காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிட இடமில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டிவிட்டர் பதிவில் பதிவு செய்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்பதை அவர் வெளிப்படையாகச் சொல்வதாக கருத்து தெரிவித்துள்ளனர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள். மேலும், ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்றும் அவர் கருத்துப் பதிவு செய்துள்ளார்.
ராகுல் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பல விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த வெளிநாடோ தலையிட அதிகாரம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்…
காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளை பாகிஸ்தானே தூண்டி விடுகிறது. மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை அது ஆதரிக்கவும் செய்கிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முக்கிய நாடாக இருக்கும் பாகிஸ்தான், காஷ்மீரிலும் வன்முறையை ஊக்குவிக்கிறது… என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதரவுக் கருத்துகளுடன், காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதத்தை மோடி அரசு ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டிருந்த ராகுல், தற்போது வேறு மாதிரி கருத்து தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்னை; இதில் 3-வது நாடு தலையிட அனுமதி இல்லை என்று தெரிவித்தது.
ஆனால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவரின் பேச்சு, காஷ்மீர் வெளிநாட்டு அமைப்புகளால், ஐ.நா.வால் கண்காணிக்கப் படும் பிரச்னை என்று கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பாஜக., எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் திணறியது.
இந்நிலையில் தற்போது காஷ்மீர் பிரச்னை உள்நாட்டு விவகாரம் என்று ராகுல் தெளிவு படுத்தியிருக்கிறார். ஒருவேளை அவர் தலைவர் பதவியில் இல்லாமல், ஒரு எம்.பி., என்பதால் அவ்வாறு கூறியிருக்கிறாரோ என்று பலரும் ஆச்சரியப் படுகின்றனர். ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர், அபிஷேக் மனு சிங்வி வரிசையில் ராகுலும் சேர்ந்துவிட்டாரா என்றும் ஆச்சரியப் படுகின்றனர் நெட்டிசன்கள்!