத்தவரையில் ஆங்கிலம் தெரிந்து கொள்வது துரோகம் அல்ல. வாய்ப்புகளை அடையும் பாலம். ரிக் ஷா வலிப்பதை விட, வீட்டு பணியாளராக இருப்பதை விட, மேலான வேலைவாய்ப்பிற்கு இட்டுச் செல்லும் வழி.

உண்மையில் ஆங்கிலம் இந்தியாவுக்கு நல்லது செய்துள்ளது. உலக முழுவதும் உள்ள அறிவு செல்வத்தை அறிந்து கொள்ள உதவியது . நம்முடைய கணினி துறையின் எழுச்சிக்கு வித்திட்டது . அயலுறவு நடவடிக்கைகளில் நாம் வலுவாக அடித்து ஆடுவதற்கு இசைவாக இருக்கிறது. கல்வித் துறையிலும் இலக்கியத்திலும் நம்மை விரிவடைய செய்துள்ளது. நமது உச்சநீதிமன்ற தீர்ப்புகள் , நம்முடைய அறிவியல் ஆய்வேடுகள், அதிகம் விற்பனையாகும் புதினங்கள் எல்லாம் அந்த மொழியில் தான் உள்ளன. அந்த மொழியின் மூலமாகத்தான் இந்தியா உலகத்துடன் உரையாடுகிறது. இவ்வளவு ஏன் நம் நாட்டுக்குள்ளும் பேச அதற்கு தான் வீச்சு அதிகம்.

ஆனால் அந்த வழியாக மட்டுமே நாம் நம்மை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை . புதிய கல்விக் கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஜப்பான் , சீனா , தென்கொரியா போன்ற நாடுகள் தங்கள் மொழியை விட்டுக் கொடுக்காமல் நவீனத்துவத்தை அரவணைத்துக் கொண்டன. அதேபோல் இந்தியாவும் செய்ய வேண்டும். ஆங்கிலத்தை ஒழிப்பதன் மூலமாக அல்ல, அதை அரியாசனத்தில் இருந்து அகற்றுவதன் மூலம்.

நம் வாழ்க்கையிலும், உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் பல முக்கியமான கதவுகளை திறக்கும் சாவியாக ஆங்கிலத்தை பார்க்க வேண்டும். ஆனால் இந்த மண்ணுடன் நம்மை பிணைக்கும், நம் பண்பாட்டையும் மரபையும் பழக்க வழக்கங்களையும் சிறப்பான வகையில் வெளிப்படுத்தக்கூடிய நம் தேச மொழிகளை கைவிடக்கூடாது.

நாம் மெக்காலே மனோபாவத்தை கைவிட வேண்டுமேயன்றி ஆங்கில மொழியை அல்ல. ஆங்கிலத்தை அகற்ற வேண்டாம். அது நமக்கு திறந்து விட்ட கருவூலங்களை புறக்கணிக்கவும் வேண்டாம். நாம் நம்மைப் பற்றியும் நம்முடைய செம்மையும் செழிப்பும் நிறைந்த நம் கலாச்சாரத்தை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஷேக்ஸ்பியருடன் சேர்ந்து காளிதாசனையும் கற்றுத் தருவோம் . பிளாட்டோவை சொல்லித் தரும்போது கூடவே உபநிஷதங்களையும் கற்போம். பைபிளுடன் கூடவே லைலா மஜ்னு கதையையும் சூபி மகான்களையும் பக்தி இயக்கத்தையும் சொல்லித் தருவோம். நம் கலாச்சாரம் மிகப்பெரியது, பல சமயங்களை உள்ளடக்கியது, சிறந்த தத்துவக் கொள்கைகளைக் கொண்டது , அதைக் கற்றுத் தருவோம்.

நம் மண்ணில் முளைத்த கதைகளை நம் குழந்தைகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகே மற்றவர்களின் புராணங்கள். ஆங்கிலம் உட்பட எல்லா மொழி வழி பாடத் திட்டத்திலும் இதை பின்பற்றுவோம்.

ஆங்கிலம் இப்போது நமக்கு அன்னிய மொழி அல்ல. அது இந்திய சொல்லாடல்களையும் மொழி வழுவுகளையும் கற்பனைகளையும் கொண்டுள்ளது. அந்த மொழியில் தான் நம் துயரங்களை பகிர்ந்து கொள்கிறோம். நாம் வெற்றிகளை கொண்டாடுகிறோம். இந்த கட்டுரையை கூட அந்த மொழியில் தான் எழுதியுள்ளேன். மகாபாரதத்தையும் அந்த மொழியில் தான் மறு ஆக்கம் செய்தேன்.


சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் ரயில் எண்கள் அவ்வப்போது மாற்றப்படுகின்றன, குறிப்பாக கொரோனா காலத்தில் “0” உடன் தொடங்கிய சிறப்பு ரயில்கள், இப்போது வழக்கமான எண்களுக்கு மாற்றப்படுகின்றன (எ.கா., 06033-க்கு பதிலாக 66033).

இந்த மாற்றங்கள் தெற்கு ரயில்வேயில் கடந்த ஜனவரி 1 முதல் பல ரயில்களுக்கு அமலுக்கு வந்தன. மேலும் குறிப்பிட்ட தேதிகளில் சேவை மாற்றம் அல்லது ரத்து அறிவிப்புகளும் வரக்கூடும். எனவே பயணம் செய்வதற்கு முன் ரயில்வே இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் ரயில் எண்ணை சரிபார்க்கவும்.

இந்த நிலையில் வரும் ஜனவரி முதல் பயணிகள் ரயில் எண்களை தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் இரயில் (தற்போதைய எண்: 56719/56720) இனி மேல் 01.01.2026 முதல் கீழ்க்காணும் வகையில் எண்கள் மாற்றப்பட்டு இயக்கப்படும்.

மதுரை-செங்கோட்டை பாசெஞ்சர் வண்டி எண்: 56771
செங்கோட்டை-மதுரை பாசெஞ்சர் வண்டி எண்: 56772

திருநெல்வேலி – செங்கோட்டை பாசஞ்சர் எண்கள் 56735 மற்றும் 56737 ஆகியவை, 56773 மற்றும் 56775 என்றும், செங்கோட்டை – திருநெல்வேலி பாசஞ்சர் எண்கள் 56736, 56738 ஆகியவை, 56774 மற்றும் 56776 என மாற்றப்படுகின்றன.

மற்றபடி வழித்தடம், கட்டணம், நிறுத்தங்கள், கால-அட்டவணை இவற்றில் மாற்றம் இல்லை.

train number changed - 2026

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

tn gov rn ravi hitting parai in virudhunagar - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பத்மஸ்ரீ வேலு ஆசான் துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை பறை இசைத்து திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி… பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர் பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுமலையில் ஆளுநர் விருப்ப நிதியில்
பத்ம ஸ்ரீவேலு ஆசானுக்கு புதிய குடியிருப்புடன் கூடிய பாரதி பறை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் R.N.ரவி திறந்து வைத்து பறை இசை கருவிகளை பார்வையிட்டார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காவல்துறை மரியாதையும் அதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஆளுநருக்கு பத்ம ஸ்ரீ வேலு ஆசான் பறை இசைத்து வரவேற்றார். அப்போது வேலு ஆசானிடமிருந்து பறையை வாங்கிய ஆளுநர் ரவி உற்சாகத்துடன்
பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில் பறை இசை கலைஞர்கள், மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்களான பிரபலம், கலைமாமணி மதிச்சியம் பாலா, சின்னப்பொண்ணு, செந்தில் ,ராஜலட்சுமி, அந்தோனி ஆகியிரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து பத்மஸ்ரீ வேலு வாசன் பறை இசை கலையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது அவருக்கு மட்டுமல்ல இந்த பறை இசைக்கலையுக்கே கிடைத்த விருது எனவுன் தனது உரையில் பறை இசை கலை குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார்

பறை இசை பண்பாட்டு மையத்தை திறந்து வைத்ததில் பெருமையடைகிறேன், வேலு ஆசானுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராஜ்பவனை லோக் பவனை மாற்றியது எனக்கு பெருமை, ராஜ்பவன் என்பது அடிமை என கருதப்படுவதால் அதை மாற்றியுள்ளேன்.

பிரதமர் மோடி வருவதற்கு முன்பு அதிகாரத்தை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் மோடிஜி வந்த பின்பு பத்ம விருதுகள் மிகவும் ஏழ்மையான மக்கள் மற்றும் கலை, சம்பந்த வட்டர்களுக்கு வழங்கியிருக்கிறார் .

எடுத்துக்காட்டாக ஏழ்மையான மூதாட்டிக்கு வழங்கியிருக்கிறார். அனாதையாக உள்ள பிணத்தை எடுத்து அடக்கம் செய்யும் நபருக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. அது போன்று தான் இன்று பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கிடைத்துள்ளது.

பறை நம்முடைய ஒவ்வொரு அங்கமாகவும், பறை இசை தற்போது திருமண விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ்காரர்களுக்கு நாம் அடிமைபட்டு கிடக்கும் போது கலைகளும் அடிமைப்பட்டு, கிடந்தது, பிரிட்டிஷ்காரர்கள் நமது கலையை நமக்கு விட்டு சென்றுள்ளார்கள். பறை பண்பாட்டு கழகத்திற்கு பாரதியார் பெயரை சூட்டியதற்கும், வேலு ஆசானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் இருக்க கூடாது? பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது? உயர் கல்வி ஆராய்ச்சி மையங்களில் முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண்டும்

ஐஐடியில் கர்நாடக இசை குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இதேபோல் பறை இசை குறித்தும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி நடத்தலாம். 2047ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதமாக மாறும் திசையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளாகும் 2047ம் ஆண்டு பறை இசை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் நாடெங்கிலும் பறை ஓசை கேட்கப்பட வேண்டும். பறை இசைக்கு நாடெங்கிலும் கௌரவம் கிடைக்க வேண்டும். மக்கள் இயக்கமாக கொண்டு சென்றால் நாடெங்கும் பறை இசை பயணிக்கும்.

குக்கிராமத்தில் துவக்கிய பறை இசை நாடெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்மஸ்ரீ வேலு ஆசான், தமக்கு வீடு என்ற கனவை ஆளுநர் நிறைவேற்றியுள்ளதாகவும், பறை இசைக்கலையை மென்மேலும் வளர்க்க முயற்சியாக இந்த பண்பாட்டு பயிற்சி மையத்தை துவக்கியுள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

karthigai pooram andal darshan at nandavanam - 2026

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழா முக்கியமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொண்டாடப்படும் ஒரு வைணவப் பெருவிழா. இது கார்த்திகை மாதத்தில் வரும் பூர நட்சத்திர தினத்தில் நடைபெற்று, சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்வுகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆண்டாளின் திருநட்சத்திரமான இந்த நாளில், பக்தர்கள் தரிசனம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, ஆண்டாளை வழிபடுவார்கள்.

இது ஆண்டாள் நாச்சியாரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை கார்த்திகை பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் பிறந்த இடமான நந்த வனத்திற்கு வருகைதந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திரளான‌ பக்தர்கள் கலந்து கொண்டு பாசுரங்கள் பாடி வழிபாடு நடத்தினர் .

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் தனுர் மாத மார்கழி மாத பிறப்பு 16.12.25 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது . அன்று காலை 10.00 மணிக்கு மார்கழி மாத பிறப்பு நேரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் குறடு மண்பத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடைபெறும்.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

varanasi boat ride - 2026

“கங்கைக்கரையின் படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது புதிய இந்தியாவின் ஒரு பார்வை

– சுபாஷ் சந்திரா, மூத்த எழுத்தாளர்

காசியில் ஒரு புதிய மாற்ற அலை எழுகிறது. கங்கைக்கரையில் உள்ள நமோ காட்டில் ஒவ்வொரு காலையிலும், படகோட்டிகளின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் ஒரு தனித்துவமான வகுப்பு நடத்தப்படுகிறது. இது ஒரு முறையான பள்ளி அல்ல, ஆனால் புதிய இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சியின் உயிருள்ள எடுத்துக்காட்டு. இங்கு ஒவ்வொரு நாளும் 5 புதிய தமிழ் வார்த்தைகள் கற்பிக்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்குப் பிறகு, இதே குழந்தைகள் “வணக்கம் காசி” முதல் 150 தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்வார்கள். விருந்தினர்களை அவர்கள் தமிழில் வரவேற்கும்போது, அந்தக் காட்சி உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

காசியின் ஆன்மா

இது வெறும் மொழி கற்றல் முயற்சி மட்டுமல்ல, மொழி மூலம் அதிகாரம் அளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. தமிழ்நாட்டைச் சேர்ந்த விருந்தினர்களுடன் அவர்களின் தாய்மொழியில் ஆழமான நெருக்கமான உரையாடலை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள். காசி தமிழ் சங்கமம் 4.0 என்பது வெறும் ஒரு கலாச்சார நிகழ்வு மட்டுமல்ல, காசி மற்றும் தமிழ்நாடு போன்ற பண்டைய நாகரிகங்களை இணைக்கும் இந்தியாவின் ஆன்மாவில் இடைவிடாத ஓட்டத்தின் கொண்டாட்டமாகும். நமோ காட்டில் காசியின் குழந்தைகளுடன் தமிழின் வார்த்தைகள் எதிரொலிக்கும்போது, தமிழ்நாட்டில் இருந்து வரும் விருந்தினர்கள் காசியின் இயல்பான, அன்பான புன்னகையில் ஒரு சொந்த உணர்வைக் காணும்போது, “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற மகத்தான உணர்வு உயிர்ப்பிக்கிறது.

படகோட்டிகளை காசியின் ஆன்மா என்று அழைப்பது மிகையாகாது, படகோட்டி சமூகம் இந்த மாற்றத்திற்கு முன்னோடியாக உள்ளது. தலைமுறை தலைமுறையாக கங்கைக் கரையில் வாழ்ந்த இந்த குடும்பங்களின் குழந்தைகள் இப்போது ஒவ்வொரு நாளும் 5 தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இது வெறும் மொழி கற்றல் மட்டுமல்ல, இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒரு உயிருள்ள பாலத்தைக் கட்டுவதும் ஆகும். ஒரு மாதத்திற்குப் பிறகு, இதே குழந்தைகள் “வணக்கம் காசி” என்று சரளமாக தமிழில் விருந்தினர்களுடன் உரையாடும்போது, பன்முகத்தன்மையை ஒரு சுமையாக அல்ல, ஒரு பலமாகக் கருதும் ஒரு புதிய இந்தியாவின் பார்வையாக இது இருக்கும்.

நாகரிகங்களுக்கு இடையிலான பாலம்

காசி தமிழ் சங்கமத்தின் அடிப்படை நோக்கம், பாதுகாக்கப்பட்ட மரபுகளை புதிய தலைமுறையின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதாகும். காசியின் கங்கை நதியும், தமிழ்நாட்டின் காவிரியும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளியில் பாயக்கூடும். ஆனால் இரண்டும் இந்தியாவின் ஆன்மீக உணர்வை வளர்க்கின்றன. இன்று, அதே உணர்வு மொழியியல், கலாச்சார மற்றும் மனித உரையாடலின் வடிவத்தில் புதிதாக மலர்ந்து வருகிறது.

2 நாகரிகங்களுக்கு இடையிலான பாலமாக இருக்கும் இந்த முயற்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீக, கலாச்சார மற்றும் இலக்கிய நூல்களால் இணைக்கப்பட்ட 2 பண்டைய நாகரிகங்களுக்கு இடையிலான உறவுகளை புதுப்பிக்கிறது. காசி மற்றும் தமிழ்நாடு இரண்டும் இந்தியாவின் ஆன்மீக அச்சின் தூண்கள். அவற்றுக்கிடையே அறிவும், பக்தியும் பல நூற்றாண்டுகளாக பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. இன்று, குழந்தைகள் தமிழைக் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், வரலாறு, பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தின் மரபையும் உள்வாங்குகிறார்கள்.

இசையை உருவாக்குகிறார்கள்

காசி கங்கையுடன் அடையாளம் காணப்படுகிறது. மேலும் கங்கையின் துடிப்பு அதன் படித்துறைகளில் பிரதிபலிக்கிறது. இந்த படித்துறைகளின் இதயத்துடிப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் யாரென பார்த்தால் அது படகோட்டி சமூகமாக இருக்கும். அவர்களின் நரம்புகள் வழியாக பாயும் கங்கையின் அலைகளைப் போல, காசியின் ஆன்மாவில் பதிந்திருக்கும் ஒரு சமூகம். பல நூற்றாண்டுகளாக, காசிக்குச் சென்ற ஒவ்வொரு பயணியும், ஒவ்வொரு யாத்ரீகரும், ஒவ்வொரு தேடுபவரும் கங்கா ஆரத்தியைக் காணவும், படித்துறைகளை (காட்) பார்வையிடவும், இந்த புனித நகரத்தின் ஆன்மீகத்தை அனுபவிக்கவும் படகோட்டிகளை நம்பியிருக்கிறார்கள்.

“வாருங்கள், “காட்”களைப் பார்வையிடுவோம்?” என்ற முழக்கத்துடன் எழுந்திருக்கும் இவர்கள்தான், அவர்களின் மரப்படகின் அசைவில் காசியின் இசையை உருவாக்குகிறார்கள்.

கங்கையின் வாழ்க்கை படகோட்டிகளின் உழைப்பால் நிலைநிறுத்தப்படுகிறது. படகோட்டிகளின் வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்துள்ளது. கங்கையின் மாறிவரும் சூழ்நிலையுடன் அவர்களின் நாள் மாறுகிறது . அது படித்துறைகளில் வெள்ளம், குளிர்காற்று அல்லது சூரியனின் கொளுத்தும் வெப்பம் இதற்காகவெல்லாம் படகோட்டிகள் ஒருபோதும் தங்கள் வேலையை விட்டுவிடுவதில்லை. அவர்களின் படகுகள் பயணிகளை ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு கொண்டு செல்வது மட்டுமல்லாமல், காசியின் கலாச்சாரம், பழமை மற்றும் ஆன்மீகத்தின் அனுபவத்தையும் வழங்குகின்றன.

கதை சொல்லிகள்

இன்று, காசி உலகின் முன்னணி ஆன்மீக சுற்றுலா மையங்களில் ஒன்றாகும், மேலும் அந்த சுற்றுலாவின் முதுகெலும்பு படகோட்டி சமூகமாகும். அவர்கள் படகு ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, காசியின் கதைகளை, மலைத்தொடர்களின் வரலாறு, கங்கையின் மகிமை மற்றும் புராணங்களில் இருந்து வரும் கதைகளை சொல்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு படகோட்டியும் இந்த கதையை பயணிகளுக்கு தெரிவிக்கிறார்கள்.
வறுமை, நிச்சயமற்ற வருமானம், வானிலையின் மாறுபாடுகள் மற்றும் சில நேரங்களில், அமைப்பின் புறக்கணிப்பு ஆகியவற்றின் அழுத்தம் இருந்தபோதிலும், படகோட்டிகளின் புன்னகை அசைக்க முடியாதவை. இந்த புன்னகைதான் காசியை, காசியாக மாற்றுகிறது. இன்று, காசி உலக அரங்கில் வெளிப்படும் போது, படகோட்டி சமூகத்தை மேம்படுத்துவது நமது பொறுப்பு மற்றும் நன்றியுணர்வு ஆகிய இரண்டும் ஆகும்.

மொழி மூலம் புதிய சாத்தியக்கூறுகள்

சமீபத்தில், நமோ காட்டில் படகோட்டிகளின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. மாறிவரும் இந்தியாவின் அழகான படமாக காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சாரப் பாலத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் படகோட்டி சமூகம் முக்கிய பங்கு வகிக்க முடியும். மொழியைக் கற்றுக்கொள்வது சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

காசியின் இதயம்: படகோட்டி சமூகம்

காசி கோவில்களுடன் மட்டுமல்ல, மக்களுடனும் உயிரோட்டமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மக்களிடையே, படகோட்டி சமூகம் பிரகாசமான முகமாக திகழ்கிறது. கங்கை ஆரத்தியின் ஒளிக்குப் பின்னால், சுற்றுலாப் பயணிகளின் புன்னகைக்குப் பின்னால், காசிக்கான ஆன்மீகப் பயணத்திற்குப் பின்னால் – படகோட்டிகளின் அமைதியான பங்களிப்பு உள்ளது. காசியின் அழகு அதன் படித்துறைகளில் உள்ளது, படித்துறைகளின் இதயத்துடிப்பு கங்கையில் உள்ளது, கங்கையின் உயிர்சக்தி அதன் படகோட்டிகளிடம் உள்ளது. அதனால்தான் படகோட்டி சமூகம் காசியின் ஒரு பகுதி மட்டுமல்ல, அதன் ஆன்மா என்றும் கூறப்படுகிறது.

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

sabarimala nata thirappu - 2026

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளதால், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். 26 ஆம் ஆம் தேதிக்கு 30,000, 27-ஆம் தேதிக்கு 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு வெளியிடப்பட்டது
டிசம்பர் 26&27 மண்டல பூஜையின் ஒரு பகுதியாக, டிசம்பர் 26 மற்றும் 27 முதல் மெய்நிகர்-வரிசை வலைத்தளம் மூலம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வலைத்தள இணைப்பு https://sabarimalaonline.org
இதில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.

சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து மதியம் மற்றும் இரவில் கோவில் நடை திறந்திருக்கும் நேரம் 45 நிமிடங்கள் நீட்டிப்பு செய்து திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்படி மதியம், 1:00 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை, 1:30 மணி வரையும், இரவில், 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக, 11:15 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிலின், 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு, 80 பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள, 45 நிமிடங்களில் கூடுதலாக, 3,500 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலங்களில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டு, தினமும் சுமார் 18.45 மணி நேரம் நடை திறந்திருக்கும். அதாவது அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மீண்டும் மதியம் 3 மணி முதல் இரவு 11.15 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மண்டல, மகரவிளக்கு காலங்களில், நெய் அபிஷேகம் மற்றும் பிற பூஜைகளுக்குப் பிறகும் தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு இல்லாதவர்களும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசிக்க வசதி உள்ளது.

சபரிமலை மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணி முதல் டிசம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளுக்கான சபரிமலை மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணி முதல் தொடங்கியுள்ளது. தரிசனத்திற்கான இடங்கள் sabarimalaonline.org என்ற வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

டிசம்பர் 26 ஆம் தேதி 30,000 பேரும், டிசம்பர் 27 ஆம் தேதி 35,000 பேரும் மெய்நிகர் வரிசை மூலம் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த நாட்களில் ஒவ்வொன்றிலும் ஐந்தாயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

moonwalk movie audio lauch - 2026

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மூன்வாக்’ படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, பிஹைண்ட்வுட்ஸ் நிறுவுனர் & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார்.

தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக,  ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின் பாடல்களின் அறிவிப்பிலும் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூன்வாக் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறுகையில்: “மியூசிக்கில் ஏ. ஆர். ரஹ்மான் சார் , டான்ஸில் பிரபுதேவா சார்  இருவரும் இந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகள். சிறு வயதில் நான் ரசித்த ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தேன்.  இந்த தலைமுறை ரசிகர்களுக்குத் அந்த அனுபவத்தை மீண்டும் தர வேண்டும் என்ற முயற்சி தான், ‘மூன்வாக்’ திரைப்படமாக உருவானது. இதில் இசைக்கும் நடனத்திற்கு குறைவே இருக்காது. 3 வருடங்களாக உருவாக்கிய இந்த திரைப்படம் 2026 கோடையில் வெளியாகவுள்ளது. இது முழுமையான காமெடி கொண்டாட்டமான படம். திரையரங்குக்கு வரக்கூடிய குடும்ப ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே இதன் நோக்கம்.

இப்படத்தில் ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது. ஒவ்வொரு பாடலும் நட்பு, உழைப்பு, சந்தோஷம் மற்றும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. நானும் ரஹ்மான் சார் -ம் பேசும்பொழுது இந்த ஐந்து பாடல்களும் மக்களுக்கு சந்தோசத்தை மட்டும் கொடுக்கவேண்டும் என எண்ணினோம். முதலில் இந்தியாவின்  ஒரு பெரிய பாடகரைப் பாட வைத்து அந்த பாடலை பதிவு செய்தார். ஆனால், இது ரஹ்மான் சாருக்காகவும், பிரபுதேவா சாருக்காகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படம். அதில் அவர் குரலைத் தவிர யாரையும்  என்னால் யோசிக்க முடியவில்லை. அவரது குரலே மக்களுக்கு முழுமையான உற்சாகத்தை கொடுக்க கூடியது. நான் விடாமல் நான்கு மாதங்கள் முயற்சித்து நீங்கள் தான் பாட வேண்டும் எனக் கேட்டு கொண்டே இருந்தேன்.  இறுதியில், இந்த ஐந்து பாடல்களையும் ஏ. ஆர். ரஹ்மான் சார் தான் பாடியுள்ளார்.” அவருக்கு நன்றி என்றார்.

பிரபுதேவா மாஸ்டர் இருப்பதால் நடனத்திற்கு முழு மரியாதையும் முக்கியத்துவமும் அளித்து உழைத்து இருக்கிறோம். பிரபுதேவா சார் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு வாரம் ரிகர்சல் செய்துள்ளார். ‘மயிலே’ பாடலுக்கு மட்டும் ஒரு மாதம் ரிகர்சல் செய்தார். முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார்.  ‘மயிலே’ பாடலுக்காக ஒரு முழு உலகத்தை CG-யில் உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் உண்டு, அவர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்”

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கூறுகையில்: “பிரபுதேவாவுடன் மீண்டும் பணிபுரிவது மகிழ்ச்சி. அப்போதைய பிரபுதேவாவுக்கும், இப்போதைய பிரபுதேவாவுக்கும் ஒரே வித்தியாசம் ‘கொஞ்சம் நரைச்ச முடி மட்டும் தான்’ என நகைச்சுவையாகக் கூறினார். பிரபுதேவாவின் எனர்ஜி அப்படியே உள்ளது. அவர் ஆடுவதைப் பார்க்கும்போது, இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர் ஒரு பாடலுக்காக ஒரு மாத காலம் ஒத்திகை மேற்கொண்டதை இதுவரை கண்டதில்லை. அந்த அதீத அர்ப்பணிப்பு இன்னும் ஊக்கமளிக்கிறது.

இசையமைப்பாளராக, ஒரு பாடலுக்கான சரியான பாடகரை தேர்வுச்செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. மனோஜ் என் பரிந்துரைகளை ஒப்புக்கொள்ளாமல், ஒவ்வொரு பாடலுக்கும் இந்த பாடலை நான் தான் பாட வேண்டும் என உறுதியாக இருந்தார். இறுதியில் எல்லா பாடல்களுக்கும் அதே கூற, நானும் இந்த ஒரு படத்துக்கு மட்டும் எல்லா பாடல்களையும் பாடிவிடலாம் என முடிவுசெய்துவிட்டேன்.  மனோஜின் முகத்தில் தெரிந்த அன்பும், பிரபுதேவாவுடன் என் கூட்டணியை அதே எனர்ஜியுடன் திரையில் மீண்டும் கொண்டுவருவேன் என்ற மனோஜின் ஆர்வம் மற்றும் உற்சாகத்திற்காகவே இந்த திரைப்படத்திற்கு சரி என்று சொல்லிவிட்டேன். கதை கூட நான் கேட்கவில்லை.”

நடனப்புயல் பிரபுதேவா கூறுகையில், “என் திரை பயண தொடக்கத்திலிருந்தே ரஹ்மான் சாரின் இசை எனக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் மூன்வாக் படத்தை ரசித்து மகிழ்வதை காண, நான் மிக ஆர்வமாக உள்ளேன்”.

ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக அடுத்து வருடம் 2026 கோடை விடுமுறை வெளியீட்டுக்கு உருவாகி வருகிறது.

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

tn governor rn ravi in jathi pallakku - 2026
ஆளுநர் ரவி அவர்கள், சென்னை அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் முகப்பில் வானவில் பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மகாகவி பாரதியாரின் 144 -ஆவது பிறந்தநாள் விழா ஜதி பல்லக்கு ஊர்வலத்தை தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார்.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர். அவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்துக்களில் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டிருக்கும் தனது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.

உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதி குறித்த படத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கும் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவருக்கு வணக்கங்கள். காலனித்துவ அரசால் செய்யப்பட்ட அட்டூழியங்களை துணிந்து, மகாகவி புரட்சியின் சுடரை ஏந்தி, தனது அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டினார். அதே நேரத்தில், சமூக சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்தார். அவரது ஞானம் உத்வேகத்தின் நித்திய ஊற்றாக இருக்கும்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இரு இனங்களுக்கு முன் வந்தே மாதரத்தின் 150ஆவது ஆண்டு விழா குறித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாரதியார் குறித்து புகழாரம் சூட்டினார். மகாகவி பாரதியும் பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் பாடலை சுதந்திரத்திற்கான எழுச்சி பாடலாக நாடு முழுதும் கொண்டு சென்றார். அவர் தமிழில் அதற்காக இரண்டு மொழிபெயர்ப்புகளையும் செய்தார். வந்தே மாதரம் பாடலின் உடைய ஜீவன் வார்த்தையான வந்தே மாதரம் என்பதை தேசியக் கொடியில் அந்நாளில் பொரித்து வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மகாகவி பாரதி செய்த கொடி வணக்கப் பாடலையும் நினைவு கூர்ந்து பாடினார். தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் என்ற அந்த பாடலை குறிப்பிட்டு தேசியத்துக்கான எழுச்சியாக தமிழகம் எவ்வாறு திகழ்கிறது என்பதை வலியுறுத்தி காட்டினார் மேலும் சுதேசி கப்பல் விட்ட வ.உ.சி குறித்தும் புகழாரம் சூட்டினார்.

இன்று, தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவர் வசித்த திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுபூர்வ பாரதியார் நினைவு இல்லத்தில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், பாரதிய மொழிகள் தினம் குறித்த போட்டி முடிவுகளை தன் சமூகத் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் நாடு முழுவதும் பாரதிய மொழிகள் தினம் ஆக கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான மூன்றாம் பதிப்பு கட்டுரைப் போட்டியின் முடிவுகளை தமிழ்நாடு மக்கள் மாளிகை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்திய மொழியியல் பன்முகத்தன்மையை வளர்த்தெடுப்பதன் மூலமும், இளைஞர்களிடையே இந்தியாவின் நீடித்த ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் மகாகவி பாரதியாரின் எழுச்சியூட்டும் மரபைக் கொண்டாட மக்கள் மாளிகை மேற்கொள்ளும் முயற்சியே இந்த வருடாந்திரப் போட்டியாகும். அனைத்து பங்கேற்பாளர்களின் உற்சாகமான பங்கேற்புக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பாராட்டுகள். – என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக., மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டிருக்கும் பதிவில், திருவல்லிக்கேணியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறேன்.. ஜதி பல்லக்கில் கலந்து கொண்டு பின்பு நடக்கும் பாரதியார் விழாவில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடக்கும் விழாவில் மரியாதைக்குரிய திரு இல கணேசன் அவர்களின் திரு உருவப்படத்தையும் எனது அன்பான அப்பா திரு குமரி அனந்தன் அவர்களின் படத்தையும் திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறேன்.. பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் இரண்டு பேரோடும் சேர்ந்து ஜதி பல்லக்கில் கலந்து கொண்ட இந்த படம் எனது நினைவில் இருந்து அகலாத படம் அதை இங்கே பகிர்கிறேன்.. அவர்கள் வழி தூய்மையான அரசியலை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று உறுதியோடு உழைத்து வருகிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும், விடுதலைக் கனல் மூட்டிய புரட்சியாளர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பேசிய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர், நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.

இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே எழுதிய தீர்க்கதரிசி. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர். பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் என்ற மகாகவியின் கனவு இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால் நனவாகிக் கொண்டிருப்பது, அவருக்கான அர்ப்பணிப்பாகும்.

தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழை போற்றி வணங்குகிறோம். மண் உள்ள காலம் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும். – என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதி திருவாசகம்

bharathiar - 2026

பத்மன்

“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு. திருவாசகம் என்றதுமே, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் சட்டென்று நினைவுக்கு வரும். அதேநேரத்தில், திருவாசகம் என்பது விரிவான பொருள் உடையது. திரு என்பதற்கு மரியாதை, வளம், இறைத்தன்மை உள்ளிட்ட பல பொருள்கள் உண்டு. அந்த வகையில் இவை எல்லாவற்றையும் தருகின்ற நல்ல வாசகங்களுக்கும் திருவாசகம் எனப் பெயர் உண்டு.

மகாகவி பாரதியின் பல கவிதை வாசகங்கள் அத்தகைய திருவாசகங்களே. தற்காலத்து சினிமா ஹீரோக்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் போல, நெத்தியடியாக, ஆழம் நிறைந்த ஒரு வரி, இரண்டு வரி சொற்றொடர்களை மகாகவி பாரதியார் மழைபோல் பொழிந்துள்ளார். மகாகவியின் வார்த்தைகள் வெறும் வாய்ச்சவடாலான பஞ்ச் டயலாக்குகள் அல்ல, பஞ்சில் பற்றிக்கொள்ளும் நெருப்பைப் போன்று செயலாக்க வீரியம் உள்ளவை.

அதற்கோர் உதாரணம், “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கோர் காட்டிலே பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு” என்ற வாக்கியம். அக்கினிக் குஞ்சு என்றால் சிறிய தீப் பிழம்பு. அந்தத் தீப் பொறியை, காட்டிலே சிறிய பொந்தில் வைத்தால் கூட, முழுக் காடும் எரிந்து சாம்பலாகிவிடும். இங்கே தத்துவார்த்தமாக, ஞானத்தை அக்கினிக் குஞ்சாக உருவகப்படுத்துகிறார் மகாகவி. ஞானத்தின் சிறிய தீப்பொறி போதும், அறியாமையாகிய வனம் எரிந்து தணிந்துவிடும். தணிந்தபின் புத்தறிவுப் பயிர்கள் முளைக்கும்.

மகாகவியின் “புதிய ஆத்திசூடி” முழுவதுமே ஒற்றை வரிகளில் அமைந்த திருவாசகங்கள்தாம். அதில் முதல் வரியே, “அச்சம் தவிர்” என்று கட்டளையிடுகிறது. எல்லோருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் அடிமனதில் அச்சம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதனைத் தவிர்க்க, புறக்கணிக்க, அதற்கு அகப்படாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஆகையால் அச்சம் தவிர் என்றுள்ளார். இதையே பிறிதொரு கவிதையில், “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்று அறைகூவல் விட்டிருப்பார்.

புதிய ஆத்திசூடியின் அடுத்த பாடல் வரி, “ஆண்மை தவறேல்”. ஆண்மை என்பது தைரியம், நேர்மை, ஆளுமை, கடமை ஆகியவற்றைக் குறிக்கும் சொல். அவற்றில் ஒருபோதும் தவறிவிடக் கூடாது. புதிய ஆத்திசூடியில் உள்ள பிரபலமான வாசகம் – “ரௌத்திரம் பழகு”. ரௌத்திரம் என்றால் வெறும் கோபம் அல்ல, அறச்சீற்றம். அநியாயங்களைக் கண்டு பொங்கி எழுகின்ற வீரமும், செயலாக்கமும் நிறைந்த கோபம். அது சும்மா வந்துவிடாது என்பதால், அதனைப் பழகச் சொல்கிறார்.

மகாகவியின் ரௌத்திரத்துக்கு இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒன்று, பாஞ்சாலி சபதத்தில் பீமனின் கூற்றாக அமைந்துள்ள “இனி பொறுப்பதில்லை தம்பி! எரிதழல் கொண்டுவா” என்ற வாசகம். செல்வத்தையும், நாட்டையும், தம்பிகளையும், தன்னையுமே சூதாட்டத்தில் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்ற பின்பு, மனைவி பாஞ்சாலியையும் பந்தயம் கட்டி, தருமன் தோற்றபோது, அந்த அதர்மத்தால் பீமன் வெகுண்டு, தனது தம்பி அர்ஜுனனிடம் இந்த வார்த்தையைச் சொல்கிறான். மகாகவியின் மற்றோர் அறச்சீற்றம் – “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்”. உலகில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான அறச்சீற்றம் இது.

நாட்டின் விடுதலைக்கு முன்பே “விடுதலை விடுதலை விடுதலை” என்று வீர முழக்கமிட்டவர் மகாகவி. “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு” என்று சுதந்திரத்தோடு அதன் பயனான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் சேர்த்தே மொழிந்தவர் பாரதி. “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற மகாகவியின் கவிதை வரிகள், இந்திய அரசியல் சாசனத்தின் அஸ்திவாரக் கற்களாகவே திகழ்கின்றன. ‘இன்க்ளூசிவ்னஸ்’ அதாவது ‘அனைவரையும் உள்ளடக்கிய தன்மை’ என்பதை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதை “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?” என்ற கேள்வியின் மூலம் புரிந்துகொள்ள வைக்கிறார்.

பெண்ணடிமைத்தனம் மிகுந்திருந்த நூறாண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே, “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று பெண் விடுதலைக்காக சரியான திசையில் குரல் கொடுத்தவர் மகாகவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று கல்வித் துறையில் மாத்திரமல்ல, சட்டம் இயற்றுகின்ற அரசியல் துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தவர் அவர். “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” என்ற அவரது திருவாசகம் நிதர்சனமாகிவிட்டது.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” கொண்ட புதுமைப் பெண்களை தனது கவிதையில் உலவவிட்டு, இன்றைய நிஜத்திலும் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அதேநேரத்தில் பகுத்தறிவு என்ற போர்வைக்குள் பெண் விடுதலை என்ற கருத்தைத் திரித்து, ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூகக்கேடுகளில் ஈடுபடும் போக்கை மகாகவி ஆதரித்தவர் இல்லை. அதனை, அஞ்சாத நெறிகளும் என்பதைத் தொடர்ந்து “திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” என்ற திடநம்பிக்கையின் மூலம் வெளிப்படுத்துகிறார். பொய்ப் பகுத்தறிவு இல்லாமல், ஞானச் செருக்கு இருக்கின்ற பெண்கள், செம்மையான நெறியில் இருந்து பிறழ்வதில்லை என்பதை ஓங்கி உரைக்கிறார். அத்துடன், “கற்புநிலை என்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று, பெண்களைப் போலவே ஆண்களும் கற்பைப் பேண வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

புரட்சி என்ற வார்த்தையைத் தமிழிலே அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதிதான். ரஷ்யப் புரட்சியை “ஆகா! என்று எழுந்தது பார் யுகப்புரட்சி!” என்று பாராட்டியதன் மூலம் தமிழுக்குப் புரட்சி என்ற சொல் கிடைத்தது. வெளிநாடுகள் குறித்த விஷயங்களைத் தமிழருக்கு உடனுக்குடன் அறிவிக்கும் அதேநேரத்தில், அதிலே இந்தியப் பார்வையை பாரதி ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. அதற்கு, ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்ற வார்த்தைக்கு முன் உள்ள “மாகாளி கண்ணுற்றாள்” என்ற வார்த்தையே சான்று. பாரதப் பண்பாட்டின்படி அறச்சீற்றத்தின் அடையாளங்களில் ஒன்று மகா காளி என்ற தெய்வம்.

இந்த நாடு பிளவுண்டு போகும் என்பதை முன்பே கணித்ததைப் போல, “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதனை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என்று வருங்காலத் தலைமுறைக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதேநேரத்தில் பல்வேறு அரிய சாகசங்களை நாம் படைத்து உலகில் முன்னிலை பெறுவோம் என்பதை “எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” என்று முழங்கியுள்ளார். பாரதியின் தீர்க்க தரிசன வாசகங்களில் ஒன்று – “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்”. இன்றைய நமது சந்திரயான் விண்வெளித் திட்டத்துக்கு உந்துதல் இதுவே.

“பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்று நம் நாட்டின் பழங்காலச் சிறப்பை நினைவுபடுத்தி, நமக்குக் கட்டளையிடுகிறார். அத்துடன் இதன் நிகழ்காலச் சிறப்பை நினைவுறுத்தும் வகையில், “பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்கிறார். மேலும் வருங்காலத்திலும் இந்தியா உலகின் குருவாய், வழிகாட்டியாய் விளங்கும் என்பதை, “எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும், ஆம்! ஆம்! இந்தியா உலகிற்கு அளிக்கும்!” என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

இவ்விதம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேசபக்தி, மனிதநேயம் ஆகியவற்றை அறிவுறுத்தியுள்ள மகாகவி பாரதியார், ஆன்மநேயத்தையும் போதித்துள்ளார். தெய்வம் ஒவ்வொருவருக்குள்ளும் உறைகிறது என்பதை “தெய்வம் நீயென்று உணர்” என்று அறிவித்துள்ளார். அத்துடன் அனைவருமே, அனைத்துமே ஆண்டவன்தான் என்பதை “நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்” என்று ஆனந்தத் தாண்டவம் புரிந்துள்ளார்.

மனிதன் லட்சிய மனிதனாக, நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு பாரதி கூறியுள்ள வாசகத்தைப் பார்ப்போம் – “எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்”. நாம் நினைத்தவை எல்லாம் நிறைவேற வேண்டும், எல்லாமே நிறைவேற வேண்டும் என்றாலும் அதிலே தீயவை இருந்துவிடக் கூடாது என்பதால், நல்லவற்றையே நாம் நினைக்க வேண்டும். அவ்வாறு நல்லதை நினைப்பதற்கு உறுதியான நெஞ்சம் நமக்கு வேண்டும். அத்தகைய உறுதியான நெஞ்சம் கிடைக்க, நன்கு ஆராய்ந்து தெளிந்த நல்லறிவு இருக்க வேண்டும் என்கிறார்.

இவ்வாறாக, மகாகவி பாரதியின் திருவாசகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயினும் கட்டுரையின் அளவு கருதி, சிலவற்றை மட்டுமே இங்கே எடுத்துரைத்துள்ளேன். இறுதியாக, மகாகவியின் ஒரேயொரு திருவாசகத்தைக் கூறி நிறைவு செய்கிறேன். “இன்று புதிதாய் பிறந்தோம்”.

பாரதி புகழ் ஓங்குக!