Home Blog Page 93

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs பெங்களூரு – லக்னோ – 23.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (231/6, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 94, அபிஷேக் ஷர்மா 34, அனிகேத் வர்மா 26, ஹென்றி கிளாசன் 24, ட்ராவிஸ் ஹெட் 17 ஷெப்பர்ட் 2/14, புவனேஷ் குமார், லுங்கி நிகிடி, சுயேஷ் ஷர்மா, க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கட்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (19.5 ஓவர்களில் 189, பில் சால்ட் 62, விராட் கோலி 43, ஜிதேஷ் ஷர்மா 24, ரஜத் படிதர் 18, மாயங்க் அகர்வால் 11, கம்மின்ஸ் 3/28, ஈசன் மலிங்கா 2/37, உனத்கட், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கட்) 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (17 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (10 பந்துகளில் 17 ரன், 3 ஃபோர்) சுமாரான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) கடைசி வரை ஆடி அணிக்கு வலு சேர்த்தார்.

பின்னர் வந்த வீரர்களான ஹென்றி கிளாசன் (24 ரன்), அனிகேத் வர்மா (26 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (4 ரன்), அபினவ் மனோகர் (12 ரன்), மற்றும் பாட் கம்மின்ஸ் (13 ரன்) இஷான் கிஷன் உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தனர்.

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

பில் சால்ட் (32 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), விராட் கோலி (25 பந்துகளில் 43 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), மயாங்க் அகர்வால் (10 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்), ரஜத் படிதர் (16 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர்), ஜிதேஷ் ஷர்மா (15 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர்.

ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. அந்த சமயத்தில் அவர்களின் இரண்டு பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அடுத்த 26 பந்துகளில் 7 விக்கட்டுகளை எடுத்து, சன்ரைசர்ஸ் அணி அவர்களது வெற்றியைப் பறித்தனர். இறுதியில் பெங்களூரு அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 189 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

சன்ரைசர்ஸ் அணியின் இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது என்பது இன்னமும் முடிவாகவில்லை. அந்த வகையில் ஆட்டம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது.

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

IMG 20250523 WA0021 - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

மதுரை மாவட்டம்,
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்

குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மறுபுறம் என பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றன

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக , காலை நேரங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கோவில் முன்பு அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க விட்டு செல்வதும் மற்றும் வாகனங்களை மறித்து பயணிகளை துன்புறுத்துவதும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகமோ
காவல்துறையோ இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை கோவில் முன்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என, சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால், பள்ளி செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது மேலும் போக்குவரத்து நெருக்கடியால் சோழவந்தானின் நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது

ஆகையால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மீறி நடத்துபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

IMG 20250523 WA0019 - 2026

மதுரை,திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா -மேளதாளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜுலை 14 ல் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் விரைவாக நடைபெறுகிறது.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றுபக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடைபெற கோவில் நிர்வாகம் முன் வந்தது.

அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது.தொடர்ந்து, வரும் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை 5 :25 மணி முதல் 6:10 மணிக்கள் மகா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக, கோவில் உற்சவர் மண்டபத்தில் முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முகூர்த்தகாலை சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவில் கந்த சஷ்டி மண்டபம் அருகே யாகசாலை மண்டபம் அமையும் இடத்தில் நவதானியம் பால் ஊற்றப்பட்டு மேளதாளங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் முகூர்த்தக்கால் நடும் விழா விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து, முகூர்த்த காலுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்ட பின்னர் ஜூலை 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை காலையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 14ஆம் தேதி அதிகாலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பாக துணை ஆணையர் சூரிய நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குழந்தைத் தனமானதா என்ன?

rahul gandhi - 2026

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*

       
*— ஆர். வி. ஆர்*

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது பொதுவெளியில் அசட்டுத்தனமாக ஒரு கேள்வியை இரு முறை எழுப்பி இருக்கிறார் – வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நோக்கி.

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களை இந்தியா தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா அது பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்னதாகத் தகவல் தெரிவித்தது’ என்று ஜெய்சங்கர் சொன்னதாக வைத்துக் கொண்டார் ராகுல் காந்தி. அதன்படி அவர் தனது கேள்வியை முன் வைத்திருக்கிறார். ராகுல் கேட்டது:

“நமது தாக்குதல் பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? நாட்டிற்கு உண்மை தெரிய வேண்டும்”.

ராகுல் காந்தியின் கேள்விக்கு வெளிவிவகாரத் துறை பதில் சொல்லிவிட்டது. என்னவென்றால்: இந்தியா தனது தாக்குதலைத் துவங்குவதற்கு முன்னதாக அது பற்றிப் பாகிஸ்தானுக்குத் தகவல் சொல்லவில்லை, இந்தியா தனது ஆரம்ப அடியை அடித்த பின்னர், அந்தத் தாக்குதலானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் நடத்தப் பட்டது, அந்நாட்டின் ராணுவத் தளங்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப் பட்டது, இதைத்தான் அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார், ஆனால் அவர் பேச்சு திரிக்கப் படுகிறது

பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் முதலில் தாக்குதல் நடத்திய இந்தியா, பின்னர் ஏன் அது பற்றிப் பாகிஸ்தானிடம் தகவல் சொன்னது? ஏனென்றால், அந்த அடியை வாங்கிய கலக்கத்தில் பாகிஸ்தான் இந்திய ராணுவத் தளங்களின் மீது தாக்குதல் செய்யக் கூடாது, அது நடந்தால் இந்தியா பாகிஸ்தானின் ராணுவத் தளங்களையும் தீவிரமாகத் தாக்க வேண்டியிருக்கும், பிறகு அது நீண்ட போருக்கு வழிவகுக்கும், முடிந்தவரை போரைத் தவிர்க்கலாம், என்ற மேலான எண்ணத்தில் இந்தியா பாகிஸ்தானிடம் பின்னர் அந்தத் தகவலைச் சொன்னது.

ஒரு பயில்வான் தன்னை அனாவசியமாக அடித்து ஒடும் ஒரு தெருக் காவாலியைப் பிடித்து, தன்னை அடித்த கையைப் பற்றி முறுக்கி அதன் மணிக்கட்டில் பலமாக ரண்டு போட்டு, அதன் பின் “பாரு, இத்தோட விட்றேன். இனிமே நீ பேஜார் பண்ண, பெண்டை நிமித்திருவேன். ஜாக்கிரதை!” என்று அந்தக் காவாலியை எச்சரிக்கும் செயலைப் போல் இந்தியா செய்தது – தனது முதல் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த தகவலின் மூலமாக.

ராகுல் காந்தியின் கேள்வியைச் சற்று ஆராயலாம்.

காங்கிரஸின் முடிசூடா மன்னர் ராகுல் காந்தி. அவர்தான் லோக் சபாவில் எதிர்க் கட்சித் தலைவர். எதுவானாலும் அவர் இப்படி ஒரு மழலையாக, பாகிஸ்தானை மகிழ்விக்கும் விதமாக, நமது மத்திய அமைச்சரைப் பார்த்துக் கேட்கலாமா என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?  அப்படியானால் நீங்கள் தேசபக்தர்.

ராகுல் காந்தியின் கேள்விக்கான பின்னணி நமக்குத் தெரியும்.

சென்ற மாதம் பாகிஸ்தான் ராணுவம் நான்கு பயங்கரவாதிகளை இந்தியாவின் பஹல்காமிற்கு அனுப்பி 25 அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் படுகொலையை நிகழ்த்தியது. அதை அடுத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்னும் ராணுவ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை வெளுத்து வாங்கிப் பணிய வைத்தது – நான்கே நாட்களில்.  நிலைகுலைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் கேட்க, போர் நின்றது. 

சமீபத்திய ஜெய்சங்கரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ஏன் தனது பிதற்றல் கேள்வியைக் கேட்டார்? அரசியல் முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தி தன்னைச் சுற்றித் தானே பின்னிக் கொண்ட வலைதான் அவரை அப்படிக் கேட்க வைத்தது.

2004-2014 ஆகிய பத்து வருடங்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பை மதித்துச் செயல்படும் மன்மோஹன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தது. 

2014-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, 11 வருடங்களாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.

மோடி ஆட்சியில் சாதாரண மக்களுக்கான குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை வசதிகள், மருத்துவக் காப்பீடு, வீடு கட்ட உதவி போன்ற தேவைகள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பெரிதும் நிறைவேறுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கின்றன. இன்னும் பல சாதனைகளும் மோடி ஆட்சியில் உண்டு. இந்த ஆட்சியில் மத்திய அரசு செய்யும் வேலைகளில் – அதுவும் உயர் மட்டத்தில் – லஞ்ச ஊழல் இல்லாமல் போனது. நாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளும் வெகுவாகக் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.

இது போன்ற பரவலான பெரிய சாதனைகளை, இவற்றுக்கு இணையானதை, மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி – அதாவது, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் லகான் பிடித்த ஆட்சி – செய்யவில்லை. அப்போது மத்தியில் ஊழல் ஊற்றெடுத்தது.

கோணல் புத்தியில், ராகுல் காந்தி தனது அம்மா சோனியா காந்தியை ஓரம் கட்டியவர். கொழுப்புப் பேச்சில் அவர் எவரையும் மிஞ்சியவர். அடுத்த பிரதமருக்கான ஆசையில் மோடியை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்று அவர் துடிக்கிறார். “எங்கள் மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி சாதனைகள் மாதிரி, மோடி அரசு தனது பதினோரு ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை” என்று ராகுல் காந்தியால் பேச முடியாது, அப்படிப் பேசி அவர் மோடி அரசை எதிர்க்க முடியாது. எரிச்சலான ராகுல் காந்தி அவ்வப்போது என்ன செய்கிறார்?

“தேசத்தின் காவலாளி மோடி, ஒரு திருடர். சீனாவின் எல்லைக் கட்டுப்பாட்டு அத்துமீறல்களை அவர் ராணுவ ரீதியாக எதிர்க்க முடியாமல் நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மோடி முறைகேடு செய்கிறார்” என்ற வகையில் மலிவான பொய்களை மட்டும் ராகுல் காந்தியால் பேச முடிகிறது. 

இப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் மோடியின் பேரும் புகழும் இந்திய மக்களிடையே மேலும் உயர்கிறது. பார்த்தார் ராகுல் காந்தி. மோடியின் பேரை உடனே ரிப்பேர் செய்யவேண்டும் என்று எண்ணினார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மோடி அரசு முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு இந்தியத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் கொடுத்தது, அதனால் நாம் சில போர் விமானங்களை இழந்தோம், தேசப் பாதுகாப்பு நடவடிக்கையில், நமது போர் விமானிகள் உயிரைக் காப்பதில், ராகுல் காந்தியான நான்தான் கிங்கு என்று அவிழ்த்து விடுவோம். வேறு வகையில் மோடி அரசை நம்மால் எதிர்க்க முடியவில்லை என்றால் இதைச் செய்வோம்’ என்று நினைத்தார் ராகுல் காந்தி. விளைவு, அவரது பாப்பா கேள்வி. இதுதான் விஷயம்.

நல்ல வேளை. ஆபரேஷன் சிந்தூரின் நியாயத்தை எடுத்துச் சொல்ல பிற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வரும் குழுக்கள் எதிலும் ராகுல் காந்தி இல்லை. அந்தக் குழு ஒன்றில் அவர் சேர்க்கப் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?

ஒரு குழு உறுப்பினராக ராகுல் காந்தி ஏதாவது வெளிநாட்டுக்குச் செல்கையில் அந்த நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளின் முன்னால் அமர்ந்து, “பஹல்காம் பயங்கரவாதத்திற்கு முன்பாக மோடி அரசு நான்கு பேரைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி அங்கு 25 அப்பாவி பாகிஸ்தானியர்களைக் கொன்று போட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது, அதை ஜெய்சங்கர் தீர்த்துவைக்க வேண்டும்!” என்று அவர் உச்சகட்டமாக உளற மாட்டாரா?

Author: R. Veera Raghavan
Advocate, Chennai

veera.rvr@gmail.com

https://rvr-india.blogspot.com

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்து உள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதி ரீதியாக வசை பாடுவதை திமுகவினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்! என்று இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கை…

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர், நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகிய நீதிபதிகளை ஜாதி ரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனர். இவர்களெல்லாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இது ஒரு பிராமண நீதிமன்றம் என்றும் வசைபாடி வருகின்றனர்.

நீதிமன்றம் என்பது நமது ஜனநாயக நாட்டின் இறையாண்மையைக் காக்கும் இடமாகும். பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்கி சட்டத்தை பாதுகாக்கும் நீதிபதிகளை இவ்வாறு பேசுவது கண்டனத்துக்குரியதாகும்.

தி.மு.க என்ன நினைக்கிறதோ ன, எதற்காக வழக்கு தொடுத்து இருக்கிறதோ அது அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு எழுதப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் எதிர்பார்க்கின்றனர்.
திமுக பல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்துள்ளது. திமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இது திராவிடத்திற்குக் கிடைத்த வெற்றி, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று குதூகளிப்பார்கள்.
அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் போது ஜாதியை கையில் எடுத்து
தங்களின் வக்கிர புத்தியைக் காட்டுவார்கள்.

நமது ஜனநாயகத்தையும், இறையாண்மையையும், நமது பண்பாடு – கலாச்சாரங்களையும்
தி.மு.க பலமுறை கொச்சைப்படுத்தி இருக்கிறதை பட்டியலிட முடியும்.

உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதித்துறையையும் தி.மு.கவினர் விட்டு வைப்பதில்லை. யு.ஜி.சி எனப்படும்
பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து நிதி பெற்றே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன.
இதில் மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவு தான்.

எனவே யு.ஜி.சி மற்றும் கவர்னர் அனுமதி இன்றி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க சட்டத்தில் வழியில்லை. இதை தெளிவாக தெரிந்து கொண்டே தி.மு.க காய் நகர்த்துகிறது.

சமூக நீதி பேசும் இவர்கள், பட்டியல் இன சமூகத்திற்கு தி.மு.க போட்ட பிச்சை நீதிபதி பதவி என்று கூட பேசினார்கள்.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஜாதி ரீதியாக, மொழி ரீதியாக பிரிவினையை உண்டாக்கி தரம் தாழ்ந்த கருத்துக்களை தி.மு.க வெளிப்படுத்தும்.

இதே தீர்ப்பை பிராமணர் அல்லாத
பிற நீதிபதிகள் வழங்கி இருந்தால்
திமுக அவர்களின் ஜாதியைச் சொல்லி
பேசி இருக்குமா?

ஆபாசப் பேச்சும், தனிநபரை மோசமாக தாக்கிப் பேசுவதும் திமுகவின் இரட்டை குழல் துப்பாக்கிகள்.

அங்கே தொட்டு இங்கே தொட்டு இன்று நீதிபதிகளையே கொச்சைப்படுத்தி பேசும் செயலை திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கலாமே தவிர நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது போன்றது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஜாதி பாகுபாடு கற்பித்து கருத்து தெரிவித்த தி.மு.கவினரை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

valmiki ramayan lavan kusan - 2026

உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பகுதியே!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

ராமாயணத்திற்குப் பல பழமையான பாஷ்யங்கள் உள்ளன. திலக பாஷ்யம், பூஷண பாஷ்யம் முதலானவை. இவையனைத்தும் உத்தரகாண்டத்தோடு சேர்த்தே சம்பூர்ணமாக உரை கூறியுள்ளன. பண்டைக் காலத்தில் உத்தர காண்டத்தைப் பிரித்துப் பேசவில்லை.

ஆனால் பிற்காலத்தில் அந்நியர்களின் முற்றுகையால் சம்பிரதாயங்களுக்கு எதிராக, ராமாயணத்தை ரிஷிகளின் படைப்பாகப் பார்க்காமல் வெறும் இலக்கியமாகப் பார்க்கத் தொடங்கிய பின்னர், பல ஆய்வுகள் செய்து வேறுபாடுகளும் விவாதங்களும் பெருகி விட்டன. உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூட சில காலமாக   சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூறுவதால் சில சௌகர்யங்கள் உண்டு. சில அறிஞர்கள் இது குறித்துத் தீர்மானம் கூட செய்து விட்டனர்.  உத்தர காண்டம் இல்லாவிட்டால் சீதாவைத் துறப்பது இல்லை. ராமனின் மீது குற்றம் சுமத்த இயலாது. சம்பூக வதம் போன்ற சூட்சுமங்கள் பற்றிய வாதங்களோ விவாதங்களோ இருக்காது. ராமர் மேல் யாரும் விரலை நீட்டிக் குற்றம் சாட்ட முடியாது என்பதால் உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூறிச் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள்.

அதற்காக யாரும் அதை விட்டுவிடுவதுமில்லை. திரைப்படங்கள், கதைகள், நாவல்கள் வடிவில் லவனையும் குசனையும் பற்றிக் கூற நினைக்கும் போது உத்தர காண்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அதிலிருக்கும் கதைகளால் வளர்ச்சி பெறுபவர் பலர் உள்ளனர்.

வட இந்தியர்கள் ராமாயணத்தை உத்தர காண்டத்தோடு சேர்த்தே பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். உத்தர காண்டம் ராமாயணத்தில் இல்லை என்று கூறுவதற்கோ, பிற்சேர்க்கை என்று கூறுவதற்கோ எந்த ஒரு ஆதாரமோ, பிரமாணமோ கிடைக்கவில்லை என்பதே உண்மை.

சிறிது காலமாகவே இது பற்றி விவாதங்கள் நடந்து வருவதால் சம்பிரதாயவாதிகளும் அறிஞர்களும் உத்தர காண்டம் ராமாயணத்தின் ஒரு பகுதியே என்று நிரூபித்துள்ளார்கள். அது எவ்விதத்தில் ராமாயணத்தின் பாகம் என்பதைப் பார்ப்போம்.

உத்தர ராமாயணம் என்ற பெயரைப் பிற்காலக் கவிஞர்கள் தம் நூலுக்கு வைத்தார்களே தவிர உத்தர காண்டம் என்பதே அதன் பெயர். பால காண்டத்தின் தொடக்கத்திலேயே வால்மீகி எப்படி ராமாயணம் எழுதினேன் என்று அவதாரிகையில் கூறுகிறார்.

சுலோகம்:

“சதுர்விம்சதி சஹஸ்ராணி ஸ்லோகானாமுக்த வான்ரிஷி:
ததா சர்க ஸதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்”

(பாலகாண்டம், 4-2).

பொருள்: இருபத்து நான்காயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சர்க்கங்களும் கொண்ட ஆறு காண்டங்களையும், அப்படியே உத்தரகாண்டத்தையும் செய்தருளினார்.

இதில் தெளிவாக இருபத்து நான்காயிரம் சுலோகங்களும் ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் என்று இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார். நடந்து முடிந்த ராம  கதையை யுத்த காண்டம் வரை கூறிவிட்டு நடக்கப்போகும் இராமகதையை உத்தர காண்டத்தில் கூறுகிறார். அதற்காகத் தான் அவ்வாறு பிரித்துக் கூறுகிறார்.

சுலோகம்:

க்ருத்வாபி தன்மஹாப்ராஞ: சபவிஷ்யம் சஹோத்தரம்
சிந்தயாமாஸ கோன்வேதத் ப்ரயுஞ்ஜீயாதிதி ப்ரபு
(பாலகாண்டம், 4-3)

பொருள்: அறிவிற் சிறந்த மகாமுனிவர் நடக்கப் போவதைக் கூறும் உத்தர காண்டம் என்ற பெயரோடு கூடிய பகுதியைச் செய்தபின், “எந்த சமர்த்தன் இதைப் பிரசங்கம் செய்யப்  போகிறான்?” என்று ஆழ்ந்து சிந்தித்தார்.

சுலோகம்:

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி:
சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ரபதமாத்மவான்”
. (பாலகாண்டம், 4-1)

இந்த சுலோகத்திலும், “ராமன் அரசைத் திரும்பப் பெற்று அரசாண்ட வரலாற்றை வால்மீகி முழுமையாக இயற்றினார்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

எல்லாவற்றையும் எவ்வாறு வால்மீயால் காண முடிந்தது? சாதாரண கவியாக இருந்தால் நடந்து முடிந்த சரித்திரத்தை நேரடியாகப் பார்த்தோ, பெரியவர்கள் கூறக் கேட்டோ எழுதிவிட முடியும். யோக நிலையில் தெய்வீகப் பார்வையால் பார்த்து தர்ம சொரூபரான வால்மீகி மகரிஷி இயற்றினார்.

வால்மீகி முனிவர் தர்ம சுபாவமும், யோக நிலையும் கொண்டவர். அவருடைய இயல்பு தவமியற்றுவது. யோகநிலை என்றால் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலை. அதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல நடந்ததையும் நடக்கப் போவதையும் பார்த்ததாகக் கூறுகிறார்.

“நதே வாகந்ருதா காவ்யே” என்கிறார் பிரம்மதேவர். “உம்முடைய வாக்கில் ஒரு பொய் கூட வராது” என்று ராமாயணம் எழுதுவதற்கு முன்னரே பிரம்மா வால்மீகியிடம் கூறுகிறார்.

“ரஹஸ்யம் ச ப்ரகாசம் ச” என்கிறார் பிரம்மா. யாராவது எப்போதாவது ஒரு வரலாற்றை ஆராய்ந்து எழுதும் போது ரகசியத்தையோ பிரகாசத்தையோ யாரும் தெரித்து கொண்டு எழுத முடியாது. ரிஷிக்கு மட்டுமே அது சாத்தியம். வெளியில் தெரிவது, வெளியில் தெரியாதது என்று இரண்டு விஷயங்கள் உண்டு. ராமன் மானுடனாக வாழ்ந்தாலும் அவன் நாராயணனே என்பது ஒரு ரகசியம். அதற்குப் பின்னால் இருக்கும் தெய்வீகத் திட்டம் ஒரு ரகசியம்.

சுலோகம்:

“ஸ்வராஷ்ட்ர ரஞ்ஜனம் சைவ வைதேஹ்யாஸ்ச விசர்ஜனம்

பொருள்: தன் தேசத்து மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக வைதேஹியை  அகற்றியதைப் பற்றியும் காவியம் இயற்றினார்.

அனாகதம் ச யத் கிஞ்சித் ராமஸ்ய வசுதாதலே
தச்சகாரோத்தரே காவ்யே வால்மீகிர் பகவான் ரிஷி:” (பால காண்டம், 3-40)

பொருள்: பகவான் வால்மீகி முனிவர் ராமருடைய கதையில் பூமியில் இன்னும் நடக்காதது எது உள்ளதோ அது முழுவதையும் உத்தர காவியத்தில் இயற்றினார்.

பாலகாண்டத்தையும் சேர்த்து ராமாயணம் படிப்பவர்கள் யுத்தத் காண்டத்தோடு முடிந்துவிட்டது என்று எப்படிக் கூற முடியும்? ராமர் ராஜ்ஜியத்தில் மக்கள் நன்றாக வாழும் வண்ணம் ஆண்டு வந்தார் என்று கூறும் வால்மீகி, சீதையைத் துறந்ததும் இன்னும் எதெது நடக்கப் போகிறதோ அதையெல்லாம் உத்தர காண்டத்தில்  தெரிவிக்கிறார் என்று தெளிவாக உள்ளது.

இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் ராமாயணத்திற்கு உள்ளது என்பதை ஏற்கையில் உத்தரகாண்டத்தைச் சேர்த்தால்தான் அது இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் வரும் என்பதையும் ஏற்க வேண்டும்.

கோவில்களிலும் உற்சவங்களிலும், பண்டிகை தினங்களிலும் பிரவசனம் செய்யும் போது யுத்தகாண்டத்தோடு முடித்தால் போதும் என்பது சம்பிரதாயமாக உள்ளது.

பால காண்டத்தில் ராவண சம்ஹாரமே அவதார நோக்கம் என்று உள்ளதால் யுத்த காண்டத்தோடு வரலாறு முடிவதாக ஒரு வாதம் உள்ளது. உத்தரகாண்டத்தோடு சேர்த்து மொத்தமும் படிப்பது கடமை என்பது பெரியோர் கூற்று. இதில் ஐயமில்லை.

சுந்தரகாண்டம் வரை பாராயணம் செய்தால் போதும் என்ற சம்பிரதாயம் கூட உள்ளது. அப்படியென்றால் மீதி ராமாயணத்தைப் படிக்க வேண்டாம் என்று பொருளா? விசேஷங்கள், விரதங்களின் போது அது போல் சுத்தர காண்டம் வரை பாராயணம் செய்தால் போதும் என்று கூறினார்களே தவிர யுத்த காண்டத்தைப் படிக்கக் கூடாதென்று கூறவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். 

நவராத்திரி, ஸ்ரீராம நவமி, போன்ற பண்டிகைகளின் போது யுத்தகாண்டம் வரை பாராயணம் செய்யும்படிக் கூறியுள்ளார்கள். ராமாயணம் இருபத்து நான்காயிரம் சுலோகங்களோடு 108 முறை ஹோமம் செய்தவர்கள் உள்ளார்கள். காயத்ரி மந்திரத்தின் புரச்சரணையோடு என்ற தீர்மானமும் உள்ளது.

ராமாயணத்தை முழுமையாக அறிய வேண்டுமென்றால் உத்தரகாண்டமும் படிக்க வேண்டும் எனறு சம்பிரதாயவாதிகளான உரையாசிரியர்கள் அனைவரும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல. புராணங்களிலும் ராமாயணத்தின் சிறப்பு பேசப்படுகிறது. புராணங்களை சிலர் பிரமாணமல்ல என்று கூறுவது வருத்தத்திற்குரியது. அவர்களுக்கு அனுகூலமானவற்றைப் பிரமாணமாக ஏற்பதும் பிறவற்றை அங்கீகரிக்காமல் பிற்சேர்க்கை என்பது சரியல்ல.

ரிஷிகள் இயற்றிய நூல்களை முதலில் ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், இதிகாசங்கள் என்று முழுமையாகப் பார்க்க வேண்டும். ரிஷிகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறின்றி புகழ் பெற்றவை என்பதால் ராமாயணத்தைக் காவியமாகவும் மகாபாரதத்தை ஒரு கதையாகவும் பாகவதத்தை வெறும் நூலாகவும் பார்ப்பதென்பது  கோணலான பார்வை. சம்பிரதாயமான ரிஷிகளின் படைப்புகள் என்ற தொகுப்பில் இருந்து இவற்றைப் பிரித்துப் பார்ப்பது குற்றம். புராணங்களிலும் பிற சம்ஹிதை நூல்களிலும் ராமாயண பாராயணம் பற்றிக் கூறியுள்ளார்கள். அதில் உத்தரகாண்டத்தோடு சேர்த்தே பாராயணம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காண்டத்திலும் ராமனை ஒவ்வொரு விதமாக தியானிக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உள்ளது. ராமாயணத்தை வெறும் புத்தகமாகப் பார்க்காமல் ராமரின் சொரூபமாகவே கருதிப் பாராயணம் செய்யும் சம்பிரதாயவாதிகள் உத்தரகாண்டத்திற்கும் தியான சுலோகம் கூறியுள்ளார்கள். உத்தரகாண்டத்தைத் தனியாகப் பிரித்து பார்ப்பதென்பது பண்டைய காலத்தில் நிகழவில்லை என்பது தெளிவாகிறது.

சிறிது காலமாக நவீனம் என்று நினைத்தும், மேற்கத்தியவர்களின் ஆராய்ச்சி பார்வையில் இருந்தும் பார்ப்பவர்கள் மட்டுமே இப்படிப் பிரிக்கிறார்கள். இவர்த்கள் எத்தனை தூரத்திற்குப் போகிறார்கள் என்றால் ராமாயணத்தில் பாலகாண்டத்திலேயே சில பகுதிகளை பிற்சேர்க்கையாகவும் யுத்தகாண்டத்திலும் சில பகுதிகள் பிற்சேர்க்கை என்றும் கூற ஆரம்பித்துள்ளார்கள். எங்கெங்கெல்லாம் தெய்வீகம், விஷ்ணு தத்துவம் தென்படுகிறதோ அதையெல்லாம் பிற்சேர்க்கையாக எடுத்தெறிந்து திருப்திப்படுகிறார்கள்.

ஆனால் ராம பக்தர்கள் யாரும் அதை ஏற்கமாட்டார்கள். “இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் கொண்டது வால்மீகி ராமாயணம்” என்பது பிரசித்தியான வாக்கியம். ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு சுலோகமாகத் தனியாக எடுத்து காயத்திரி ராமாயணமாகப் பாராயணம் செய்யும் முறை உள்ளது. சம்பிரதாயத்தை நம்புபவர்கள் உத்தரராமாயணத்தைத் துண்டாடுவதை விரும்பமாட்டார்கள்.

சுலோகங்களின் நடையில் வேறுபாடு உள்ளது என்று கூறுபவரும் உள்ளார்கள். “ததா உத்தரம்” என்று வால்மீகி கூறியபடி நடக்க இருக்கும் எதிர்கால விஷயங்களை வேறு நடையில் எழுதியிருக்கலாம். அது அவருடைய கவிச் சிறப்புக்கு உதாரணம். உத்தரகாண்டத்தின் நிறைய சுலோகங்கள் யுத்த காண்டத்தோடு தொடர்புடையவையாகவே உள்ளதைப் பார்க்க முடிகிறது.

உத்தரகாண்டம் ராமாயணத்தோடு சேர்ந்தது அல்ல என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டரேட் வாங்குகிறார்களாம். சம்பிரதாயத்திலிருந்து நழுவிய எழுத்துக்களுக்கு வெகுமதி கொடுப்பதற்கு பாரத தேசத்தில் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் பார்க்கிறோம். இங்கு ‘புரஸ்காரம்’ வாங்கலாமே தவிர, அது ‘பகவத் திரஸ்காரத்தையே பெற்றுத் தரும் என்பதை மறவலாகாது.

ராமனை தெய்வமாக வழிபடுபம் பக்தர்கள் மிகப் பலர். ராமாவதாரத்தின் முடிவை அறியாவிட்டால் முழுமை எப்படிக் கிடைக்கும்? பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தின் முடிவு உள்ளது. உத்தர காண்டம் இல்லாவிட்டால் ராமாவதாரத்தின் முடிவை எவ்வாறு அறிய முடியும்?

பல ராமாயாணங்கள் எழுதப்பட்டுள்ள`ன. அத்யாத்ம ராமாயணம் போன்றவை உள்ளன. எல்லாவற்றிலும் சீதையைத் துறப்பதும் ராமாவதார முடிவும் கூறப்பட்டுள்ளன. பாகவதம் நவம ஸ்கந்தத்திலும் உள்ளது. பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பத்ம புராணம் என்று எல்லா புராணங்களில் இருந்தும் எடுத்துக் காட்டி வாதிப்பவர்கள் புராணங்களை பிரமாணமல்ல என்று கூறும் விந்தையையும் நாம் பார்க்கிறோம்.

“யார் உத்தரகாண்டத்தை பக்தி சிரத்தையோடு கேட்பார்களோ அவர்களுக்கு ராமரின் பிரசாதத்தால் சர்வ ஸித்திகளும் கிடைக்கும்”. (சிரத்தை என்றால் சத்தியப் பார்வை சத்தியத்தின் மீதுள்ள நம்பிக்கை). 

உத்தரகாண்டத்தைத் தனியாகப் பிரவசனம் செய்வதானால், உத்தரகாண்டத்தைக் கூறி முடித்த பின் ராமாயணத்தை முதலில் இருந்து ஆரம்பித்து சீதா கல்யாணம் வரை படிக்க வேண்டும் என்று சம்பிரதாயம் தெரிவிக்கிறது. தனியாக உத்தரகாண்டத்தை மட்டுமே பிரவசனம் செய்யக் கூடாதென்று பெரியோர் கூறியுள்ளார்கள்.

காயத்ரி மந்திரத்தின் 22, 23, 24 என்ற மூன்று எழுத்துக்களோடு தொடங்கும் சுலோகங்கள் உத்தரகாண்டத்தில் உள்ளன. உத்தரகாண்டம் இல்லாவிட்டால் காயத்ரி மந்திரத்தின் மூன்று அட்சரங்கள் ராமாயணத்தில் இருக்காது. இத்தனை பிரமாணங்கள் உள்ளன.

ஸ்காந்த புராணத்தில் ஏழு காண்டங்களோடு கூடிய ராமாயணம் ஏழு வித பலன்களை அளிக்கிறது என்ற குறிப்பு உள்ளது. மகா கவிகள் உத்தர காண்டத்தைக் கொண்டு பல காவியங்களை எழுதி உள்ளார்கள். சமஸ்கிருதத்தில் நாடகமாக பவபூதி எழுதிய உத்தர ராம சரிதம் மிகச் சிறந்த சமஸ்கிருத இலக்கியமாகப் புகழ் பெற்றுள்ளது.

தெலுங்கில் ‘திக்கனா’ எழுதிய உத்தர ராமாயணத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. முழுக்க செய்யுட்களால் எழுதியுள்ளார். ‘கன்டண்டி பாப்பராஜு’ என்பவர் வேணுகோபால சுவாமி  உபாசகர். மிக மதுரமான உத்தர ராமாயணத்தைத் தெலுங்கில் படைத்துள்ளார்.

உத்தரம் என்றால் ‘பிறகு’ என்று பொருள். பிறவற்றோடு ஒப்பிடும் போது இது உயர்ந்தது  என்று குறிப்பதற்காக ‘உத்தரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். யுத்த காண்டம்  வரை படிப்பவருக்கு பல சந்தேகங்கள் வருவது இயல்பு. அவற்றுக்கெல்லாம் உத்தர காண்டத்தில் பதில் கிடைக்கிறது.

அனுமனை சபையில் பார்த்ததும், ராவணனுக்கு, “என்னை அன்றொரு நாள் சபித்த நந்தீஸ்வரர் நினைவுக்கு வருகிறாரே. அவரே இந்த வடிவில் வந்தாரா?” என்று எண்ணினானாம். எப்போது நந்தி ராவணனை சபித்தார் என்பது உத்தரகாண்டம் படித்தால்தான் தெரிய வரும்.

ராவணன் எத்தனை சிறந்தவன் என்று கூறியிருந்தாலும் அவனுடைய வரலாறு என்ன? எதனால் அத்தனை பலம்? எப்படி அத்தனை வரங்களைப் பெற்றான்? என்பதெல்லாம் உத்தர காண்டம் இல்லாவிட்டால் தெரிய வராது. அனுமன் ஒருமுறை, “நீ இத்தனை வரங்களைப் பெற்றுள்ளாய். உனக்குச் சமமான தேவர், அரக்கர் யாரிடமிருந்தும் உனக்குத் தோல்வியில்லை. ஆனால் மனிதரைப் பற்றி அதில் கூறப்படவில்லை” என்கிறார். வரமளித்தவர் யார்? அந்த வரம் என்ன? என்பது உத்தர காண்டம் படித்தால்தான் தெரியவரும்.

பால காண்டம் நான்காவது சர்க்கத்தில் “ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய” என்ற சுலோகம் உள்ளது. உத்தர காண்டத்தில் முதல் சுலோகமாகவும் அதன் முதல் பகுதியே உள்ளது.

“ராமர் ராஜ்ஜியத்தைப் பெற்ற பின்” என்று தொடங்கி, ராமாயணத்தின் தொடர்ச்சியாக எத்தனை அழகாக எழுதியுள்ளார் பாருங்கள். நடையில் சிறிது வேறுபாடு இருப்பதை இலக்கியச் சுவையாகக் கருத வேண்டும்.

லவனும் குசனும் நைமிசாரண்யத்தில் அஸ்வமேத யாக சபையில் உத்தர காண்டத்தோடு கூடிய ராமாயணத்தை வால்மீகி இயற்றினார் என்று ராமரிடம் கூறுகின்றனர்.

சுலோகம்:

“சம்நிபத்தம் ஹி ஸ்லோகானாம் சதுர்விம்சத் சஹஸ்ரகம்
உபாக்யான சதம் சைவ பார்கவேண தபஸ்வினா”
(உத்தர காண்டம், 94-25).

“தபஸ்வியான பிருகு வம்சத்தைச் சேர்ந்த வால்மீகி முனிவர் இருபத்து நான்காயிரம் சுலோகங்களோடும் பலப்பல உபகதைகளோடும் முற்றிலுமாக இயற்றியுள்ளார். அரசரே,  முதலிலிருந்து ஐந்நூறு சர்க்கங்கள் அடங்கிய ஆறு காண்டங்கள் இதுவரை நடந்ததைக் கூறுகின்றன. அந்த காண்டங்களுக்கு மேல், இனி நடக்க இருப்பதைக் கூறும் உத்தரம் என்னும் கடைசி காண்டமும் செய்து முடிக்கப் பட்டுள்ளது. ராஜா, இவ்வுலகில் இருக்கும் ஆயுட்காலம் எவ்வளவோ அதற்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் பிரமாணமாக இந்தக்  காவியம் விளங்குகிறது. ராஜா, தாங்கள் செவிசாய்க்க விரும்புவதால் யாகத்தின் இடையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தம்பிமார்களோடு கேட்டருளுங்கள்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர். ஸ்ரீ ராமரும், “அப்படியே செய்க” என்று ஆணையிட்டார்.

சர்வம் ஸ்ரீ சீதா ராமார்ப்பணம்ஸ்து.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs குஜராத்
அகமதாபாத் – 22.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (235/2, மிட்சல் மார்ஷ் 117, நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 56, எஉடன் மர்க்ரம் 36, ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 16, அர்ஷத் கான், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணியை (202/9, ஷாருக் கான் 57, ரூதர்ஃபோர்ட் 38, ஷுப்மன் கில் 35, ஜாஸ் பட்லர் 33, சாய் சுதர்ஷன் 21, வில் ஓ ரூர்கே 3/27, ஆவேஷ் கான் 2/51, ஆயுஷ் பதோனி 2/4, ஆகாஷ் சிங், ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கட்) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (24பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) 10 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான மிட்சல் மார்ஷ் (64 பந்துகளில் 117 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்), நிக்கோலச் பூரன் (27 பந்துகளில் 56 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரிஷப் பந்த் (6 பந்துகளில் 16 ரன், 2 சிக்சர்) உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவருக்கு 2 விக்கட் இழப்பிற்கு 235 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் மார்ஷ் மற்றும் பூரன் இருவரின் அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்து போனார்கள்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள். சாய் சுதர்ஷன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (20 பந்துகளில் 35 ரன், 7 ஃபோர்) ஆகிய இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.  

பின்னர் வந்த ஜாஸ் பட்லர் (18 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 2சிக்சர்), ரூதர்ஃபோர்ட் (22 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), ஷாருக் கான் (29 பந்துகளில் 57 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று தமிழக வீரர், ஷாருக் கான் ரன் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் கடைசி வரை இருந்து வெற்றிக்கு வழிவகுக்காமல் 18.5 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதற்கு முன்னரே ராகுல் திவாத்தியா (2 ரன்), அர்ஷத் கான் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்து விட்டதால் குஜராத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

லக்னோ அணியின் மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை இழக்கவில்லை. இருந்தாலும் இது ஒரு பின்னடைவு.

ஏற்கெனவே நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

image 3 - 2026

நீதிபதிகள் மீது திமுக.,வினர் சாதிய வசை பாடுவது நியாயமா?

Dr Krishnasamy pudiyathamizagam

திமுக என்ன கட்டளையிடுகிறதோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டுமா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி. குறிப்பாக, நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது திமுகவினர் சாதிய வசைபாடுவது எவ்விதத்தில் நியாயம்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூகத் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

திடீர் சமூகநீதிப் பிரியர்கள் மாஞ்சோலை தீர்ப்பின் போது எங்கே சென்றார்கள்.?

அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்த துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடை விதித்து நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தாங்கிக் கொள்ள முடியாத திமுக அடிவருடிகள் நீதிபதிகளின் புகைப்படங்களை வெளியிட்டும், அவர்களை சாதி ரீதியாகவும் வசைபாடியுள்ளனர்.

இது திமுக மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் வக்கிரப்புத்தியைக் காட்டுகிறது. இவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டும். இல்லையேல், அது பார்ப்பனிய நீதிமன்றம் ஆகிவிடும். இதற்கும் இது மக்கள் பிரச்சனை சார்ந்தது அல்ல; பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழகங்களும் மானியக் குழுவிடம் நிதி பெற்றே இயங்குகின்றன. மாநில அரசின் நிதி அளிப்பு மிகக் குறைவு. எனவே யூஜிசி மற்றும் ஆளுநர் அனுமதி இல்லாமல் துணைவேந்தர்களை நியமனம் செய்ய வழி இல்லை. ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை அனைத்து அம்சங்கள் – சட்ட சிக்கல்களை கணக்கிலே கொள்ளாமல் ஆளுநரின் காலதாமதத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்து விட்டனர். அதுவும் தற்போது ஜனாதிபதியால் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில்., அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரே வேந்தர் எனவும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் எனவும் அரசாணை பிறப்பித்தது. இது தற்போது நடைமுறையில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.

உச்ச நீதிமன்றம் சென்றால் உடனடியாக அதற்கு தடை ஆணை பெற இயலாது. அதன் ஆத்திரத்திலே திமுகவின் ரூபாய் 200 கூலிப்படை மற்றும் அதன் அடிவருடிகள் நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோரை அவர்களின் சாதிகளைக் குறிப்பிட்டு வசை பாடுகிறார்கள். திமுகவின் இந்த கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

திடீர் மனிதநேய சமூகநீதிப் பிரியர்கள் கடந்த 2024 டிசம்பர் 3 ஆம் தேதி மாஞ்சோலை மக்களின் நூறாண்டு கால வாழ்வுரிமை பறிக்கக் கூடிய வகையில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு எழுதினார்களே?

அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்.? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

மோடியின் நரம்புகளில் ஓடுவது ரத்தமல்ல, சிந்தூர்: பிரதமர் மோடி ஆவேசம்!

pm modi in rajastan pikaneer - 2026

பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன்.  மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால், மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது என்று, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ‘ஆபரேஷன் சிந்தூரை’க் குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே உள்ள புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலில்  வழிபாடு நடத்தினார். அதன் பின்னர், அம்மாநிலத்தின் பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தக் கோயிலுக்கு வந்தது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் ஆவேசமாகப் பேசினார். அதற்கு ஏற்ப, தனது நெற்றியில் குங்குமத் திலகமிட்டு, ஆபரேஷன் சிந்தூர் குறித்த அடையாளத்தையும் வெளிப்படுத்தினார். 

அந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது; பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது. பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். 3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். 

இந்தியாவுக்குச் சொந்தமான  தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று பேசினார். 

குறிப்பாக, இன்று கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்ற பிறகு நான் இங்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார். அவரது நெற்றியில் கோயிலில் வழங்கப்பட்ட குங்குமப் பிரசாதம் சிந்தூரின் அடையாளமாக இருந்தது. 

“இன்று, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் மக்களை வாழ்த்துகிறேன்” என்று பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் தனது பங்கினைக் குறிப்பிட்டு, நாடு வளர்ச்சியை நோக்கியே பயணப் படும் என்பதை தெளிவாக்கி, உடனே பாகிஸ்தான் எப்படி பயங்கரவாதப் பாதையில் சென்று, வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார். 

“பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான நேரடிப் போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்பதால், அது பயங்கரவாதத்தை நம் மீது தொடுக்கிறது. இந்தியாவுக்குச் சொந்தமான தண்ணீரை இனி  பாகிஸ்தானால் பெறமுடியாது.” என்றார். 

ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம். அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. 

“பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஒரே குரலில் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையை உறுதி செய்யவும் தீர்மானித்தனர். இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால்தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசு மூன்று படைகளுக்கும் கையைக் கட்டாமல் சுதந்திரம் கொடுத்தது. முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தது பாகிஸ்தானைச் சரணடையச் செய்தது. 

“மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை” “ நிமிர்த்தி நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படிப் பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும்.” என்று ஆவேசமாகப் பேசினார். 

ராஜஸ்தான் மாநிலம், பாகிஸ்தானுடன் எல்லையைக் கொண்டிருப்பதும், அது கடந்த காலங்களில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இலக்கான இடம் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

தீர்ப்புகள் திருத்தப்படலாம்! 

RN Ravi and MK Stalin - 2026

ஆட்டுக்குத் தாடியும் ஆளுநருக்கு … என்ற திமுக.,வின் மேடைப்பேச்சுகள் அது ஆளுங்கட்சியாக பதவியில் அமர்ந்து அவியல் செய்யும் காலங்களில் அதிகம் ஒலிக்கும். அதே நேரம் எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் செய்யும் காலங்களில், ஆளுநர் மாளிகை நோக்கி மனு கொடுப்பதற்கும் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரணி செல்வதற்கும் மும்முரமாக இருக்கும். 

ஏற்கெனவே முன்னர் இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுத் திட்டங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள அடிக்கடி சென்ற போது அதுபற்றி ஊடகங்கள் மூலம், வயது முதிர்ந்த உயர் பொறுப்பில் இருந்த நபரைப் பற்றி திராவிட இயக்கங்கள் செய்த துர்பிரசாரத்தை தமிழகம் பார்த்தது. துணை வேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை என்ற அவரின் செயல்பாடுகளுக்கு எதிராக, அன்றும் திராவிட ஊடகங்கள் தீயாய் வேலை செய்து வந்தன. 

திமுக., ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்துக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்  ரவீந்திர நாராயணன் ரவி,  ஐபிஎஸ் என்ற பின்புலத்தில் வந்தவர் என்பதால்  அவரது நடவடிக்கைகள் அதிரடியாகவும் அதேசமயம் தேச நலனுக்கு உகந்ததாகவும் அமைந்திருந்தது.  அதை முடக்கும் விதமாக ஊடகங்களை வைத்து பெரும் தாக்குதல்களை திராவிட இயக்கங்கள் செய்து கொண்டே வந்தன.  சொல்லப்போனால் இப்போது திமுக.,வுக்கு அரசியல் செய்யும் நேரம்.

 சட்ட திட்டங்களுக்கு முரண்பாடான வகையில், தங்களது கொள்ளை அடிக்கும் ஆசைகளை சட்டரீதியாக நிறைவேற்றிக் கொள்ள, சட்டமன்றத்தையே பயன்படுத்திக் கொள்வது என்ற விஞ்ஞான ஊழலில் திமுக., இறங்கிவிட்டது என்பதன் வெளிப்பாடுதான் ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையிலான சச்சரவுகள். 

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி வைத்த மசோதாக்கள் பலவற்றை உடனே கையெழுத்திட்டு அனுப்பி வைத்த ஆளுநர் ரவி,  அவற்றின் ஊடே அனுப்பி வைத்த சர்ச்சைக்குரிய, சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் அல்லது சட்ட முரண்பாடுகள் உள்ள சில மசோதாக்கள் மட்டும் கிடப்பில் வைத்தார்.  அது திமுக., அரசு தங்களுக்கு பணபலம் அதிகம் தரும் மசோதாக்கள் எனும் காரணத்தால் தீவிரமாக எதிர்க்க தடைப்பட்டது. 

 அதன் விளைவாக வெடித்ததே ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு இடையிலான மோதல்கள்  என்பதை  பள்ளிப் பாடம் கற்ற எவருமே எளிதாகப்  புரிந்து கொள்வர். இப்போது  அந்த நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களின் நிலையைப் பற்றி சிறிது யோசித்துப் பார்ப்போம்.

1. NEET தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.  சட்டசபை மீண்டும் இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பியதை  குடியரசு தலைவருக்கு அனுப்ப தாமதம் செய்தார்.    குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை நிராகரிக்க தமிழக அரசு நீதிமன்றம் சென்று போராட உள்ளது. இதன் முடிவு – மாணவர்கள் கூட்டமாக இந்த வருடமும்  நீட் தேர்வு எழுதினார்கள்.

2. செந்தில் பாலாஜி கைதுக்குப் பிறகு அவர் அமைச்சராகத் தொடர/ பதவி பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுத்தார். இதன் முடிவு – உச்ச நீதிமன்றமே தான் அளித்த ஜாமீனுக்கு  வருந்தி,  செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொன்னது. அரசுக்கு தலைகுனிவு. ஆனால் அதைப் பற்றி எல்லாம் எவர் கவலைப்படுவது?

3. பொன்முடி வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்ய மறுத்தார்  ஆளுநர் ரவி. இதன்  முடிவு – நீதிமன்றம் அவர் மீது உள்ள வழக்கை துரிதப் படுத்தி உள்ளது மேலும் புதிய வழக்கு  தொடரப்பட்டது.

4. பல்கலைக் கழக துணைவேந்தர்  பல்கலைக்கழக மானியக் குழு யு சி ஜி சட்டப்படிதான் இருக்க வேண்டும் என்று ஆளுநர் சொன்னார். அரசு வழக்கம் போல மீறி நடந்து, பின் மசோதா அனுமதிக்கு நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளித்த  தீர்ப்புக்குப் பிறகு முதல்வரே வேந்தர் என்று வெற்றி விழா கொண்டாடிக் கொண்டது திமுக.,! இதன் முடிவு –  தனது மற்றும் ஆளுநர் அதிகாரங்களில் தலையிடும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இப்போது குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தைக் கருத்து கேட்டுள்ளார். இப்போது, சென்னை உயர் நீதிமன்றம் இந்த ‘முதல்வரே வேந்தர்’ மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது.  மீண்டும் திமுக ., அரசுக்கு தலைகுனிவு.

பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டதற்கு திமுக.,வினர் மற்றும் திராவிட ஊடகங்கள், இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்று கதை விட்டுக் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தமிழக அரசு vs ஆளுநர். ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது பற்றி மட்டுமே வழக்கு. 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்தது. அப்படி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்தானது அந்த வழக்கு. 

சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றது உச்ச நீதிமன்றம். மேலும் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம். ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாதாக்களையும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல் கொடுத்தது. 

இதில் கவனிக்க வேண்டியது “அந்த 10 மசோதாக்களில் என்ன இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் பார்க்கவே இல்லை. அதாவது வழக்கின் தகுதி என்ன என்பதை உச்ச நீதிமன்றம் பார்க்கவில்லை. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதோடு அவர்கள் நின்று விட்டார்கள். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் சட்டபூர்வமாக சரியானதா என்பதை ஆளுநர் ஆராய்கிறார். அதாவது ஆளுநர் வழக்கின் ‘தகுதி’  என்ன என்பதைப் பார்க்கிறார். அதனால்தான் திருப்பி அனுப்புகிறார். ஆனால், சட்ட மசோதாக்களை ஆராய்வது ஆளுநரின் வேலை இல்லை; சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களின் மீது உடனே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போடுவது மட்டும்தான் ஆளுநர் வேலை என்பதுதான் தமிழக அரசின் வாதம். 

இப்போது உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் வழக்கு ‘சட்டத்தின் தகுதி’ பற்றியது. அதாவது சட்ட மசோதாவில் ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்து, துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு அளிப்பது யு ஜி சி சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்பதுதான் வழக்கு. இதைத்தான் ஆளுநரும் சொன்னார்.  அந்த வழக்கில்தான் தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு இடைகாலத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியலாம். ஆனால் அந்த வழக்குக்கும், உச்ச நீதிமன்றம் முன்னர் கொடுத்த தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், இதன் தீர்ப்பும்கூட யுஜிசி நெறிமுறைகளுக்கு உட்பட்டு எனும் பிரிவின் கீழ் வரக்கூடும். 

இப்படி ஆளுநருடனான அரசியல் விவகாரத்தில் அனைத்திலும் திமுக., அரசு ஒரு எதிர் நிலைப்பாடு எடுத்து செயல்பட்டுள்ளதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தண்டனைக்கு உள்ளான / கைதான அமைச்சர்களுக்கு வக்காலத்து,  வழக்குகள், மேல் முறையீடு என்று ஒவ்வொரு விஷயத்திலும் செயல்பட்டுள்ளதும் நன்றாகத் தெர்கிறது. 

இறுதியில், ஆளுநர் கூறிய அறிவுரையே சரி என்ற நிலை தான் அனைத்து விஷயத்திலும் வெளித்தெரிய, இந்த சட்டப் போர்களுக்கு எல்லாம் திமுக,.வின் சொந்தப் பணமா செலவழிக்கப்படுகிறது? பொது மக்களின் வரிப் பணம் தானே! ஒரு பக்கம் நிதிப் பற்றாக்குறை என்று போக்குவரத்துப் பணியாளர்களுக்கும் ஆசிரியர்களும் அரசுப் பணியாளர்க்குமே துரோகம் இழைக்கும் திமுக., அரசு, இன்னொரு பக்கம் அரசுக்கு வர வேண்டிய வருமானத்தை ஊழல்களால் தன் கட்சிக்குத் திருப்பிக் கொண்டிருக்கும் அயோக்கியத் தனங்களைச் செய்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் டாஸ்மாக் ஊழல் இப்போது பூதகாரமாக்கி வெளிசமிட்டுக் காட்டியுள்ளது.