Home Blog Page 92

பாகிஸ்தானின் முயற்சி முறியடிப்பு! சரியான முறையில் இந்தியா பதிலடி!

operation sindoor contrinue - 2026

பகல்காம் பயங்கரமாக தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை இந்திய ராணுவம் வான்வெளி தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தியது. அதற்கு பின்னர் நேற்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் சுட்டு தாக்குதல் நடத்தியதில் அப்பாவி மக்கள் குழந்தைகள் உயிரிழந்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை பாரத ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் வழி பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் நிர்மூலமானது.

இது குறித்த பாரத அரசின் அறிக்கையினை நாட்டின் பத்திரிகை தகவல் தொடர்பு துறை பிஐபி மூலம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

2025 மே 07 அன்று, ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என இந்தியா தனது பதிலை விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. இந்திய ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி வழங்கப்படும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. 

2025 மே 07-08 இரவு, பாகிஸ்தான், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா ஆதம்பூர், பட்டிண்டா. சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முயன்றது. ஒருங்கிணைந்த எதிர் தடுப்பு அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இவை தடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபிக்கும் இந்த தாக்குதல்களின் சிதைவுகள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன. 

இன்று காலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. பாகிஸ்தானைப் போலவே இந்தியா களத்தில் பதிலடி அளித்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள் உள்ள பகுதிகளில், பாகிஸ்தான், மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே தூண்டப்படாத துப்பாக்கிச் சூட்டை அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட பதினாறு அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன. இங்கும். பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தும் வரை, பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை. இந்திய ஆயுதப்படைகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என வலியுறுத்துகின்றன.

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி தோல்வி; இந்தியா தகுந்த பதிலடி: ராணுவம் அறிக்கை வெளியீடு!

operation sindoor contrinue - 2026

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது குறித்தும், இந்தியா அளித்த தகுந்த பதிலடி குறித்தும் அரசுத் தரப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

“சிந்தூர்” என்ற பெயரில் இந்தியா மேற்கொண்ட செயல்பாடு குறித்து மே 7 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தபடி, இந்த பதிலடி குறியாகவும், கணக்கீட்டோடு செய்யப்பட்டதாகவும், மேலும் முற்றிலும் தற்காப்புக்குரியதாகவும் இருந்தது.

பாகிஸ்தான் ராணுவ அமைப்புகள் குறிவைக்கப்படவில்லை என்றும், இந்திய படைகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டிப்பான பதிலடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

மே 7 மற்றும் 8 இரவுகளில் பாகிஸ்தான், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க முயற்சித்தது.

இது ஜம்மு, ஸ்ரீநகர், பாக்திந்தா, லூதியானா, புஜ் போன்ற நகரங்களை உள்ளடக்கியது. ஆனால் இந்தியாவின் ஏர் டிஃபென்ஸ் மற்றும் UAS எதிர்ப்பு அமைப்புகள் இந்த தாக்குதல்களை முற்றிலும் தேற்கத்தக்க வகையில் தடுத்தன.

இன்று காலை, இந்தியா பாகிஸ்தானில் உள்ள ஏர் டிஃபென்ஸ் ராடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து அதே அளவிலான தாக்குதலை மேற்கொண்டது. லாகூரில் உள்ள ஒரு ஏர் டிஃபென்ஸ் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் இருந்து மோட்டார்கள் மற்றும் கனமான ஏர்டில்லரி தாக்குதல்களை அதிகரித்துள்ளது. குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தார் மற்றும் ராஜௌரி ஆகிய ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் இது கடுமையாக இருந்தது.

இந்த தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர், இதில் 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். இதனையடுத்து இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்தியது.

இந்திய படைகள், தாங்கள் தன்னிச்சையான பதிலடியில் ஈடுபடவில்லை என்பதையும், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நியாயமற்றவை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

விழிப்புடன் இருங்கள்; பொய்ச் செய்திகளை நம்பாதீர்கள், பகிராதீர்கள்!

fake news - 2026

STAY ALERY, STAY VIGILANT! – விழிப்புடன் இருங்கள். பொய்ச் செய்திகளை நம்பாதீர்கள். பொய்ச் செய்திகளை பரப்பாதீர்கள். இது இந்திய ராணுவத்தின் வேண்டுகோள்.

வரும் நாள்களில் உங்கள் சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரங்கள் பெருமளவில் பரவக்கூடும். ஒவ்வொரு தகவலையும் தெளிவாக ஆராய்ந்து பார்வையிடுவது மிகவும் அவசியம்.

இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக PIBFactCheck-இல் புகாரளிக்கவும்.
WhatsApp: ‪+91 8799711259‬
Email: factcheck@pib.gov.in #OperationSindoor – என்று மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமான பிஐபி அறிவுறுத்தியுள்ளது.

பொய்ச் செய்திகளுக்காகவே PIB Fact Check எனும் பக்கத்தை நிர்வகித்து வருகிறது. அதில், பொய்யாக பரவும் வீடியோக்கள், பழைய வீடியோக்கள் குறித்து தெளிவான தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.  அந்த வலையில் இந்தியர்களாகிய நாம் விழ வேண்டாம். மத்திய அரசு மற்றும் ராணுவத்தால் உறுதிப்படுத்தப்படாத எந்த செய்தியையும் நம்ப வேண்டாம், பிறருக்கு அனுப்ப வேண்டாம். விழிப்புடன் இருப்போம். தேசம் காப்போம்.

மதுரை நகரில் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாணம்!

thirukkalyanam near madurai temples - 2026

மதுரை நகரில் பல்வேறு கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர், யாரைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் அழியாபதீஸ்வருக்கு அம்பாளுக்கும் திருக்கல்யாணம் மணி கண்டன் பட்டர் தலைமையில் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகள் முருகன், சிவா, சேது மூர்த்தி ஆகியோர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இதேபோல் மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் காந்தன் பட்டர் தலைமையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.

மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆன்மீக பெண்கள் குழுவினர் சீர்வரிசை யுகடன் கோயிலுக்கு வந்தனர்.

திருக்கல்யாணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் ருத்ர ஹோமங்களை சிவாச்சாரியார் நடத்தினர். இதையடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் (விருந்து) நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மீனாட்சி கோயில் அருகே தடுப்பு வேலி; போலீஸார் கெடுபிடியால் மணமக்கள் ஒருபுறம் குடும்பத்தினர் மறுபுறம் என தவிப்பு!

madurai temple kalyana utsav devotees - 2026

மீனாட்சி கோவில் அருகே தடுப்பு வேலி ஏற்படுத்திய போலீசார்; ஒருபுறம் குடும்பத்தார் – மறுபுறம் புதுமண தம்பதிகள் என மாலை மாற்றி வேதனையுடன் சென்றனர். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம்: போலீசார் தடுப்பு ஏற்பாடு: பொதுமக்கள் வாக்குவாதம்.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று மதுரையில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை நேரில் காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை ஆதீனம் மடம் பகுதி சித்திரை வீதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து, பொதுமக்களின் நுழைவை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால், திருவிழாவுக்காக வெகுநேரம் காத்திருந்து வந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்போதும் வழக்கம்போல சித்திரை வீதியில் அமர்ந்து தாலி பெருக்க விரைந்த பெண்கள், அனுமதி மறுக்கப்பட்டதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், மதுரை வண்டியூரை சேர்ந்த புதுமண தம்பதிகளின் கிருஸ்ணமூர்த்தி – நாகஜோதி பெற்றோர்களை தடுப்புகளை தாண்டி செல்ல அனுமதிக்கத்தால், புதுமண தம்பதிகள் ஒரு புறமும் பெற்றோர்கள் மறுபுறம் என புது தாலி மாற்றி மாலை மாற்றியது இரு வீட்டார் இடையே அசாதாரணமாக சூழல் நிலவியது.

குறிப்பாக தடுப்பை தாண்டி சுமார் 500 மீட்டருக்கு காலியாக இருந்த நிலையில் தடுப்புகளை தாண்டி சிறிது தூரத்தில் இரு வீட்டாரையும் மட்டும் அனுமதித்து தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து இருந்திருக்கலாம் எனவும், போலீசாரின் செயல் வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

தொடரும் ஆபரேஷன் சிந்தூர்; ட்ரோன் தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான்!

operation sinthoor - 2026

நேற்று பாகிஸ்தான் மீது பாரத விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது. பாரத விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தி, 9 பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தது. இதில் அந்த முகாம்களில் இருந்த பயங்கரவாதிகள் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று பாகிஸ்தான் மீது அதானி – இஸ்ரேல் தயாரிப்பில் உருவான ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இதில், மேலும் பல பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது பாரதம் நடத்திய துல்லியமான ‘‘தற்கொலை ட்ரோன்கள்’ இன்று முற்பகல் லாகூரின் ராணுவ விமான நிலையத்தில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தின.

முன்னதாக, பாரதம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அவை அத்தனையையும் முறியடித்தது பாரதத்தின் எஸ் 400 என்ற, சுதர்ஷன சக்ர பாதுகாப்பு அமைப்பு.

இந்நிலையில், சீனாவிடம் இருந்து வாங்கிய ஹெச்-க்யு 9 வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய விமானங்கள் எதையும் கண்டறியவோ, எதிர்த் தாக்குதல் தொடுக்கவோ இல்லை. இந்தியாவின் விமானங்களும் ட்ரோன்களும் பாகிஸ்தானை பலமாக பதம் பார்த்தன. ஆனால், பாகிஸ்தான் இன்றூ காலை ஏவிய ஏவுகணைகள், மூன்று விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு எஸ் 400 முறியடித்து, வானிலேயே அழித்தது.

இதனிடையே, இன்று காலை லாகூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது யார் என்ற கேள்வி எழுந்தது. காரணம், இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக ட்ரோன் தாக்குதல் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அதே நேரம், பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் இன்னொரு புறத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு  பேசிய போது, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்றார்.

அப்போது அவர் குறிப்பிட்டதாவது: கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். அனைத்துத் தலைவர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்திய இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்கள். மேலும்  நாங்கள் மத்திய அரசுக்கும், ராணுவத்தினருக்கும் முழு ஆதரவு அளிப்போம் என்று கூறினார்கள். 

அதிகாரத்திற்காக மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்றார் கிரண் ரிஜிஜூ. 

இதன் மூலம் ஆபரேஷன் சிந்தூர் என்பது தொடர்கிறது என்பது உறுதியானது. அதன்படி, இன்று காலை முதலே ட்ரோன்கள் மூலமான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்; பக்தர்களுக்கு விருந்து!

madurai amman kalyana virundhu - 2026

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். திருக்கல்யாண விருந்தில் லட்சகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காலை 7:00 மணி முதல் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம் , வெஜிடபிள் பிரியாணி. தக்காளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்ட ஆறு வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. பத்து வரிசைகள் மூலம் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், குடிநீர் வசதி பக்தர்கள் உணவுக்கு பின் வெற்றிலை பாக்கு தாம்பூலம் , திருமாங்கல்ய கயிறு குங்குமம் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது. கல்யாண விருந்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருமணம் மொய் எழுதும் நிகழ்ச்சியில் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் திருமண மொய் எழுதினர்.

முன்னதாக, நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டு வருகிறது.

மதுரை பழமுதிர்ச்சோலை திருவருள் பக்தர் சபை சார்பில், தலைவர் தங்கிஸ்வரன் செயலர் வெங்டேசன்பொருளாளர் அரிமணிகண்டன் ஆகிய குழுவினர் கடந்த 25 ஆண்டுகளாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் விருந்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

திருக்கல்யாண அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பக்தர்களுக்கு 5 ஆயிரம் கிலோ அரிசி யில் சாம்பார் சாதம்,தக்காளி சாதம் வெஜிடபிள் , பிரியாணி, புளி சாதம் தயிர் சாதம் உள்ளிட்ட ஆறுவகையான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. மேலும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் 800 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்குகின்றனர்.

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்!

madurai meenaakshi thirukalyanam - 2026

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது

வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தங்களின் மாங்கல்யத்தை மாற்றிக்கொண்டனர்.

முன்னதாக, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பல்லாக்கில் புறப்பட்டார் முருகன்.

அம்மையின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார். உடன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் மதுரை நோக்கி புறப்பட்டனர்.

thirupparankundram murugan in meenakshi thirukkalyanam - 2026

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல்-29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரையை ஆளும் மங்கையார் அரசிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் உடன் நாளை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் இங்கிருந்து மதுரைக்குப் புறப்பட்டனர். முருகன் வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பைப் பெற்று திருக்கல்யாண வைபோகத்திலும் மாலை பூ பல்லாக்கிலும் நாளை திருத்தேரோட்டத்திலும் பங்கேற்று சனிக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் கோவிலிலில் விடைபெற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் திருப்பரங்குன்றம் வந்தடைகிறார்.

முருகன் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்படும் போதும் மீண்டும் திரும்பும் போதும் வழி நெடியிலும் பக்தர்கள் அவருக்கு வரவேற்ப்பளிப்பனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா?

operation sithoor 2 - 2026

— ஆர். வி. ஆர்

“பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது சரியா? நமது நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பெரிய உயிரிழப்புக்கு அது வழி வகுக்காதா?”

இந்தக் கேள்விகளை நம்மில் சிலர் – சிலர் அப்பாவியான நல்லெண்ணத்திலும், சிலர் மறைமுக மோடி எதிர்ப்பாகவும் – எழுப்புகிறார்கள்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாம் பாகிஸ்தான் மீது துப்பாக்கி-குண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால்:

எப்படியான நாடு இந்தியா? இந்து சமவெளி நாகரிகம் வளர்ந்த நாடு. உலகில் மிக அதிக மக்கள் தொகை உடைய நாடு. நான்காவது பெரிய பொருளாதாரம், பிற நாடுகளைக் காட்டிலும் வேகமான வருடாந்திரப் பொருளாதார வளர்ச்சி, இவற்றோடு உலகம் போற்றும் தலைவரைப் பிரதமராகத் கொண்ட நாடு.

இப்படியான நமது நாட்டிற்குள் அடுத்த நாடு சில பயங்கரவாதிகளை அவ்வப்போது அனுப்பி நம் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கும், அதை நம் நாடு கண்டனம் செய்துவிட்டு ஐ. நா சபைக்குச் சென்று அழுவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றால், நமது பெருமையை, நமது முக்கியத்துவத்தை, நமது மக்களுக்கான கடமையை, உணராத நாடு இந்தியா என்று அர்த்தமாகும்.

நம் மண்ணில் நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் துணியாத நாடாக இருந்து நாம் வளர முடியாது, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியாது. நாம் அப்படிச் செயலற்று இருந்தால், வளர்ந்த மற்ற நாடுகள் நம்மைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும், வியாபாரம் மற்றும் பொருளாதார விஷயங்களில் நம்மை அடிபணிய வைக்கும், நம்மை வஞ்சித்து உறிஞ்சும்.

பாகிஸ்தான் நம்மை எந்த வகையில் தாக்கி வருகிறது? நம் நாட்டிற்குள் தனது ராணுவத்தை அனுப்பாமல், நூற்றுக் கணக்கில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து நம் நாட்டிற்குள் அனுப்பிப் படுகொலைகளையும் நாசவேலைகளையும் செய்கிறது. இவற்றுக்குப் பதிலடி என்பதாக, நாமும் இந்தியாவில் பயங்கரவாதிகளைத் தயார் செய்து அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் ரகசியமாக அனுப்பி அந்த நாட்டு எல்லைக்குள் நாசவேலைகளை அரங்கேற்ற முடியாது. பாகிஸ்தானுக்கு நாம் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்துத் தான் புரியவைக்க முடியும். அதை இந்தியா இப்போது – இன்று 7.5.2025 அதிகாலை – மிகக் கவனமாகச் செய்திருக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், ஒன்பது இடங்களில் பாகிஸ்தானின் ஆசியுடன் அமைக்கப் பட்ட பயங்கரவாதக் கட்டமைப்புகளை இன்று ஏவுகணைகள் வீசி அழித்திருக்கிறது இந்தியா. இது குறித்து இந்தியர்கள் மகிழ்வது இயற்கை, அதை அவர்கள் வெளிப்படுத்துவதும் இயல்பானது.

இன்று இந்தியா எடுத்த அளவான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, சில நாட்களில் அல்லது பின்னாளில் பாகிஸ்தான் கண்ணை மூடிக்கொண்டு கன்னா பின்னாவென்று நாம் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துமா, அதில் இந்தியாவின் பக்கம் கணிசமான உயிர்ச் சேதம் நிகழுமா, என்று நமக்குத் தெரியாது. அதை நினைத்து இந்தியா பாகிஸ்தான் மீது இன்றைய ராணுவ நடவடிக்கையை எடுக்காமல் இருக்க முடியாது. பாகிஸ்தான் அப்படி ஒரு ராணுவத் தாக்குதல் செய்தால், செய்ய எத்தனித்தால், நமது மோடி அரசு அதைத் திறமையாகக் கையாளும் என்று நாம் நம்பலாம்.

அதிக பட்சமாக எந்த அளவு ஒரு அரசு எல்லா பக்கங்களிலும் சிந்திக்க முடியுமோ, திட்டமிட முடியுமோ, அதைச் செய்து இந்தியா இன்றைய அளவான ராணுவ தாக்குதலில் வெற்றி கண்டது பற்றிப் பல இந்தியர்களுக்கு இப்படி ஒரு உணர்வு இருக்கும். “தானாக வந்து நம்மை அவ்வப்போது செவிட்டில் அறைந்து ஒடும் அடுத்த வீட்டுக்காரனை, நாம் ஒரு முறை அவன் வீட்டுக்குள் சென்று அவன் முதுகில் போட்டு ரண்டு எத்து எத்தினோமே!” என்ற திருப்தியும் தன்மான மகிழ்வும் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

மத்தியில் உள்ள மோடி அரசு பொறுப்பானது. தேவையில்லாமல் பாகிஸ்தானுடன் பெரிய போரை ஆரம்பித்து, அல்லது வளர்த்து, நமது நாட்டு உயிர்களையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தானாகப் பலி தராது என்று நாம் நம்பலாம். இந்த நேரத்தில் மோடி போன்ற ஒரு தலைவர் நாட்டின் பிரதமராக இருப்பது இந்தியாவுக்கு யானை பலம்.

சரி, ராணுவ ரீதியாகப் பாகிஸ்தானை நன்றாகப் போட்டதில், இனி பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பாது, நாசவேலைகள் செய்யாது என்பது நிச்சயமா? அது நிச்சயம் இல்லை.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தலைமையகம் எங்கிருக்கிறது? உண்மையில் அந்த இடம் அந்நாட்டு ராணுவத் தலைமையகம். பாகிஸ்தான் திருந்தாத, திருத்த முடியாத நாடு. அந்த நாட்டை எதிர்த்து இந்தியா என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், என்னென்ன நேரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது அவ்வப்போதைய பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தது.

மேற்கே ரவுடி ராணுவ பாகிஸ்தான், கிழக்கே நன்றியில்லாத பங்களா தேஷ், வடக்கே ராட்சஸ சீனா என்று இந்தியா காலம் தள்ள வேண்டியபோது, ஊழலுக்கும் சுயநலத்திற்கும் பெயர் வாங்கிய அரசியல்வாதிகளும் உள்நாட்டில் மத்திய அரசைக் கைப்பற்றினால், அதைவிடப் பெரிய நரகம் இந்தியாவுக்கு இல்லை.

தேசத்தை நேசிக்கும் பொதுமக்களக்கிய நாம் இதைத்தான் செய்யலாம். நாட்டு நலன் பற்றி அக்கறையுள்ள ஒரு பொறுப்பான திறமையான மத்திய அரசு டெல்லியில் எப்போதும் இருக்கட்டும் என்று நாம் பிரார்த்திக்கலாம். சரிதானே?

Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

IPL 2025: சென்னை அணி த்ரில் வெற்றி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs சென்னை – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 07.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (179/6, அஜிங்க்யா ரஹானே 48, ஆண்ட்ரூ ரசல் 38, மனிஷ் பாண்டே 36, சுனில் நரேன் 26, நூர் அகமது 4/31, அன்ஷுல் காம்போஜ் 1/38, ஜதேஜா 1/34) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (19.4 ஓவர்களில் 183/8, டிவால்ட் பிரிவிஸ் 52, ஷிவம் துபே 45, உர்வில் படேல் 31, ஜதேஜா 19, தோனி ஆட்டமிழக்காமல் 17, வைபவ் அரோரா 3/48, ஹர்ஷித் ராணா 2/43, வருன் சக்ரவர்த்தி 2/18, மொயின் அலி 1/23) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (9 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் (17 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே (33 பந்துகளில், 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து 7.1 ஓவர் வரை விளையாடினார்.

 ரகுவன்ஷி (1 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை. அவருக்குப் பின் வந்த மணீஷ் பாண்டே (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஆண்ட்ரூ ரசல் (21 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். 18.3ஆவது ஓவரில் ரிங்கு சிங் விளையாடவந்தார். 6 பந்துகளில் 9 ரன் அடித்தார். இப்படியாக கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது.

விக்கட் எடுக்கவில்லை என்றாலும் அஷ்வின் இன்று சிறப்பாக பந்துவீசினார். மற்ற சுழப் பந்துவீச்சாளர்களான ஜதேஜா மற்றும் நூர் அகமது இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள்.

          180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மஹத்ரே (பூஜ்யம் ரன்) மற்றும் டேவன் கான்வே (பூஜ்யம் ரன்) இருவரும் முதல் இரண்டு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த, இன்று முதன்முறை ஆடுகின்ற உர்வில் படேல் (11 பந்துகளில் 31 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடனினார்.

நாலாவதாகக் களமிறங்கிய அஷ்வின் (8 ரன்) 7 பந்துகள் மட்டுமே தாகுப்பிடித்தார். அதன் பின்னர் ஜதேஜா (10 பந்துகளில் 19 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) வெகுநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தோற்றுவிடுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் இருக்க, அடுத்து வந்த டிவால்ட் பிரிவிஸ் (25 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) அதிரடி ஆட்டம் ஆடினார்.

அவர் ஷிவம் துபே (40 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) உடன் இணைந்து வெற்றியை சாத்தியப்படுத்தினார். 18ஆவது ஓவர் முடிவில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என இருந்தது. அந்த ஓவரில் ஷிவம் துபே ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் நூர் அகமது ஆட்டமிழந்தார்.

20ஆவது ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தில் தோனி ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தார். புதிய பேட்ஸ்மென் அன்ஷுல் காம்போஜ் அடுத்த மூன்று பந்துகளையும் சந்தித்து வெற்றிக்குத் தேவையான ஒரு ரன்னை எடுக்க வேண்டும். அச்சமயத்தில் காம்போஜ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

          சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர் நூர் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றிக்குப் பின்னரும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது,

கொல்கொத்தா அணியின் பிளேஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளது. பிளேஆஃபுக்குச் செல்ல கொல்கொத்தா அணி அடுத்த இரண்டு மேட்சுகளில் வெற்றி பெற்று, பிற அணிகளின் வெற்றி, தோல்விக்காகக் காத்திருக்க வேண்டும்.