தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்குச் சென்று விட்டதாகவும், வெறுமனே நாடகம் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் பேசாமல் முழு நேரமாக நடிப்புக்கே செல்லலாம் என்றும் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது சமூகத் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது…
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் கும்பல், பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள். ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், முழு நேரமாக நடிக்கச் செல்லலாம்.
ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலைமுயற்சியாகவே கருதப்பட வேண்டும். உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தாம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் எல்லாவற்றிலும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு விலை உயர்வையும் கட்டண உயர்வையும் செய்துவிட்டு, ரயிலில் தொலைதூர கட்டணங்களில் மிகச் சிறிதளவு கட்டண உயர்வு என்று வரும் தகவலை எதிர்த்து ரயிலில் போய் நாடகமாடுவது ஏன் என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!” – என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தனது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…
சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக அமையாது என்று தெரிந்து, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார். ரயில் கட்டணமானது, புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
தினந்தோறும், தங்கள் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை. தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.
பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண். – என்று பதிலடி தரும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்ரேல் ஈரான் மோதலில் இடையே புகுந்த அமெரிக்கா தங்களின் கனமான குண்டு வீச்சு விமானங்கள் மூலம் ஈரானை தாக்கியது.
ஆனால் இந்த தாக்குதல்….. திட்டமிட்ட நாடகம் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.
ஏனெனில் இதற்கு பதில் நடவடிக்கையாக ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த…. அவை அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களால் எதிர்கொள்ளப்பட்டது.
சரியாக சொல்வதென்றால் ஈரானிய தாக்குதலால் எந்த ஒரு சேதமும் இல்லாமல் கத்தார் அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை காண்பித்து கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..
இது ஏன் தற்சமயம் முக்கியத்துவம் பெற்றது.????
அதில் விஷயம் இருக்கிறது. இஸ்ரேலிய ஐயன் டோம் மற்றும் அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களை உடைத்து உள்நுழைந்து இஸ்ரேலை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் ஈரானியர்கள்.இத்தனைக்கும் இவர்கள் வசம் அதி நவீன ரேடார் சிஸ்டமோ அல்லது GPS வாழிகாட்டுதலுடன் கூடிய தொழில்நுட்ப பண்புகளோ இல்லை. ஆனாலும் இலக்கை துல்லியமாக தனித்துவமான தாக்கி இருந்தார்கள். இஸ்ரேல் ஒரு வாரத்தில் குப்பை கூளமானது. சரி செய்து தலை நிமிர குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதாக மதிப்பீடும் செய்து இருக்கிறார்கள்.
இது இஸ்ரேல் எதிர்பாராத ஒன்று.
அதேசமயம் நம் இந்திய தரப்பில் ஆப்ரேஷன் ஸிந்தூர் நடவடிக்கைகளின் ஓர் பகுதியாக பாகிஸ்தானிய ட்ரோன் தாக்குதலும் சரி…. ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய சமயத்திலும் சரி அவற்றை வெகு சுலபமாக கையாண்டு வானில் வைத்தே இடைமறித்து தாக்கி அழித்திருந்தது.
ஏற்கனவே நம் இந்திய தயாரிப்பு பராக் 8 ரக ராக்கெட்களை வாங்கி இஸ்ரேல் பயன்படுத்தும் நிலையில் நம் இந்திய தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை.
சமயம் பார்த்து இந்த இடத்தில் உள்நுழைந்து ஈரானிய இலக்குகளை… அதுவும் இஸ்ரேல் காண்பித்து கொடுத்த இலக்குகள் மீது தங்கள் கனமான குண்டு வீச்சு விமானங்களில் இருந்து ஈரானை தாக்கியது அமெரிக்கா. ஆனால் இந்த விஷயத்தில் குறைந்தது 18 மணிநேரம் தாமதம் இருந்தது.அது செயற்கையாக திட்டமிட்டே நடந்தது என்கிறார்கள் இஸ்ரேலியர்கள். இடைப்பட்ட இந்த காலத்தில் ஈரானுக்கு, வேண்டியவர்கள் மூலம் தகவல் தந்து தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொள்ள சொல்லி விட்டு இடைப்பட்ட கால அவகாசத்திற்கு பின்னர் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்..
அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என நிஜமாகவே திட்டமிட்டு செய்திருந்தால்….. இந்திய பெருங்கடலில் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தளத்தில் இருந்து தாக்குதல் நடத்த ஏற்பாடுகளை செய்திருக்க முடியும்.
ஆனால் செய்யவில்லை.
காலங்காலமாக அவர்கள் பயன்பாட்டில் உள்ள சவுதி அரேபியாவில் இருந்து தாக்குதல் நடத்தி இருக்க முடியும். இத்தனைக்கும் அங்கு தான் அமெரிக்க போர் விமானங்கள் வந்து இறங்கி இருந்தது.
ஆனால் அவற்றை முன்னெடுக்கவில்லை.
ஈரானிய கடல் எல்லையை ஒட்டிய சர்வதேச கடல் பிராந்தியத்தில் அமெரிக்க போர் கப்பல்கள் தொகுதி நிலைநிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.அங்கிருந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடந்த சமயத்தில் இவர்களும் உடன் இணைந்து தாக்குதல் நடத்தி இருக்க முடியும்.
ஆனால் செய்யவில்லை.
சம்மந்தமே இல்லாமல் பதினாங்கு மணி நேரம் இடைவிடாது ஆறு B2 பாம்பர் விமானங்களை, எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்களோடு பசிபிக் பெருங்கடல் மீது பறந்து வந்தே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு பின் மீண்டும் இடையே எங்கும் நிற்காமல் திரும்பி சென்று இருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்டம் காட்டுகிறார் என்பதை பெஞ்சமின் நெதன்யாகு உணர்ந்து கொண்டு விட்டார் போலிருக்கிறது.
ஏனெனில் ஈரான் கத்தார் மீதான தாக்குதலுக்கு பின் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக மேற்கத்திய ஊடகங்களால் விடாமல் செய்தி வாசித்து கொண்டு இருக்க…. கத்தார் மீதான தாக்குதலுக்கு பின் ஈரானில் இருந்து வெளி உலகை தொடர்பு கொண்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்பதை உளவு தகவல் மூலம் ஊர்ஜிதம் செய்து கொண்டு இருக்கிறார்., நெதன்யாகு.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எப்படி தகவல் கிடைத்து போர் நிறுத்தம் பற்றி பேச முடிந்தது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.
கூடவே…… இந்திய பாகிஸ்தான் மோதலின் போது இதேபோல் தான் தான் முன் நின்று இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ததாக சொன்ன சமயத்தில் நம் இந்திய தேசம் அமைதியாக அப்படி ஏதும் நடைபெறவில்லை…… பாகிஸ்தானிய DGMO நேரிடையாக தொடர்பு கொண்டு பேசியதின் பேரில் ஆப்ரேஷன் ஸிந்தூர் தாற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதாக சொல்லி ட்ரம்ப் முகத்தில் கரியை பூசினார்கள். இன்று அதேபோன்றதொரு சமாச்சாரம் தான் இஸ்ரேல் ஈரான் விஷயத்திலும் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நெதன்யாகு பொங்க ஆரம்பித்திருக்கிறார்.
இதனை அவர்….. ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பக்கம் ஈரானை சமாதான உடன்படிக்கைக்கு கொண்டு வந்ததாக பொது வெளியில் அறிவித்து அதிரடி காட்ட…. அப்படியா… தங்களுக்கு அது குறித்து தகவல் ஏதும் இல்லை என நெதன்யாகு பதில் சொல்ல….. இப்போது ட்ரம்ப், நெதன்யாகு மீது பாய ஆரம்பித்து விட்டார்.
ஆக….. உடனிருந்த எலான் மஸ்க்கை பதம் பார்த்தது போல் முதல் விருந்தினர் ஆன பெஞ்சமின் நெதன்யாகு மீதும் பாய ஆரம்பித்து இருக்கிறார். இவர், தான் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற சமயத்தில் வந்திருந்த… சந்தித்த முதல் பார்வையாளர் மற்றும் விருந்தினர் பெஞ்சமின் நெதன்யாகு தான்.
மேற்கு கரை காசாவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஈரான் மீதான தாக்குதலும் கைவிடப்படவில்லை. இஸ்ரேல் தனது வழக்கமான தாக்குதல் வேலைகளில் ஈடுபட்டும் வருகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும் தனக்கு…தனது சேவையை பாராட்டி இன்னமும் டீ வரவில்லை …….. என்பது போல் நோபல் பரிசு ஏன் கொடுக்கவில்லை உறும ஆரம்பித்து இருக்கிறார்.
இஸ்ரேல் மாத்திரம் விடாப்பிடியாக ஈரானை தாக்கி கொண்டு நிற்கிறது ….. யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல்..
மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கடும் வெயிலை பொருட்படுத்தாமல், வாகனங்களில் முருக பக்தர்கள் வந்து குவிந்தனர். மாநாட்டுக்கு போடப்பட்ட இருக்கைகள் பொது மக்கள் குடையாக பிடித்து நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.
பிற்பகலில் கடும் வெப்பம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியது. வெளி மாவட்டங்களிலிருந்து பஸ்கள், கார்கள், வேன்களில் முருக பக்தர்கள் வந்தனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆட்டோக்கள், மினி வேன்களில் பக்தர்கள் வந்தனர். மாநாட்டு திடலில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், உள்ளிட்டோர் மாநாட்டு திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் கோயிலை தரிசித்தனர்.
மாநாட்டையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை பாண்டி கோயிலிலிருந்து, மாநாட்டு திடல் வரை சாலை இருபுறங்கள் காவிக் கொடி கட்டப்பட்டுள்ளன. போலீஸார் சாலைகளில் சில இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகளை அமைத்துள்ளனர்.
காடேஸ்வரா சுப்ரமணியம் உரை : இந்த மாநாடு நடக்க கூடாது என்று ஒரு கோஷ்டி இருக்கிறது. அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இந்த மாநாட்டிற்கு கூட்டம் வரக் கூடாது, 4 நாட்களாக விரதம் இருந்தாராம். இந்த மாநாட்டிற்கு விளம்பரம் நாங்கள் கொடுக்கவில்லை. சேகர் பாபுவும், திருமாவளவனும், வைகோவும் தான் இந்த மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்தார்கள். 400 கோடி ரூபாயில் மாநாடு நடத்தப் போவதாக சேகர்பாபு சொல்கிறார்.
இந்த மாநாடு நடத்துவதற்கு 500, ஆயிரம் ரூபாயாக கலெக்ஷன் பண்ணி நடத்துகிறோம். கணக்குத் தருகிறோம். நீங்கள் கணக்குத் தருவீர்களா? திருப்பரங்குன்றத்தில் காவல் துறையினர் மிரட்டினார்கள். நீதிமன்ற தீர்ப்பின் தயவால், அன்று உடனடியாக 50 ஆயிரம் பக்தர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்த மாநாடும் நடக்க கூடாது என பல இடையூறை ஏற்படுத்தினார்கள். இன்றும் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்று இந்த முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறோம். கடந்த 7 நாட்களில் 7 லட்சம் பக்தர்கள் மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளதாக நாம் கணக்குச் சொல்லவில்லை. போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். தமிழகத்தில் ஆன்மீகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது அரசியல் மாநாடு அல்ல.
எடப்பாடிக்கு அழைப்புக் கொடுத்ததன் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வந்து இருக்கிறார்கள். முதலமைச்சர்க்கும் இந்த மாநாட்டில் அழைப்புக் கொடுக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினோம், அவரிடம் இருந்து பதில் இல்லை.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பங்கேற்க வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. மேடையில் அண்ணாமலை அமர வைக்கும் போது தொண்டர்கள் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி சுதாகர் ரெட்டி, தமிழக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் வருகை உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
மதுரையில் ரிங் ரோடு அருகே வாகனங்களில் வந்த முருக பக்தர்களுக்கு , பா.ஜ.க. நிர்வாகிகள் உணவு, ரொட்டி, தண்ணீர் பாட்டில் வழங்கினர்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் 3 நாளாக தொடர்ந்து வெறிநாய்கடித்து 30 பேர் காயமடைந்த நிலையில் இன்று கால்நடைகளையும் கடித்து காயப்படுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் கடந்த 3 நாட்களாக வெறி நாய் ஒன்று சுமார் 30க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. காயம் அடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வெறிநாயை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் போதிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் மூன்று நாட்களாகியும் இன்னும் அந்த நாய் பிடிபடாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை அந்த வெறி நாய் ஆடு, மாடு, கோழிகளையும் கடித்து குதறியது. இதனால் ஆத்திரமடைந்த கால்நடை வளர்ப்போர்கள் அதன் உரிமையாளர்கள் நேற்று காலை கூமாபட்டி பஸ் ஸ்டாண்டில் தாங்கள் கால்நடைகளுடன் வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காயமடைந்தவர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூமாபட்டி, வத்திராயிருப்பு போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நாயை இரவுக்குள் பிடித்து விடுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். கொடிக்குளம் பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை வெளியூர்களில் இருந்து வரவழைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் அந்த நாய் பிடிபடவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்
“அந்த வெறி நாய் கடிக்க துவங்கிய போதே பேரூராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களுக்கு எவ்வளவு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. பாதிப்பு கணிசமாக அதிகரித்த பின்னர் நடவடிக்கை எடுக்கிறது. மேலும் அந்த ஒரு நாயை மட்டும் தான் குறி வைத்து தேடுகின்றனர். ஆனால் அதே போல் ஊர் முழுவதும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அந்த நாய்களால் பாதசாரிகள் மிகவும் அச்சத்துடனே நடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் நாய்கள் ஊர் முழுவதும் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. வெளியூர் சென்று இரவு ஊர் திரும்பும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் வீடு சென்று சேர முடிகிறது. அவற்றை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதே நிலைதான் வத்திராயிருப்பு பேரூராட்சியிலும் நிலவுகிறது. எனவே இதன் பிறகாவது கூமாப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய பேரூராட்சி நிர்வாகங்கள் தாங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்றனர்.
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்.. என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவருடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது
22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப் பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து மக்களை சந்தித்து அழைப்பிதழ் தந்து வரவேற்றும், மேலும் மாநாட்டு திடலிலும் இரவு பகல் பாராது இந்து இயக்கத் தொண்டர்கள் உழைத்தனர்.
இந்து வழக்கறிஞர்கள் சட்டரீதியாக போராடி தடைகள் நீங்க பாடுபட்டனர்.
அனைத்து சம்பிரதாயங்களை சேர்ந்த போற்றுதலுக்குரிய 380 துறவிகள் மாநாட்டில் எழுந்தருளி ஆசி வழங்கினர்.
மேலும் நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள். சமுதாய தலைவர்கள், ஆன்மீக குழுவினர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் துணை அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள்..
அறுபடை முருகன் அருட்காட்சியை தரிசிக்க வந்து சிறப்பு சேர்த்த ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர், திரையுலக பிரபலங்கள் ஆகியோர்..
மாநாட்டில் உரை நிகழ்த்திய கௌமார மடத்தின் சுவாமிகள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் தென்பாரத பொறுப்பாளர் டாக்டர் வன்னியராஜன், ஆந்திர மாநில துணை முதல்வர் மாண்புமிகு பவன் கல்யாண், ஆகியோருக்கு இந்து முன்னணி சார்பில் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பலவித சிரமங்களுக்கிடையிலும் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பித்த லட்சோப லட்சம் இந்து குடும்ப சொந்தங்களுக்கு பாசமிகு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநாட்டு அரங்கம், அறுபடை வீடு அருட்காட்சி அரங்கம் ஆகியவை நிறுவிய கலைஞர்கள், நிகழ்ச்சியில் அருமையாக நடனம் ஆடி பிரமிக்க வைத்த நடன கலைஞர்கள், இசை கலைஞர்கள், மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாநாட்டு செய்திகளை, அருட்காட்சி பெருமைகளை மக்களுக்கு கொண்டு சென்று கந்த சஷ்டி கவசத்தை உலகம் முழுவதிலும் ஒரு கோடி பேர் சேர்ந்து பாடவும், கண்டு களிக்கவும் காரணமாக இருந்த ஊடகத்தினருக்கும், பாதுகாப்பு, ஒத்துழைப்பு நல்கிய காவல் துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மாநாடு மற்றும் ஆறு நாட்கள் நடந்த அறுபடை வீடு அருட்காட்சி ஆகியவை குறித்து எல்லா தரப்பினரும் பெருமையாக பெருமிதமாக கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய மாபெரும் நிகழ்ச்சி மிக நேர்த்தியாக, எழுச்சியுடன், கட்டுப்பாடு, ஒழுங்கு பிரமிக்க வைத்துள்ளது. இத்தகைய பண்பாடுகள் ஒவ்வொரு பக்தரின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்டது. இதற்கு முழு முதல் காரணம் இந்துக்களிடம் இருக்கும் ஆழ்ந்த பக்தி சிரத்தை, அந்த பக்தியின் ஒருங்கிணைந்த சக்தியாக வெளிப்பாடாகியுள்ளது. தமிழகத்தின் திருப்புமுனையாக இந்த முருக பக்தர்கள் மாநாடு அமைந்துள்ளது.
எதாவது குறை காண முடியாதா என்று இந்து விரோத சக்திகள் விமர்சனம் செய்கின்றனர். நாத்திகம் என்பது வேறு இந்து விரோதம் என்பது வேறு என்பதை தெள்ளத் தெளிவாக மாநாடு எடுத்துக்கூறி புரிய வைத்தது.
எந்த ஒரு தனி மனிதரையும் எப்போதும் எங்கும் விமர்சனம் செய்யாது இந்து முன்னணி. அதேசமயம் இந்துக்களின் நம்பிக்கைகளை அநாகரிகமாக பேசினால் எதிர்க்கவும் தயங்காது. இந்து ஆன்மீகத்தை போற்றவும் இந்து சமயத்தை பாதுகாக்கவும் இந்த மாநாடு மூலம் உலகம் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொரு இந்துவும் ஒருங்கிணைந்து கந்த சஷ்டி கவசம் பாடியதன் மூலம் உறுதி செய்துள்ளனர்.
நமது முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்று இந்து தர்மத்தின் இந்துக்களின் நற்பண்பை உலகம் அறிய அருளிய நம் அன்பு தெய்வமான முருக பெருமானின் பாதத்தில் காணிக்கையாக்குகிறோம்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் கட்டப்பட்டது.இக் கோயில் ஜூலை 13ல் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் நவக்கிரக சன்னதி இருந்தது.இங்கு உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று அண்மையில் பார்க்கப்பட்ட தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.இக் கோவில் பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி வேத பாராயண முறைப்படி நடைபெறுகிறது.
இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்ம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சு குழி கண்மாய் சாலையில் இயற்கை எழில்சிற சொந்துமலை அடிவாரத்தில் தென்னந்தோப்புக்குள் எழுந்தருளி அருள் பாலித்து வரும் லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை லலிதாம்பீஸ்வரர், லலிதாம்பீஸ்வரி, மற்றும் நந்திகேஸ்வரருக்கு சந்தனம், பன்னீர், இளநீர், திருநீர், உள்ளிட்ட 12 அபிஷேகங்கள் செய்யப்பட்டு அருகம்புல்.துளசி. மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மலர்களால சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
இந்த பூஜை மற்றும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாச்சல பாண்டியன் செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்
#image_title
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அபிஷேகங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்தார் அப்போது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்றுகூறி ஊர்வலத்தில் வந்தனர். பிரதோஷ ஏற்பாடுகளை பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா 8வது வார்டு கவுன்சிலர் கூடைப்பந்தாட்ட சேர்மன் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர் அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதே போல்திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவிலிலும் மன்னாடிமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத கோவிலிலும் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்து சென்றனர்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தாரா வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. பொறியாளர் கே ஸ்ரீகுமார் அனைவரையும் வரவேற்றார்.
பொன் கருணாநிதி தாளாளர் பாரதியார் மெட்ரிக் பள்ளி எழுமலை, மாதவன், நிர்வாகி, சிற்பவானந்த ஆசிரமம் ,தேனி. சுவாமி ஞான சிவானந்த தலைவர் தத்வானந்த ஆசிரமம், திண்டுக்கல், சுவாமி சமானந்தர் தலைவர் சுவாமி சித்பவானந்த ஆசிரமம் தேனி சுவாமி பரமானந்தர் விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி திருவேடகம். சங்கர சீதாராமன் நிர்வாக இயக்குனர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் லிமிடெட், மருத்துவர் டி. ராமசுப்பிரமணியன், இல அமுதன் , பக்தவச்சலம் , வைதீக சமாஜத்தின் தலைவர் ஸ்ரீதர் சாஸ்திரிகள், தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நடராஜன், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளையின் ஆசிரியர் வீரமணிகண்டன், உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர். ஆச்சாரிய சுவாமிகளின் அருளுரை நூலை சுவாமி சமானந்தர் வெளியிட விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சங்கர சீதாராமன் பெற்றுக் கொண்டார்.
மேலும், மகா பெரியவாளின் கருணையை விளக்கும் மைத்ரி என்ற புத்தகம், தெய்வத்தின் குரல் கருத்து படங்களுடன் தினசரி தினசரி பெரியவா தியானம் என்ற புத்தகம், காஞ்சி முனிவர் நினைவுக்கதம்பம் என்ற புத்தகம் பாரதிய சமுதாய கட்டமைப்பின் ஆணிவேர் என்ற புத்தகம் வந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற ரா கணபதி பற்றிய புத்தகம் ஆகியவை வெளியிடப்பட்டது. ஆசிரியர் வேதா டி ஸ்ரீதரன் புத்தகத்தினை பற்றி எடுத்துரைத்தார்.
அனைவருக்கும் துறவியர்களின் பிரசாதம் வழங்கப்பட்டது. மேற்படி புத்தகங்கள், பொறியாளர் கே ஸ்ரீகுமார் 94431 51258 பெற்றுக் கொள்ளலாம்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்திய நாட்டில் பிரசித்தி பெற்ற பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் இன்று திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவம்10 நாட்கள் நடைபெறுகிறது.
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சித்ரசபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவசைலாஸ் தீட்சிதர் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் பசுக் கொடியை ஏற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.
ஜூன் 24-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 26-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 30-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
ஜூலை 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்ழமை தெப்போற்சவத்துடன் உற்சவம் முடிவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.